சிந்திக்க கவிகள்

  • சிந்திக்க கவிகள்-9

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்9

    03-06-2020புதன்

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்த லரிது.

    —குறள்        

     பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் செந்நாப் புலவர் ?
    2. இக் குறள் எந்த பாலில், எந்த அதிகாரத்தில், எந்த அதிகாரத்திற்கு அடுத்ததாக  வருகின்றது? அதற்கு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?
    3. வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது என்றால் என்ன பொருள்?
    4. ‘கோடி தொகுத்தார்க்கும்’ என்றால் என்ன பொருள்?
    5. பொதுவாக உரையாசிரியர்கள் என்ன பதவுரை வழங்குகின்றனர் இக்குறளுக்கு?
    6. திருக்குறளுக்கு உட்பொருள் விளக்கம் அருளிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு கூறும் விளக்கம் என்ன?
    7. திருவள்ளுவரும், அவரது இருபதாம் நூற்றாண்டின் சீடருமான பாமர மக்களின் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?

    வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • சிந்திக்க கவிகள்-8

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    பழக்கமும் விளக்கமும்

    சிந்திக்க கவிகள்-8

    07-05-2020-வியாழன்

         நற்பழக்கம் (22.12.1959)

    பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே

    பாருலகில் மனிதரெல்லாம் போராடு கின்றார்:

    பழக்கத்தை வளர்ந்தமக்கள் மாற்றுவது கடினம்.

    பாலர்களின் நற்பழக்கம்  பலன்விளைக்கும் எளிது.   ஞா.க.க.எண். 634

                                                             . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  

               

     பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
    2. நற்பழக்கம் ஏற்படவேண்டும் என்று கருதியே அருளப்படுகின்ற அறநெறிநூல்கள்   இனி  அவசியம் இல்லை என்றவர் நற்பழக்கம் எவ்வாறு மனிதர்களிடம் ஏற்படும் என்கிறார்?
    3. பழக்கம் என்பது என்ன? வழக்கம் என்பது என்ன? 
    4. பழக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது?
    5. விளக்கம் என்றால் என்ன? அதிலும் கூர்ந்த விளக்கம் என்பது என்ன?
    6. நற்பழக்கத்திற்கு மனிதரெல்லாம் உலகில் ஏன் போராடுகின்றனர்?  ஏற்கனவே 01-05-2016 அன்று நமது இணையதள சத்சங்கத்தில் ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்று சிந்தித்தை இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள  Click here
    7. ஏன் வளர்ந்த மக்களுக்கு பழக்கத்தை மாற்றுவது கடினமாக உள்ளது?

     

     

    படம் -1.2. எண்ணிலடங்கா பிறவிகளில் பெற்ற பழக்கப்பதிவுகள் இப்பிறவியில் மட்டுமே பெற்ற விளக்கப்பதிவை வெற்றிகொள்கின்றது. பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவைத் தன்பக்கம் சாய்த்து விடுகின்றது.

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராட்டம்

    1. இது தொடர்பாக மகரிஷி அவர்கள் அருளியுள்ள மனிதனுக்கான வரையறைகளில் ஒன்றாகவும் அமைந்த வைர மொழி என்ன?
    2. பாலர்களிடம் நற்பழக்கம் எளிதில் பயன் கிட்டும் என்கிறார்?  எப்படி?
    3. மார்கழி மாதத்தில் அவரது துணைவியார் மாக்கோலம் இடும் போது அதைச்சுற்றிலும் அருளுரை எழுதுவது வழக்கம். அவ்வாறே 22.12.1959 அன்று எழுதிய அருளுரையில் இடம் பெற்றது இப்பாடல்.  60 ஆண்டுகள் கடந்துவிட்டன.  அவரது புனித எண்ணம் எவ்வாறு நிறைவேறிவருகின்றது?

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • சிந்திக்க கவிகள் – 6


       வாழ்க மனித அறிவு!                                                   வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள் – 6

    03-05-2020-ஞாயிறு

    அறம்

     

                    அறத்தைக் காணா அறிவே மரமாம்

                     அறத்தைப் பிழைத்த அறிவே மிருகம்

                     அறத்தைப் புரியும் அறிவே மனிதன்

                     அறத்தைக் காக்கும் அறிவே கடவுள்”

                                                                        . . . . .  திரு. வி. க.  அவர்கள்.

     

     

       பயிற்சி:

    1. என்ன கூறுகின்றார் திரு. வி. க. அவர்கள்(1883-1953)?

    2. அறத்தை அறியாதவர்களை மரத்தோடு ஒப்பிடுகிறாரே! எப்படி? என்ன விளங்கிக்கொள்ள வேண்டும்?

    3. அடுத்த வரியில் அறம் என்றால் என்ன என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதற்குப் புறம்பாக நடந்துகொள்கின்றவனை விலங்கிற்கு சமம் என்கிறாரே! எப்படி? என்ன விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்? வேதாத்திரி மகரிஷி அவர்கள்(1911-2006) மனிதர்கள் மக்களாகவும், மாக்களாகவும் இருக்கின்றனர்    என்று  ஆரம்பித்து இயற்றியுள்ள பாடலை* நினைவு கூறுவது நலம் பயக்கும்.     

    4. மூன்றாவது வரியில் அறம் என்றால் என்ன என்று அறிந்து கொண்டு அவ்வாறே நடப்பவன்தான் மனிதன் என்கிறார்?  உண்மைதானே?  மேலும் விரிவாக அறிந்து கொள்ளவேண்டியது என்ன?  மீண்டும் மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூறலாமே?

    5. நான்காவது வரியில் அறத்தைக் காக்கும் அறிவே கடவுள் என்கிறாரே? இதுவும் சரிதானே? எப்படி?  மீண்டும் மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூற்வது நலம் பயக்கும்?  எந்த வழியில் நலம் பயக்கும்?

    6. நான்காவது வரியில் திரு. வி. க. கூறியிருப்பதனையே அவரது காலத்தில் சுமார் 42 (19531911=42) ஆண்டுகள் வாழ்ந்த, அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனிதஇன தன்மாற்றத்தில்/பரிணாமத்தில் அறம் எப்போது தோன்றியதாகக் கூறுகிறார்?(ஞா.க. க.எண்.494) அறத்தை எவ்வாறு போற்றுகின்றார் ஒரு வரியில்? மேலும் அறத்தின் அங்கங்கள் என்னென்ன என்று கூறுகிறார்.

    7. இன்று அறம் பற்றி நம்மை சிந்திக்க வைத்த அருட்பேராற்றலின் கருணையும், நம் குருநாதர் சூக்குமாக இருந்து கொண்டு நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பதையும் நினைந்து ஆனந்தமும், தன்முனைப்பில்லா பெருமையையும் அடைகிறோம் எனில்  புண்ணியம், பெரும்பாக்கியம்  செய்தவர்கள்தானே  நாம் அனைவரும்?!

    வாழ்க மனவளக்கலைஞர்கள்!  வளர்க மனவளக்கலைஞர்கள்.

    8. இச்சமயத்தில் வேறு அருளாளர்கள் அறம் பற்றி கூறியுள்ளதை நினைவு கூர்ந்து மகிழ்ந்து, அறம் ஊற்றெடுத்து சீவநதியாக ஓடக்கூடிய புதியதோர் உலகம் படைப்போம் என்கின்ற புனித எண்ண அலைகளை வான்காந்தத்தில் பரப்புவோம். 

                                           அறம் வாழ்க !  அறம் வளர்க!!

                                   வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

    * முழு மனிதன்(03-01-1959)

    ‘மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு,

    மனமறிந்த தேவருண்டு,  மதிநிலைத்த மனிதருண்டு,

    மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

    மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழு மனிதன்.’

    . . .  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     வாழ்க அறிவுச் செல்வம்!                                          வளர்க அறிவுச் செல்வம்!!


     

     

     

  • சிந்திக்கக் கவிகள்-5

    வாழ்க மனித அறிவு!                                                              வளர்க மனித அறிவு!!

    சிந்திக்கக் கவிகள் – 5

    lotus

    சிறப்புடைய கவிகள்

    10-04-2018-செவ்வாய்

    உ.ச.ஆ.10-04-33

    Vethathiri_a_Living_Dictionary (2)

    தியாகத்தை அடிக்கல்லாகவும்,  திறமையைப் படிக்கல்லாகவும்,  பொறுமையைக் கலசமாகவும் கொண்டு எழுப்பப்பட்ட கோபுரமே வேதாத்திரி மகரிஷியின் படைப்புகள். அவரின் ஆன்மிகத் தேடலும் பாதையும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தற்கரிய வெளிச்சம்.

    • மனித நேயத்தில் அவர் ஓர் இமயம்.
    • தன் ஆற்றலைப் பிறருக்குக் கொடுப்பதில் அவர் வற்றாத நீருற்று.
    • நேர்மையான கடுமுயற்சிக்கு வழிகாட்டி.
    • அரசியல் அறிவுக்கூர்மையர்.
    • வேதாத்திரியக் கவிதைகள் வேதாத்திரியின் இதயத் துடிப்புகள். அவருடைய கவிதைகளைப் பார்த்தால், படித்தால் கேட்டால், சுவைத்தால், உள்ளத்தில் பதிய வைத்தால் தெவிட்டாத இன்பம் பயக்கும்.
    • மகரிசியின் கவிதைகளும் வார்த்தைகளும் வீணை நாதங்கள்.
    • வெள்ளம் வந்தால் அமுங்கிவிடும் நிலத்துச் செடிகள் போலன்றி அழுத்தும் பெருவெள்ளத்திலும் எதிர்த்து மேலே மிதக்கும் குவளை மலர்கள் போன்றன வேதாத்திரியக் கவிதைகள்.

    kavi2(ஓரிரு முறை வாசிக்கவும்)

    kavi3

    பொருள்:
    அறிவு, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் இவற்றால் இயற்கை தன் வினோதத்தை வெளிப்படுத்துகின்றது. வினோதச் செயல்பாட்டின்போது மனித வாழ்விற்கு இயற்கை சில சந்தர்ப்பங்களைத் தோற்றுவிக்கின்றது. சந்தர்ப்பப் பயன்பாட்டின்போது மனிதனின் வினைப்பதிவுகளுக்கேற்ப வாழ்க்கைச் சிக்கல்கள் சிறிது பெரிதாய்த் தோன்றுகின்றன. சிந்தனையாளர்களின் நுணுகிய அறிவு அச்சிக்கல்களை நீக்கும் தன்மையது. இயற்கை வினோதமும் சந்தர்ப்ப விளைவும், சிக்கல்களைவும் உட்கருத்தாய்ப் பொதிந்துள்ள கவிதைகளே சிறப்புடைய கவிதைகளாகும் என்கிறார் மகரிசி.

    இயற்கையின் வினோதம்:
    இயற்கை என்பது இயல்பாக மலர்ந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் செயல்கள் இயற்கையின் இயல்பின. அது வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்னும் மூலதனத்தைக் கொண்டது. பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் என்ற இயக்க நியதிகளால் இயற்கையினின்று வானகமும் வையகமும் எழுச்சி பெற்றன. இயற்கையின் அதிசயங்களையும், வளங்களையும் பெறுவதற்கு இயற்கையே மனிதனாகித் தன்னுள்ளே வாழவைத்து வினோதம் காட்டுகிறது.

    இயற்கை வளங்களை வாழ்வின் வளமாக உருமாற்றியும் அழகுபடுத்தியும் வாழும் இனம் இயற்கையின் வினோதமாகும். மனித இனத்திற்கு வாழ்க்கை அறிவும் செயல்திறமையும்தான் செல்வங்கள். அச்செல்வங்களைப் பெருக்க அறிவு, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் ஐந்தும் கருவிகள். இயற்கை ஆற்றலைக் கொண்டே மனிதன் இயந்திரங்களை உருவாக்கினான்.

    “அழுத்தமெனும் உந்தாற்றல் ஒன்றைக் கொண்டே
    அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கி”
    என்ற மகரிசியின் கூற்று இயற்கையின் விந்தையாகும்.

    தான், குடும்பம், சமுதாயம், உலகம் என்ற கூட்டு வாழ்க்கைக்கு அறிவாற்றலும், சுகாதார நலனும், பொருளாதார வளமும், அரசியல் ஞானமும், விஞ்ஞான அறிவும் அவசியமாகின்றது. இவற்றை இயற்கையே மனிதனுக்குக் கற்றுத் தருகிறது. இதையே
    “ஐந்தைக் கொண்டு நெறியாக இயற்கையின் வினோதங்காட்டி” (ஞா.க.483) என மொழிந்துள்ளார் மகரிசி.

    சந்தர்ப்பங்கள்:
    வாழ்வின் நோக்கத்தையும் விளைவுகளையும் அறிய இயற்கை மனிதனுக்குச் சந்தர்ப்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் நான்கு வளங்களில் ஒன்று காலம். செயல்விளைவுத் தத்துவம் காலத்தின் அடிநாதம். இரண்டு அதிர்வுகளுக்கு இடையே அமையும் நீளமே காலம். காலத்தின் அளவினை,

    “காலத்தின் நுண்ணலகு கண்சிமிட்டும் நேரம்” – ஞா.க.1789
    என மொழிந்துள்ளார் மகரிசி. கண்சிமிட்டும் நேரத்தில் கிடைக்கும் சந்தர்ப்பமே மனிதனை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

    “விஞ்ஞான படைப்பெல்லாம் இயற்கையின் முன்உள
    ஏதோஓர் நிகழ்ச்சி அதில் சந்தர்ப்ப வசமாய்
    விஞ்ஞானி என்போர்க்குக் காணக் கிடைத்தது”
    – ஞா.க.1049

    என்ற வேதாத்திரி மகரிசியின் கூற்று, சந்தர்ப்பமே விஞ்ஞானி வாழ்வின் திருப்பு முனையாக மாறியுள்ளதைச் சுட்டுகின்றது.
    திருவள்ளுவர் சந்தர்ப்பத்தின் தன்மையைக் காலம் அறிதல் என்னும் அதிகாரத்தில்,

    “கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
    குத்துஒக்க சீர்த்த இடத்து” – (குறள் 490)
    என்று சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் நிலையினை வெளிப்படுத்துவார்.

