C252-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

C252-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

C252-FFC –

14-12-2016—புதன்

‘இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதுதானே’ என்பது எவ்வாறு நடைபெறுகின்றது என ஆராய்ந்து வருகிறோம். இந்த தலைப்பைக் கொடுத்தது அவ்வையாரே என்பதால் அவர் அருளிய பாடல்கள் வழியாகவே ஆராய்ந்தோம். இருப்பினும், அறிவை அறிந்த அறிவினர், வேறு யாராவது இது பற்றிக் கூறியிருக்கின்றார்களா என்று ஆராய்ந்ததில் நம்மிடையே எழுந்தருளுபவர் அறிஞர் திருமூலர். எனவே, இப்போது அறிஞர் திருமூலர் கூறுவதையும் நினைவு கூர்வோம். அறிஞர் திருமூலர் அறிவினரைச் சேர்ந்து எவ்வகையிலெல்லாம் இனிதை அனுபவிக்க முடியும் என்று கூறுவதைக் காண்போம்.

FFC-71-தெளிவு குருவின்- to post on 4-4-15

இக்கவியில் திருமூலர் குருவைச் சேர்தல் தெளிவு என்கிறாரே! ஆனால் அவ்வையார் அறிவினரைச் சேர்தல் இனிதிலும் இனிது என்கின்றாரே என ஐயம் எழலாம். இந்த இரண்டு மகான்களின் கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய கடமை நமக்குள்ளது. அவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்போது. இரண்டு ஐயங்கள் எழலாம்.

1) அறிவினரும் குருவும் ஒரே தன்மையானவரா? அதாவது ஒரே ஆளுமையுடையவரா?

2) தெளிவும், இனிதினும் இனிதும் ஒன்றா?

அறிவுடையோர், குரு ஆகிய இருவரும் ஒரே இனத்தவரா, அதாவது ஒரே தன்மையானவரா என சற்று விரிவாகப் பார்ப்போம்.

அவ்வையார் மூன்றாவது இனிதாக அறிவினரைச் சேர்தல் என்கிறார். நான்காவது இனிதாக அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே என்று ஆச்சரியத்துடன் நம்மிடமே வினவுகிறார். நாம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நாம் சொல்லாமல் வேறு யார் பதில் சொல்ல முடியும்? பயனாளியைத் தவிர வேறு யார் உண்மையைச் சொல்ல முடியும்?

அறிவினர் என்பவர் யார்? அறிவுடையவரா? மனிதன் என்றாலே எல்லோரிடமேதான் அறிவு உள்ளது. அப்படியானால் எல்லோருமே அறிவினரா? இருக்க முடியாது. அறிவை அறிந்தவர், அறிவினர். ‘அறிவு’ மற்றும் ‘இனம்’ என்கின்ற இரு சொற்களும் சேர்ந்து வந்ததுதான் அறிவினர் என்கின்ற சொல். இனம் என்றால் பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவு என்று பொருள். அறிவு இனர் என்றால் அறிவின் இருப்பிடம், இயக்கம், பூரணம், சிறப்பு, முழுமை ஆகியவைகளை அறிந்தவர் அறிவினர் ஆவார். அறிவை விட பெரும் பிரிவு வேறு ஏது? எனவே இனம் என்கின்ற சொல்லின் பொருளான ‘பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவாகிய’ அறிவை அறிந்தவர் அறிவினர். அந்த அறிவினரைச் சோ்தல் மூன்றாவது இனிதாகக் கூறுகிறார்.

நான்காவது இனிதைக் கூறும்போது, ‘அறிவுடையோரைக் கனவிலும் நனைவிலும் காண்பது தானே’ என்கிறார். அங்கே அறிவினர் என்கிறார். இங்கே அறிவுடையோர் என்கிறார். இவர் வேறா? அறிவினர்தான் அறிவுடையோர். எல்லோருக்கும் ஆறாம் அறிவிருந்தும், அது புலனளவிலே மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாறாக புலன்களைக் கடந்து, அறிவு நிலையிலே அறிவை செயல்பட வைத்துக் கொண்டிருப்பவர்களே அறிவுடையராவார். புலன்களுக்கும் அப்பாலும் அறிவை செயல்படுத்துபவர்களே அறிவை உடையவர்களாகக் கருத முடியும் என்பதால் அறிவுடையோர் என்கிறார், அறிவினர் மற்றும் அறிவுடையோர் ஆகிய இருவருமே ஒருவா்தான்.

