• Post

    ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 7/7

    வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

    ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 7/7

    FEAST FOR CONSCIOUSNESS – FFC – 92

    அறிவிற்கு விருந்து – அ.வி. – 92

      

    17-06-2015—புதன்

         கடந்த அறிவிற்கு விருந்துகளில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்திலுள்ள அறிவியல் காரணங்களைப் பார்த்தோம்.  ஆதிமனிதனிலிருந்து பல்லாயிரம் தலைமுறைகளாக கருமையத்தொடர்பால் ஆன்மாவில் ஏற்பட்டுள்ள பழக்கப்பதிவுகள் வலிமை  உடையதாக இருப்பதால், அவைகள் இப்பிறவியில் மட்டுமே பதிந்துள்ள விளக்கப்பதிவை எளிதாக வெற்றி கொள்கின்றன என்று பார்த்தோம். அப்பல்லாயிரம் பிறவிகளில் குறைந்தது மனிதனுக்கு தன்னையும் சேர்த்து முந்தைய ஏழு பிறவிகளில் அவனுடன் எத்தனை  பிறவிகள் தொடர்பு கொண்டுள்ளன என்பதனை அட்டவணையின் வாயிலாக இப்போது அறிந்து கொள்வோம்.

         ஒரு மனிதனுக்கு இப்பிறவியில் பழக்கப்பதிவு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதனை  அறிந்து கொள்ள கீழே உள்ள அட்டவணைத் தயாரிக்கப்பட்டுள்ளது.   மனிதனாகப் பிறந்த ஆன்மா, இறை உணர்வு பெறுகின்ற வரை, ஆதிமனிதனிலிருந்து பல லட்சம் தலைமுறைகள் கடக்க வேண்டியுள்ளது ஆன்மா.  பல லட்சம் தலைமுறைகள் கடந்து வந்தாலும், இந்த அட்டவணையில் ஏழு தலைமுறைகள் (பிறவி) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

        காரணம்

    ஒரு மனிதனின் ஆன்மா, இதுவரை அதன் முந்தைய ஆறு(6+1=7) தலைமுறைகளில் செய்யாத ஒரு செயலை,

    புதிதாக இந்தப் பிறவியில் செய்து, அதனால்  ஏற்பட்டுள்ள கருமையப்பதிவு,

    ஏழு பிறவிகளுக்கும் விளைவைக் கொடுக்கும் வலிமை உடையது என்பதால்

    அவனுக்கும், அவனுக்குப் பிறகு வருகின்ற ஆறு தலைமுறைகளுக்கும் விளைவைக் கொடுக்கும் எனலாம்.

        ஒரு வேளை அந்த ஆன்மா அடுத்த  ஆறுபிறவிகளில் அச்செயலை செய்யாமல் இருந்தால் அவனுக்கு பிறகு வருகின்ற  ஏழாவது பிறவியில் அவன்  செய்துள்ள அந்த செயல்பதிவு ஊக்குவிடப்படாமல் (not activated) இருந்தால், அக்கருமையப் பதிவு செயலிழந்து விடும் என ஆன்மீகத்தில் கூறப்படுகின்றது.  ஆகவே ஏழு தலைமுறைகள் மட்டும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  கருமையப்பதிவு மீண்டும் அடுத்த ஆறு பிறவிகளில் ஊக்குவிடப்படாமல் இருந்தால் செயலிழந்து விடும் என்பதனை அவ்வையார் மற்றும் திருவள்ளுவர் ஆகிய அறிஞர்களின்  பாடல்களிலிருந்து அறிய முடிகின்றது.  அப்பாடல்களாவன–

             நல்வழி – பாடல் எண் 25

    “ஆன முதலில் அதிகம் செலவானால்

        மானம் அழிந்து மதிகெட்டுப் போன திசை

        எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய்

        நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”               …..அவ்வையார்.

     

       அதிகாரம் 13- அடக்க உடைமை-குறள்- 126     

     “ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்,

        எழுமையும் ஏமாப்பு உடைத்து,”                குறள் எண். 126

      மேலே குறிப்பிடப்பட்டுள்ள அவ்வையாரின் பாடலில், ஒரு தீயசெயலின் விளைவு ஏழ்பிறப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்.

         அதே போல் மேலே குறிப்பிட்டுள்ள குறளில்  எழுமையும்’ என்பது ஏழு பிறப்புகள் என எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகரால்.