    கொக்கு மீன் வரும்வரைக் காத்திருந்து உரிய மீனையே பயன்கொள்ளுதலை ஔவையார்,
    ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
    வாடியி ருக்குமாம் கொக்கு (மூதுரை 16)
    என்ற தொடராட்சியால் புலப்படுத்தியுள்ளார்.

    “காலமும் காலம் பார்க்கும்” என்ற தொடர் சந்தர்ப்பத்தின் இன்றியமையாமையை உரைக்கும். சந்தர்ப்பத்தின் மாட்சியினை ஔவையார்,
    “……………………….. கண்ணில்லான்
    மாங்காய் விழவெறிந்த மாத்திரைக் கோல்ஒக்குமே”
    – (நல்வழி – 4)
    எனக் குறிப்பார்.

    வேதாத்திரியப் பயிற்சிப் பயனீடுகள் கண்ணில்லாதவன் மாமரத்தில் எறிந்த மாத்திரைக் கோலினால் மாங்காய் விழுதல் ஒப்பன. மனிதகுலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தவமும் அகத்தாய்வும் உடற்பயிற்சிகளும் செய்து வாழ்வின் நோக்கினை நிறைவு செய்தல் வேண்டும் என்பதற்காகவே மகரிசி,
    “……………………………. நேரிடும் சந்தர்ப்பங்கள் காலம் ஒப்பச்
    சிறிதுபெரி தாய்த்தோன்றும்” – ஞா.க.483
    என மொழிந்துள்ளார்.

    வாழ்வின் நோக்கம் அறிய இறை உணர்வும் அறநெறியும் பெறுதல் வேண்டும். இதற்கு இறைநிலை தந்த சந்தர்ப்பமே வேதாத்திரி என்ற மகானின் வழிகாட்டல்கள். அவரைத் தொடர்ந்தால் இறைஞானம் இயல்பாகப் பெற இயலும் என்பதை இக்கவி இயல்பாக்கியுள்ளது.

    வாழ்க்கைச் சிக்கல்:
    அறிவில் மயக்கமும் செயல்களில் தவறும் இயற்கையை மதிக்காமையும் சிக்கல் தோன்றுவதற்கான காரணங்களாகும். சிக்கல்களைக் களைய கவிதைகள் கலங்கரை விளக்கங்களாக வேண்டும்.
    “எண்ணித் துணிக கருமம்”
    “நேர்பட வொழுகு” – ஆத்திசூடி 72
    “பழிப்பன பகரேல்” – ஆத்திசூடி 76
    “பெருமையும் சிறுமையும் தான்தர வருமே” – நறுந்தொகை 30

    போன்ற அறக்கருத்துக்கள் மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களைக் களையும் வழிகால்கள்.

    இயற்கையின் வினோதமாக மலர்ந்த பொருளாதாரம், அரசியல், அறிவியல், சுகாதாரம், மனோதத்துவம் என்ற துறைகள் சில நேரங்களில் செயல் நெறியில் மக்களுக்குச் சிக்கல்களாய்த் தோன்றும். அச்சிக்கல்களை நீக்க வேதாத்திரி,

    “சீர்திருத்த முறையினிலே காலத்திற் கேற்பச்
    சிக்கனத்தை வாழ்க்கையிலே செயலாக்கி உய்ய
    சிந்தனையைப் பேரியக்கத் தொடர்களத்தில் செலுத்திச்
    சிக்கல்களை அகற்றி மெய்யறிவு பெறச் செய்வோம்”
    – ஞா.க.287
    எனச் சிக்கல் களையும் விதம் உரைப்பார்.

    எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு இயற்கையிலேயே உள்ளன. ஒவ்வொரு சிக்கலையும் வெற்றிகொள்ள அறிவே ஆதாரமாகும். ஏனெனில் இயற்கை என்ற பேரறிவே சிற்றறிவாக மனிதனிடம் உள்ளது. ஆதலால்தான் அறிவு, சிக்கல்களையும் கருவியாக்குகிறது. பஞ்சபூதக் கூட்டான உடலை மதித்து அறவழியில் வாழும்போது சிக்கல்கள் நீங்கும்.

    சிந்தனை:
    கவிஞனுக்கு மூலப்பொருள் சிந்தனை. “எண்ணமே வாழ்க்கையின் சிற்பி” என்பார் வேதாத்திரி. “சிந்தனை செய்மனமே” எனும் தொடர் சிந்தனையின் மாட்சியைப் பேசும். 120 கோடி மக்களிடம் உள்ள கருத்துக்களையும் சிந்தனையால் ஒன்றுபடுத்த முடியும். இதனையே,
    “முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
    மொய்ம்புற வொன்றுடை யாள் – இவள்
    செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
    சிந்தனை ஒன்றுடையாள்”
    – பாரதியார் கவிதைகள் 16

    சிந்தனையே வாழ்க்கை. சிந்தனை இல்லாத வாழ்க்கை நீரில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது. வற்றா இருப்பினதான இயற்கை வளருவதுமில்லை, குறைவதுமில்லை. அது பேராற்றலானது. அவ்வாற்றலைத் தன்னகத்துக் கொண்டே மனிதன் சிந்திக்கவில்லை என்றால் வாழ்க்கையில் வளர்ச்சியில்லை.

    கவிஞர்கள் தங்களது அனுபவங்களையும் சிந்தனைகளையும் கற்பனைகளையும் கவிதைகளில் வெளிப்படுத்துவார். தான் அடைந்த துன்பங்களையும் இன்பங்களையும் கண்ட நிகழ்வுகளையும் உலக மக்களுக்காகப் பதிவு செய்வர். அப்பதிவுகளை வாசகர் பெறும்போது தானும் அவற்றைப் பெற விழைவர். மகரிசியின் கவிதைகள் அத்தகையனவே.

    சங்க இலக்கியத்தில், “பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு” என்ற தொடரும் அஃறிணை உயிர்களின் அன்புக் காட்சிகள். இக்காட்சிகள் கவிஞனின் சிந்தனைக்குக் கிடைத்த வெற்றி.

    இராவணனின் துன்பத்தினைக் கவிஞன்,
    “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கைவேந்தன்”
    எனப்பதிவு செய்துள்ளார். இங்கு கடன்பட்டவரின் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டும் கவிஞரின் சிந்தனை போற்றுதற்குரியது.

    “கடன் என்ற புண்ணாகி
    வட்டி எனும் சீழ்பிடித்துப் புரையும் ஓடி” – (ஞா.க.80)

    “வாங்கும் கடனும் தேங்கும் பணமும்
    வளர வளர வாழ்வைக் கெடுக்கும்”. – (ஞா.க.81)

    என்பன பாமரரும் எளிதில் புரியும் படியாக எழுதிய பாமர ஞானியின் வைர வரிகள். இவ்வரிகள் மக்கள் விழிப்பு நிலையிலிருந்து தன் வாழ்வைச் செம்மைப்படுத்த செதுக்கிய கவிதை உளி.

    கவிஞனின் சிந்தனை என்பது சமுதாயம் நோக்கிய பார்வையாக அமைதல் வேண்டும். அது சமுதாயம் நோக்கிய செறிவுள்ள கருத்துக்களாக அமையும்போது கவிஞனை உலக அரங்கில் மாட்சிமைப்படுத்தும் அத்தகு கவி வலவனே வேதாத்திரி மகரிசி எனின் மிகையன்று.

    இயற்கை என்ற தத்துவத்திலிருந்து எந்த ஒரு பொருளையோ இயக்கத்தையோ காட்சியையோ பிரிக்க இயலாது. உலகில் இயற்கைக்கு அப்பாற்பட்டது என எதையும் கூற இயலாது. இயற்கையிலிருந்து கவிஞன் விசுவரூப தரிசனத்தைக் காண்கிறான். தன்னை பிரபஞ்சமாக உணருகிறான். அதனால் அவன் உணருபவன், உற்பத்தி செய்பவன், நுகர்பவன், பெறுபவன், அறிவுறுத்துபவன், வழங்குபவன், செயல்படுபவன், என அனைத்துமாகத் திகழ்கிறான். இத்தகு சிறந்த தன்மைகள் அனைத்தையும் கொண்ட கவிஞனே வேதாத்திரிய கவிஞன். இக்கவிஞனின் தன்மையே ஆன்மிகக் கல்வியின் களஞ்சியமாக உள்ளது.

    வாழ்க வேதாத்திரியம்.                                    வளர்க மானுடம்.

    வினாக்கள்:
    1. இயற்கையின் வினோதம் என்பது என்ன?
    2. மனிதனுக்குச் சந்தர்ப்பங்களைத் தருவது எது-
    3. சிக்கல்களைக் களைய எது ஆதாரம்?
    4. வாழ்க்கையின் சிற்பியாக மகரிசி எதனைக் குறிப்பிடுகிறார்?
    5. விஞ்ஞானியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைவது எது?
    6. கவிஞனின் சிந்தனை எதனை நோக்கியப் பார்வையாக அமைதல் வேண்டும்?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                          வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்கக் கவிகள் – 4

    வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

    சிந்திக்கக் கவிகள் – 4

    lotus

    கவியின் ஆயுளும் எண்ணிக்கையும்

    03-04-2018 – செவ்வாய்.

    உ.ச.ஆ.-03-04-33

    maharishi lighting a new year lamp

    மக்களைப் பற்றி மக்களுக்காகவே பாட்டெழுதியவர் வேதாத்திரி மகரிசி.

    அவர் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அரிய செல்வம், ஏன் உலகமக்களின் கருவூலம்.

    அவருடைய அனுபவங்களும் தேடல்களும் வாடாத கற்பகப் பூச்செண்டனையது.

    எளிமை, இனிமை நிறைந்ந மகரிசியின் கவிதைகள் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் படித்து இன்புறும் தன்மையன.

    ஞானக் களஞ்சியக் கவிதைகளை உணர்ந்து படித்து அதன் வழிநடப்போர் தன்னிலை உணர்ந்து இறைநிலையையும் அறிந்து மகிழ்வர்.

    வேதாத்திரி ஒரு இறையுணர்வுத் தேனீ. பாமர ஞானி. அமைதி வழிகாட்டி. கவலையைக் கரைக்கும் கற்கண்டு.

    சினத்தைச் சீரறுக்கும் சிந்தனையாளர். ஆசைக்கு அணைபோடும் அமுதன்.

    காந்தப்புதையலைக் கவிதைப் புதையலாக்கிய காந்தன். இறைத்திறம் பேசும் இனியன்.

    அறவுணர்வு பாடும் அறவோன். குடும்பத்தைக் கோயிலாக்கும் கோமகன். அவரின் கவிதத் திறம்,

    “உள்ளத்துள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை

    தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை”

    என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கவிதைக்கு இலக்கணமாக அமைந்துள்ளது.

    சி.க.ப.4.-கவி ஆயு எண்ணி-Image

    (கவியை ஓரிரு முறை வாசிக்கவும்)

    kavii

    பொருள் :

    உலகில் தன் கருத்தினை வெளிப்படுத்த மக்கள் அனைவரும் பேசுவர். அவருள் பத்தில் ஒருவர் எழுத்தறிவு பெற்றுள்ளார். அவர்களுள் பத்தாயிரத்தில் ஒருவரே கவி எழுதும் திறமை பெற்றவராவர். கவி எழுதுவோரில் சீவனுள்ள கவிதை எழுதுவோர் சிலரே. சீவனுள்ள கவிதைகளே உலக பொது நோக்கோடு அமைந்து விண்மீன்கள் போன்று நிலைத்து நிற்கும்.

    உட்பொருள்:

    கவியின் ஆயுளும் எண்ணிக்கையும் என்னும் தலைப்பிலமைந்த கவிதையில் வேதாத்திரி மகரிசி அவர்கள் பேச்சுத் திறன், எழுத்தாற்றல், கவியியாற்றல், சீவனுள்ள கவிதைகளென அழுத்தமாகவும் எளிமையாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

    பேச்சுத்திறன் :

    பேச்சு என்பது அலை இயக்கம். இது எல்லோரிடமும் இயல்பாக எழுவது. அதனால் உலகில் எல்லோரும் பேசுவர் என்கிறார் மகரிசி. இதனையே “அணுத்திரள் ஒலி” என்பார் நன்னூலார். பிரபஞ்சத்தில் அணுமுதல் அண்டங்கள் ஈறாக சுழன்று கொண்டே இருப்பதால் அலை தோன்றிக் கொண்டே இருக்கின்றது. இவ்வலை மோதுதல், சிதறுதல், பிரதிபலித்தல், ஊடுருவுதல், இரண்டிற்குமிடையே ஊடாடுதல் என்ற நிலையிலேயே ஒருவர் மற்றவரிடம் தொடர்பு கொள்ள முடிகிறது. பிரபஞ்ச பரிணாமத்தில் ஒலியைத் தரக்கூடிய அளவுக்கு அணு அழுத்தம் பெறும்போது

    காற்றாகிறது. அதாவது 2% விண்ணும் 98% சுத்த வெளியும் சேர்ந்து ஒலியாகி உடலுக்குள் இயங்கி பேச்சாகிறது.

    தொல்காப்பியர்,

    “உந்தி முதலா முந்துவளி தோன்றித்

    தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்

    பல்லும் இதழும் நாவும் மூக்கும்

    அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

    உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி

    எல்லா எழுத்தும் சொல்லுங்காலைப்

    பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல

    திறப்படத் தெரியும் காட்சி யான”

    (தொல்காப்பியம் – 83)

    என மொழிவார்.

