இன்றைய விருந்து

  • சிந்திக்க கவிகள்-10

       வாழ்க மனித அறிவு!                                  வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க கவிகள்10

    14-06-2020-ஞாயிறு

    “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

    உண்மை யறிவே மிகும்”.

    —குறள்        

     பயிற்சி:

    1. என்ன கூறுகிறார் பொய்யாமொழி தெய்வப்புலவர்?
    2. குறள் எந்த பாலில் எந்த அதிகாரத்தில் எந்த அதிகாரத்திற்கு பின் வருகின்றது? அதற்கான காரணங்கள் ஏதேனும் இருக்குமா?
    3.  ‘நுண்ணிய நூல்பல கற்பினும்’ என்றால் என்ன?
    4.  ‘மற்றும் தன் உண்மை அறிவே மிகும்’ என்பதில்   ’ மிகும்’  என்கின்ற சொல்லால் அறிந்துகொள்ள வேண்டியது என்ன ?
    5. பொதுவாக உரையாசிரியர்கள் கூறும் பதவுரை என்னென்ன?
    6. திருவள்ளுரை மானசீக குருவாகக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் சீடரான பெருமைக்குரிய நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இக்குறள் பற்றி கூறும் விளக்கம் என்ன?
    7. எந்த நூலில் மகரிஷி அவர்கள் இக்குறளுக்கு விளக்கமளிக்கிறார்?
    8. அதில் இந்த அதிகாரத்தில் மேலும் ஒரு குறளுக்கு விளக்கம் அளித்துள்ளதை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.
    9. திருவள்ளுவரும் அவரது இருபதாம் நூற்றாண்டு சீடரும் சேர்ந்து ஒருமித்துக் கூறும் செய்தி என்ன?
    10.  இறையுணர்வு கருத்தியல் பாடத்தில் மிகுந்த தெளிவையும்(Theoretical understanding) செய்முறை பாடத்தில்(Practical realisation through Meditation-துரியாதீத தவத்தில்) தேர்ச்சியையும் வலியுறுத்துகிறார்களோ  இரு அறிஞர்களும்!?

    வாழ்க வள்ளுவம்! வளர்கவள்ளுவம்!!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                         வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • சிந்திக்க அமுத மொழிகள்- 299(244)


    சிந்திக்க அமுத மொழிகள்- 299(244)

    27-05-2020  — புதன்

    இறைவனை நேசித்தால் விவேகமும், வைராக்கியமும் தானாக வரும்”.  

                                                               . . .  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

     பயிற்சி—

    1. நேசிப்பது என்பது என்ன?
    2. இறைவனை நேசிப்பது என்பது என்ன?
    3. இறைவனை எவ்வாறு நேசிப்பது?
    4. விவேகம் என்பது என்ன?  அதன் அவசியம் என்ன?
    5. வைராக்கியம் என்பது என்ன? எதற்கு வைராக்கியம் அவசியமாகின்றது?
    6. இறைவன் உருவமாக இருந்தால்தான் நேசிக்கவும், ரசிக்கவும் முடியுமா?
    7. இறைவன் அரூபி எனத்தெரிந்து விட்டதால் அவனை நேசிக்க முடியாதா?  ரசிக்க முடியாதா?
    8. இறைவனை நேசித்தலுக்கும், விவேகம் மற்றும் வைராக்கியம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
    9. மேற்கொண்டு சிந்திக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

  • அறிவிற்குவிருந்து – 291

    வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

    அறிவிற்குவிருந்து – 291

     

    20-5-2020புதன்.

    இனியொரு விதி செய்வோம்- Episode-5     

    புலன்வழி வாழ்க்கை இனியில்லை!

    வாழ்க வளமுடன்!

    நெஞ்சுருகி இறைஞ்சுகிறோம்!     

    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டினோர் அனைவரையும் நினைவு கூர்தல் முகமாக தொடர்ந்து இன்றும் மகாகவி பாரதியாரை, ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்கின்ற அவரது புனிதவாக்கினை எடுத்துக் கொண்டுள்ளோம்.  அதன் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக அவர் கூறிய ‘புலனில் வாழ்க்கை இனி உண்டோ?!’ என்கின்ற ஆணித்தரமான சத்யவாக்கினை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சூக்குமமாக எழுந்தருளி ஆசிர்வதித்து நமக்கு இச்சிந்தனையில் வழிகாட்டுவாராக. நம் குருநாதர் இப்பொருள் பற்றி என்னென்ன சிந்தித்திருப்பாரோ அவையெல்லாம் நம் சிந்தனையில் வெளிப்பட நெஞ்சுருகி அவரை இறைஞ்சுசிறோம். குருவருள் இன்றேல் திருவருள் இல்லை. வாழ்க குருவின் புகழ்!  வளர்க குருவின் புகழ்!!.

    இயற்கை/இறை நிர்ணயம் செய்துள்ளதுபோல் ….

         “புலனில் வாழ்க்கை இனியுண்டோ?  நம்மிலந்த வாழ்க்கை இனியுண்டோ?” என்கிறார் பன்முகக் கவிஞர் மகாகவி பாரதியார். அவர் அறிவை அறிந்த அறிஞர்.  “அறிவொன்றே தெய்வம் உண்டாமெனில் கேளீரோ?”  என்றும் “ சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ?” என சமுதாயத்தைப் பார்த்து வினவுகிறார்.

     “புலனில் வாழ்க்கை இனியுண்டோ?” என்று ஒரு முறைகூறுவதோடு நில்லாமல் மீண்டும் அதனைக் கூறுவதால் என்ன பொருள்?  அவரின் நோக்கம் என்ன?  கூறுவதனை ஆணித்தரமாகவும், தான் கூறியது நடக்கும் என்று சத்யவாக்காகவும் கூறுகிறார்.   இதனைக் கண்ணுறும் மனவளக்கலைஞர்களாகிய நாம் இதிலிருந்து என்ன அறிந்து கொள்ள வேண்டும் என இயற்கை/இறை அறிவுறுத்துகின்றது? புலனில் வாழ்க்கை இனி உண்டோ என்பதால் நடைமுறையில் சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கும் முறை சரியில்லை என அறிகிறார் மகாகவி பாரதியார்.  எப்படி சரியில்லை என அறிந்தார்?  மனிதன் புலனில் எப்படி வாழ வேண்டும் என்று இயற்கை/இறை நிர்ணயம் செய்துள்ளதோ அதனை அறிந்தவர் அவர்.   அதற்கேற்ப அவர்  புலனில் சரியாக வாழ்ந்து மகிழ்ச்சியினை அனுபவமாகக்  கண்டிருக்கிறார். திருவள்ளுவரைப்போல் இப்புவி உள்ளவரை அவரது புகழ் ஓங்கி நிற்பதோடு மட்டுமின்றி அவரின் அறிவாற்றல் நம்மை சிந்திக்க வைத்துள்ளதுபோல் வருங்கால சமுதாயத்தையும் சிந்திக்க வைக்கும். ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற பெருநோக்கமுடைய அருளாளர்களைப்போன்றே அவதரித்தவர் மகாகவி பாரதியாரும். ஆகவே இந்த சமுதாயமும் தான் பெற்ற இன்பத்தை பெறவேண்டும் என்கின்ற சமுதாயநல அக்கறை கொண்ட பெருமகனார் மகாகவி பாரதியார் புலனில் வாழ்க்கை இனியில்லை என்கின்ற புனித எண்ணத்தை வான்காந்த களத்திலே பரப்புவதற்காகவும் சமுதாயமும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் கருதியே அவ்வாறு உரைக்கின்றார்.

    எந்த துன்பமும் எதனால் வருகின்றது?