         ஆகவே ஒரு மனிதன் ஏற்படுத்தும் ஒரு பதிவு, அவனையும் சேர்த்து ஏழு பிறவிகளுக்கு விளைவைக் கொடுக்க வல்லது என அறிகிறோம்.  தொடக்கத்திலிருந்து, அதாவது ஆதிமனிதனிலிருந்து இன்று வரை எத்தனை தலைமுறைகள் ஒரு மனிதனின் ஆன்மா பிறவிச்சுழற்சிப் பயணம் செய்துள்ளது என அறிவது இயலாது.

         இருந்தாலும் முடிந்தவரை, கணக்கெடுக்கும் வரையிலாவது எத்தனை தலைமுறைகள் என கணக்கெடுக்கலாமே என எண்ணி ஏழு தலைமுறைகளுக்கான விவர ஓட்டப்படம்(flowchart)  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

     7-chart_new

         பல லட்சம் தலைமுறைகளில், ஏழு தலைமுறைகளில் மட்டும் அவனுடன் கருமையத்துடன்   தொடர்புள்ள குறைந்தபட்ச ஆன்மாக்களின்  எண்ணிக்கை மொத்தம் 126(127-1=126) அதாவது  இன்று பிறக்கின்ற குழந்தை தனது வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப இருப்பாக(opening balance) கொண்டு வந்தது தனது பூர்வீகசொத்தான(சொத்து மூட்டையாக) 126 சஞ்சிதகர்மாக்களை (சஞ்சி என்றால்  பை அல்லது மூட்டை என்று பொருள்)  அதாவது 126 வினைமூட்டைகளை கொண்டுவந்துள்ளது.  அதனை வைத்து வாழ்க்கை எனும் வியாபாரத்தை ஆரம்பித்து அதில் லாபம் என்கின்ற இன்பத்தையும், நஷ்டம் என்கின்ற துன்பத்தையும் அனுபவிக்கின்றது.

          பொருள் வியாபாரம் என்றால் அதில் லாபமும் இருக்கும். நஷ்டமும் இருக்கும். ஆனால் ஒரு பொருள் வியாபாரம் லாபத்துடன் நடந்திட வேண்டும் என்றே வியாபாரி விரும்புவார். அதாவது  லாபத்தையும்(plus Quantity) நஷ்டத்தையும்(minus Quantity) கூட்டினால் வருவது (plus Quantity) ஆக இருக்க வேண்டும். ஆனால் இந்த வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் என்ன என்று கேட்டால், ஒவ்வொருவரின் பதில் என்னவாக இருக்கும்  விழிப்பதுதான் பதிலாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டுமா என்றும் எண்ணம் எழலாம்.

         பொருள் வியாபாரத்தில் plus Quantity ஐயும் minus Quantity கூட்டுவதுபோல் கூட்டி லாபத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?  இன்பத்தையும், துன்பத்தையும் கூட்டி வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பது?  லாபத்தினை கண்டுபிடிக்க முடியாது என்றால் வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டுருக்கக் கூடாது.  வாழ்க்கையை வியாபாரத்துடன் ஒப்பிட்டது சரிதான்.  வாழ்க்கை எனும் வியாபரத்தில் வரும் இன்ப-லாபத்தினையும், துன்ப-நஷ்டத்தையும் அனுபவிப்பது எது?  மனம்.  மனது நான்கு நிலைகளில் இயங்க வல்லது.  அதாவது இன்பம், துன்பம், அமைதி பேரின்பம் ஆகிய நான்காகும்.  ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம், அதிக லாபம் என்பது முறையே அமைதி, பேரின்பமாகும். ஆகவே வாழ்க்கை எனும் வியாபாரத்தில் லாபம் மற்றும் அதிக லாபத்தினை ஈட்ட வழிகளை சொல்வதுதான் மனவளக்கலை எனும் அருமருந்தாகும்.

         7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள்-அட்டவணை எதற்காக?  கருவில் திரு உடையவர்களுக்காக அல்ல இந்த அட்டவணை.  கருவில் திருவை அடையப்போகின்ற ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு இந்த அட்டவணைஉதவும் என்பதற்காக தரப்பட்டுள்ளது.