    ‘வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’ என்பது ஒரு திருமந்திரம். இது எல்லா மந்திரங்களுக்கும் மேலானது. ஒருவரை ஒருவர் வாழ்த்தும் போதும் பேசும் போதும் வாழ்த்துவோர் வாழ்த்தப்படுவோர் இருவருக்குமிடையே உயிர்த்தொடர்பு ஏற்பட்டு அது நட்புணர்ச்சியாக மலரும். இதனால்தான் ‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தந்த தலைவனை’ என்ற பழந்தொடர் ஆட்சிப்பெற்றுள்ளது.

    வேதாத்திரி மகரிசி அவர்கள் பிறர் நலமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தோடு எழும் ஒலியே வாழ்த்து என்பார். வாழ்த்து அலையியக்கத்தைச் சார்ந்தது. பக்தர்கள் இறைவனைப் போற்றிப் பாடல்களால் வாழ்த்துவதும் இறைவனோடு பேசும் பேச்சேயாகும்.

    ‘பேசாத நாவென்ன நாவே’

    ‘பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’

    என்ற பக்திச் சான்றோர் தொடர்கள் பேச்சின் தன்மையினைப் பேசுவன.

    பேச்சின் சிறப்பாலேயே உலக அமைதி நிலைபெறும். அதனால்தான்,

    “உலகில் வாழ்ந்துய்ய வெனில் ஒவ்வொருவரும்

    இவ்வுயர்ந்த எண்ணத்தை

    உலகுக்கு அலையலையாய்ப் பரவவிட

    வேண்டியது கடமையாகும்.”

    . . . ஞா.க.248

    என்பார். உயர்ந்த எண்ணமானது உலகப் பொது ஆட்சி என்ற உயர் திட்டமாகும். வாழ்க வளமுடன் என்ற வாழ்த்து அலையலையாய்ப் பரவும் போதுதான் உலகப்பொது ஆட்சியும் உலக அமைதியும் நிலைபெறும்.

    ஒருவர் கருத்தைப் பிறர்க்கு உணர்த்துதற்கு

    ஓங்கியதோர் ஆர்வமே மொழிகளாகிப்

    பெருகி வந்துள உலக மொழிகள் எல்லாம்

    பேசுதற்கு அனைவருக்கும் சொந்தமன்றோ”

                                                                                                                 . . . ஞா.க.394

    எனப் பேச்சு மொழியின் அவசியத்தை விளக்குகிறார் மகரிசி. பேச்சுதான் மனிதரின் உயிர்நாடி. அந்நாடியே மகரிசியின் அலையியக்கக் கருத்தின் உட்பொருளாக அமைந்துள்ளமை இன்புறுதற்குரியது.

    எழுத்தாற்றல்:

    மகரிசி அவர்களின் எழுத்து வடிவங்களைப் படிக்கும்போது அவரின் ஆன்ம இயக்கத்திற்கும் நமக்குமிடையே ஒரு மெல்லிய அலைத் தொடர்பு இருப்பது புலனாகும். ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள பேச்சு பயன்படுவதுபோலச் சமுதாயத்தில் பலரோடு தொடர்பு கொள்ள பலருடைய கருத்துகளை உணர்ந்து கொள்ள பின்னோருக்கும் வழிகாட்ட எழுத்தறிவு இன்றியமையாதது. திருவள்ளுவர்,

    ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு.’            . . .   குறள் – 1

    என முதல் குறளிலேயே எழுத்துக்குச் சிறப்புக் கொடுப்பதைக் காண முடிகிறது.

    ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’

    . . .  நறுந்தொகை – 1

    என்பார் அதிவீரராம பாண்டியர்,

    ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’

    . . .  கொன்றைவேந்தன் – 7

    என ஒளவையார் எழுத்தினைக் கண்ணாகக் காண்பதோடு ஆத்தி சூடியில்,

    ‘எண்ணெழுத்திகழேல்’

    . . .   ஆத்திசூடி – 7

    என எழுத்தின் மேன்மையை மொழிவார். ‘இறைவன் அன்று எழுதியதை அழித்தெழுதப் போவதில்லை’ என்ற பழமொழி நாட்டுமக்களிடையே ஊடாடு மொழியாக நாளும் மலரும்.

    மகரிசியின் குணநலப்பேறு எழுத்து வடிவத்தால் சிறப்புப்பெறும். ஏனெனில் எழுத்து கற்பொறிப்பு போன்றது. எழுத்துக் கல்வியின் சிறப்பைப்,

    “பத்து வயதாவதற்குள் எழுத்துக் கல்வி

    பயிற்சி எல்லாக் குழந்தைகட்கும் முடியும்”

                                                                                                 . . . ஞா.க.914

    என வலியுறுத்தியுள்ளார் வேதாத்திரி. எழுத்தினால்தான் முன்னோரின் அறிவாட்சித் தரத்தினை உணர்ந்து கொள்ள முடியும்.

    “……….முன்னோர் சொன்ன

    அருமைக் கலைகள் அனைத்தும் மொழிபெயர்த்து

    ஆண்டு முப்பதுக்குள்ளே எழுதிக் கொள்வோம்”

                                                                                                                        . . . ஞா.க.915

    என்ற மகரிசியின் கூற்று,

    “சென்றிடுவீர் எட்டுத் திக்கும்

    கலைச் செல்வங்கள் அனைத்தும்

    கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர்”

                                                            . . . (பாரதியார் பாடல்கள்)

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

    தமிழில் மொழிபெயர்த்திடல் வேண்டும்”

                                                                   . . . (பாரதியார் பாடல்கள்)

    என்பார் பாரதி. பாரதியின் ‘எட்டுத்திக்கும்’ பிறநாடு’ என்ற சொற்கள் உலகநலத்தொண்டன் மகரிசியின் கவியில் பெருமைப்பட முன்னோர் என்ற சொல்லாளுமை பாரதிதாசனிடம் மானுட சமுத்திரம் நான் எனத் தொடர்புபடுவதைக் கற்பார் காண்பர்.

    எழுத்தின் தன்மையினைக்

    “கடவுள்நிலை யறிந்தவனே அறியாதோர்க்குக்

    கருத்துணர்த்தும் நூல்கள் பல எழுதிவைத்தான்”

    கடவுள் இரகசியம் அதனை வெளியாய்க் காட்டும்”

                                                                                                               . . . ஞா.க.1119

    எனக் கடவுள் இரகசியத்தை அறிய வைப்பதற்கும் எழுத்து இன்றியமையாதது என்பது தெளிவாகிறது.

    கடவுள்நிலை அறிந்தவன் அறியாதவனுக்கு விளக்க எழுத்தையும் நூல்களையும் கருவியாக்கியுள்ளார் வேதாத்திரி.

    “உச்சரிப்பாய் நாவசைத்து எழுந்த ஓசை

    உருவான வரிவடிவம் எழுத்து ஆகும்

    எச்சப்தம் யாருக்கு விலக்கு சொந்தம்

    எழுத்துக்களும் அவ்வாறே அனைவருக்கும்”

                                                                                              . . .   ஞா.க.916

    என எழுத்துத் தோன்றிய முறையையும் அதன் உரிமையையும் விளக்கியுள்ளார். சப்தம் அனைவருக்கும் பொதுவென்றால் சப்தத்தால் தோன்றும் எழுத்துக்கள் ஒருவருக்கோ சில இனங்களுக்கோ மட்டும் எப்படி உரிமையாகும். இதையே வள்ளுவ ஆசான் தன் முதல் குறளில் எழுத்துக்கு உவமையாக அகரம் எழுத்துக்கு முதன்மை போன்றே உலக முதன்மை இறைவன் என்பார். பிரபஞ்சத்தில் இறைவனே மனிதனாகி வந்துள்ளான். அம்மனிதரில் இறைநிலையை உணர்ந்தவர், உணர விழைபவர் சிலரே. அதுபோன்று எழுத்து அனைவருக்கும் பொதுவாயினும் பேசுவோரெல்லாம் எழுத்துத் திறமை பெற்றவரல்லர் என்பதனை,

    ‘ஒருவரே பத்தில் அதை எழுதுவார்’

    எனும் தொடரால் வெளிப்படுத்தியுள்ளார் மகரிசி. 

    கவியியற்றல்

    உணர்வின் வெளியீடாகப் பிறப்பது கவிதை. “கவிதைப் போல ஆச்சரியம் பாரின்மிசை இல்லை” என்றார் பாரதி. கவிதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணத்தை எழுப்பவல்லது. காய்கறி, பருப்பு, மசாலா எல்லாம் இணைந்தது குழம்பானாலும் அது சமைக்கும் பக்குவத்திலேயே மணக்கிறது. சுவைக்கிறது. பலர் சமைக்கும் போது அது குழம்பாக இருப்பதில்லை. அதுபோலவே பேச்சும் எழுத்தும் மட்டும் கவிதை ஆகிவிட முடியாது.

    தண்ணீர் தாமரை இலையில் பட்டதும் பாதரசம்போல் மணிகளாக உருள்கிறது. புல் நுனியில் இருக்கும் பனித்துளி தனிவடிவம் கொள்கிறது. அங்ஙனம் சொல்லாளுமையின் கருத்து வெளிப்பாடே கவிதை.

    “…………..அறிவுடையோர் எழுதி வைத்த

    புனிதமுள கவிகளெலாம் விலையில்லா நற்

    போதனைக் கூடங்களைப் போல் நலம் விளைக்கும்

    தனியொருவன் திறம் பெருக்கத் தரம் உயர்த்தத்

    தக்க சாதனங்களிலே கவியும் ஒன்று”

                                                                                     . . .   ஞா.க.492

    எனக் கவியின் தன்மையை வெளிப்படுத்துவார் மகரிசி.

    மனித சமுதாயம் சாதி, சமூகம், மதம், மாநிலம், நாடு என ஒவ்வொரு நிலையிலும் பெரும் பிளவுபட்டு நிற்கிறது. இப்பிளவு நீங்க ஓருலக ஆட்சி மலர வேண்டும்.

    “ஓர் உலக ஆட்சியினால் யுத்தபயம் ஒழிந்துவிடும்

    போர் ஒழிந்தால் வீரர்களும் பொருட்களும் நற்சேவைக்காக

    பார் முழுதும் ஏழ்மைபோம் பண்பாடு சிறந்தோங்கும்

    சீர்திருத்த வாழ்வு அப்போ சித்திக்கும் சிந்திப்பீர்”

                                                                                                                                 . . .   ஞா.க.246

     

    என்ற கவிதையில் உலகில் போர் ஒழியவும் ஏழ்மை நீங்கவும் பண்பாடு சிறக்கவும் சீர்திருத்த வாழ்வினை மக்கள் அடையவும் ஓர் உலக ஆட்சி மலர வேண்டும் என விழைகிறார் வேதாத்திரி.

    “சொல்லடுக்காம் கவிகள் தமைப் பாடிப்பாடி

    சுருக்கமாய் உட்கருத்தை உணருமாப் போல்

    பல்வகை நற்செயலடுக்காம் சடங்கு மூலம்

    பாமரரும் வாழ்க்கை நல ஒழுக்கம் கற்பார்”

                                                                                                          . . .   ஞா.க.818

    ஓர் உலக ஆட்சிக்குக் கவிதையை ஊடகப்படுத்திய மகரிசி எந்தக் கவிஞரும் செய்யாப் புதுமையை விளக்குகின்றார். கவிதை எளிமை, இனிமை, காலங்கடந்தது, புதுமை தருவது போன்ற ஆழமான சிந்தனையை வெளிப்படுத்த கவிதையையே உவமையாக்கியுள்ளார். அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்குவது உவமையாகும் என்பார் இலக்கணிகள். பாமர ஞானியான மகரிசி பாமரரின் நலவாழ்க்கையும் ஒழுக்கமும் சடங்குகளால் கற்கப்படுவதை உரைக்க சொல்லடுக்காம் கவிதையை உவமையாக்கும் திறம் புதுமை பொலிவூட்டுகிறது. இதன்வழி கவிதைக்கு அணி எளிமை ஓரிரு ஆண்டு கல்வியறிவுடையோரும் அதன் கருத்தில் நிற்போருக்கும் கேட்கும் திறத்தார்க்கும் செவியின்பமாகும்.

    கவிதையைச் சிந்தை கொள்வார்க்கு உணர்த்தவே மகரிசி உவமையாக்கியுள்ளார். “கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்” என்ற கம்பராமாயணத் தொடரில் கம்பர் கவிதையைக் கோதாவரி ஆற்றுநீருக்கு ஒப்புமை காட்டும் நுட்பம் மகரிசி கவிதையைப் பாமரரின் சடங்கிற்கு உவமையாக்கிய திறம் கற்பாரைக் களிப்படையச் செய்யும்.

    சீவனுள்ள கவிதை

    கவிதை என்பது மலரின் மணம் போன்றது. எந்த மலரில் மணம் இருப்பினும் அது நறுமலர். அல்லாதவை வெறுமலர். அதுபோன்று உலக பொது நோக்குடைய ஜீவனுள்ள கவிதைகளே நறுமலர். புறநானூற்றில்

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே”             (-18)

    “தீதும் நன்றும் பிறர்தர வாரா”                                   (-192)

    “நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது

    செய்தல் ஓம்புமின்”                         (-195)

    “செல்வத்துப் பயனே ஈதல்”                                             (-189)

    போன்றன ஜீவனுள்ள தொடர்கள். உணர்ச்சியின் வெளியீடாக மட்டுமின்றி அறிவின் புலப்பாடாகவும் அறத்தின் பயன்பாடாகவும் ஜீவனுள்ள கவிதைகள் திகழும். அவை அனைத்தும் பன்மீன் நடுவில் பான்மதி ஒப்பன.