    ஆகவே சமுதாயத்தை ஆராய்ந்த  மகாகவி பாரதியார், சமுதாயம்  புலனில் சரியாக வாழாததால்  அல்லலுறுகின்றது என்பதனைக் கண்டுபிடித்தார்.  சமுதாய நலத்தின் மீது அக்கறைகொண்டு சமுதாயம் அல்லலுறாமல் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தீர்வையும் மனதில் வைத்துக் கொண்டு  புலனில் வாழ்க்கை இனியுண்டோ என்கிறார் என்பது அறியலாகின்றது.

    புலனில் வாழ்க்கை தவிர்க்கவேண்டுமெனில் மனிதன் எவ்வாறு வாழவேண்டும்?  புலன்கள் இருப்பதே அனுபவிப்பதற்காகத்தானே?! அனுபவித்தலில்தானே  இன்பம் உள்ளது.  அனுபவித்தலில் துன்பமும்  உள்ளது என்பதனையும் நாம் அறிவோம் அல்லவா? எந்த துன்பமும் எதனால் வருகின்றது?  பாவச்செயல்களால்/ஒழுக்கமற்ற-தீயொழுக்கச் செயல்களால் வருகின்றது. செயல்கள் எதன் மூலம் நடக்கின்றது. ஞானேந்திரியமாகிய ஐம்புலன்கள் மூலமாகவும் ஐந்து கர்மேந்திரியங்கள் மூலமாகவும் நடக்கின்றது.  ஆகவே பாவச்செயல்களும், புண்ணியச்செயல்களும் புலன்களைக் கொண்டு புலன் வழியாக வருகின்றன. பாவச்செயல்களால் (தீயொழுக்கத்தால்) விளைவு துன்பமாகவும், புண்ணியச் செயல்களால் (ஒழுக்கத்தால்) நன்மையும் வருகின்றன. அப்படியிருக்கும்போது புலன்கள் வழியாக புண்ணியச்செயல்களை/ஒழுக்கச்செயல்களை செய்தால்  இன்பமே எப்போதும் வரும் என்பதனையும் அறிவோம் நாம்.  எப்போதுமே இன்பம் செயலை அறிகின்ற திறன் ஆறாவது அறிவிற்கு உள்ளது.  அத்திறன்தான் நுண்மாண்நுழைபுலன். அதனைப்பற்றி  பின்னர் அறிவோம். புலன்களைப் பற்றி இப்போது சிந்திப்போம்.

    உணர்வதற்கான கருவிகளே புலன்களல்லவா?

    ஆம்! உணர்வதற்கான கருவிகளே புலன்கள்.  தோற்றங்களில் உயிரற்ற சடப்பொருட்களும்  உயிரினங்களும் உள்ளன. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? சடப்பொருட்களுக்கு உணர்வு இல்லை.  உயிரினங்களுக்கு உணர்வு உண்டு.  உணர்வை அறிவு அறிந்துகொள்வதற்கு ஏற்பட்ட கருவிகளே புலன்களாகும். பிறப்பிலிருந்து மரணம்வரை உள்ள காலத்தை வாழ்நாள் என்கிறோம். அதாவது வாழ்வதால் அது வாழ்நாள் காலம் எனப்படுகின்றது.  வாழ்வது என்றால் என்ன?  இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிப்பதுதான் வாழ்வது என்பதாகின்றது.  மனிதன் இன்பத்தையும், துன்பத்தையும் எதன் மூலம் அனுபவிக்கின்றான்?  புலன்கள் மூலம் அனுபவிக்கின்றான். ஆகவே வாழ்க்கை புலன்கள்  வழியாகவே நடக்கின்றது.

    இன்றைய விருந்தில் சிந்திக்க வேண்டியது

    புலனில் வாழ்க்கை இனி கிடையாது என்றால், வேறு எப்படி வாழ்வது? எப்படி வாழ முடியும்?

    எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றான் மனிதன் தற்போது?

    புலனில் வாழ்க்கை இனியில்லை என்பதால் புலன்களைத் தவிர்த்தும் வாழ முடியுமா, அப்படி அவசியமா?

    மேலும்

    புலனில் வாழ்க்கை என்பது என்ன,

    அதனால் எவ்வாறு நன்மையும், தீமையும் வருகின்றது,

    மனித இலக்கணத்திற்கேற்ப எவ்வாறு வாழ்வது என சிந்திக்க இருக்கிறோம்.

    புலனில் வாழ்க்கை இனியில்லை என்று கூறிய தீர்க்தரிசியான மகாகவி பாரதியார் இன்ப வாழ்விற்குத் தீர்வாக என்ன கூறியிருக்கிறார்?  (பாடலில் அடுத்து வரும் வரிகளில் மனிதசமுதாயம் வாழவேண்டிய அந்த நன்முறையை ஆணித்தரமாக சத்யவாக்காகக் கூறுகிறார். அவர் என்ன கூறுகின்றார் என்பது மனவளக்கலைஞைர் அறிந்ததே.  அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் விரிவாக அருந்தி மகிழ்வோம்.)

    இயற்கையில் உருவான புலனில் வாழ்க்கையையும் நடத்தி எவ்வாறு துன்பத்தை தவிர்த்து மகிழ்ச்சியாகவும் வாழ்வது என்பது பற்றி நம் குருநாதர் அறிவுறுத்தியதை நாம் நினைவில் கொண்டுவந்து அந்த விளக்கத்திற்கு அழுத்தம் கொடுத்து விளக்கப்பதிவால் பழக்கப்பதிவை வெற்றிகொள்ளச் செய்வதே இன்றைய சிந்தனையின் நோக்கமும் பயனுமாகும்.

    ஏன் புலன்கள் உருவாயின?

        உடலுக்கு வெளியே நடக்கின்ற நிகழ்ச்சிகளை அறிவிற்கு புலப்படுத்தவே கருவிகள் உருவாகின.  அக்கருவிகள் அறிவிற்கு புலப்படுத்துவதால்   புலன்கள் எனலாகின்றது. கருவிகள் இல்லையெனில் அறிவு புற நிகழ்ச்சிகளை உணர முடியாது.  புற நிகழ்ச்சிகள் என்னென்ன?   அழுத்தம், ஒளி, ஒலி, சுவை மற்றும் மணம்   ஆகிய ஐவகை காந்த நிகழ்ச்சிகளே ஆகும். அதனை உணர்கின்ற கருவிகள் ஐம்புலன்கள் எனப்படுகின்றன.  உயிர் வாழும்போது ஐம்புலன்களும் தனக்கு வெளியே நடக்கின்ற நிகழ்ச்சிகளை உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் உணர்ந்து கொண்டுதான் இருக்க முடியும்.  புலனில் வாழ்க்கை இனி இல்லையெனில் ஐம்புலன்களும் புற நிகழ்ச்சிகளை உணராமல் இருக்கவேண்டும் என்று பொருளா?  புலன்களை  செயல்படுத்தாமல் இருக்க வேண்டுமா(shut down the senses)?   அப்படி இல்லை.   உறங்கும்போதும், தியானத்தில் இருக்கும்போதும்  புலன்கள் தங்கள் உணர்தல் பணியினை செய்வதில்லை.  உறங்காது விழித்திருக்கும் நிலையில்  கண்கள் பார்க்கும்.  காதுகள் கேட்கும், தோல் தொடுவதை உணரும், மூக்கு மணத்தை உணரும், நா சுவை உணரும்.  உணர்தல் இல்லாமல் வாழ்க்கை இல்லை.  அப்படியிருக்கும்போது புலனில் வாழ்க்கை இனி இல்லை என்பதற்கு என்ன பொருள்?