          ஏன் ஆன்மீக பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்?  விவேகானந்தர் கூறுவதுபோல்,

              விலங்கினப்பண்பு, மனிதப்பண்பு, தெய்வீகப்பண்பு ஆகிய கலவைகளால் ஆன மனிதன்,  தெய்வீக பண்பிற்கு உயர்வதுதான்  ஒழுக்கம் என்பதால், ஒழுக்க வாழ்வு வாழ்வதில் உள்ள போராட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதாலும்,

                  மற்றும் ‘வினைப்பதிவால் உடல் எடுத்து மனிதனாக வந்துள்ளதால், வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே ஆக வேண்டும்’ –  (புண்ணியம்=ஒழுக்கம் என்கின்ற சமன்பாட்டின் படி ஒழுக்கமுடன் வாழ்ந்தே ஆக வேண்டும்) என்று மகரிஷி அவர்கள் பகர்ந்துள்ளதாலும், ஒழுக்கப்பாதைக்கு திரும்புவதில் வினைப்பதிவால் ஏற்படும் சிரமங்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவதில் முழுநம்பிக்கையும் தொடர் ஊக்கமும், தளராவிடாமுயற்சியும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த அட்டவணை உதவியாக இருக்கும் என்பதால்,  விவர ஓட்டப்படம்(flowchart)   தரப்பட்டுள்ளது. விவர ஓட்டப்படத்தில்  உள்ள தகவல்களை(data) அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அன்பர்களும் தாங்களாகவே சிந்தித்து  இந்த கணித ஆராய்ச்சியின் தகவல்களை சரிபார்த்து விட்டு முடிவினை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்

     7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள்.  எவ்வாறு?

         முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மா இன்றைய தலைமுறையின் சஞ்சித கா்மாவாகின்றது.

        முந்தைய தலைமுறையின் சஞ்சித கர்மா அவர்களின் முந்தைய தலைமுறையின் சஞ்சித, பிராரப்த, ஆகாம்ய கா்மாவைப் பொறுத்துள்ளது

        எனவே 7 தலைமுறைகளில் 127 ஆன்மாக்கள் என்பது முதல் ஆன்மாவின்  முந்தைய தலைமுறைகளான தந்தை-தாய்,  பாட்டன்-பாட்டி, பூட்டன்-பூட்டி,ஓட்டன்-ஓட்டி, சேயோன்-சேயோள், பரன்-பரை ஆகியவர்களின்  வினை மூட்டைகளை  கணக்கில் கொண்டு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகும்.

        ஆகவே  இப்போது வாழ்கின்ற ஆன்மா குறைந்த பட்சமாக  முந்தைய ஆறு  தலைமுறைகளின் 126  வினை மூட்டைகளின் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது,

        இந்த  126  வினை மூட்டைகளின் தாக்கம் இந்த ஆன்மாவிற்கு இப்பிறவியில் விளைவுகளாக வருகின்றது,  இது மட்டுமல்ல.

        முந்தைய ஏழு தலைமுறைகளுக்கு  முன்னரும், பல்லாயிரக் கணக்கில் தலைமுறைகள் உள்ளதை மறந்து விடக்கூடாது.  ஒரு ஆன்மாவிற்கு ஆதிமனிதனிலிருந்தே கருத்தொடராக தொடர்பு உள்ளது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

          126 வினை மூட்டைகளில்  விலங்கினப்பதிவும், அதனை ஒட்டிய பிறர்வளம் பறித்தலும், அது ஒழுங்கின்மைக்கு காரணமாக இருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

        ஒரு ஆன்மா, இதுவரை முந்தைய ஏழு பிறவிகளில் செய்யாத தவற்றை இந்தப் பிறவியில் செய்வதாக வைத்துக் கொள்வோம்.   ஆனால் இப்பிறவியில் நல்லோர் இணக்கத்தால் அந்த தவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என முடிவு எடுத்தால் அதனை திருத்திக் கொள்வது எளிது.  ஏனெனில் அந்த தவறான செயலின் பதிவு ஏழு தலைமுறைப்பதிவுகளின் அழுத்தத்தைவிட வலிவு குறைந்தது.

       ஒருவேளை இந்தப்பிறவியிலேயே முதன் முதலாக செய்த தவறான செயல்கள் கூட தன் வாழ்நாளில் அதிக நாள்(say 10 years)  செய்து பழகியிருந்தால், நல்லோர் இணக்கம் ஏற்பட்டாலும்  உடனே திருத்தம் பெறமுடியாமல் பல ஆண்டுகள் முயற்சி செய்துதான் வெற்றி பெற வேண்டும். ஆகவே நல்லோர் இணக்கத்தை தன் வாழ்நாளில் இளம் பருவத்திலேயே பெற்றிட வேண்டும்.  அதுதான் சிறுவர் பருவம்.  குழந்தைகளுக்கு பெற்றோர்களைவிட, உடனே தரிசிக்கக் கூடிய நல்லோர்கள் யார் உள்ளனர்?  வேறு யாருமில்லை பெற்றோர்களேதான்! வருங்காலத்தில் நல்லோர் இணக்கத்திற்கு இலக்கணமாக  பெற்றோர்களை உருவாக்க வல்லது அருங்கலையாகிய மனவளக்கலை என்னும் வாழ்க்கைக் கலை.