    கவிஞன் புனைவதெல்லாம் நிலைத்த கவிதைகள் ஆகிவிடுவதில்லை. கவிஞர் கண்ணதாசன் ஒரு பேட்டியில் ‘உங்கள் கவிதையில் உங்களுக்குப் பிடித்தது எது’ என்ற வினாவிற்கு என்கவிதைகள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். ஆனால் என் இறப்பிற்குப் பின்னும் எந்தக் கவிதைகள் மக்களால் பாடப்படுகின்றனவோ அவையே ஜீவனுள்ள கவிதைகள் என்பார். மேலும் தன்கவிதையில்

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

    எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”

    என்ற சீவனுள்ள கவிதையைப் படைத்த கவிஞர் கண்ணதாசன் மரணமில்லா விண்மீன் அனையர் என வெளிச்சமிடுவர். மண்ணில் விளையும் நெல்மணிகளில் பதர்களை நீக்குவன போன்றே கவிதைகளுள்ளும் சில கவிதைகளே சீவனுள்ள கவிதைகளாகின்றன.

    “எல்லோரும் அவனன்றி யார் வேறுள்ளார்”

                                                                                            . . .   ஞா.க. 302

    எனத் தெய்வமே மனிதனாகி வந்தமையையும்,

    “உணவு உடை வீடு என்ற மூன்றைத் தோற்றும்

    உழைப்பாளரே முதல்வர்”

                                                                                      . . .   ஞா.க. 118

    என உழைப்பாளரின் முதன்மையையும்,

    “இயற்கை விளைவுகளை வாழ்வின் வளமாக்கும்

    எச்செயலும் தொழிலாகும் ஏனையவை பணிவகையே”

                                                                                                               . . .   ஞா.க. 110

    எனத் தொழிலுக்கும் பணிக்கும் உள்ள வேறுபாட்டினையும்

    “எப்பொருளை எச்செயலை எக்குணத்தை

    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைத்தால்

    அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்

    அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்

    இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்”

                                                                                                 . . .   ஞா.க.10

    என எண்ணத்தின் வலிமையினையும்,

    “சொல்லால் மட்டும் நம்பாதே

    சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்”

                                                                                                             . . .   ஞா.க.2

    எனச் சிந்தனையைச் சீரமைக்கும் முறையினையும்,

    “அழுத்தம் எனும் உந்தாற்றல் ஒன்றைக் கொண்டே

    அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கி

    வழுத்துமோர் அறிவுமுதல் ஐந்தும் ஆறும்

    வகைவகையாய் உயிரினங்கள் தோற்று வித்து

    முழுத்திறனுடன் காத்து முடிக்கும் மேலாம்

    முழுமுதற் பொருளே நம்மறிவாய் ஆற்றும்”

                                                                                                                 . . .   ஞா.க.3

    என இறைநிலை அறிவாக இயங்கும் நிலை பற்றியும்,

    “வினைப்பயனைப் போக்காமல் வீடடைய விரும்புவதோ பொருந்திடாது”

                                                                                                                                                            . . .   ஞா.க.4

    என வீடுபேறு அடைவதற்கு வினைப்பயனைக் கழிக்க வேண்டியது நியதி என்றும்,

    “இந்த அரும் பிறவியில் முன்வினை யறுத்து

    எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்கு

    வந்த ஒருஉதவி குருஉயிரின் சேர்க்கை”

                                                                                                                      . . .   ஞா.க.11

    எனக் குருவின் மேன்மையையும்,

    “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்

    தரத்தில் உயர்த்திப் பிறவிப் பயனை நல்கும்

                                                                                                           . . .   ஞா.க.10

    எனக் குருவின் சேர்க்கைப் பிறவிக்கடலை கடக்கத் தோணியாக வழிகாட்டுவதையும் எளிமையாகவும் இனிமையாகவும் கற்றோரும் கல்லாரும் கற்றும் கேட்டும் சிந்தித்துத் தெளிந்து செயல்படவும் கவிதைகளாக்கியுள்ளார் வேதாத்திரி மகரிசி.

    பாதைகள் பலவாயினும் பரம்பொருள் ஒன்றே என்பதனைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் உரைக்கும் வேதாத்திரியக் கவிதைகள் நில உலகில் என்றும் நிலைத்து நின்று மக்களுக்கு வழிகாட்டும். விண்மீன்கள். சீவனுள்ள கவிதைகளின் நிலைப்புத் தன்மை என்பது நீலவான் மீன்கள் ஒத்தது என மகரிசி கூறியிருப்பது அவரின் கவிதைகளுக்கு மகுடமாகியுள்ளது.

    சங்க இலக்கியத் தொடர்கள், அற இலக்கியங்கள் போன்றன அன்று முதல் இன்றுவரை ஏன்? எதிர்காலத்திலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுவன போல மகரிசியின் கவிதைகள் வயதிலும் எண்ணிலும் நீலவான் மீன்கள் ஒக்கும் என்பன வெறும் சொல்லன்று, சத்திய வாக்குகள், உண்மை மொழிகள்.

    வினாக்கள் :

    1. பேச்சு என்பது என்ன?
    2. வேதாத்திரி மகரிசியின் எழுத்து வடிவங்களைப் படிக்கும்போது எழும் உணர்வு யாது?
    3. எது கடவுள் இரகசியத்தை வெளியாய்க் காட்டும்?
    4. எதன் வெளியீடாகக் கவிதைப் பிறக்கும்?
    5. எவை ஜீவனுள்ள கவிதைகள்?

     வாழ்க அறிவுச் செல்வம்!                                                 வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்கக் கவிகள் – 3

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்கக் கவிகள் – 3

    நாள் 27—03-2018-செவ்வாய்
    உ.ச.ஆ.27-03-33

    சி.க.3.படம்-27-03-2018
    கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல்

    கவிதைகள் மனித சிந்தனையைச் செம்மைப்படுத்தவும், அறிவை விசாலப்படுத்தவும் வல்லன. அவை சுயஅறிவைத் தூண்டி மக்களை விழிப்படையச் செய்யும். கவிஞரின் உள்ளத்தையும் கற்பவரின் உள்ளத்தையும் இணைக்கும் அற்புதமும் ஆற்றலும் கொண்டன. உள்ளத்தால் உணர்ந்து, தான் பெற்ற அனுபவங்களைப் படிப்போரும் அனுபவிக்கும் தன்மையைக் கொடுத்து எழுதுபவனே சிறந்த கவிஞன். கவிதையில் அமையும் கவித்தன்மை, பாடுவோரின் உள்ளுணர்வைப் பொறுத்தது என்பார் கி.வா. ஜகந்நாதன். இத்தகு நிலைக் களன்களில் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதைகள் புலப்படுகின்றன.

    சி.க.ப.3-பாட்டு image

     

    (ஓரிரு முறை பாடலை வாசிக்கவும்)

    சி.க.2-கவியினால் பயன்பெற யுக்தி-image

    பதினோறு வினாக்கள் உள்ளதே என்று மலைக்க வேண்டாம். இப்படி ஒரு பழக்கம் வந்துவிட்டால், ஒரு சில நொடிகளிலேயே நம் மனதில் இத்தனை வினாக்களும் எழுந்து விடும். அந்த மனதுடன் கவியின் பொருளைக் காண்போமேயானால் கவியின் உட்பொருள் மற்றும் கவிஞர் எந்த உள்ளுணர்வுடன் கவியை அருளினாரோ அந்த உள்ளுணர்வும் கவி வாசிப்போரின் மனதிலும் எழும். கவிஞர் அருளிய கவியின் நோக்கம்-பயன் நிறை வேறும். கவிஞர் அருளிய கவியின் நோக்கம் நிறைவேறுவதுதானே தேவை! கவியை வெறும் புற மனதளவிலே மட்டும் தெரிந்து வைத்திருந்து, அதாவது ஞாபகத்தில் வைத்திருப்பதனாலேயே மட்டும் என்ன பயன் வந்துவிடப்போகின்றது?

    எதற்காக கவிஞர் தன் அனுபவ-கண்டுபிடிப்புகளை கவியாக்குகிறார்? ‘ஒருவர் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும்’ என்கின்ற பெருநோக்குடன், தமது கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கும் தெரிவித்து கவிஞர்கள் மகிழ்வதோடு மட்டுமன்றி, சமுதாயத்தையும் மகிழச்செய்து, சமுதாயம் பண்பேற்றத்தில் வெற்றி காண்பதற்குத் தானே கவிகள் பிறக்கின்றன. மேலே கூறிய புதிய யுக்தியுடன்- அணுகுமுறையுடன் கவியின் உட்பொருளை அறியாததனால்தான் மகரிசி அவர்கள் கூறுவதுபோல் அறநூல்கள் கூறியிருக்கின்ற நெறிகள் சாதனைக்கு வராமல் போய்விட்டன இதுவரை(ஞ.க. பாடல் எண்-533). அந் நிலை 1911 ற்குப் பிறகு மாறத் தொடங்கிவிட்டது என்கிறோம் மனவளக்கலைஞர்களாகிய நாம். வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
    இதுபோன்ற புதிய யுக்தியுடன்-அணுகுமுறையுடன் கூடிய வினாக்கள் எல்லா அருளாளர்கள் அருளிய கவிகளுக்கும் பொருந்தும். இருப்பினும் மகரிசி அவர்களின் சிந்தனாப்பள்ளியில்(school of thoughts) சீடராக நாம் இருந்து வருவதனால், அப்பயனை முழுவதுமாக அடைவதற்கு, மகரிசி அவர்கள் அருளியுள்ள 1854 கவிகளையும் இந்த அணுகுமுறையோடு-யுக்தியோடு அணுகி பயன் பெற விரும்பப்படுகின்றது.
    இப்போது பாடலின் பொருளை அறிந்து கொண்டு அதன் உட்பொருளை விரிவாகக் காண்போம். வாழ்க வளமுடன்!
    பொருள்:
    சிற்பிகளின் திறமையைக் காட்டுவது சிலைகள். மக்களின் சிந்தனையைத் தூண்டுவது கவிதைகள். கவிஞனின் கற்பனை, ஆராய்ச்சி, அனுபவம், காட்சிகள் அனைத்தையும் சுருக்கித் தருவது கவிதை. அது மனிதரின் சுய அறிவைத் தூண்டி விழிப்பை வெளிச்சமிட்டுக் காட்டும்.
    உட்பொருள்:
    வேதாத்திரிய கவிதைகள் அனைத்தும் உட்பொருட் களஞ்சியங்கள்.
    சிலைகளும் கவிதைகளும்:
    சிற்பியின் தனித்திறமையும், அறிவும், கலை நுணுக்கங்களும் இணைந்து, சிலை வடிவமாகும். சிற்பி, கற்களையோ மரங்களையோ உலோகங்களையோ எடுத்து, வேண்டாதவற்றை நீக்கி விரும்பும் வடிவங்களில் சிலையாக்கும் போதுதான் கலை வடிவமாகவும், கவின் வடிவமாகவும் அவை மக்களைக் கவர்கின்றன.
    சிற்பியின் சிற்பங்களைப் போன்று கவிஞனால் படைக்கப்படும் கவிதைகளும் அமைகின்றன. ஆறறிவு பெற்ற மனிதன் பதிவுகளின் கொள்கலமாகின்றான். அப்பதிவு நீக்கம் பெற இறையுணர்வும் அறவுணர்வும் பெறுதல் வேண்டும். இறையுணர்வு பெற்ற மனிதனே பிரம்மஞானியாகிறான்.
    சிற்பங்களை உருவாக்குவதற்குச் சிற்பிக்கு உளி, சுத்தியல் போன்ற கருவிகள் தேவைப்படுவன போன்றே மனிதன் இறைநிலை உணர அறுகுண சீரமைப்பும், தவமும், தற்சோதனையும் கருவிகளாகின்றன. அல்லதை(தேவையற்றதை) விடுத்து உள்ளதை உணர்ந்து நல்லதைக் கொள்ளுவதே சிற்பியின் சிலைவடிப்பு நேர்த்தியாகும்;. வேதாத்திரியக் கவிகளோ மனிதன் இறைநிலை உணரும் பயணத்தைத் தொடர வேண்டி அல்லதைத் தவிர்த்து உள்ளதை உணர்ந்து நல்லதைக் கொள்ளும் பக்குவம் தருவன.
    பக்திவழி செல்லும் பக்தனுக்குச் சிலை, கடவுளோடு ஒன்றும் மன ஓர்மைக்கு ஊன்றுகோல். வேதாத்திரியக் கவிகள் மக்களின் மன ஓர்மைக்கு வழிகாட்டி, வாழ்வில் எழும் சிக்கல்களை ஓட்டும்.
    மகரிசி அவர்களின் கவிதைகள் இறை உணர்வின் வெளிப்பாடுகள். அவர் கவிதை எழுத ஏட்டினில் கை வைக்கும் போது எண்ணங்கள்(அகண்டாகாரம்) இறைநிலையோடு ஒன்றியிருக்கும். இயற்கை இரகசியங்களை அகக்கண்ணால் கண்டு அக்காட்சிகளை எழுதுவதால், அவருடைய கவிதைகள் அனைத்தும் இறையுணர்வு கவிதைகளாக மலர்ந்துள்ளன.
    நல்ல கவி(19-12-1962)
    “கவியென்றால் மனித இனப் பண் புயர்த்தும்
    கல்வியாய்க் கருத்தொலியாய்த் திகழவேண்டும்”
    ஞா.க. பகுதி-1-481
    என நல்ல கவிதைக்கு இலக்கணம் வகுத்துள்ளார் மகரிசி.
    அறிவு பண்பட்ட நிலையில் தன்னை உணர்ந்து மக்களின் நிலையினை ஆராய்ந்து சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்த்துக் கவிஞன் கவிதை படைப்பான். வேதாத்திரிய கவிஞரோ மக்களின் நல்வாழ்வுக்கேற்ற வழிமுறைகளையும், இறையுணர்வுத் தேடல் நெறிகளையும் கவிதைகளாக்கியுள்ளார். “ஒரு பொருளை உணரவேண்டுமென்றால் அப்பொருளின் கீழ் உன் மனஅலையை நிறுத்திப்பார். அது உனக்கு உணர்த்தும்” என்பார் அருட்தந்தை. இதனை,
    “பாட்டெழுதும் பழக்கமுளான், அறிவு நன்றாய்ப்
    பண்பட்டுப் பற்றற்ற நிலையடைந் தால்,
    நாட்டுமக்கள் தேவைஅவன் அறிவில் தோன்றும்;
    நல்வாழ்வுக் கேற்றமுறை அனைத்தும் தோன்றும்;

    ஞா.க. பகுதி-1-489
    என்ற கவியில் வெளிப்படுத்தியுள்ளார். ஆழ்ந்த சிந்தனையில் மன அலைச்சுழல் குறையும். அவ்வமயம் கவிஞனின் கற்பனைகளும் அனுபவங்களும் ஆராய்ச்சிகளும் அகக்காட்சியாக மலரும்.
    மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, மலை, கடல் முதலிய இயற்கை உருவங்களையும், கடவுள், தெய்வம், அரக்கர் முதலிய உருவங்களையும் அழகு பட அமைப்பதே சிற்பக்கலையாகும்.
    “காக்கை குருவி எங்கள் ஜாதிநீள்
    கடலும் மலையும் எங்கள் கூட்டம்
    நோக்கும் திசையெலாம் நாமின்றிவேறில்லை
    நோக்கநோக்கக் களியாட்டம்”
    இறைவனே ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை பரிணாமம் பெற்று, எங்கும் நிறைந்துள்ளான். உலகிலுள்ள இயங்கும் பொருள், இயங்கா பொருள் அனைத்தும் இறைவனின் வடிவங்களே. இதனால்தான் சிற்பியின் சிலையை கோயிலில் தெய்வமாகக் கண்டு மகிழ்கிறோம். வணங்குகிறோம். இறைவனே மனிதனாகி வந்தமையே மகரிஷி அவர்கள் காந்த தத்துவ சிறப்பின் வெளிப்பாடு. அந்த வெளிப்பாடே பாரதியின் பாடலிலும் மலர்ந்துள்ளன.