    ஒன்றால் ஒன்று கெடக்கூடாது

    ஒன்றால் ஒன்று கெடக்கூடாது. உணர்வது செயல்.  எந்த செயலுக்கும் விளைவு உண்டு என்பதால் உணர்தலாகிய செயலுக்கும் விளைவு உண்டு.  மனித மனம் எப்போதும் ஆதாயத்தைத்தான்  விரும்பும்(Human mind is calculative). ஆகவே உணர்தலாகிய செயலிலும்  மனம் ஆதாயத்தைத் தான் விரும்பும்.  அப்படியானால் என்ன பொருள்?  ஆதாயம் என்பது என்ன? இன்பம் இருந்தால் அது ஆதாயம். துன்பம் இருந்தால் அது ஆதாயமில்லை.  மனம்  துன்பத்தை விரும்புவதில்லை; துன்பத்தை தவிர்க்கும். உணர்தல் என்பதும் செயல்தான். ஆகவே அதற்கும் (உணர்வாகிய செயலுக்கும்)  விளைவு உண்டு. உணர்தலின் விளைவில்  அறிவிற்கு துன்பம் வராமல்  இன்பம் மட்டுமே வருவதாக  இருந்தால் அந்த செயல்  சரியானதுதான்.   ஆகவே மகாகவி “புலனில் வாழ்க்கை இனி உண்டோ”  என்று கூறுவது புலன்களால் துன்பம் தரும் வாழ்க்கையில் இனி மனிதசமுதாயம்  வாழாது என்பதே ஆகும். அப்படியானால் புலன்களால் உணராமலும் வாழ்க்கை உண்டா?  அதற்கு சாத்தியம் இல்லை. உணர்ந்தால்தான் உயிர். ஆகவே புலன்களால் உணர்ந்தும் இன்பம் அனுபவிக்க வேண்டும். உணர்தலால் துன்பமும் ஏற்படக்கூடாது என்றால் என்ன பொருள் கொள்ள வேண்டும்?  புலன்களையும் பயன்படுத்தி ஆகவேண்டும். ஆனால் அதே நேரத்தில் துன்பமும் வரக்கூடாது எனில் புலன்களினால் உணர்வதில்/அனுபவித்தலில் நடுவுநிலை(via media) இருக்க வேண்டும்.  நடுவுநிலை என்றால் என்ன?  அதற்கு இன்பம் துன்பம் என்பது என்ன? இன்பதுன்பம் ஏன் வருகின்றது, எவ்வாறு வருகின்றது என்பதனை அறிந்து கொண்டால் உணர்தல் ஆகிய செயலுக்கு நடுவுநிலை சாம்யத்தை அறிந்து கொள்ள முடியும்.  இங்கே நம் குருநாதரின் துணையை நாடுவோம்.  நம் குருநாதர் இதுவரை மருத்துவத்துறை கூறாத  இன்பதுன்ப அறிவியலைத் (Science of Enjoyment and suffering) தந்துள்ளார்.  அதனை நினைவில் கொண்டு இப்போது “புலனில் வாழ்க்கை இனி இல்லை” என்பதற்கான உட்பொருளை அறிந்து கொள்வோம். வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    அறிவியல் என்பது என்ன?

    முதலில் அறிவியல் என்பது என்ன என்று அறிந்துகொள்வோம்.  அறிவு, அறிவை(தன்னையே) அறிவு பூர்வமாக அறிந்துகொள்வது அறிவியல்அறிவு+இயல்=அறிவியல்.  இயல் என்றால் என்ன? ஒன்று நடந்துவரும் முறை அல்லது ஒன்றன் இயல்பை பற்றிக் கூறுவது இயல்.  அறிவைப்பற்றி அறிவு அனுபவமாக அறிந்து கொண்டு அதன் மூலத்தை, இயல்பை, செயல்பாட்டினை அறிந்து கொண்டு அதனை சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும் இயல் அறிவியல் என்கிறோம் நாம்.   எனவே அறிவியல் என்பது — Science of Consciousness.  அறிவைப்பற்றிய அறிவியலில் ஒரு பகுதி தான் இன்பதுன்ப அறிவியல். Science of Enjoyment and suffering is is one of the branches  of Science of Consciousness என்று கூறி வருகிறோம்.

    இன்ப துன்ப அறிவியல் பற்றி . . .

    இதில் இன்பம் என்பது என்ன,  துன்பம் என்பது என்ன என்று அறிந்துகொள்ளவேண்டும். இவ்விரண்டும் என்ன என்று தெரிந்து கொண்டால் துன்பத்தை தவிர்த்து இன்பத்தையே அனுபவிக்கலாம். மேலும் துன்பத்தை தவிர்த்து இன்பத்தையே மட்டும் அனுபவிப்பது பற்றி சொல்வது மட்டுமே இன்ப துன்ப அறிவியலாகாது.   எது  இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கின்றது?  மனம் தான் இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றது. அதாவது மனம் இரண்டு நிலைகளில் இயங்குகின்றது. மனம் இன்ப துன்ப நிலை என்கின்ற இரண்டு நிலைகளில் மட்டும் இயங்குவதில்லை. அதன் தொடர்ச்சியாகவும் அதற்கு மேலாகவும் வேறு நிலைகளிலும் இயங்கும்.  அவை என்னவாக இருக்கும்?   அமைதி நிலையிலும்  (பூர்வீக சொத்தை அனுபவிக்கின்ற நிலை), பேரின்ப நிலையிலும் இயங்கும்.  ஆக மனம் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய நான்கு நிலைகளிலும் இயங்கவல்லது.  இன்ப துன்ப அறிவியலில் இந்த நான்கைப்பற்றியும் அறிவு பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்.  அப்போதுதான் துன்பம் தவிர்த்த இன்பத்தின் சாம்யம் அறிந்து கொள்ள முடியும்.. அதற்கு வேதாத்திரிய அறிவியலில் ஒரு பகுதியான இன்ப துன்ப அறிவியலை மகரிஷி அவர்களின் துணையோடு அறிந்துகொள்வோம்.

    அதிர்ச்சி! ஆச்சரியம்!! ஆனால் உண்மை!!!

    மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்குள் உள்ளத்தில் எழுந்த நான்கு மகோன்னத  வினாக்களில் (Click here) முதலாவதுதான்  ‘இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை?  அவற்றின் மூலமும் முடிவும் என்ன?’ என்பது.  நான்கு வினாக்களையும் அவரது உள்ளம் எழுப்பிக்கொண்டேயிருக்கத் தொடங்கியதாக அவரது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலில் கூறியுள்ளார்.  அந்த நான்கு வினாக்களுக்கும் இயற்கை/இறை விரைவில் பதில்களை அளித்துள்ளது “Nature reveals to me” என்பார்.  அந்த பதில்களால் மலர்ந்த பல இயல்களில் ஒன்றுதான் இன்ப துன்ப இயல்.   இன்ப துன்பத்தை பற்றி அவர் கூறும் விளக்கத்தை அறிய அவரது கவி ஒன்றினை இப்போது நினைவு கூர்வோம்.

    இன்பம் துன்பம்

    இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்

    எங்கிருந்து தோன்றுகின்ற தென ஆராய்ந்தேன்;

    இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்

       எங்கும் நிறைந்துள்ளது; அனு போகத்திற்கு

    இன்பத்தின் அளவுமுறை மாறும்போது,

    ஏற்படும்ஓர் பொருத்தமிலா உணர்ச்சியே தான்,

    இன்பத்தின் மறுபெயராம் துன்பமாயும்,

    இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.   . . .  ஞா.க.க.எண்.  1247

     . . .  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    இயற்கையிலே துன்பம் இருக்க முடியுமா? இருக்க முடியாது. அப்படியானால் இருப்பது இன்பம்தான். ஒரு வேளை இயற்கையில் துன்பம் இருப்பதாக இருந்தாலும் இயற்கையை எதிர்த்து போராட முடியாது!  அப்படியானால் மனிதன் துன்பத்தை  அனுபவித்தேதான் ஆகவேண்டுமா?.   இல்லை.  துன்பம் என்பது செயற்கை (man made), மனிதர்கள்  உருவாக்கிக்கொள்வது. ஆனால் இயற்கையிலே உள்ளது இன்பம்தான்.     அதாவது துன்பம் என்பது மனிதனே ஏற்படுத்திக் கொள்வதாகும். எப்படி மனிதன் துன்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறான்? இன்பமே துன்பமாகிவிடுகின்றது.   இன்பம், தானாக துன்பமாக முடியாது.  இன்பத்தை நாடுகிறான் மனிதன். தேவையின் காரணமாக  இன்பத்தை நாடுவதில் தவறில்லை. இதனை சரியாக விளங்கிக் கொள்ள ஓர் உதாரணம் எடுத்துக் கொள்வோம். பசிக்கின்றது. பசி தீர்வதற்கு புசிப்பது தேவையே.  ஆனால் இன்பத்திற்காக புசிப்பதில்லை. சத்துள்ள உணவு  உண்ணலாம்.