          “Fear is the greatest sin” என்பார்   அருட்தந்தையவர்கள். ஏனெனில் அறிவிற்கு துவைதநிலை(இரண்டு நிலை) இருக்கும்வரையில் பயம் இருக்கத்தானே செய்யும்.  எல்லாம் ஒன்றே, அந்த ஒன்றில் நானும் ஒருவன் என்கின்ற அத்வைத நிலை உருவாகிவிட்டால் பயம் ஏது? புலிக்கும் பயப்படத் தேவையில்லை.  பாம்பிற்கும் பயப்படத் தேவையில்லை.  Anxiety மற்றும் நிலையற்ற உலகியல் வாழ்க்கையில் பற்று (bondage) இருந்தால்தானே ‘என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ’ என்கின்ற பயம் இருக்கும்.

        இருந்தாலும் மனிதனுக்கு அச்சம் வேண்டும். எதற்கு பயம் தேவை?  ஆன்மா தீய செயல்களை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும். இந்த அஞ்சுதல் கூட வாழ்நாள் முழுவதும் .இராது.  இயல்பான ஒழுக்க வாழ்விற்கு switch over ஏற்படும் வரை, பாவம் செய்வதற்கு அஞ்சுதல் தேவையிருக்கும். ஆகவே ஆன்மா அயராவிழிப்புடன் இருக்க வேண்டும் ஒழுக்க வாழ்வு இயல்பான பிறகு  அச்சம் என்பதற்கே இடமில்லை..   ‘மனிதன் வாழ்கின்றான்’ என்பதனைவிட ‘வினை வாழ்கின்றது’ என்கின்ற ஆதங்கக் கூற்று சரிதோனே?!

        முறையான தவம் மற்றும் அறம் இறைஉணர்வு பெறுவதில் முடியும்.

        ஒழுக்க வாழ்வின் உச்சகட்டநிலை, இறைஉணர்வை பெறச்செய்யும்.

        எவ்வாறு?

        தவமின்றி ஒழுக்கமில்லை. ஏனெனில் தவத்தாலான்றி மனஅலைச்சுழலை நுண்ணிய நிலைக்கு கொண்டு வரமுடியாது.  மனஅலை நுண்ணிய நிலைக்கு வரவில்லையெனில், மனம் உணர்ச்சிவயத்தில்(14 – 40 cps பீட்டாஅலை) இயங்கும்.  உணர்ச்சிவயத்தில் உள்ள மனிதனிடம் ஒழுங்கு எவ்வாறு நிலைக்கும்?

        ஒழுக்கமின்றி அறமும்  இல்லை.  ஒழுக்கமின்மையில் எவ்வாறு அறம் இருக்க முடியும்?  அதனால்தான் அறம் என்பதில் ஒழுக்கத்தை முதல் நிலையில் வைத்து, இரண்டாவதாக கடமையையும், மூன்றாவதாக ஈகையையும் வைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.

       கடமையின்றி ஒழுக்கம் எவ்வாறு சிறக்க  முடியும்?

       ஈகையில்தான் வேதாத்திரிய ஒழுக்க வரையறை(Simple Definition for Discipline as per Vethathriam) செயலுக்கு வரும்.  நிரூபணமாகும்.

       அன்பிலும் கருணையிலும் தான்  ஒழுக்கம் சிறப்பு பெறமுடியும்.

       ஒழுக்க வாழ்வே அறவாழ்வாகும். 