திருமூலர் கூறுகின்ற குரு என்பவர் யார்? குரு என்கின்ற சொல்லுக்கு ஆசிரியர், ஆசான், முன்னுதாரணமாக இருப்பவர் என்று பெயர். ஆசிரியர் என்பவர் எதற்காகத் தேவைப்படுகிறார்? அறிந்து கொள்ள வேண்டியதை அறியாமல், அறியாமையில் இருக்கும் போது தேவைப்படுகிறார். எனவே குரு என்பவர் அறியாமையைப் போக்குபவர். மேலும் பண்டைய ஆன்மீக நூல்கள் குருவைப்பற்றிக் கூறுவதனைக் கவனத்தில் கொள்வோம். ‘குரு’ என்கின்ற சொல்லில் கு – ரு என்கின்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளன. ‘கு’ என்கின்ற சொல் அறியாமை அல்லது ஞானமடையாத அஞ்ஞான நிலையைக் குறிக்கின்றது. ‘ரு’ என்கின்ற எழுத்து, அருள் அல்லது கருணை என்கின்ற சொல்லில் வரும் இரண்டாவது எழுத்து, ஆகவே ஒருவரின் அறியாமையை எவர் ஒருவர் தனது அருளால் போக்குகின்றாரோ அவரே குரு எனப் போற்றப்படுவர்.

மனிதனின் அடிப்படைத்தன்மையை, அதாவது சுயத்தை தெரிந்து கொள்ளாது இருக்கும் நிலையை நீக்கி, அருள்பவா் ஆன்மீகக் குருவாவார். அதாவது அறிவுநிலையில் குன்றியவரை, தனது அருளால் அறிவுநிலையில் உயர்த்துபவரை, ‘குன்றியதிலிருந்து’ என்கின்ற சொல்லிருந்து முதல் எழுத்தாகிய ‘கு’ வை எடுத்துக் கொண்டும், அருள் என்கின்ற சொல்லில் உள்ள ‘ரு’ என்கின்ற இரண்டாவது எழுத்தையும் எடுத்துக்கொண்டு ஒரே சொல்லாக்கியது தான் ‘குரு’ என்கின்ற காரணப் பெயர். குரு என்பவருக்கு விளக்கம் பார்த்தோம். குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒருவரா என அறிய வேண்டும். குரு என்பவர் அறியாமையை நீக்குகிறார். அறிவினரோடு சோ்வதாலும் அறியாமை நீங்குகின்றது. எனவே திருமூலர் கூறும் குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒரே தன்மையைக் கொண்டவரே (same personlity). ஆகவே முதல் ஐயத்திற்கு விளக்கம் கண்டாகிவிட்டது. இரண்டாவது ஐயமான ‘இனிதினும் இனிதும்’, ‘தெளிவும்’ ஒன்றா என்கின்ற ஐயத்தைப் போக்கிக் கொண்டால் திருமூலர் கூறும் நான்கு வழிகளில் எவ்வாறு தெளிவு கிடைக்கின்றது என அறிவோம்.
தெளிவு என்பது அறிவு மேம்பட உதவும். அறிவை விசாலமடையச் செய்யும். அறிவுக்கு விளக்கம் கிடைக்கும். தெளிவு என்பது அறிதல், விளக்கமுறல். அறிவு தெளிந்தால்தான் நல்லறிவாக இருக்கும். தெளிந்த அறிவு பாவங்களைச் (தீயவைகளைச்) செய்யாது. எனவே சமுதாயத்தை, ‘தெளிந்த நல்லறிவு வேண்டும்’, என இறைவனை வேண்டச் சொல்கிறார் மகாகவி பாரதியார் ஒரு பாடலில்.

தெளிவில்லாமல், பல பிறவிகளாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு ஒளி கிடைத்து அது அறிவொளியாகிவிட்டால், அது அவ்வையார் கூறும் இனிதினும் இனிதாகத்தானே இருக்க வேண்டும். திருமூலர் கூறும் முதல் வழி என்ன?