    இன்பமே துன்பமாக மாறுகின்றது

    இன்பமே துன்பமாக மாற  யார் காரணம்?  இயற்கை காரணமாக இருக்க முடியாது.  மனிதனால்தான் இன்பம் துன்பமாகின்றது. இன்பத்தை நாடிய மனிதன் எப்படி அதனை துன்பமாக்கிக் கொள்கிறான்?  மனிதஅறிவின் மூன்று குறைபாடுகளான அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும் இன்பத்தை துன்பமாக்கிக் கொள்கிறான்.  இதுவரை (1911 வரை) இன்ப துன்ப  அறிவியல் உருவாகவில்லை.  இப்போது(1911 ற்கு பிறகு) இன்பத்தின் அறிவியல் வேதாத்திரி அறிவியலில் உருவாகியுள்ளது.

    வேதாத்திரிய இன்ப துன்ப அறிவியல் என்ன கூறுகின்றது?

    இன்பம் துன்பமாக மாறுவதற்கான காரணம் எளிமையானது?  தமிழில் எளிமையான இரு வார்த்தைகள் உள்ளன.   அவை அளவு(Limit), முறை(Method). இவ்விரண்டு வார்த்தைகளும் அதன் பொருளும்  தமிழ் தெரிந்த யாவரும் அறிந்ததேதான். ஆனால் அவ்விரு வார்த்தைகள்  மகத்துவம் வாய்ந்தது என்பது யாவரும் இதுவரை அறிகிலர்.  எளிமையான வார்த்தைகள் இரண்டும் புனிதமான வார்த்தைகளாகியது திருவேதாத்திரியத்தால்.  ஞானத்தின் திறவுகோல்கள் அவ்விரண்டு வார்த்தைகளும்.  ஞானிக்கு லட்சணம் அளவும், முறையும் காப்பது என்பார் நம் குருநாதர்,  இன்பம் துய்க்கும்போது அதில் மயங்காது அளவையும், முறையையும் பின்பற்றினால் துய்த்த அந்த இன்பம் துன்பமாக மாறாது.   இல்லையெனில் அளவு மீறும்போதும், முறை மாறும்போதும் இன்பமே துன்பமாக மாறிவிடுகின்றது.  எப்படி துன்பமாக மாறிவிடுகின்றது என்பதில்  ஐயம் ஏற்படுகின்றது மனிதனுக்கு. அளவு மீறும்போதும்,  முறை மாறும்போதும்  இன்பம் எப்படி துன்பமாகின்றது என சிந்தித்தால் ஒவ்வொருவரும் தங்களின் அனுபவங்களாலேயே இதற்கு விடை காணமுடியும்.   உதாரணம் ஜாங்கிரி உண்பதனை எடுத்துக்கொள்வோம்.  ஆரம்பத்தில்  இன்பமாக இருந்த ஜாங்கிரி அளவுக்கு அதிகமாக  உண்டால் ஆரம்பத்தில் இன்பமாக இருந்த ஜாங்கிரி துன்பமாக மாறுகின்றது.  அதாவது சலிப்பு ஏற்படுகின்றதல்லாவா? 

         இருப்பினும் இன்பம் துன்பமாக மாறுவதில் உள்ள அறிவியலை அறிவு அறிந்துகொள்ள அவா (மற்றொரு ஐயம்). ஏற்படும்.  எப்படி அளவும், முறையும் இன்பத்தை துன்பமாக்குகின்றது என்கின்ற வினா எழுகின்றது. இதற்கு வேதாத்திரிய அறிவியலில் இன்னொரு இயலான காந்த இயலை அறிந்துகொள்ள வேண்டும். காந்த இயலை முழுவதுமாக இச்சிந்தனையில் அறிந்து கொள்ள இயலாது. அதனை பின்னாளில் விரிவாக அறிந்து கொள்வோம். ஆனால் எவ்வாறு இன்ப துன்பத்தில் காந்தம்(சீவ காந்தம்) இடம்பெறுகின்றது என்பதனை மட்டும் அடுத்த அறிவிற்கு விருந்தில்புலன் மயக்கம்’ என்கின்ற தலைப்பில் அறிந்துகொள்வோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                   வளர்க அறிவுச் செல்வம்!!


     

     

  • அறிவிற்கு விருந்து – 290

    வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

    அறிவிற்கு விருந்து – 290

    இனியொரு விதி செய்வோம்-4

    மனிதஇன   தன்மாற்றத்தில் அறம் தோன்றிய நாள்

    13-05-2020—புதன்

    வாழ்க வளமுடன்!

    உத்தம நண்பர்காள்! உங்கட்கும் உரியது”

    “அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களையும் நினைவு கூர்கின்ற” வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவுறுத்துகின்ற குருவணக்க யுக்தியின் படி இன்று மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்து  மகரிஷி அவர்களின் துணையுடனும் வழிகாட்டுதலிலும் இன்றைய சிந்தனையைத்  தொடர்வோமாக!  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!   

              10-05-2020 அன்றைய சத்சங்கத்தின் அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றைய சிந்தனையைத் தொடர்கிறோம்.    ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்பதுதான்  இயற்கை/இறை நீதி என்று  நம் குருநாதர் என்று கூறியுள்ளதை நாம் அறிந்திருந்தாலும், நம் குருநாதரின் அருட்துணையுடனும், வழிகாட்டுதலிலும்,

    1. சட்டப்படிப்பே தேவையில்லை இயற்கை/இறை நீதியை அறிந்து கொள்வதற்கு,
    2. ஆட்சியின்றி ஆளுகின்ற ஒழுங்காற்றல் இயற்கை/இறை,
    3. இயற்கை/இறை நீதி எது என்பது பற்றிய நமது முடிவு,
    4. விளைவிற்கு விதை செயலே!,
    5. சற்று சிந்தித்துப் பார்ப்போமே! ஒரு கற்பனை!
    6. இயற்கைநீதி/இறைநீதி மிக மிக எளிமையானதுதான்

    ஆகிய துணைத்தலைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆழ்ந்து சிந்தித்து, ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்பது இயற்கையின்/இறையின் நீதியே என  ஐயமின்றி உறுதி செய்தோம் சென்ற அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்.

          இன்றைய அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்  ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களையும் நினைவுகூர்தல் அவசியம்;   நலம் பயக்கும்’ என்கின்ற உண்மையை  நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்துக் கொடுத்த குருவணக்க யுக்தியின்படி மகாகவி பாரதியாரை நினைவுகூர்தலின் முகமாக   மகாகவி பாரதியாரின் சத்திய வாக்கான

       “மனித ருணவை மனிதர் பறிக்கும்

      வழக்கம் இனியுண்டோ?

      மனிதர் நோக  மனிதர் பார்க்கும்

      வாழ்க்கை இனியுண்டோ?”  என மகாகவி பாரதியார் 1921 ற்கு (அவர் மறைந்த ஆண்டு) முன்னர்  தீர்க்கமாக மொழிந்ததை  நினைவுகூர்வோம். 