    சுருக்கிச் சொல்லுதல்:
    எழுத்துலகில் கவிதைக்கும் உரைநடைக்கும் வேறுபாடுண்டு. வாசிப்போன் கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உரைநடை உதவுகிறது. நாளிதழ்கள் பல நாள்தோறும் வெளிவரினும் வாசிப்பைப் பாமரமக்களிடம் தொடர்ந்து அவன் மொழியாய்த் தருவன சில இதழ்களே. அவை செய்தியை எளிய உரைமொழியில் தந்து மக்களிடம் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
    கம்ப்யூட்டர்யுகமான இக்காலத்தில் மனிதன் சுருக்கத்தையே விழைகிறான். ஆதலால் உரைநடை சுருக்கமாகிப் புதுக்கவிதைகள் உருவாயின. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் கவிஞர் இயல்பு. மேலைநாட்டு அறிஞர்கள் சொற்களின் சிக்கனமே கவிதை என்பர். சுருக்கம் கவிதைக்கு அணி. காலங்காலமாக மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது ஆத்திசூடி.
    அறம்செயவிரும்பு
    ஆறுவதுசினம்
    இயல்வதுகரவேல்
    எனக்கூறும் (1,2,3) ஆத்திசூடியும்

    தந்தைசொல் மிக்க மந்திரமில்லை
    தாயிற் சிறந்ததொருகோயிலுமில்லை

    எனமொழியும் (37,38) கொன்றை வேந்தனும் சுருங்கச் சொல்லி பிஞ்சு நெஞ்சங்களில் அறஉணர்வை ஊட்டிவளர்க்கின்றன. கவிதை அமைக்கும் தன்மையினைத் தெ.பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை,
    “சொல்லும் பொருளும் நனிசிறப்பச்
    சுருங்கச் சொல்லல் முதலாய
    தோட்டி(அழகு)அமைய”
    சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – முத்தப்பருவம் – 3
    வேண்டும் என்பார். மனிதன் இறைவன் இட்ட சுருக்கு ஒப்பம் என்பார் இறையன்பு. இங்கு மனிதனே இறைவனின் சுருக்கம் என்பது புலனாகிறது.

    படைப்பாளனின் கற்பனை, ஆராய்ச்சி, அனுபவங்கள், விளக்கங்கள் அனைத்தும் கவிதையாகச் சுருங்குவதும் உரைநடையாக விரிவதும்போல் மனித மனத்தின் இயல்பு சுருக்குதலும் விரித்தலுமாகும். மனிதனின் எண்ணம், சொல், செயல்கள் அனைத்தும் கருமையத்தில் சுருக்கிப் பதிவு செய்யப்படுகிறது. தேவைப்படும்போது அதை எண்ணமாக மனம் விரித்துக் காட்டுகிறது.
    கவிதைக்கும் கருமையத்திற்கும் ஒற்றுமை உண்டு. இரண்டும் சுருக்கப் பதிவுக் களங்கள்(fields). இக்களங்களையே மகரிசி அவர்கள், ‘சொற்ப நேரத்தினிலே சுருக்கிச் சொல்லி’என மொழிந்துள்ளார். ஒரு பொருளைப் பார்ப்பதும் செயலைச் செய்வதும் வெகு நேரமாக இருப்பினும் அது கணப்பொழுதிலேயே கருமையப் பதிவாகிவிடுகிறது. கவிதை சுருங்கச் சொல்லப்படுவதால் கால விரையம் பெரிதும் தவிர்க்கப்படுகிறது.
    சிந்திக்கவைத்தல்:
    வேதாத்திரிய கவிகள் அனைத்தும் சிந்தனைத் துளிகள். தனிமனிதன், சமுதாயம், உலகம், அமைதி, பொருளாதாரம், இறைநிலை என மகரிசி தொட்ட இடங்களெல்லாம் சிந்தனைக் களங்கள்.
    பண்பு(02-01-1955)
    “சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
    பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு”
    ஞா.க. பகுதி-1-632
    என நற்பண்பினைப் பற்றியசிந்தனையைத் தந்துள்ளார் மகரிசி.

    கடன் புண் போன்றது. வட்டிபுண் சீழ் பிடித்தல் போன்றது.
    ஞா.க.80
    “வேரறுந்தமரத்தினைப் போன்றவர்கள்
    ஐயுணர்வில் மயங்கியவர்கள்” ஞா.க.1399

    “ஆழ்கடல் போன்றது மெய்ப்பொருள்” ஞா.க.1125

    “தவஉணர்வுநங்கூரம் போட்டகப்பல்
    போன்று விலகாமல் ஓரிடமாய் நிலைத்துநிற்கும்.”
    ஞா.க.1481
    எனத் தொட்ட இடங்களிலெல்லாம் வேதாத்திரி மகரிசி மக்களைச் சிந்திக்க வைத்துள்ளமை புலனாகின்றன.
    சுய அறிவைத் தூண்டுதல்:
    ஒவ்வொரு படைப்பாளனுக்கும் அவரவர் சுய அறிவு, படைப்புகளில் வெளிப்படும். கவிதை சுய அறிவைத் தூண்டும் போது அது உயிரோட்டமான கவிதையாகிறது.
    “நுண்ணிய நூல்பலகற்பினும் மற்றும்தன்
    உண்மைஅறிவேமிகும்.” . . . (குறள். 373)

    என்பார் திருவள்ளுவர். உண்மை அறிவு என்பது சுய அறிவு அல்லது இயற்கை அறிவாகும். மகரிசியின் சுய அறிவே அவரின் படைப்பாக்கங்களின் வெளிப்பாடு. அவை பாமரனையும் பிரம்மஞானியாக்கும் உத்தியினைத் தன்னகத்துக் கொண்டன.
    “ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்குசொல்லவேண்டாம்
    மாதாவைஒருநாளும் மறக்கவேண்டாம்
    வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்”
    – . . . உலகநீதி– 1
    என உலகநீதி வலியுறுத்தும். இக்கவிதையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் சுய அறிவுமேம்பாடு அடையுமல்லவா?
    மகரிசிஅவர்கள்,
    “கடவுள்எனப் படுபவனே மனித னானான்!
    கருத்தியங்கிக் கருத்துயர்ந்து கருத்தறிந்தான்!
    கடவுளாய் அனைத்தையுமே கண்டு விட்டான்!
    காண்பவனே ஆதி அந்தமாகநின்றான்!”
    . . . ஞா.க.1119

    இங்கு மகரிசி அவர்கள், மனிதனானான், கருத்தறிந்தான், கண்டுவிட்டான், அந்தமாகி நின்றான் என்ற வினைமுற்று அடுக்குகளில் கடவுளே தன்மாற்றம் கொண்டு ஆறாவது அறிவைப் பெற்ற நிலையைக் கவிதையில் போற்றியுள்ளார்.
    சுயஅறிவைத் தூண்டும் புலவர்களைப் போற்றுவதற்காகவே மகரிசி அவர்கள் கவிதைகளைப் போற்றியும், கவிதைப் பயன் விளக்கியும் படைப்புக்கும் படைப்பாளிக்குமான ஒற்றுமையைக் கவிதையாக்கியுள்ளார்.
    விழிப்படைதல்:
    எண்ணம், சொல், செயல்களில் எதைச் செய்யவேண்டு, எதைத் தவிர்க்கவேண்டும் என்பதை ஆராய்ந்து நல்லவற்றைச் செய்யவேண்டும் என்ற மனஓர்மையுடன் இருப்பதுவே விழிப்படைதலாகும். மகரிசி அவர்கள் அகண்டாகார விழிப்பு நிலையில் இருந்து வெளிப்படுத்தியதே ஞானக்களஞ்சியக் கவிதைகளாகும்.
    கவிஞர்கள் எண்ணத்தில் உதிக்கும் கருத்துக்கள் விழிப்புநிலையில் வெளிவருவனவாகும். அறக்கருத்துகளும் தத்துவ சிந்தனைகளும் பக்திப் பாடல்களும் விழிப்புநிலையின் வெளிப்பாடுகளாகும். மகரிசியின் விழிப்புநிலையே
    குருவாகவும்,
    ஞானியாகவும்,
    ஆசிரியராகவும்,
    கவிஞனாகவும்,
    மருத்துவராகவும்,
    விஞ்ஞானியாகவும்,
    சிந்தனையாளராகவும்,
    மெய்ஞ்ஞானியாகவும்,
    பொருளாதார நிபுணராகவும்,
    உழைப்பாளிகளின் நண்பனாகவும்,
    நமக்கு அவரைப் பன்முகங்களில் அடையாளம் காட்டுகிறது.
    சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் சீரினைஅறிந்தவர் மகரிசிஅவர்கள்.
    “செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம் செய்தால்
    எய்தவிரும்பியதையெய்தலாம்!”

    என்ற பாரதியின் தொடர் மக்களை விழிப்படையச் செய்வதற்குரிய தூண்டுகோலாகும். விழிப்புணர்வு என்பது இறைநிலை உணர்வோடு இருத்தலாகும்.
    “இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்க விட்டு
    ஏற்படும்ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
    நிறைநிலையே தானாக உணர்வ தாகும்”
    . . . ஞா.க.1487

    என்ற மகரிசியின் கூற்றில் விழிப்புநிலையின் விளக்கம் எளிமையாகிவுள்ளதைக் காணமுடிகிறது.
    திருவிழா கூட்டத்தில் குழந்தையைத் தேடுவதுபோன்று நல்ல கவிதைகளைத் தேடவேண்டியகாலம் இது. இக்காலகட்டத்தில் அருட்தந்தையின் அமரத்துவம் பெற்ற அருட்கவிகள் நமக்கு வரமாக அமைந்துள்ளன. மழைநீர் பள்ளம் நோக்கி ஓடி இறுதியில் கடலில் கலப்பதுபோன்று வேதாத்திரியகவிகள் மனிதர்களைக் குருவழியில் இறைநிலையை உணரவைக்கின்றன.
    சுயசோதனை வினாக்கள்:
    (தன்னையே சோதித்துக் கொள்ளும் வினாக்கள்)

    1. கவிதை என்பது யாது?
    2. இறைநிலையைஉணரக்கூடிய கருவிகள் யாவை?
    3. கவிஞனின் கற்பனைகளும் அனுபவங்களும் ஆராய்ச்சிகளும் எப்பொழுது அகக்காட்சியாய் மலரும்?
    4. கவிதைக்கும் கருமையத்துக்கும் உள்ள ஒற்றுமையாது?
    5. சுய அறிவு என்பது யாது?
    6. விழிப்புணர்வு–விளக்கம் தருக.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்கக் கவிகள் பயிற்சி – 2

    வாழ்க மனித அறிவு!                                             வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்கக் கவிகள் பயிற்சி – 2

    வாழ்க வளமுடன்!

    மகரிஷி அவர்கள் பாடுவதைக் கேட்போம்.  பிறகு சத்சங்கத்தைத் தொடங்குவோம்.

    20-03-2018-செவ்வாய்

    உ.ச.ஆ. 20-03-33

    வாழ்க வளமுடன்!

    vet        இன்றைய சத்சங்க நிகழ்வாக, சிந்தனைப்பயிற்சியில் ஒன்றான ‘சிந்திக்கக் கவிகள்’ பயிற்சியினை எடுத்துக் கொண்டுள்ளோம். ‘கவியின் ஆற்றல்’ பற்றி மகரிசி அவர்கள் அருளியுள்ள கவியினையே பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறோம். ஆற்றல் என்பது என்ன என்று யாவரும் அறிந்ததே! ஆற்றலில் பல வகைகள் உண்டு. உதாரணத்திற்கு மின்னாற்றல்(Electrical energy) இயந்திராற்றல் (Mechanical energy), வெப்ப ஆற்றல்(Heat energy) போன்றவை. கவியால் ஆற்றல் வருகின்றது என்றால் அது என்ன ஆற்றல்?