       தவத்தின் முடிவில் இரண்டொழுக்க பண்பாட்டுச் சங்கல்பத்தை இயற்றச் சொல்கிறார்  மகரிஷி அவா்கள்.   எதற்காக? ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் அன்பும் கருணையும் மலர வேண்டும் என்பதற்காகவே.  இயற்கை இந்த சூரிய குடும்பத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,  இப்பூமியில் உயிர்கள் வாழ்வதற்கான சீதோஷ்ண நிலை பொருத்தமாக இருக்கின்றது என்பதால்தான்.  ஆனால் மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் பிறப்பதற்கும்.  வாழ்வதற்கும் இப்பூமியின் சீதோஷ்ண நிலை பொருத்தமாக உள்ளது.  ஆனால் மனிதன் என்கின்ற உயிரினம் பிறப்பதற்கு மட்டுமே சீதோஷ்ணநிலை பொருத்தமாக இருக்கின்றது என்றுதான் மனிதனே சொல்ல வேண்டியுள்ளது.  ஏன்?  மனிதனைத்தவிர மற்ற உயிரினங்கள் பிறப்பதற்கும்  வாழ்வதற்கும் இப்பூமியின் சீதோஷ்ணநிலை பொருத்தமாக இருந்தது, ஆனால் மனிதன் பிறப்பதற்கு மட்டுமே இப்பூமியின் சீதோஷ்ண நிலை பொருத்தமாக இருக்கின்றது என்றால் என்ன பொருள்?  பிறப்பின் தொடர் நிகழ்ச்சியான வாழ்க்கைக்கு  ஏற்ற சீதோஷ்ணம் (living climate) நிலவவில்லை அன்றிலிருந்து இன்று வரை?  அந்த சீதோஷ்ண சூழல்தான் அன்பும் கருணையும். இது யாருடைய தவறு?  இயற்கையின் தவறா?  இயற்கையில் தவறு இருக்க முடியுமா? ஒருகாலும் இருக்க முடியாது?  இயற்கையில் குறை இருந்தால் யாரிடம் சென்று முறையிடுவது?  அப்படியே இயற்கையில் குறையுடையதாக குறையுடைய மனிதர்கள் யாரோ ஒரு சிலர், ஒருவேளை கருதினாலும், அது இயற்கைக்கு ஒத்த முறையில், இயற்கையின் இசைவிற்கு ஏற்ப இயற்கையின் இனிமை கெடாமல் வாழத் தெரியாமையையே காட்டுவதாகக் கொள்ள வேண்டும்.

    இப்பூமியில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரையறையின்படி அமைதி நிரந்தரமாக  நிலவி, அதனை, மனிதன் ஏற்படுத்திக் கொண்ட, சொத்துக்களில், பூர்வீகச் சொத்தை ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க உரிமை இருப்பதுபோல், அவ்வமைதியினை அனுபவிப்பதற்கான சீதோஷ்ண சூழல் நிலவவில்லை. அதனை மனிதன் தான் வேதாத்திரிய உலகசமாதான திட்டங்களின் வாயிலாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  வாழ்க உலக அமைதி.  வரட்டும் விரைவில் உலக அமைதி.

        ஒழுக்கம் இல்லாதவனிடம் அன்பும், கருணையும் இல்லை.  அப்படியிருக்க பிறரிடமிருந்தும் அன்பும் கருணையையும் எதிர்பார்க்க முடியாது.  ஒழுக்கமில்லாதவனின் செயலுக்கு வருகின்ற விளைவும், ஒழுக்கமில்லாத மற்றொருவரின் செயலிருந்துதானே வரும். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பதால் மனித மனம் ஒழுக்கத்தில் ஒழுக வேண்டும்.

        ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்று அறிஞர்களே சொல்வதால், போராடி ஒழுக்கத்திற்கு வரவில்லையானால், ஒழுக்கமில்லா வாழ்விற்கான கடும்விளைவுகளை எதிர்கொள்ள போராட வேண்டியிருக்குமே.  ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் நம்மனதுடன் தான் போராட வேண்டும்.  இது எளிது, சுலபம். தன்னைத்திருத்திக் கொள்வதில் அக்கறையில்லாமல் வாழ்வது எவ்வாறு  சரியாக இருக்கும்? ஒழுக்கமின்மையால் வரும் விளைவுகளை போராடுவது என்பது ஒழுக்கத்திற்காக மனதுடன் போராடுவதைவிட கடினமாக இருக்கும்.  ஒழுக்க வாழ்வு எதற்காக? இறைஉணர்வு பெறுவதற்கே! ஒழுக்க வாழ்விற்கு போராட வேண்டும் என்றிருந்தாலும்,  இப்பிறவியிலேயே ஒழுக்க வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என பகவான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவுகூர்வோம்.