          இப்பாடலை நினைவுகூர்வதோடு நம் சிந்தனை முடிந்துவிடுவதில்லை என்பதனை நாம் அறிவோம்.  ஆகவே  தீர்க்கதரிசியான மகாகவி பாரதியாரின்  சத்திய வாக்குகள், 38 (1959-1921=38)ஆண்டுகளுக்கு பிறகு 

    • மனிதன் தனது எந்த தன்மையை(இரக்கம்) அறிந்து கொண்டு அதனை வளர்த்துக்கொள்ளும் போது மகாகவி பாரதியார் அருளிய சத்திய வாக்குகள் நிறைவேறும் என்பதற்கு உறுதியான நம்பிக்கையினை மனித(Fractions) மனங்களிலே ஏற்படுத்தும் முகமாக,  
    • இதுவரை அறத்திற்கு தெளிவான சுருக்கமான, அன்றாட வாழ்க்கையிலே புலன் வழி வாழ்ந்துகொண்டிருக்கும் பாமரனும் விளங்கிக்கொண்டு கடைபிடிக்கும் வகையில் தனது செயல்களை அளந்துபார்க்கும் அளவுகோல்(Yard stick) இல்லாத குறையை இயற்கை/இறை
    • அறத்தின் வரையறையின்(definition) வாயிலாக மனிதகுலத்திற்கு அறத்தினை தெரிவிக்க மனிதஇன தன்மாற்ற/பரிணாம வராற்றில் ஒரு புனித நாளான 20-12-1959 ஐ தேர்ந்தெடுத்து,
    • ஆன்மீக வரலாற்றில் இதுவரை ஆன்மீக வரலாறு கண்டிராத பெரும் திருப்பு முனையை       ஏற்படுத்திய இயற்கை/இறை, வேதாத்திரி மகரிஷி அவர்களைத் தேர்ந்தெடுத்து அவரைத்  திருக்கருவியாக்கி அறிவித்த  திருப்பாடலை இப்போது நினைவுகூர்வோம்.

                 வாழ்க திருவேதாத்திரியம்!   வளர்க திருவேதாத்திரியம்!!

                             அறத்தின் தோற்றம்/அறமே மதம்(20-12-1959)

                       பிறஉயிர் உணர்தலாய்ப் பெற்றிடும்

                          சுகதுக்க அளவினை

                       உறவுகொண் டுள்ளத்தால் யூகித்து,

                           உணர்ந்திரங்கி உதவும்

                       சிறந்த திருப்பம் அறிவில் சிந்தனையில்

                          முதல்உலகில் பெற்றநாள்

                       அறம்தோன்றிற்று;  மதமாம், அதை

                          வளா்த்தோர் பெயர்களினால் பலஆயிற்று. 

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    (20-12-1959-மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்தில் ‘அறத்தின் தோற்றம்’ என்கின்ற தலைப்பிலும் பின்னாளில் ஞானக்களஞ்சியத்தில் கவி எண். 494 ல் இடம் பெற்றுள்ளது இப்பாடல்) 

    பாரதியாரின் சத்யவாக்கு என்ன கூறுகின்றது?

         மேலே குறிப்பிட்ட சத்யவாக்கினை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம். என்ன கூறுகின்றார் பன்முகக் கவிஞர் மகாகவி பாரதியார்?  மனிதர்களிடம் இனி அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும்  என்கிறார்  பாரதியார். அதாவது மனிதர்களிடம் இனி இரக்கம் மலரும் என்கிறார். எப்படி இயற்கையின் தன்மாற்றத்தில்/இறையின் தன்மாற்றத்தில் திடீரென்று அம்மாற்றம் நடைபெறமுடியும்?! பாரதியார் பேரறிவின் தன்மாற்றம்தானே?  பேரறிவே பாரதியார் என்கின்ற உடலின் வழியாக  கூறிய சத்யவாக்குகள்  அவை என்று கொள்ளலாம்.  மாற்றாக    ‘ஆன்மா நினைத்தால் பேரான்மா நிறைவேற்றி வைக்கும்’ (Fraction demands.  Totality suppplies) என்கின்ற அடிப்படையில்  தன்மாற்றம்/பரிணாமம் வளர்ச்சி பெற்று வருகின்றது;  ஆகவே பாரதியார் ஆன்மா நினைத்தது, பேரான்மா அதனை நிறைவேற்றி வைக்கும்  எனக் கொள்ளலாமா?  கொள்ளலாம்.  நிறைவேற்றி வைத்ததா? ஆம்!  நிறைவேற்றி வைத்துள்ளது வேதாத்திரி மகரிஷி வாயிலாக.

         “மனித ருணவை மனிதர் பறிக்கும்

      வழக்கம் இனியுண்டோ?

      மனிதர் நோக  மனிதர் பார்க்கும்

       வாழ்க்கை இனியுண்டோ?”   . . .   மகா கவி பாரதியார்,

     பொருள்: மனிதனுக்குரிய வரையறைகளில் ஒன்று  ‘மனிதன் ஒரு சமூகப்பிராணி.Man is a Social Animal.  ஏன் மனிதனை அவ்வாறு கூறவேண்டும்?  மனிதன் உயிரினத்தைச் சேர்ந்தவன்தானே?!  இருந்தாலும் மற்ற உயிரினத்தைவிட சிறப்புடையவன்.  ஆறாம் அறிவு உடையவன் மனிதன் என்று மனிதர்களாகிய நாம் ஏற்றுக் கொள்கிறோம். விலங்கினத்திலிருந்து வந்ததுதானே மனிதஇனம்.  விலங்கை  பிராணி என்கிறோம்.  பிராணி என்றால் இடம் விட்டு இடம் செல்லக்கூடியதும், புலனுணர்வுகளைப் பெற்றிருப்பதுமான உயிரினம். மற்ற உயிரினங்கள் தங்கள்  இனத்தைவிட்டு தனியாகவும் வாழ முடியும்.  சில விலங்குகள்  பாதுகாப்பிற்காக  தன் இனத்தைச் சேர்ந்த கூட்டத்தில் சேர்ந்து வாழ்கின்றன. ஆனால் மனிதன்  எப்போதுமே மனித சமுதாயத்தில் சார்ந்து  சேர்ந்துதான் வாழமுடியும். தன் சமுதாயத்தை விட்டு வெளியே வாழமுடியாது.  காரணம் தனக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் தனியொரு மனிதன் செய்துகொள்ள முடியாது. சமுதாயத்தில் இருந்துதான் பெறமுடியும்.  ஆகவே மனிதன் சமுதாயப்பிராணி எனப்படுகிறான்.  மனிதன் சமுதாயத்தில் வாழ்கின்றபோது அவனுக்கு  நெறி(code of conduct) அவசியமாகின்றது.  நெறி என்றால் என்ன?  தனி மனித ஒழுக்கத்திற்காக ஏற்படுத்திக் கொள்கின்ற விதி அல்லது மேற்கொள்ளும் முறையே நெறி. ஆகவே நெறி என்பது ஒழுக்கம் என்றாகின்றது.  அப்படியானால் ஒழுக்கம் என்றால் என்ன?

    ஒழுக்கம் பற்றி திருவேதாத்திரியம் கூறுவது என்ன?

    •  தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ உயிர் உணர்ச்சிக்கோ துன்பத்தை விளைவிக்காத எண்ணம், சொல் செயல் ஆகிய மூன்றும் ஒழுக்கம் என்பதாகும்.
    •  எண்ணம், சொல், செயலில் எழும் விளைவறிந்து, உண்மையில் இன்பமே உண்டெனில் ஒழுக்கமாம்
    •  பிறருக்கு துன்பம் இல்லாமல் செயலாற்றுவதே ஒழுக்கம்.
    • துன்பம் விளைவிக்காமல் காக்கின்ற வாழ்க்கைத்திறனே, செயல் திறமையே ஒழுக்கம் எனக்கொள்ளவேண்டும்.