    பொதுவாக ஆற்றல் எனில் ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக்கூடிய சக்தி, திறன்(capability, ability, capacity) என்று பொருள். மேலும் இயந்திரங்களை இயக்கக்கூடிய சக்தி(Motive power). இங்கே கவியின் ஆற்றல் என்பது என்ன? அதாவது கவியின் சக்தி என்பது என்ன? கவி வாசிப்போரின் சிந்தனைத் திறனை வளர்ப்பது, அதாவது

    ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும்
    அதுதாண்டா வளர்ச்சி’

    என்று கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அறிவின் வளர்ச்சி பற்றிக் கூறியுள்ளதுபோல் அறிவை வளர்ப்பது. ஆகவே கவியின் ஆற்றல் மனிதனின் அறிவாற்றலை வளர்க்கும். அறிவு வறுமைகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவற்றைக் களைந்து அறிவை முழுமை அடையச்செய்தால்தான் அறிவின் வளர்ச்சியைக் காணமுடியும் கவியின் ஆற்றல்.

    மேலும் கவிஞரின் சிந்தனைத்திறனை, உணர்வை, பல நாட்களில்/ஆண்டுகளில் பெற்ற அனுபவங்களை எளிதாக ஒரு சில மணித்துளிகளில் கவி வாசிப்பவர் அறிந்து பயன்பெற கவிகள் பேருதவியாக இருக்கின்றன. கவிகள் மனிதன் பண்பேற்றம் பெற இயல்பூக்க நியதினை பயன்படுத்திக் கொள்ளும். இனி சிந்தனைக்கு எடுத்துக் கொண்டுள்ள பாடலுக்குள் செல்வோம்.

    song1

     

    (ஓரிரு முறை பாடலை வாசிக்கவும்)

    song2

    பதினோறு வினாக்கள் உள்ளதே என்று மலைக்க வேண்டாம். இப்படி ஒரு பழக்கம் வந்துவிட்டால், ஒரு சில நொடிகளிலேயே நம் மனதில் இத்தனை வினாக்களும் எழுந்து விடும். அந்த மனதுடன் கவியின் பொருளைக் காண்போமேயானால் கவியின் உட்பொருள் கவிஞர் எந்த உள்ளுணர்வுடன் கவியை அருளினாரோ அந்த உள்ளுணர்வும் கவி வாசிப்போரின் மனதிலும் எழும். கவிஞர் அருளிய கவியின் நோக்கம்/பயன் நிறை வேறும். கவிஞர் கவி அருளிய நோக்கம் நிறைவேறுவதுதானே தேவை! கவியை வெறும் புற மனதளவிலே மட்டும் தெரிந்து வைத்திருந்து, அதாவது ஞாபகத்தில் வைத்திருப்பதனாலேயே மட்டும் என்ன பயன் வந்துவிடப்போகின்றது?

    எதற்காக கவிஞர் தன் அனுபவ-கண்டுபிடிப்புகளை கவியாக்குகிறார்? ‘ஒருவர் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும்’ என்கின்ற பெருநோக்குடன்தானே, கவிஞர்களின் கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கும் தெரிவித்து கவிஞர்கள் மகிழ்வதோடு மட்டுமன்றி, சமுதாயத்தையும் மகிழச்செய்து, சமுதாயம் பண்பேற்றத்தில் வெற்றி காண்பதற்குத் தானே கவிகள் பிறக்கின்றன. மேலே கூறிய புதிய யுக்தியுடன்/அணுகுமுறையுடன் கவியின் உட்பொருளை அறியாததால்தான் மகரிசி அவர்கள் கூறுவதுபோல்அறநூல்கள் கூறியிருக்கின்ற நெறிகள் சாதனைக்கு வராமல் போய்விட்டன இதுவரை(ஞ.க.பாடல்எண்-533). அந்த நிலை 1911 ற்குப் பிறகு மாறத் தொடங்கிவிட்டது என்கிறோம் மனவளக்கலைஞர்களாகிய நாம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

    இதுபோன்ற புதிய யுக்தியுடன்/அணுகுமுறையடன் கூடிய வினாக்கள் எல்லா அருளாளர்கள் அருளிய கவிகளுக்கும் பொருந்தும். இருப்பினும் மகரிசி அவர்களின் சிந்தனாப்பள்ளியில்(school of thoughts) அணுக்கச் சீடராக நாம் இருந்து வருவதனால், அப்பயனை முழுவதுமாக அடைவதற்கு, மகரிசி அவர்கள் அருளியுள்ள 1854 கவிகளையும் இந்த அணுகுமுறையோடு/யுக்தியோடு அணுகி பயன் பெற விரும்பப்படுகின்றது.

    இப்போது பாடலின் பொருளை அறிந்து கொண்டு அதன் உட்பொருளை விரிவாகக் காண்போம். வாழ்க வளமுடன்!

    பொருள்: பாடல்கள் படிப்பதனால் பகுத்துணர்வு தோன்றும். மூடர்கள் பேரறிஞர்களாவர். படிப்பவர்களின் செயல் திறமை கூடும். ஆற்றலுள்ள கவிதைகள் உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

    உட்பொருள்:
    இருளைப் போக்குகின்ற கதிரவன் போல் மக்களின் துன்பத்தைப் போக்குவது பாடல்கள். அப்பாடல்கள் மனித வாழ்க்கையை மனம்போன போக்கில் செல்லவிடாது மனித சமுதாயத்திற்கும் உலக உயிர்களின் உய்விற்கும் வழிகாட்டும்.

    பாடல் படிக்கும் பழக்கம்:
    இன்று மக்கள் அறியாமை என்ற மயக்கத்தில் ஆழ்ந்து துயருறுகிறார்கள். வேதாத்திரியப் பாடல்களைப் படிக்கும் பழக்கமுடையவர்கள் இயற்கையமைப்பு, மனித இனவரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப்போக்கு, தனது அறிவுநிலை, விஞ்ஞானம், கலைகள் இவைகளோடு ஒப்பிட்டு ஆய்ந்து தெளிவு காண்பர். மனிதனை மனிதன் அறிந்தும், உயிர்களின் நேயம் பேணும் மனிதனாகவும் வாழும் சூழல் உருவாகும். பகுத்துணர்வும் ஆராய்ந்து செயலாற்றும் பண்பும் பாடல் படிப்பவர்க்கு ஏற்படும்.

    பாடல் படிக்கும் பழக்கம் ஒருவரின் நற்சிந்தனையைத் தூண்டும். சிந்திக்கச் சிந்திக்கப் பழக்க வழக்கத்தின் நன்மை தீமைகள் அறிவுப் பரப்பில் தெளிவுறும். சிந்தனை வளமும் நலமும் சீர்மை பெறும். சொல், செயல், எண்ணங்களை மனிதன் பகுத்துணர்ந்து செயலாற்ற முடியும்.

    செய்தி படிப்பதற்கும் கவிதை படிப்பதற்கும் நிரம்ப வேறுபாடுண்டு. உள்ளதை அப்படியே எழுதுவது செய்தி. கவிஞன் தான் உணர்ந்ததைச் சமூகம் நோக்கித் தருவது கவிதை. செய்தியை மீண்டும் மீண்டும் படிக்கும் போது சலிப்பு தோன்றும். கவிதை படிக்கப் படிக்கச் சுவை கூட்டும். கவிஞனின் உணர்வுகளை உணர்ந்து கொள்ளவும் அதன் உட்பொருள் காணவும் திரும்பத் திரும்பக் கவிதையைப் பன்முறை படிக்க வேண்டும்.

    திருக்குறள் ஒன்றே முக்கால் வரி கவிதை. அதனைப் படிக்கப் படிக்கப் புதுப்புதுப் பொருள் புலப்படும். அது காலந் தோறும் நலம் பேணுகின்றது.

    இன்று வரை திருக்குறள் காணும் உரைவளம் இதற்கோர் உரைகல். திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிசியும் திருக்குறளுக்கு உட்பொருள் கண்டவர்தானே! வேதாத்திரியக் கவிதைகளைப் படிக்கப் படிக்க அவரின் ஆழ்மன ஓட்டம் காணமுடிவதால் அது படிப்பவர் சிந்தனைக்கு ஒளிதரும் சுடராகின்றது.

    வேதாத்திரி மகரிசி அவர்களின் ஆழ்மன ஓட்டமானது தான் பெற்ற இறை உணர்வைப் பாமரமக்களும் பெற்று அவர் யார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள அறிவொளி பாய்ச்சுகிறது.

    ஒருவர் தன்னை உணருவதற்கும், அகத்தில் ஆழ்ந்து ஆழ்ந்து பயணிப்பதற்கும், இறையுணர்வு பெறுவதற்கும் வேதாத்திரியப் பாடல்களே வித்து.

    பகுத்துணர்வு பெறுதல்:

    இறையுணர்வு பெறும்போது மனிதனிடம் பகுத்துணர்வு தோன்றும். பகுத்துணர்வு தொகுத்துணர்வும் பண்பாட்டை உயர்த்தும். அதுவே கருமயோக வழிகாட்டியாகும்.
    தான்பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம் என்பது வேதாத்திரியக் கோட்பாடு. இக்கோட்பாடே “வாழ்கவளமுடன்” என்னும் வாழ்த்துக் கோட்பாடாக மலர்ந்து வையம் பேணுகிறது.
    முன்செய்த தவறுகளின் விளைவுகள், தற்பொழுது செய்த செயல்களின் பழக்கப் பதிவுகள் இவ்விரண்டினாலும் ஒருவர் பெற்றுள்ள விளைவின் மூலம் மனிதனின் இன்ப துன்ப வாழ்க்கை அமைகிறது. சிக்கலிலிருந்து விடுபட முயற்சியும் விழிப்புநிலையும், பழக்கத்தை மாற்றி விளக்கம் பெற்று வாழும் துணிவும் மகரிசி அவர்களின் கவிதைகளில் மிகுதியாகக் காணமுடிகின்றன.

    முக்கால ஞானம்:
    கடந்தகால அனுபவங்கள், தற்காலச் சூழ்நிலைகள், எதிர்கால விளைவுகள் மூன்றையும் இணைத்து அறியும் திறனே முக்கால ஞானம். இஞ்ஞானத்தால் ஒருவர் இயற்றும் திட்டங்களும் செயல்களும், போதனைகளும் சிறந்தவையாக அமையும்.

    நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவையற்று.– குறள் 407.

    நுணுகி நுணுகி ஆராய்ந்து ஊடுருவி கண்ட தெளிவே நுண்மாண் நுழைபுலமாகும். இது முக்கால ஞானத்தால் தோன்றும்.

    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்.– குறள் 373.
    எனக்கூறிய வள்ளுவர்,

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பதறிவு.– குறள் 423.
    என்பார்.

    மெய்ப்பொருள் என்பது உண்மையறிவு. மெய்ப்பொருளை அடைய தவமும் தற்சோதனையும் வழிப்படுத்தும். இவை உள்ளதை உணர்ந்து அல்லதை விடுக்கும், அறிவினை நல்கும். அறிவுத் தேர்ச்சியில் ஒருவர் பெற்றதை, அறிந்ததை, உணர்ந்ததைப் பிறருக்குக் கொடுக்கும் எண்ணம் பெருகும்.

    மூடர்களும் பேரறிஞர்களாவர்:

    அறநெறியும் இறையுணர்வும் மக்கள் பெறவேண்டும் என்னும் நன்னோக்கில் கவிகளைத் தத்துவமாகவோ வாய்மொழிப் பாடல்களாகவோ மட்டுமின்றி மக்களின் ஆன்மபசிக்கு உணவாகவும் கர்மவினைகளுக்கு மருந்தாகவும் தந்துள்ளது வேதாத்திரியம். மக்கட் சமுதாயம் அனைத்துக்கும் தேவையான அன்பு, தொண்டு என்னும் பண்புகளைத் தாங்கிக் கர்மயோகக் கொள்கையர்களாக மக்கள் வாழ்தல் வேண்டும். மகரிசி அவர்களின் விருப்பமே மூடர்களைக்கூடப் பேரறிஞர்களாக்கும் வரியாக மலர்ந்துள்ளது.

    நிலைத்தகவி:
    “அறம் செய விரும்பு” – ஆத்திசூடி
    “வாழ்தல் வேண்டிப்பொய்கூறேன் மெய் கூறுவல்” – புறநானூறு 139.

    “யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தரவாரா” – புறநானூறு 192.

    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்” – குறள் 50.

    போன்ற கவிகள் உயிரோட்டம் மிக்கன. வேதாத்திரியக்கவிகளோ உயிர்ப்பானவை. அவை உயிருக்கு உரமூட்டி இறையுணர்வு அறிய ஊன்றுகோல்களாகின்றன. அறவுணர்வோடு வாழும் பக்குவத்தையும் பண்பாட்டையும் நிலைப்படுத்துகின்றன. பாமரனையும் மனவளக்கலை பயிற்சியால், கல்வியால் பண்டிதனாக்குகின்றன. தன்னையறிந்தால் தனக்கொரு கேடில்லை என்னும் தத்துவத்தின் விளக்கமே வேதாத்திரியக் கவிமொழி.

    சுயசோதனை வினாக்கள்:
    (தன்னையே சோதித்துக் கொள்ளும் வினாக்கள்)

    1. செய்திக்கும் கவிதைக்கும் உள்ளவேறுபாடு யாது?
    2. உண்மை அறிவு என்பது என்ன?
    3. முக்கால ஞானம் என்பது என்ன?
    4. பகுத்துணர்வு என்றால் என்ன?
    5. செயலாற்றும் திறமை என்று எதனைக் குறிப்பிடுகின்றார் மகிரிசி அவர்கள்?
    6. ‘ஈடற்ற ஆற்றல்’ என்றால் என்ன?
    7. அகத்தில் ஆழ்ந்து ஆழ்ந்து பயணித்தல் என்றால் என்ன?