         வினைப்பதிவுகள் தூய்மை

    “பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப்

    பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்

    நலமடைந்து மனிதனாகி தெய்வமாக உயரலாம்

    நல்வாய்ப்பு ஆற்றலிவை கருணையோடு இறைநிலை

    நில உலகில் மனிதருக்கு அளித்துள்ளது இயல் பென

    நெடுங்காலத் தொடர்புடைய கருமையத் தூய்மையால்

    பலனடைய அகத்தாய்வும் அகத்தவமும் இறையுணர்

    பாதையிலே விழிப்புடனே வாழ்வது தான் அவ்வழி”  …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     ஒழுக்கமில்லாத போது  தீயவினைகள் செய்யப்பட்டன.  ஒழக்கத்திற்கு வரும் போது நல்வினைகள் செய்யப்படுகின்றன. எனவே வினைத்தூய்மை என்பதே  ஒழக்கத்திற்கு வருவதுதான்.  பல்லாயிரம் பிறவிகளாக, ஒழுக்கமின்மையால் செய்துள்ள  பழச்செயல்பதிவுகளை ஒழுக்கத்திற்கு வந்து ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம் என உத்திரவாதம் அளிக்கிறார்.  மாற்றி நலமடையலாம் என்கிறார். நலமடையலாம் என்பது, அதுவரை விலங்கினப்பதிவில் செயல்பட்டதெல்லாம் அன்பும் கருணையுமாக மாறி மனிதனாகலாம் என்கிறார்.  மனிதனாகி தெய்வமாக உயரலாம் என்கிறார். தெய்வமாக உயர்வதற்காக ஒழுக்கம் வேண்டாமா?  மனிதன் தெய்வமாக வேண்டாமா? சின்னம்மாள்-வரதப்பா் என்கின்ற அருட் தம்பதியினருக்கு ஏழாவதாக பிறந்த குழந்தை தெய்வமாகாதிருந்தால் திருவேதாத்திரியம் என்கின்ற அருமருந்து உலகிற்கு கிடைத்திருக்குமா?  அப்படி திருவேதாத்திரியம் என்கின்ற அருள் மருந்து கிடைக்காதிருந்தால் www.prosperspirtually.com என்கின்ற இணையதளம் உருவாகியே இருக்காது. இப்படியொரு இணைய தளம் உருவாகவில்லை என்றால் இந்த இணையதள சத்சங்கம் ஏது?  வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க www.prosperspirtually.com.  வளர்க www.prosperspirtually.comவாழ்க www.prosperspirtually.comஇணையதள சத்சங்கம் மற்றும்  அதன் உறுப்பினர்கள் வளமுடன்.

        “பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன்” என்றுரைத்த மகரிஷி அவர்களே,

    நெடுங்காலமாக ஆதிமனிதனிலிருந்து கருமையம்  தொடர்புடையதாக இருந்தாலும்,  எப்படி போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பது,

    அக்கருமையத்தை அகத்தவத்தாலும், அகத்தாய்வினாலும், தூய்மை செய்து,

    இறைஉணர் பாதையிலே விழிப்புடனே ஒழுக்கவழி வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்  அருட்தந்தை அவர்கள்.  உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது  எனும் அருட்பேராற்றலின் அன்புக்குரல் என்றும் நம்முள் ஒலிக்கட்டும்.

    Swamiji blessing

    “நல்ல பயனுள்ள அறச்செயல்களும், அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம் இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் அனுபவத்தைக்கண்டு இன்புறுவீர்களாக” என்கிறார் மகரிஷி அவர்கள்.

         இத்துடன் ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன் என்கின்ற சிந்தனையை முடித்துக் கொள்வோம்.  ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் முடிவிற்கு வரட்டும். ஒழுக்கத்தின் மேன்மையில் மேன்மக்களாக வாழ்வோமாக. வாழ்க வளமுடன். வாழ்க திருவேதாத்திரியம்.  வளர்க திருவேதாத்திரியம். உலகெங்கும் மூலை முடுக்குளிலும் பரவட்டும் திருவேதாத்திரியம். மீண்டும் அடுத்த விருந்திற்காக 21-06-2015 ஞாயிறன்று சந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

           மற்ற பாடங்கள் உள்ளதுபோல், ஒழுக்கவியல் பாடம் பள்ளியில்  விரைவில் கட்டயாமாக்கப்பட வேண்டும்.  எனவே எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்புவோம். நிரப்புவோம். வாழ்க ஒழுக்கவியல். வளர்க ஒழுக்கவியல்.

     Don’t delay Enlightenment

     வாழ்க அறிவுச் செல்வம்                                                 வளர்க அறிவுச் செல்வம்.

     

  • Post

    FFC – 156-வினா விடை 8

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    வினா விடை 8

    FFC – 156

    20-01-2016–புதன்

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 120
    (24-10-2015—சனி)

    முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்.                   …ஸ்பானியப் பழமொழி.

    பயிற்சி—
    1) இப்பழமொழி எச்சரிப்பது என்ன?
    2) நம்மை ஏற்கனவே இது பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் எச்சரித்திருப்பது என்ன?
    3) எனவே குழந்தை பெறுவதிலும், வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கொள்ள வேண்டிய கவனம் என்ன?