         ஒழுக்கம் எது என்பதை திருவள்ளுவர் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறியிருந்தாலும், இருபது நூற்றாண்டுகளுக்குப் பின்னர்  பத்து கோணங்களில் ஐயன் திருவள்ளுவர் கூறியுள்ளதைச்  சுருக்கி காலத்திற்கு ஏற்றாற்போல்,

    • மனிதனிடம் அடிப்படையாக என்ன வேண்டுமோ,
    • அதாவது ஆதிமனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றியதால், ஆதிமனிதனின் கருத்தொடராக வந்தவன்தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதனும் என்பதால் அவனிடம் உள்ள கருமையத்தில் உள்ள விலங்கினத்தன்மை மறைந்து மனிதனுக்கே உரிய அன்பும், கருணையுமாகிய மனிதம் முழுமையாக வெளிப்படவேண்டும் என்பதனைக் கருதி அந்நெறியை இரண்டொழுக்க பண்பாக்கித்  தந்துள்ளார் திருவேதாத்திரியத் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இரண்டொழுக்கப் பண்பாடு என்ன கூறுகின்றது?

         இரண்டொழுக்கப் பண்பாடு என்ன என்பது மனவளக்கலைஞர்களால்  அறியப்பட்டதுதான். எனினும் அதனை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.

    • நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்,
    • துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

    முதலாமாவது அன்பை வெளிப்படுத்தும்.  மனிதனுக்கு இரண்டு கண்கள் உள்ளதுபோல் மனிதநெறிக்கும் இரண்டு கண்கள் உண்டு.  மனிதநெறிக்கு முதல் கண் அன்பு எனில், அதன் இரண்டாம் கண் கருணை. ஆகவே இரண்டாவது ஒழுக்கம் கருணையை வெளிப்படுத்துகின்றது.

    இரண்டொழுக்கப்பண்பாடு ஒவ்வொரு மனவளக்கலைஞர்களாலும் தவத்தின் முடிவில் சங்கல்பம்  செய்யப்பட்டு வருவதால் அது  வான்காந்த களத்தில் பதிந்து அழுத்தம் பெற்று பிறமனிதர்களிடம் சென்றடைந்து, காலத்தால் ஒழுக்கத்தை உடைமையாக்கிக் கொள்ளும் மனிதசமுதாயமாக  மலர்ச்சி பெறும்.   

    ஆகவே திருவேதாத்திரிய இரண்டொழுக்கப்பண்பாடு, மகாகவி பாரதியாரின்

          ‘மனிதர் உணர்வை மனிதர் பறிக்கும் அன்பில்லா வழக்கம் இனி இருக்காது’

                   எனும் முதல் சத்யவாக்கினையும்,   

         ‘மனிதர் நோக மனிதர் பார்க்கும் கருணையற்ற வாழ்க்கை இனி இருக்காது’ என்கின்ற இரண்டாவது  சத்யவாக்கினையும் அருட்பேராற்றல் நிறைவேற்றி வைத்துள்ளதை நினைந்து மனம் ஆனந்தமடைகின்றது  மனிதநல ஆர்வலர்களான  மனவளக்கலைஞர்களுக்கு.

    இரக்கமில்லாமல் ஒழுக்கம் ஏது?

        மேலும் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும் நாம்.  இரக்கமில்லாமல் ஒழுக்கம் என்பது மனிதனிடம் வராது. ஒழுக்கம் என்பது அன்பையும், கருணையையும் வெளிப்படுத்துகின்ற நெறிதானே?!  அவ்வாறிருக்கும்போது இரக்கமின்றி எப்படி மனிதனிடம் ஒழுக்கத்தைப் போதிக்க முடியும்?  விலங்கினத்திலிருந்து தன்மாற்றமடைந்த (பரிணாமத்தில்) விலங்கினப்பண்பைக் கொண்ட மனிதனிடம் எப்போது இரக்கம் தோன்றியிருக்க முடியும் என்று சிந்தித்த வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு அருபோரற்றலால் அறிவிக்கப்பட்ட பாடல்தான் மேலே குறிப்பிட்டுள்ள அறத்தின் தோற்றம் என்கின்ற பாடல்.  ஆகவே மனிதஇன தன்மாற்றத்தில்/பரிணாமத்தில் ஒரு நாள் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு ஏற்பட்ட  இன்பதுன்ப உணர்வினை தன் உணா்வுபோல்  யூகித்து உணர்ந்து உதவி செய்திருக்கின்றான்.   அப்போதுதான் உறவு இருவருக்கும் இடையே  பிறந்திருக்கின்றது.  அந்த உறவால் அம்மற்றொரு  மனிதன் அனுபவித்த துன்பத்தை போக்கியிருக்கிறான். இது சிறந்த திருப்பம் என்கிறார் மகரிஷி அவர்கள். உலகில் முதல் நாள் ஏற்பட்ட அந்த இரக்க உணர்வை அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்.  அந்த அறஉணர்வை மேலும் விளக்குகிறார். 

    இரக்கஉணர்வே அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்

    அறம் என்பதுகூட ஒரு நெறிதான். இயற்கையின்/இறையின் நெறியே அறம். ஆகவேதான் இறைஉணர்வையும், அறநெறியையும் இணைத்தே கூறுகின்றார் மகரிஷி அவா்கள்.  இறைஉணர்வும் அறநெறியும் எனும் நூலையும் இயற்றியுள்ளார். ஆகவே இன்றைய சிந்தனையில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் பேரறிவு மகாகவி பாரதியாரின் வாயிலாக  மனிதகுலத்தில் ஒழுக்கம் இரக்கமாக வெளிப்பட்டு அன்பும் கருணையுமாக மலரவேண்டும் என நினைந்து அதனை 38 ஆண்டுகள் கழித்து மனிதர்களுக்கு மேலும்  புரிகின்ற எளிய முறையில்  வேதாத்திரி மகரிஷி வாயிலாக சிந்திக்க வைத்து அதற்குரிய போதனையையும், சாதனையையும் மனவளக்கலையாக அருளியுள்ளது என்பது இயற்கையின்/இறையின் கருணயன்றோ!!  

    வாழ்க திருவேதாத்திரியம்!      வளர்க திருவேதாத்திரியம்!!

     . . .தொடரும்                                                                                                                 

    வாழ்க அறிவுச்செல்வம்!                                                  வளர்க அறிவுச்செல்வம்!!


  • அறிவிற்கு விருந்து – 289

    வாழ்க மனித அறிவு!                                                                வளர்க மனித அறிவு!!

    அறிவிற்கு விருந்து – 289.

    இனியொரு விதி செய்வோம்-3

    10-05-2020—ஞாயிறு

    இயற்கை/இறை நீதி எதுவாக இருக்க முடியும்?

    வாழ்க வளமுடன்!

    உத்தம நண்பர்காள்! உங்கட்கும் உரியது ”

    – வேதாத்திரி மகரிஷி.

    “அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துணை அருளாளர்களையும் நினைவு கூர்கின்ற” வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவுறுத்துகின்ற குருவணக்க யுக்தியின் படி இன்று மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்து வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணையுடனும். வழிகாட்டுதலிலும் இன்றைய சிந்தனையைத்  தொடர்வோமாக! 

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!   

              29-04-2020 அன்றைய சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்றைய சிந்தனையைத் தொடர்கிறோம்.  அன்று இயற்கையும் இறையும் ஒன்றே என்பதனை உறுதி செய்தோம்.    இயற்கை நீதி / இறை நீதி என்பது என்ன என்று ஆராய்வோம் என்பதோடு அன்றைய சத்சங்கத்தை முடித்துக் கொண்டது நினைவிருக்கும். இயற்கை நீதி / இறைநீதி எது என்பது இயற்கை / இறை  தானாக மாற்றம் அடைந்ததுபோல்  தானாக இயற்றப்பட்டது இல்லை. அது ஒரு எழுதப்படாத சட்டம்   (can be understood as inbuilt mechanism or due to the inner purpose of entelechy of Nature/Almighty). அந்த எழுதப்படாத ஒரு சட்டத்தைக் காக்கவே எல்லா நாடுகளிலும் அரசாங்கங்கள் பல்வேறு சட்டங்களை  எழுதிக்/இயற்றிக்கொண்டு வருகின்றன. பல்வேறு சட்டங்கள் இருந்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.  புதுப்புது குற்றங்கள் நூதனமுறையில் வளர்ந்து கொண்டேதான் போகின்றன.

