C247-புகழும் உயர்புகழும் – 7/?

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

FFC – C247

27-11-2016 – ஞாயிறு

இன்றைய விருந்தில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம், ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்துவது எவ்வாறு பேரின்பம் அடைவதை இழக்க வைக்கின்றது என்று அறிவோம். அதற்கு காந்த தத்துவத்தில் உள்ள இரண்டு பாடல்களையும் கவனிக்க வேண்டும்.

காந்த தத்துவம்

FFC-143-NEW- எல்லாப்புகழும் இறைக்கே

 

மெய் உணர்தல் என்கின்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் பொருளல்லாதவற்றை பொருள் எனக் கொள்ளுதல்(குறள் எண். 351) மயக்க உணர்வு என்கிறார். அம்மயக்க உணர்வால் சிறப்பு இருக்காது. துன்பமே உண்டாகும் என்கிறார்.
அதே போன்று மற்றொரு குறளில்(355) எப்பொருள் எத்தன்மையதாக, தோன்றினாலும், அப்பொருளின் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும் என்கிறார். இந்த அடிப்படையில்தான் பெரியபுராணத்தில் ‘ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ எனப்படுகின்றது. இது விரக்தியால் சொல்லப்படுவதன்று. ஓடு, செம்பொன் என்கின்ற இரண்டு பொருட்களும் தூல நிலையில் வேறு வேறாகத் தோன்றுகின்றது. ஆனால், சூக்குமத்தில் இரண்டும் அணுக்களால் ஆனதே. காரணநிலையில் இரண்டிலும் காந்தம் வெளிப்படுகின்றது. இந்த நிலையில் பொருள் கொள்ளும் போதுதான் எல்லாவற்றிலும் இறைவன் இருக்கின்றான் என்பது சரியாக இருக்கும்.
அறிவுடைமை என்கின்ற அதிகாரத்தில் 423 வது குறளில் எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், அப்படியே எடுத்துக்கொள்ளாமல், சுயமாய்ச் சிந்தித்து அப்பொருளின் உண்மையான பொருளைக் காண்பதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர். திருவள்ளுவர்(மானசீக குரு) வழி வந்த மகரிஷி அவர்கள் அதனை மேலும் நமக்குத் தெளிவாக்கியுள்ளார். பொருள், நிகழ்ச்சி என்றும், இயற்கையின் இரகசியம் எது என்றும் விளக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.

இயற்கையின் இரகசியம் எது என்று கூறும்போது மூன்றடுக்கு இயக்க நிலைகளான தூலம், சூக்குமம், காரணம் ஆகியவற்றில் சூக்குமமும், காரணமும் இயற்கையின் இரகசியங்கள். அதனை எந்த அளவிற்கு உணர்கின்றோமோ, அந்த அளவிற்கு வாழ்வில் பொறுப்புணர்ச்சியும் ஏற்படும் என்கிறார் மகரிஷி அவர்கள். இல்லாவிடில் திருவள்ளுவர் கூறியதுபோல் மயக்கத்திற்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

விஞ்ஞானத்தின் நோக்கம் என்பது இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றி அனுபவித்தலே. மெய்ஞ்ஞானத்தின் நோக்கம் அவ்வாறு இயற்கை வளங்களிலிருந்து மாற்றப்படும் வாழ்வின் வளங்கள் எல்லோருக்கும், எல்லாவற்றையும் போதுமான அளவில் கிடைக்கச் செய்து, எல்லோரும் இன்புற்று, உலகில், ‘அமைதி பூத்துக்குலுங்க’ வழி செய்வதே. அதற்கு மெய்ப்பொருள் பற்றிய விளக்கம் எல்லோருக்கும் தெளிவாகிட வேண்டும். மெய்ஞ்ஞானம் அடைவதற்கான பயிற்சிகள் மட்டுமே உலகில் அமைதியினை ஏற்படுத்திவிடாது.