         அடுத்த செவ்வாய் கிழமை(27-03-2018) வேறொரு கவியினை சிந்திக்கக் கவிகள் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வோம்.  வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                             வளர்க அறிவுச் செல்வம்!!

  • அறிவிப்பு-14-03-2018-புதன்

    வாழ்க மனித அறிவு!                         வளர்க மனித அறிவு!!

    அறிவிப்பு

    14-03-2018-புதன்

    அன்பர்களே!
    வாழ்க வளமுடன்!

    இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும். (Click)

    சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன்படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

    தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்கக் கவிகள்- பயிற்சி-1

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்கக் கவிகள்- பயிற்சி–1

    நாள்: — 28-10-2014

    குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    அறிவை அறிந்த அறிஞர்கள் தங்களின் அனுபவத்தால் அறிந்து இன்பமுறுவதை, தான் அனுபவித்ததுபோல் இவ்வுலக மக்களும் பயன் பெற விரும்பி, மூன்று விதங்களில் தெரிவிப்பார்கள். ஒன்று அருளுரை நிகழ்த்துவார்கள் இரண்டாவதாக நூல்கள் எழுதுவார்கள். மூன்றாவதாக கவிகள் எழுதுவார்கள்.

    கவிகள் என்பது என்ன? மகான்களின் கவிதை என்பது, அவருடைய எண்ணத்தையோ அல்லது அனுபவத்தையோ சமுதாய நலன்கருதி தெரிவிக்க உரைநடை இல்லாத சொல்லமைப்பில் சுருக்கமாகவும். செறிவாகவும். வெளிப்படுத்தும் வடிவம். கவிகள் நான்கு வரிகள் இருந்தால் அதற்கான விளக்கம் நாற்பது வரிகளாகவோ அல்லது ஒரு நூலாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு செறிவுள்ளதாக இருக்கும் கவிகள். எனவே கவிகளை மனனம் செய்வதோடு மட்டுமல்லாது அதன் உட்பொருளை உணர்ந்து கொண்டு பயன் பெற வேண்டும்.

    கவிகளின் சிறப்பு பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் பதின்மூன்று தலைப்புகளில் பதின்மூன்று கவிகள் அருளியுள்ளார். கவிகளின் சிறப்பைக் கூறுவதற்கும் கவிகளே இயற்றியுள்ளார் என்பது அவருடைய கவித்திறமையைக் காண்பிக்கின்றது, அதுமட்டுமல்ல அவருடய செறிவுள்ளக் கவிகள் ஆர்வத்துடன் படிப்போர்களுக்கு மனிதப் பிறவியின் பயனை அடைவதற்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பேருதவியாக இருக்கும். அப்படி என்றால் வாழ்வின் நோக்கம் தாங்களாகவே கண்டுபிடித்து பிறவிப்பெருங்கடலை நீந்தி பிறவிப்பயனை எய்துவதற்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

    நல்ல கவி, கவியின் சிறப்பு, சிறப்புடைய கவிகள், கவியின் பெருமதிப்பு, கவியின் ஆயுளும் எண்ணிக்கையும், கவி ஓர் சிந்தனைத் தூண்டுதல், கவியின் ஆற்றல், அருட்பா, பலர் கருத்தும் கவிஞனின் அறிவில் பிரதிபலிக்கும். கவிகள் எவ்வாறு வருகின்றன?. கீழ்த்தரமான கவிகள், கவிகள் பொதுச் சொத்து. நிறைவாய் இருக்க ஆகிய பதின்மூன்று தலைப்புகளில் கவிகள் இயற்றியுள்ளார்.
    கவிகளின் பெருமதிப்பை, இயற்கையிலுள்ள நிகழ்வோடு ஒப்பிட்டு வேதாத்திரி மகரிஷி அவர்கள் எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.
    பேச்சினைப் பெய்கின்ற மழையோடும், எழுதுகின்ற எழுத்தை நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை ஆகியவைகளோடும், கவிகளைப் பெருமலையிலிருந்து நீர் கீழே இறங்கி கடல் வரை பேரோட்டமாக ஓடும் சீவநதிக்கும் ஒப்பிடுகிறார், இக்கருத்தைக் தெரிவிக்கவும் கவியின் வாயிலாகவேத் தெரிவிக்கின்றார். அக்கவியினைப் பார்ப்போம்.
    கவியின் பெருமதிப்பு (1954)

    ஒருவர்கருத் தைப்பலர்நன் கறியச் செய்ய
    ஓங்கியதோர் ஆர்வமே மொழி களாகி
    பெருகியுள; அவற்றிலேநம் பேச்சின் வேகம்
    பெய்கின்ற மழைபோலும்; எழுத்தின் வேகம்
    உருவடைந்த நீர்நிலைக ளான குட்டை
    ஊருணிகள் போலும்உயர் கவியின் வேகம்
    பெருமலைக ளிடமிருந்து கடல் வரைக்கும்
    பேரோட்ட முடை சீவநதி போலாகும்

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பேச்சு, எழுதுவது, கவிகள் இயற்றுவது மூன்றும் திறன்களும் ஒன்று சோ்ந்து ஒருவரிடம் காணப்படுவது அரிது. ஒரு சிலர்தான் .அந்த வாய்ப்பையும் திறமையையும் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அந்த அரிதினிலும் அரிதாகத் திகழ்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவருடைய அருளுரைகள் அருவிபோல் கொட்டும். கேட்பவர்களின் உள்ளங்களில் பாய்ந்து நிரம்பி ஆறுதலைத்(soothing effect to the Consciousness as it is in search of its origin) தரும். . கேட்பதற்குத் தேனமுதமாகத் திகழும். அறிவை அறிய நினைத்துவிட்டால் அது தன்னை அறியும் வரை ஓயாது என்பார் மகரிஷி அவர்கள்.. மகரிஷி அவா்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார். ஆயிரத்து எண்ணூற்றுக்கும் மேலாகக் கவிகள் எழுதியுள்ளார்.

    கவிகளின் சிறப்பைக் கருதி, அதனைத் தெரிவிக்க கவிகளின் சிறப்புக்களை எட்டு வரிகள் கொண்ட பதின்மூன்று கவிகளை அருளியுள்ளார். கவிகள் வற்றாத சீவநதியைப் போல் உலகம் உள்ளவரை பயன் தரும். என்பது உண்மை என்றாலும், சமுதாயம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.
    கவிகள் சீவ நதியோடு ஒப்பிட்டதற்குச் சான்றாகத் திகழ்வது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களை எழுதியுள்ளார். அதன் சிறப்பு உணரப்பட்டதால்தான் அது நாற்பது வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அருட்பாக்களை சமுதாயம் இனிமேலாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஏதோ தேர்விற்காக மனனம் செய்து மதிப்பெண்கள் பெருவதற்காக மட்டுமல்லாது கவிகளின் உட்பொருளை உணர்ந்து அருட்கவிஞர்களின் அனுபவங்களைப் பயனாகக் கொண்டு மனித தரத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வர வேண்டும். அறிஞர்கள், கவிகளைப் பின்வரும் சமுதாயம் மனனம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் பெருவதற்காக எழுதவில்லை. கவிகளின் உட்பொருளை உணர்ந்து தன்னை மனித தரத்தில் உயர்த்திக் கொண்டு பிறவிப்பயனை எய்த வேண்டும் என்பதே அருட்கவிஞர்களின் விழைவாகும்.

    அறிவினரைச் சோ்தலும், அவர்களைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார். அறிவினர்கள் வாழும் காலத்தில் வாழ்வதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு, அவ்வையார் கூறுவது போல் அறிவினரோடு சோ்ந்திருத்தலும், மற்றும் அறிவினரைக் கனவிலும். நனவிலும் கண்பதும் இனிதாக இருக்கும் என்பதனைஈடுசெய்வதாக அறிஞர்களின் கவிகள் இருக்கும். அவர்களின் கவிகளை வாசிப்பதும், நினைவில் கொள்வதும், உட்பொருளை நினைவில் கொள்ளுதலும் அறிவுப் பசிக்கு விருந்தாக அமைந்து பிறவிப்பயனை எய்துவதற்கு அல்லது துன்பமில்லாமல் வாழ்வதற்கு பேருதவியாக இருக்கும்.

    இதற்குச் சான்று வேதாத்திரி மகரிஷி அவர்களே. மகரிஷி சிறு வயது முதலே ”அங்கிங்கெனாதபடி” எனத் தொடங்கும் தாயுமானவர் பாடலைக் கேட்டுவந்ததால், அவருக்கு. உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து இறைநிலையை அவர் உணர்வதற்கு உதவியதாகக் கூறுகிறார். எனவே தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்ட மகரிஷி அவர்கள், அதே போன்று திருவள்ளுவரையும், திருமூலரையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு பயன் அடைந்துள்ளார் என்பது அவர் எழுதிய குருவணக்கப் பாடல் ஒன்றிலிருந்துத் தெள்ளத் தெளிவாகின்றது.
    திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர் ஆகியவா்கள் வாழ்ந்த காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிறக்கவே இல்லை. பின்னர் எவ்வாறு அவர்கள், மகரிஷி அவர்களுக்குக் குருவாக அமைந்தனர்? அவர்களது கவிகளே மகரிஷி அவர்களுக்கு உள்ளுணர்வைத் தூண்டி பல விளக்கங்களை அறிவித்து அவர்கள் நிலைக்கு மகரிஷி அவர்களையும் உயர்த்திப் பிறவிப்பயனை எய்துவதற்கும் பேருதவியாக இருந்துள்ளன, எனவேதான் மகரிஷி அவர்கள், அவர்களது சீடர்களும் பயன் பெறட்டும் என்று குருவணக்கப்பாடலில் அம்மூவருடன் இராமலிங்க சுவாமிகளையும் சேர்த்து, அதுவும் போதாது என்று அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய அனைவரையும் நினைவு கூறும்படி பாடல் அருளியுள்ளார், ஒருமை விஞ்ஞானத்தின்படி(Science of Oneness) அவா்களின் அறிவெல்லாம் இயற்கையாகிய பேரறிவு ஒன்றேதான்.

    கவிகளால் சிந்தனை வளம் பெருகும். ஆகவே கவிகளின் சிறப்பை நாமும் பெறவே சிந்தனைப் பயிற்சியில் ”சிந்திக்கக் கவிகள்“ என்றொரு பயிற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    *****

    பயிற்சிக்குள் செல்வோம். நாள்: — 28-10-2014
    சிந்திக்கக் கவிகள்
    சி.க.எண்- 03-01
    இன்றையக் கவி – இனியது எது?

    சிந்தனைப் பயிற்சியில் மூன்றாம் பயிற்சியான ”சிந்திக்கக் கவிகள்” பயிற்சிக்கு இன்று எடுத்துக் கொள்ளும் கவி அவ்வையார் இயற்றிய கவி. ”சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? ” என மாடு மேய்க்கும் இடையனாக வந்து முருகன் அவ்வையை நோக்கி கேட்டார் என்கின்ற கதையில் முருகன் ”உலகில் கொடியது எது? இனியது எது? பெரியது எது? அரியது எது? என்று பல கேள்விகள் கேட்டார் என்கின்ற சம்பவம் வருகின்றது. அதற்கு விடைகளாகப் பாடல்களை அவ்வையார் பாடினார் என்பது கதை. அதில் ”இனியது எது” என்கின்ற பாடலை இன்றையச் சிந்திக்கக் கவிகள் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வோம்.

    இனியது எது?
    இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
    இனிது ! இனிது ! ஏகாந்தம் இனிது !
    அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்;
    அதனினும் இனிது ! அறிவினர்ச் சேர்தல்;
    அதனினும் இனிது ! அறிவுள்ளோரைக்
    கனவிலும் நனவிலும் காண்பது தானே !

    பொருள்: முருகன் கேட்டது இனியது எது என்கின்ற ஒரு கேள்விக்குப் பதிலாக நான்கு இனியவைகளை கூறுகிறார் அவ்வையார். அவ்வையார் கூறும் இனியவைகளை அதன் அளவிற்கேற்றவாறு வரிசைப்படுத்திக் கூறுகிறார்.

    1) ஏகாந்தம் இனிது.
    2) அதனினும் இனிது ஆதியைத் தொழுவது.
    3) அதனினும் இனிது அறிவினரைச் சோ்ந்திருத்தல்.
    4) அதனினும் இனிது அந்த அறிவுள்ளோரைக் கனவிலும், நினைவிலும் காண்பது தான்.

    இந்த நான்கு இனியவைகளையும் வரிசையாக ஒவ்வொன்றாகச் சிந்திப்போம்.

    1) ஏகாந்தம் இனிது:

    இனிது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இனிது என்றால் மனத்துக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சியைத் தருவது என்று பொருள். துன்பமும் சலிப்பும் இல்லாத நிலை. எல்லோரும் விரும்புவது இன்பம். ஆனால் வாழ்க்கையில் துன்பமும் வந்து விடுகின்றது. சலிப்பும் வருகின்றது. சலிப்பு என்பது என்ன? சலிப்பு என்பது ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வது ஆகியவற்றால் அல்லது துன்பம் மிகுதியால் வரும் சோர்வு அல்லது வெறுப்பு ஆகும்.

    இன்பமே அனுபவிக்க விரும்பும் மனிதனுக்குத் துன்பம் வருகின்றது என்றால் எப்படி இருக்கும் அவன் மனம்? துன்பம் மிக மிக சலிப்பும், வாழ்க்கையின் மீது வெறுப்பும் உண்டாகும். மனிதன் விரும்புகின்ற இன்பத்தைப் புலன்களின் வழியாக மட்டுமேதான் அடைவதற்குத் தெரிந்து வைத்திருக்கிறான் மனிதன். புலன் வழி இன்பம் ஒரு அளவிற்கு மேல் சென்றால் இன்பமே துன்பமாக மாறிவிடும்.