    சட்டப்படிப்பு தேவையில்லை இயற்கை/இறை நீதியை அறிந்து கொள்வதற்கு

        வாழ்வின் வளத்தை அதிகரித்துக் கொடுக்கும் விஞ்ஞானத்தை நேர்வழியில் பயன்படுத்தாமைக்கு,

           விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலேயே உச்ச கட்ட கண்டுபிடிப்பான கணினி அறிவியலில் 

           பெருமளவில் பெருகிவரும்  cyber crimes,

           கணினி உலகையே நிலைகுலையச் செய்ய  வேண்டுமென்றே virus  போன்றவைகளை  

           செயற்கையாக உற்பத்தி செய்து கணியியை செயல் இழக்கச் செய்வது  போன்ற

           அநாகரீக  செயல்களே உதாரணங்களாகும்.

           இயற்கைநீதியை/இறைநீதியை அறிந்துகொள்ள சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியை பயில வேண்டியது இல்லை. புலன்வழி வாழ்க்கை நடத்துகின்ற பாமரன் கூட(common man) எழுதப்படாத இயற்கைநீதியை/இறை நீதியை ஆறாம் அறிவால் உணர்ந்துகொண்டு, அறிந்துகொண்டு, மதித்து நெறியுடன் வாழ்தலே  துன்பமிலா இன்பமான வாழ்விற்கு வழிகாட்டும்.  மேலும் கருத்தியல் (போதனை) மற்றும் செய்முறை (சாதனை) தேர்வைக்கொண்ட மனவளக்கலையால் இறையுணர்வு பெற்று,   முதல் வெற்றியாளருக்கு* அடுத்த இரண்டாம் வெற்றியாளர்களுக்கு மத்தியில்  இடம் பிடிப்போம். 

           “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என உறுதியளிக்கும்

        சிறப்பு மிகு மனவளக்கலையின் முதல் வெற்றியாளரும்*,

        தனது முதல் வெற்றியால் மனவளக்கலைக்கே பெருமையைச்  சேர்த்தவருமான  

        நம் குருநாதர்  வேதாத்திரி மகரிஷி அவர்களின் புனித வாக்கினை புனிதமாக்கி,

        அவரது சீடருக்குரிய  இலக்கணத்தோடு அவருடைய எண்ண ஓட்டத்தில் வாழ்வோம்.   

        வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

     ஆட்சியின்றி ஆளுகின்ற ஒழுங்காற்றல் இயற்கை/இறை

           இயற்கையில் உள்ள அமைப்புகள் எல்லாம் ஒழுங்குடன் இயங்கி வருகின்றன.  இயற்கை என்பது  ஒழுங்குடன் இயங்கும் ஆற்றல் என்பதால் இயற்கையை/இறையை ஒழுங்காற்றல் என்று வெறும் வார்த்தையால் மட்டுமே அழைக்காமல், இயற்கை/இறை மீது உள்அன்புகொண்டு போற்றி ஆனந்தத்துடன்   அழைக்கின்றோம்.    புவியில் மனிதர்களால் ஆட்சி நடக்கின்றது.  ஆனால் பிரபஞ்சத்தை இயற்கை/இறை ஆர்பாட்டமில்லாமல் அரூப ஆட்சி நடத்துகின்றது. அதாவது ஆட்சியின்றி ஆண்டுகொண்டிருக்கின்றது.  இயற்கை/இறை.   நெறி தவறாதும், முறை தவறாதும் செங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கின்றது.   மனிதர்களால் நடக்கும் ஆட்சியில் சட்டம், ஒழுங்கை உறுதிபடுத்த காவல்துறை, உளவுத்துறை என்று பல துறைகள் உள்ளன. ஆனால் இயற்கைக்கு/இறைக்கு அண்டசராசரங்களை மட்டுமே ஆட்சி செய்வதோடு அதன் ஆட்சி முடிந்துவிடவில்லை.  குறிப்பாக மனித இனத்தன்மாற்றத்தையும் உள்ளடக்கிய உயிரினத் தன்மாற்றத்தையும் கண்காணிக்க/நிர்வகிக்க வேண்டியுள்ளது.  

         துவைதத்தில் கூறவேண்டுமெனில், தன்மாற்றத்தில் ஐந்தறிவு உயிரினங்களாகி தொடர்ந்து நடந்து வருகின்ற ஐந்தறிவு உயிரினங்களின் வாழ்வால்  இயற்கைக்கு/இறைக்கு சிரமம் ஏதும் இல்லை. ஆனால் மனிதஇன வாழ்வால்தான் இயற்கைக்கு/இறைக்கு சொல்லொன சிக்கல்களும்/சிரமங்களும் ஏற்பட்டுவிட்டன. இதற்குமேலும் மனிதஇன வாழ்வால் இயற்கைக்கு/இறைக்கு சிக்கல்களையோ/சிரமங்களையோ ஏற்படுத்துவதற்கு ஒன்றுமில்லை. இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க சடுதிமாற்றத்தால் (sudden exposure)  மலர்ந்ததுதான்  திருவேதாத்திரியம். ஆன்மா நினைக்க அல்லது கேட்க  பேரான்மா நிறைவேற்றும் (Fraction demands Totality supplies) என்கின்ற அடிப்படையில் தன்மாற்றம்/பரிணாமம் நடைபெற்று வருவதால், நல்மனிதர்களாகி மனிதர்கள் வாழவேண்டும் என்கின்ற அவசியத்தை ஆதங்கத்துடன்  எண்ணமாகக் கூறவேண்டியுள்ளது.  இப்படி துவைதத்தில்  கூறினாலும்  நாம் கடைபிடிப்பது சுத்த அத்வைத விஞ்ஞானம்தான்(Pure Advaidic Logic / Science ).  இவ்விடத்தில் நம் குருநாதர் மொழிந்ததை நினைவு படுத்திக் கொண்டு மகிழ்வோம்.

    ஏன் அசைந்தோம் என்றிருக்கும். யாருக்கு?

        ஒரு முறை ஆளியாறில் பிரம்ஞானப் பயிற்சி நடத்தும்போது  “ஏண்டா அசைந்தோம்? மனித வடிவில்  அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறோமே” என்றிருக்கும் இறைவனுக்கு  என மகரிஷி அவர்கள் நகைச்சுவையாகக் கூறி சிரித்ததை  நினைவுகூர்ந்து இப்போதும் மகிழ்வோம்.  மகிழ்வதோடு மட்டுமல்லாது உலகில் நம்மையும் உள்ளடக்கிய உலக ஆன்மாக்கள் அனைவரும் திருந்தி  பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்க நீதிநெறி உணர்ந்த மாந்தர்களாக வாழவேண்டும் என்கின்ற விருப்பத்தை எப்போதும், அல்லும் பகலும் மனதில் விழிப்புணர்வோடு சுழலவிட்டுக்கொண்டே இருப்போம். அவர் சிரித்ததற்கான காரணத்தை மேலும் விளங்கிக்கொள்ள இறைவணக்கம் இரண்டாம்  பாடலிலே கல்லார்(மனிதன் அறியாமையில் செய்யும்) மற்றும் கற்றார்(மனிதன் அறிந்து செய்யும்) செயல் விளைவாய்க் காணும் இன்ப துன்பமவன் இறைவன் என்பதனையும் நினைவில் கொண்டுவந்து வெறும் வார்த்தைக்காக அவர் சொல்லவில்லை என்றுணர்ந்து  அச்சிரிப்புடன்  இணைத்து சிந்தித்து பயன் பெறுவோம்.  நலம் பெறுவோம். நல் வாழ்வு வாழ்வோம் நாம்!!!