720 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில். தனிநபர்கள் வெகு சிலர் மேற்கொள்ளும் மெய்ஞ்ஞானப் பயிற்சிகளால் மட்டுமே உலகில் அமைதி வந்துவிடாது. அப்பயிற்சிகளை செய்பவர்களுக்கு மட்டுமே அமைதி கிடைக்கும். மெய்ஞ்ஞானப் பயிற்சிகளை மக்கள் அனைவருமே மேற்கொள்வதில்லை. மேற்கொள்ளவும் இயலாது. ஆனால் உலகில் அமைதி நிலவிடவேண்டும். ஆகவே உலகில் அமைதி நிலவிட, மெய்ஞ்ஞானப் பயிற்சியின் நோக்கத்தையும் அதனால் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவையும் கருத்தில் கொண்டு சமுதாய வாழ்க்கை முறையையும் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு பலதிட்டங்களை தீட்டி ஒவ்வொன்றாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

மகரிஷி அவர்களின் நோக்கம் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதே. இதற்காக இரவு பகலாக சிந்தித்து மகரிஷி அவர்கள் உலக சமாதானத்திற்கான திட்டங்களைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இம்முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுதான் மகரிஷி அவர்கள் உலக சமாதானப் பாடல்களுக்கு தானே விரிவுரை அளிக்க விரும்பி முதலில் தமிழில் விளக்கவுரையும், உலக சமாதானம் என்பது உலகத்திற்கு பொதுவானது என்பதால், பிறகு இரண்டாம் பதிப்பில் விளக்கவுரையை மட்டும் உலகப் பொது மொழியான ஆங்கிலத்திலும் அளித்துள்ளார்.

காந்த தத்துவ நூலின் முகவுரையில் மகரிஷி அவா்கள் குறிப்பிடுவதை நினைவு கூர்வோம். “எந்த ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்தால் அதன் மூலம் இந்தப் பேரியக்க மண்டல இரகசியங்கள் அத்தனையும் அறிய முடியுமோ, அந்த அறிவை உங்களுக்கு இப்போது கொடுக்கப் போகிறேன்” என முற்காலத்தில் அறிவை உணர்ந்த பேரறிஞர் ஒருவா் தன்னுடைய சீடர்களுக்குக் கூறியுள்ளதாகக் கூறுகிறார். அதுதான் பிரணவம் என்கின்ற சொல்லால் விளக்கிய காந்த தத்துவம் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே காந்த தத்துவம் பற்றிய கவிகளுக்கு மகரிஷி அவர்களே விளக்கவுரை நல்கியுள்ளார்.
காந்த தத்துவப்பாடல்கள் பன்னிரண்டில் முதல் பாடலின் தலைப்பு ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்பது. அதற்கு அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் கவியின் தலைப்பு ‘மனத்தூய்மை’ என்பது. ஆகவே பாடலின் வரிசை என்ன உணர்த்துகின்றது?

      காந்த தத்துவத்தை அறிய அறிய பேரியக்க மண்டல இரகசியங்கள் அறியப்படுகின்றன. அதாவது இறையினுடைய பெருமைகளையும் புகழையும் அறிய முடிகின்றது. எனவே இது பேரின்பம் தானே! அடுத்ததாக, பேரின்ப பேற்றினை அடைய மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகளைக் கூறும் ‘மனத்தூய்மை‘ என்கின்ற தலைப்பையுடைய பாடல் அமைந்துள்ளது.

‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்கின்ற முதல் பாடலுக்கு மகரிஷி அவர்களே வழங்கியுள்ள விரிவான விளக்கவுரையை அவர் எழுதியுள்ள காந்த தத்துவம் என்கின்ற நூலினை படித்து விளங்கிக் கொள்வது அவசியமாகும். முதல் பாடல் எட்டு வரிகளைக் கொண்டதாக இருந்தாலும், மகரிஷி அவர்களே அவ்வரிகளுக்காகத் தந்துள்ள விரிவுரை 181 வரிகளில் அமைந்துள்ளதை கவனிக்க வேண்டும். எனவே தத்துவ நூல்களையும், தத்துவக் கவிகளையும் படிக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை (word to word) பொருள் கொள்ளக் கூடாது. வரிகளுக்கு வரி பொருள் கொள்ளக்கூடாது. வரிகளுக்கு இடையேயும் பொருள் கொள்ள வேண்டும் (We must read in-between lines)

அவ்விரிவுரையில் மகரிஷி அவர்கள், தான் இறையுணர்வு பெற்றதை படிப்படியாக விளக்குகிறார். நம்முடன் மகரிஷி அவர்கள் நேராக பேசுகின்ற உணர்வு ஏற்படுகின்றது. ஒருவேளை, வேறு யாராவது விளக்கவுரை தந்திருந்தால் மகரிஷி அவர்களின் சொந்த இறையுணர்வு அனுபவம் விடுபட்டே போயிருக்க வாய்ப்புண்டு.

மகரிஷி அவர்கள் அவரது விளக்க உரையில், எவ்வாறு காந்த தத்துவத்தில் அவர் தெளிவு பெற்றார் என்பதனைக் கூறுகிறார், ஆக்கினைத் தவமும், துரிய தவமும் ஆழ்ந்து செய்யச் செய்ய தனக்கு சக்திகள தவம், சிவகளத்தவம் இரண்டும் உள்ளுணர்வாக உருவானதைக் கூறுகிறார். அதனால்தானே அவரது மனவளக்கலை பயிற்சியில் சக்திகள தவமும், சிவகளத்தவமும் இடம் பெற முடிந்தன. இது இயற்கை/இறையின் ஏற்பாடன்றோ!

இவ்விரண்டு தவங்களினால் , பொருள், புகழ், இன்பம், செல்வாக்கு ஆகிய நிலைகளில் அலைச் சுழல்களாக இயங்கிக் கொண்டிருந்த மனம் இருப்பு நிலையான அமைதிக்கு வந்து நின்ற அனுபவம் பெற்றதாகக் கூறுகிறார், இந்த அனுபவத்தைக் கொண்டு நிலைக்கும், அலைக்கும் இடையே அவரது ஆராய்ச்சி தொடர்ந்ததாகக் கூறுகிறார், அதன் விளைவாக நிலையானது அறிவும் என்றும், அதுவே அலைநிலையில் மனமாக இயங்குகின்றது எனவும் விளக்கம் பெற்றார் என்கிறார், பிறகு காந்தம் உருவாவது பற்றியும். அந்த காந்த ஆற்றலின் தன்மாற்ற விளைவுகளே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மனம் என்கின்ற ஆறு உண்மைகளைத் தெரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.

இறையே தனது துண்டுபட்ட பகுதி நிலையில் (fractionated state) பிரபஞ்சத்தில் இயங்கும் எல்லாப் பொருட்களாகவும் இருப்பதால் இறையின் தன்மை அனைத்தும் ஒவ்வொன்றிலும் இருப்பதை உணர்ந்ததாகக் கூறுகிறார், இறையே எல்லாமாகவும் இருப்பதால் அணு முதல் அண்டங்கள் வரை நெறி தவறாமல் இயங்கி வருவதை உணர்ந்தார், இந்த உண்மையினை உணர்ந்து உணர்ந்து அதில் லயமாகும் போதெல்லாம் அந்த மனநிலையே தனக்கு உயர்ந்த தவமாக அமைந்தது என்கிறார், மனதின் அடித்தளமாக விளங்கும் இறைநிலையை உணர்ந்த அந்த விழிப்புநிலையை பேரானந்தம் என்கிறார்.

ஆகவே முதல் பாடலுக்கான விளக்கவுரையை காந்ததத்துவ நூலில் கட்டாயமாக வாசித்துப் பயன் பெறவும்.
அடுத்த அறிவிற்கு விருந்தில் மேலும் சிந்திப்போம்.