1) தெளிவு குருவின் திருமேனி காண்டல்:
இந்த வரி கூறுவதென்ன? குருவினுடைய திருமேனியைக் காண்பது தெளிவைக் கொடுக்கும் என்கிறார் அறிஞர் திருமூலர். இது எப்படி சாத்தியமாகின்றது? தெளிவு அறிவிற்குரியது. அப்படியிருக்கும்போது, அறிவிற்குரியது எப்படி திருமேனியைக் கண்டால் ஏற்படுகின்றது? அது அவருடைய அனுபவமோ?! அது அவருடைய அனுபவமாக இருந்தாலும், அது எல்லோருக்கும் பொதுவானது என்பதால்தான் அதனை பாடல் வாயிலாக சமுதாயம் பயன்பெறுவதற்காகக் கூறியுள்ளார். திருமூலர் வாழ்ந்தது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அன்று சொன்னதை இன்று, அதனைப் பயன் பெறும் வகையில் நாம் சிந்திக்கவில்லையா? பண்டைக் காலத்தில் குருகுலக் கல்வி முறையிலே, குருவின் நடை, உடை, பாவனையிலிருந்தும் கல்வியைக் கற்றுக் கொண்டனர்.

குரு என்பவர் அகம் தூய்மையானவர். அகத்தினை உணர்ந்தவர். எனவே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதால், குருவினது பார்வை என்பது அருள் பார்வை. அகத்தில் உள்ளதைத்தான் முகமும், உடலும் எடுத்துக் காட்டும். மேலும் உடலுக்குள்ளே இருக்கும் தூய்மையான அகம், முகம், உடல் மூலம் பிரதிபலிக்கும். நாம் பார்ப்பது அவரது உடலை என்றாலும் அவர்கண்களும் எண்ணமும் நம்மீது அருளைப் பாய்ச்சுமல்லவா? அந்த புனித நிகழ்வால் சீடனின் தெளிவில்லாத அறிவு தெளிவு பெருகின்றது. எனவே குருவின் திருமேனி காண்டல் தெளிவைத் தரும் என்கிறார் திருமூலர்.

2) தெளிவு குருவின் திருநாமம் செப்பல்:

இது எவ்வாறு சாத்தியமாகின்றது. திரு நாமம் என்பது குருவினுடைய பெயர். குருவின் பெயர் அவரது உடலைக் குறிக்கின்றதா? அல்லது அவரது அறிவைக் குறிக்கின்றதா? குருவின் பெயர் அவரது அறிவாற்றலைக் குறிக்கின்றது. அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டுகின்றவர் குருவாக உள்ளதால் அவரது அறிவாற்றல் முழுமை அடைந்துவிடுகின்றது. அவரது அறிவின் முழுமையைச் சொல்வதென்றால் அது ஒன்றா, இரண்டா? ஆனால் அவ்வளவையும் ஒரு சொல்லால் சொல்வது எளிது. எனவே குருவின் பெயர் என்பது அவரது அறிவின் முழுமையெல்லாம் ஒன்றடக்கிய சுருக்கிய புனிதச் சொல்(abbreviated divine word). மேலும் குருவின் பெயர் மந்திரம் போன்றது. குருவின் பெயர்கள் நாமவளி போன்றது.

நாமவளி என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயர் வரிசையாகும்(string of names of a deity for chanting). அதுபோல் குருவினுடைய பூரணத்துவத்தை அறிந்து பயனடையும் சீடன், அவரை வெவ்வேறு பெயா்களால் அழைத்து இன்பம் காண்பான். இது குருவிற்காக செய்யப்படுவதில்லை இது, சீடன் பயன்பெற வேண்டி இயற்கையில் அமைந்துள்ள யுக்தி என்றே சொல்லலாம். ஆகவே குருவின் பெயரைச் சொல்லும் போது அவருடைய அறிவின் முழுமை அவன் மனக் கண்முன்னே வந்து நிற்கும். அந்நிலை உருவானால் மெல்ல, மெல்ல சீடனின் அறிவினில் ஞானத் தெளிவு ஏற்படத்தானே செய்யும். இதனைத்தான் திருமூலர் “தெளிவு குருவின் திருநாமம் செப்பல்” என்கிறார்.
அடுத்ததாக திருமூலர் கூறும் மூன்றாவது வழிக்குள் செல்வோம்.

அடுத்த விருந்தில்  தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருஉரு சிந்தித்தல் ஆகிய இரண்டைப்பற்றியும் அறிவோம். தொடரும்.