    இயற்கை/இறை நீதி எது  என்பது பற்றிய நமது முடிவு     

          இதுவரை சிந்தித்ததில் என்ன முடிவிற்கு வரவேண்டியுள்ளது நாம்?  இயற்கை/இறை ஆட்சியின்றி செங்கோல் ஆட்சி செய்து வருகின்றது. எழுதப்படாத சட்டத்தால் இயற்கை/இறை ஒழுங்குடன்(Unfailing Law of Nature) இயங்கி வருகின்றது. 

    விளைவிற்கு விதை செயலே!

         உலகில் இரண்டு நடந்து கொண்டு வருகின்றன. ஒன்று செயல். மற்றொன்று விளைவு. மனிதன் அனுபவிப்பது விளைவைத்தான். விளைவு தானாக வராது. விளைவிற்கு மூலம் செயல். விளைவுக்கு விதை செயல்.  ஒன்றை அனுபவிக்க விரும்பினால் மனிதன் செயல் செய்துதான் விளைவை அனுபவிக்க முடியும்.  எதனை அனுபவிக்க விரும்புகிறானோ ஆறாம் அறிவின் நுண்மாண்நுழைபுலன் திறமையால் செயல் புரியும் முன்பே விளைவிற்கான செயலை தீர்மானித்து செயல் புரிய வேண்டும். விளைவு தீமையாக வந்தது  என்றால் மனிதன் விளைவை முன்கூட்டியே சரியாகத் தீர்மானிக்கவில்லை என்றுதான் பொருள்.

    சற்று சிந்தித்துப் பார்ப்போமே!

    இயற்கையின்/இறையின் ஆட்சியில் செயல், விளைவு ஆகிய இரண்டுமே மனிதனிடம் இருக்க முடியுமா?    செயல் புரிய மனிதனுக்கு உரிமை உள்ளது. ஆனால் தான் செய்யும் செயலுக்கு தான் விரும்புகின்ற விளைவையே கொடுக்க முடியுமா மனிதனால்?  அவ்வாறு இருக்குமானால் மனித சக்திக்கு அப்பால் உள்ள இயற்கை சக்திக்கு / இறைசக்திக்கு என்ன முக்கியத்துவமும், பெருமையும் உள்ளது? தீய செயலை செய்துவிட்டு அதற்கு அவன் விரும்பும் நல்விளைவையல்லவா ஏற்படுத்திக் கொள்வான் மனிதன். அது நீதியாக இருக்க முடியுமா? 

    ஒரு கற்பனை!

         ஒரு கற்பனைதான் இது!  தேர்வில் மாணவன் விடை எழுதுகின்றான். விடையைத் திருத்துபவர் ஆசிரியர்.  மாணவனையே அவன்  எழுதிய விடையை திருத்திக் கொள்ளுமாறு அனுமதிக்க முடியுமா?  அப்படி அனுமதித்தால் எல்லா மாணவர்களும் தங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் அளித்து மகிழ்வர்.  தேர்ச்சிக்கு தகுதியில்லையாயினும் எல்லோரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டியதுதான். இது ஒரு கற்பனைதான். உண்மையை உண்மையாக விளங்கிக் கொள்ள அறிவு நாடும் ஒரு கற்பனையே.  ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவைப் கொடுக்க வல்லது இயற்கை/இறை. இயற்கைநீதி/இறை நீதி என்பது செயலுக்கு ஏற்ற விளைவைக் கொடுப்பதுதான்.

    இயற்கைநீதி/இறைநீதி மிக மிக எளிமையானதுதான்(Law of Nature/Consciousness is very very simple)

        ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற மூன்று வார்த்தைகளைக் கொண்டது இந்த நீதி. இந்த நீதியின் வார்த்தைகளில் சிக்கலில்லாத(intricate), பிரிவு(பகுதி)கள் இல்லாத(not consisting of various sections of Law) எளிமையான சட்டம். So to say Law of Nature/Concisiousness is not complex, but very simple.  ஆனால் இந்த எளிய இயற்கை நீதியை/இறைநீதியை இயற்கையின்/இறையின் தன்மாற்றமாகிய மனிதகுலம் புரிந்து கொள்ளவில்லை. அறியாமயைிலும் இருக்கின்றது. அறிந்தும் அலட்சியப்படுத்திக் கொண்டும் இருக்கின்றது.  அறிந்தும் உணர்ச்சிவயத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகளாகியும் இன்னமும் இந்த நியதி மனிதகுலத்தால் மதிக்கப்படுவதில்லை, போற்றப்படுவதும் இல்லை.  இன்று மனித குலத்தில் நிலவுகின்ற  சிக்கல்களுக்கு மேல் முளைக்கின்ற சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ள காரணமே ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இயற்கைநீதியை/இறைநீதியை மதியாமை.  ‘நல்லவர் உள்ளம் இறைவன் இல்லம்’ என்கின்ற ஆன்றோர் மொழியினை அறிந்துகொள்ள வேண்டும்.  அதாவது இயற்கையின்/இறையின் ஆதிநிலையான ஒழுங்காற்றல்(பேரறிவு) தன்மாற்றமாகியதுதான்  மனிதன்.  அவ்வாறிருக்கும்போது மனிதன் வாழ்க்கையில் ஒழுக்கத்தை தவறாது கடைபிடித்து ஒழுங்குடன் வாழவேண்டும்.  மனிதன் ஒழுங்காற்றலான பேரறிவின்  அங்கம்தானே மனிதன்!   மனிதகுலம் இன்னமும் தன்பிறப்பின் நோக்கம் அறியாது மகாகவி பாரதியார் “புலனில் வாழ்க்கை இனியுண்டோ?” என்று  கூறுகின்ற நிலையில்தான் மனிதகுலம் புலன் வழி வாழ்க்கை ஒன்றையே பிரதானமாக நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றது.   ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’  என்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  ஆனால் மகாகவி பாரதியார்,

         “புலனில் வாழ்க்கை இனியுண்டோ? –

            நம்மில் அந்த  வாழ்க்கை இனியுண்டோ?

    என்று இரண்டுமுறை அழுத்தமாக, உறுதியாகக் கூறுகிறார். 

    வேறு என்ன வாழ்க்கை இனி உண்டு என்கிறார்?

    மேலும் அவர் கூறுவதாவது

    “எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்”

       என்றுரைத்தான் கண்ண பெருமான்;

    எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை

        இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்

    இந்திய உலகிற் களிக்கும் – ஆம் ஆம்

        இந்தியா உலகிற் களிக்கும். என்று மூன்று முறை அழுத்தமாகக் கூறியுள்ளார் இருபதாம்  நூற்றாண்டில்.  அருளாளர்களின் அவதார  வரலாறு  முடிவுறா  தொடர் ஓட்டப் போட்டி போல் (never ending relay race) நடந்து வருவதால் மகாகவி பாரதியாரைத் தொடர்ந்து  அதே நூற்றாண்டில் வேதாத்திரி  அவதரித்து முன்னவரின் உள்ளக்கிடக்கையை   பூர்த்தி செய்துள்ளார்.     

        அருளாளர்களின் அவதார  வரலாறு  முடிவுறா  தொடர் ஓட்டப் போட்டி என்பதால், மகாகவி பாரதியார் ஓடி வந்த தொடர் ஓட்டத்தில் அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரஷி அவர்கள் எவ்வாறு ஓடி இயற்கை/இறை தனக்கு இட்ட புனிதப்பணியினை பூர்த்தி செய்துள்ளார் என்பதனை வரும் அறிவிற்கு விருந்து பகுதியில் அறிவோம். 

    வாழ்க திருவேதாத்திரியம்!      வளர்க திருவேதாத்திரியம்!!

              . . .தொடரும்                                                                                                                 

    வாழ்க அறிவுச்செல்வம்!                                                  வளர்க அறிவுச்செல்வம்!!