    விடை:-

    வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பே ஆகும். அனுபவங்கள் என்பது மேற்கொள்ளப்படும் பழக்க வழக்கங்களாகும். இந்த ஸ்பானியப் பழமொழியின் வாயிலாக வாழ்க்கையில் மனிதன் கொண்டுள்ள பழக்கங்களின் தன்மையைப் பற்றி அறிய இருக்கிறோம். பழக்கங்கள் பற்றி … ஸ்பானியப் பழமொழி இரண்டு உவமானங்களைக் கொண்டு புரியவைக்க விரும்புவது என்ன? சாதாரணமாக தெரியாத ஒன்று, தெரிந்த ஒன்றுடன் உவமானம் காட்டி விளக்கப்படுகின்றது. ஆனால் இரண்டு உவமானங்கள் காட்டப்பட்டுள்ளன இங்கே. எனவே இப்பழமொழி சொல்கின்ற அறிவுரை மிக முக்கியமானது எனத் தெரிகின்றது. ஏனெனில் பழக்கங்களின் இரு நிலைகளை அறிவுறுத்தி எச்சரிக்க வேண்டியிருப்பதால், வலிமையற்ற சிலந்தி வலையையும், வலிமையில் அதற்கு நேர் எதிரான தேர்வடத்தையும் உவமானங்களாக சொல்ல வேண்டியுள்ளது.
    முதலில் பழக்கம்(Habit) என்பது என்ன என்று பார்ப்போம். பொதுவாக எந்த ஒன்றிலும் திறமை பெற அதனை முதல் முறையிலேயே செய்து அதில் திறமை பெறமுடியாது. பலமுறை செய்துதான் திறமை அடையமுடியும். ஆர்வத்திற்கேற்ப தொடர்ந்து பலமுறை செய்யப்படுவதும் உண்டு. இங்கேதான் பழக்கம் உள்ளே நுழைகின்றது. இந்த பழக்கத்தின் இருநிலைகளை பற்றி ஸ்பானியப் பழமொழி எச்சரிக்கின்றது.
    ‘எந்த ஒன்று’ நல்லதாக இருந்தால் பரவாயில்லை. அது தீயதாக இருந்தால் எச்சரிக்கை வேண்டும். அதனை ஆரம்பிக்கவே கூடாது. நல்லது, தீயது என்பது அந்த ஒன்றை ஆரம்பிக்கும் முன் எவ்வாறு முடிவு செய்வது? அதுதான் ஆறாம் அறிவின் சிறப்பாயிற்றே!

    1) ஒன்று, ‘மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்’ என்பதால் மூத்தோர்கள் ஏற்கனவே சொல்லியுள்ளதை மதித்து, கவனத்தில் கொண்டு நடப்பதனை வழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.
    2) திருவள்ளுவர் கூறுவதுபோல் பெரியோரை துணை கொள்ளல் வேண்டும்.
    3) புத்தர் கூறுவதுபோல் எப்படி பிணத்தை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல் கடல் தள்ளி கரையோரம் தள்ளிவிடுகின்றதோ அதுபோல் தீயநட்பை தள்ளிவிடவேண்டும்.
    4) ஆதிசங்கரர் பஜகோவிந்த்தில் அறிவுறுத்துவதுபோல் சத்சங்கத்தில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
    5) தினந்தோறும் அறிஞர்களின் அறவுரைகளை தாங்கிய நன்னூல்களை வாசிக்க வேண்டும்.
    6) விழிப்புணர்வை வளர்த்து அதனை அயராத விழிப்புணர்வாக்கிக் கொள்ள வேண்டும்.
    7) அறிவினரோடு சேர்வதில் உள்ள இன்பத்தை அனுபவிப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
    8) அறிவினர்களை கனவிலும், நனவிலும் கண்டு இன்பம் காணப் பழகிக் கொள்ள வேண்டும்.
    9) நேரிடையாக அறிவினரின் தொடர்பு கிடைக்கவில்லை எனில் அவர்கள் அருளிய நூல்கள் வாயிலாக அவர்களுடன் தொடர்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இராமலிங்க வள்ளலாரைத் தவிர மற்ற அருளாளர்களான தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் ஆகியவா்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் யுக்தி நாம் அறியாததா என்ன?
    ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்கின்றது தமிழ்ப் பழமொழி ஒன்று. ஏனெனில் பழக்கம் ஆரம்பத்தில் சிலந்தி வலைபோல் வலியமையற்று இருக்கும். அதனால் பழக்கம் தீயபழக்கமாக இருந்தால் அதனை அழித்துவிடுவது எளிது. ஆனால் பழக்கங்கள் நாளாக நாளாக வழக்கமாகி அது வலிமையுற்று தேர்வடமாக ஆகிவிடும் என்கிறது ஸ்பானியப் பழமொழி. சிலந்தி வலையை ஒரு சுண்டு விரலாலேயே அழித்துவிடலாம் ஆனால் தேரை இழுக்கும் கயிறு(தேர்வடம்) எவ்வளவு வலிமையாக இருக்கும். அதை இரண்டு கைகளால் அறுக்க முடியுமா?