    இது வரை விஞ்ஞானம் கூட எடுத்துரைக்காத இன்ப துன்ப விஞ்ஞானத்தை(Science of Enjoyment) மகரிஷி அவர்கள் காந்தத் தத்துவம்(Philosophy of Magnetism) வழியாக அழகாக எளிமையாக எடுத்து இயம்புகிறார். ”இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறப்படுகின்ற ஆன்மீகத் தத்துவத்தை மகரிஷி அவர்கள் விஞ்ஞானமாக்கியுள்ளார்.

    அவ்வையாரின் கூற்றிற்குச் செல்வோம். அவர் கூறும் ஏகாந்தம்(solitude) என்பது தனிமையும், அமைதியும் நிறைந்தது. தனிமையும் அமைதியும் புலன்கள் இயங்காத நிலை. அதாவது புலன்களைத் தேவையில்லாது அதிகமாகப் பயன்படுத்தினால் துன்பமும் சலிப்பும் வரும் என்பதால் இன்பத்தை அனுபவிக்க முறையை மாற்றி தனிமையையும் நாடினால் இன்பம் இருக்கும் என்கிறார் அவ்வையார்.

    2) அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்:

    ஏகாந்தத்தைவிட இனியது ஆதியைத் தொழுதல் என்கிறார், தொழுதல் என்றால் என்ன என்று யாவரும் அறிந்ததே. தொழுதல் என்றால் வணங்குதல், வழிபடுதல் என்று பொருள். பொதுவாக வழிபடுதல் என்றால் கடவுளை வழிபடுவதாகும். எனவே அவ்வையார் ஆதியைத் தொழுதல் என்கிறார் என்றால் ஆதி கடவுளாகின்றது. ஆதியைத் தொழு என்று பொதுவாக கூறவில்லை அவ்வையார். ஆதியைத் தொழு என்று குறிப்பிட்டுத்தான் சொல்கிறார்.
    யார் இந்த ஆதி? முருகன், விநாயகர் போன்ற உருவகக் கடவுளா அவ்வையார் கூறும் ஆதி?. திருவள்ளுவர் கூறும் ஆதிபகவன் (ஆதியாகிய பகவன்) தான் அவ்வையார் கூறும் ஆதி. ஆதி எனும் இறைவன் உருவகக் கடவுள் இல்லை. அப்படியானால் அவ்வையார் குறிப்பிடும் இந்தக் கடவுள் எப்படி ஆதி எனும் பெயர் பெற்றார். ஆதி என்கின்ற சொல்லின் பொருளைக் கொண்டே ஆதி என அழைக்கப்படுகின்றார் கடவுள்.
    ஆதி என்கின்ற சொல்லிற்கானப் பொருட்கள்

    1. முதல்
    2.  தொடக்க காலம்
    3.  தொடக்கம் அறியப்பட முடியாத பழமை
    4.   அடிப்படை

    ஏதோ ஒன்றுதான், துகள்கள்(particle in science) முதல், அதனைத் தொடர்ந்து பஞ்சபூதங்கள், அதனைத் தொடர்ந்து இந்தப் பிரபஞ்சம், அதனைத் தொடர்ந்து ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான மனித இனமாக தன்மாற்றம் (self transformation) அடைந்துள்ளது. அந்தப் பொருள்தான்

    • காணுகின்ற பிரபஞ்சம் முதல் உயிர்கள் வரை எல்லாத் தோற்றங்களுக்கும் முதலாகி தன்மாற்றம் அடைந்துள்ளதாலும்,
    •   முதல் துகள் உருவாகிய காலத்திலிருந்தும் அதாவது, தொடக்க காலத்திலிருந்தும்,
    •   அதனுடைய தொடக்கம் அறிய முடியாத பழமையானதாகவும்,
    •   எல்வாவற்றிற்கும் அடிப்படையானதாகவும் இருந்தது.

    எனவே, அந்த ஒன்று ”ஆதி” என்கின்ற சொல்லிற்கான பொருள் அனைத்தையும் கொண்டிருந்ததால் அவ்வையார் அதனை ”ஆதி“ என்று அழைக்கிறார். கடவுளுக்கு ஆதிமூலம் என்கின்ற பெயரும் உண்டு. அதாவாது மூலத்திற்கும் ஆரம்பமாக ஆதியாக உள்ளது ஆதிமூலம் என்று அழைக்கப்படுகின்றது. விஞ்ஞானத்தின்படி இப்பிரபஞ்சத்திற்கு மூலம் துகள்கள். அந்த மூலமான துகள்களுக்கு ஆரம்பமாக இருந்தது என்பதால் மூலத்திற்கு ஆதி என்பதால் அது ஆதி மூலம் என அழைக்கப்படுகின்றது.

    ஆதி என்று மட்டும் சொல்லவில்லை, அதனையே இறைவன் என்கிறார். எது இறைவனாக இருக்க முடியும்? இறைவனுக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு ஆறாம் அறிவு இறைவனைத் தேடினால் இந்த ஒன்றினைத் தானே இறைவன் என ஏற்றுக் கொள்ளும். எது அல்லது யார் அந்த ஆதி? அதுதான் தன்னில் மறைந்திருந்த ஆற்றலை இப்பிரபஞ்சமாகவும் உயிரினங்களாகவும் வெளிப்படுத்திய ஒன்றே ஒன்று. அது வெளிப்படுத்தியதால் அது ”வெட்டவெளி” (Eternal Space)என்கின்றக் காரணப் பெயரை அதுவே எடுத்துக் கொண்டது.

    அது(அந்த ஒன்று) தற்போது, தானே ஆறாம் அறிவாகிய நிலையிலும்,
    ”வெளி(vacuum) என்றால் வெற்றிடம்,
    ஒன்றுமில்லாதது” என பொருள் கொண்டு,
    அதுவே இறைவன் என்றும்,
    இறைவனின் உண்மைநிலை அருவம் என மனித அறிவால் ஏற்றுக்கொள்ளத் தயக்கப்பட்டு இருந்து வருகின்றது,
    இப்பிரபஞ்சத்தின் ஆதி நிலைதான் இறைவன் என்பதால், அந்த ஆதியைத் தொழுதல் இனிது என்கிறார் அவ்வையார். தொழுதல் இனிது என்று கூறுவதயும் கவனிக்க வேண்டும். நடைமுறையில் இறைவனைத் தொழுவது எல்லோருக்கும் இனிதாக உள்ளதா என்பதனையும் கவனிக்க வேண்டும்.

    உருவமில்லா இறையை எவ்வாறு தொழுவது? அருவமான இறைதான்(பரமாத்மா) அறிவாகவும்(சீவாத்மா) மனமாகவும் வந்துள்ளது. எனவே மீண்டும் பரமாத்மாவுடன் சீவாத்மாவை இணைப்பது தான் இறைக்கு இணக்கமான இறைவணக்கமாக இருக்க முடியும். அப்படியானால் அதனை எவ்வாறு தொழுவது எனில் அருவவழிபாட்டின் மூலமாகத்தான் தொழ முடியும். அதுதான் விஞ்ஞான காலத்திற்கேற்ற அகவழிபாடாகும். மனவளக்கலை யோகாவில் அதுதான் துரியாதீத தவமாகும். ஆகவே துரியாதீத தவத்தை இயற்றுவது இரண்டாவது இனிதாக அவ்வையார் கூறுகிறார். அடுத்ததாக மூன்றாவது இனிதிற்குச் செல்வோம்.

    3) அதனினும் இனிது அறிவினரைச் சேர்தல்:

    ஆதியைத் தொழுவது என்பது ஒரு குருவின் வழியாகத்தான் சாத்தியமாகும். உதாரணத்திற்கு மனவளக்கலை யோகிகள் துரியாதீத தவத்தை இயற்றுவதே வேதாத்திரி மகரிஷி அவா்களைக் குருவாக ஏற்றுக் கொண்டததால் தானே சாத்தியமாயிற்று. ”குரு இல்லாத வித்தை பாழ்” மற்றும் ”குருவருள் இன்றேல் திருவருள் இல்லை” என்பதால், அகத்தவம் இயற்றுவதற்கு அறிவினர்ச் சேர்க்கை, வழிகாட்டியாக இருக்கும், அறிவை அறிந்த அறிஞராகிய ஒருவரைத்தான் அவ்வையார் அறிவினர் என்கிறார். அவரைச் சேர்ந்திருத்தல் அதனினும் இனிது என்று இனியவையின் அதிகப்படி வரிசையில்(increasing order of ecstasy) மூன்றாவதாகக் கூறுகிறார்.

    அறிவினரைச் சோ்தல் என்பதற்கு இலக்கணம் வைத்துள்ளார் அவ்வையார். அறிவினரைச் சோ்தல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றது, ஆனால் அறிவினரைப் பார்த்தோம், சேர்ந்தோம் என்றிருப்பது மட்டும் அவ்வையார் கூறும் அறிவினரைச் சோ்தல் அல்ல. பின்னா் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை நான்காவது இனியதாகக் கூறுகிறார் அவ்வையார்,

    4) அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது அதனினும் இனிது:

    இனியவைகளில் நான்காவதும் அதிகமானதுமான இனிது அறிவுள்ளோரைக் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் போதும், தூங்கும் போதும் காண்பது இனிது என்கிறார் அவ்வையார். இந்த இரண்டும் எவ்வாறு சாத்தியமாகுமும்? விழித்துக்கொண்டிருக்கும் போது அறிவுள்ளோரை காண்பது சாத்தியம். அறிவினர்களை நேரில் சந்திப்பதால் அவர்களைக் காண்பது சாத்தியமாகும். அறிவினர்களைச் சந்திக்காத போதும் அவர்களை நினைவில் கொண்டு வந்து பார்க்கலாம். இது சாத்தியமென்றாலும் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.

    அவா்களின் கருமையத்திற்கும் அறிவினரின் கருமையத்திற்கும் ஈர்ப்பு இல்லாததே காரணம். காதலர்கள் காதலிக்கும் காலத்தில் நேரில் சந்திக்காவிட்டாலும் ஒருவரையொருவர் எப்போதும் நினைந்து கொள்வது சாத்தியமாகவில்லையா?. ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவா் காதலிக்கின்றனர். அதுபோல் அறிவினரைக் காதலிக்க வேண்டும். காதலர்கள் சிலர் உடலளவில் காதலிப்பது போன்று அன்று குரு-சீடர் காதல். குருவிற்குக் கீழ்படிதலும் அவரின் போதனைகளையும் விரும்புவதாகவும் இருக்க வேண்டும் குரு-சீடல் காதல்.
    தூங்காமல் இருக்கும் போது அறிவினர்களைக் காண்பதிலேயே சிரமமான நிலை உள்ளதால், கனவிலும் அறிவினரைக் காண்பது எவ்வாறு சாத்தியம்? சீடனுக்கும் அறிவினரான குருவிற்கும் இடையில்.கருமைய ஈர்ப்பு ஏற்பட்டு காதல் இருந்தால் இது சாத்தியமாகும். எவ்வாறு காதலர்கள் காதலிக்கும் காலத்தில் இரவிலும் தூக்கத்திலும் நினைந்து கொள்வதும், கனவிலும் ஒருவரை ஒருவா் காண்பது சாத்தியமாகின்றதோ அது போல் குரு-சீடர் காதல் மலர்ந்து விட்டால் கனவிலும் குருவைக் காண்பது சாத்தியமே.

    கனவிலும் நனவிலும் அறிவுடையோரைக் காண்பது இனிது என்கிறாரே இது எப்படி சாத்தியம்? இங்கே அறிஞர் திருமூலர் அறிவினைரச் சேர்ந்து எவ்வகையிலெல்லாம் இனிதை அனுபவிக்க முடியும் என்று கூறுவதைக் காண்போம்.

    குரு அருளே திருவருள்
    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

    …..திருமூலர்.

    இக்கவியில் திருமூலர் குருவைச் சேர்தல் தெளிவு என்கிறாரே. ஆனால் அவ்வையார் அறிவினராகிய குருவைச் சேர்தல் இனிதிலும் இனிது என்கின்றாரே என ஐயம் எழலாம். தெளிவும், இனிதிலும் இனிதும் ஒன்றா? ஆம் ஒன்றுதான். மகா கவி பாரதியாரும் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவனை வேண்டச் சொல்கிறார் ஒரு பாடலில். தெளிவில்லாமல், பல பிறவிகளாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு ஒளி கிடைத்து அது அறிவொளியாகிவிட்டால், அது அவ்வையார் கூறும் இனிதிலும் இனிதாகத்தானே இருக்க வேண்டும். இப்போது அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதையும் நினைவில் கொள்வோம். பிறவிப்பயனை எய்துவது இனிதிலிலும் இனிதுதானே! அது தானே பேரின்பம்?

    குருவின் சேர்க்கை (15.08.1984)
    எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
    அப்பபொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
    அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்
    இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்
    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திதப் பிவிப்பனை நல்கும்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவா்கள்.

    மூன்று அறிஞர்களின் கருத்தும் ஒன்றாகத் தானே உள்ளது. மூன்று அறிஞர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். அவா்கள் வற்றாத சீவநதியான கவிகளை அருளியதால்தான் இன்று நாமும் இனிவரும் சமுதாயமும் அந்நதியில் குளித்து மன அழுக்கைப் போக்கிப் புத்துணர்வு பெற முடிகின்றது,

    ”சிந்திக்கக் கவி” பயிற்சியில் இன்று எடுத்துக்கொண்ட கவியின் உட்பொருளைத் தெரிந்து கொண்டோம். தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது சிந்திக்கவும் செய்யும் கவிகள். ஆகவேதான் சிந்தனைப் பயிற்சியில் மூன்றாம் பயிற்சியாக ”சிந்திக்கக் கவிகள்” என்கின்ற பயிற்சியை வைத்துள்ளோம். வாழ்க வளமுடன் வேறொரு நாள் வேறொரு கவியை எடுத்துக் கொண்டு சிந்தனைப் பயிற்சி செய்வோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் ்செல்வம்