    பழக்கம் என்பது என்ன? எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது கருமையத்தில் பதிகின்றது. இன்று ஒரு செயல் முதல் முறையாக செய்யப்படுகின்றது. அது இயற்கையின்/இறையின் அருமையான, மிக, மிகச்சிறந்த பதிவுசெய்யும் ஏற்பாடான(Excellent Recording System) கருமையத்தில் பதிவு செய்யப்படுகின்றது. நாளை அச்செயல் மீண்டும் இரண்டாவது முறையாக செய்யப்படுகின்றது. இதற்கிடையில் அச்செயலின் பதிவு, செயல் செய்யாத போதும் எண்ணங்களாக வந்து அச்செயலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோதும், அச்செயலை செய்ய ஆர்வத்தை தூண்டுகின்றது.
    இவ்வாறு அந்த ஒரு செயல் பலநாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள், பல வருடங்கள் ரசித்து, ருசித்து, ஈடுபாட்டுடன் செய்யப்படுகின்றது என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் அச்செயல் பதிவு, பதிவு மேல் பதிந்து, பதிந்து அழுத்தம் பெறுகின்றது. அந்த ஒன்று நல்ல செயலாக இருந்தால் வரவேற்கத்தக்கது, ஆனால்

    அந்த ஒன்று தீயதாக இருந்து, பிறகு நமக்கே தெரிந்து,
    அல்லது ‘அது தீயது’, என பெரியோர்களின் இணைப்பு ஏற்பட்டு அவர்கள் வழியாக
    விளக்கம் கிடைக்கப்பெற,
    இறை அருளால் ஏற்பாடு செய்யப்பட்டாலும்,
    அப்பழக்கத்திலிருந்து விடுபட போராட வேண்டியிருக்கும்.

    இருந்தாலும் அத்தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு விளக்க வழியே வாழ்ந்து வெற்றிகண்டவர்களும் உண்டு. ஆனால் கடுமையாக தொடர் விடாமுயற்சி செய்ய வேண்டும் அதற்கு நாம் இந்த சத்சங்கத்தில்(Click here) ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’– என்கின்ற தலைப்பில் 27-05-2015—புதன்று சிந்திக்க ஆரம்பித்து 17-06-2015—புதனன்று (FFC – 86 — FFC-92) சிந்தனையை விரிவாக முடித்திருக்கிறோம். அதில் கருப்பொருளாக அறிஞர் ரூஸோ அவர்களின் “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்கின்ற அமுத மொழியை எடுத்துக் கொண்டோம். அது பெட்டகத்தில்தான் உள்ளது. அதனை மீண்டும் பெட்டகத்திலிருந்து எடுத்து வாசித்துப்பார்க்கலாம்.

    நம்முடைய குருதேவர் அவர்கள் “பழக்கத்தி்ற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார். இவ்வாறு மனிதனின் எதார்த்த நிலையைப்பற்றி கூறினாலும் பல்லாயிரம் பிறவிகளில் பழகிக் கொண்ட பழிச்செயல்பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே கருமையத்தூய்மையால் செயலிழக்கச் செய்யலாம் எனவும் உறுதி அளிக்கின்றார். அதற்காக, .இயற்கை/இறை கருணையோடு வடிவமைத்துக் கொடுத்ததே இறையுணர் பாதையிலே விழிப்புடனே வாழ்வதற்கான அகத்தவம், அகத்தாய்வு ஆகியவற்றைக் கொண்ட தெய்வீகப்பயிற்சியாகிய மனவளக்கலை என்கிறார்.

    அடுத்த வினாவான ‘எனவே குழந்தை பெறுவதிலும், வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கொள்ள வேண்டிய கவனம் என்ன? என்பதற்கு வருவோம்.

    ஏற்கனவே சத்சங்கத்தில் (Click here) அமுத மொழிகள் 86 இல் இதுபற்றி 27-06-2015 அன்று சிந்தித்திருக்கிறோம். அதனை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். அதில் இரண்டு அறிஞர்களின் அமுத மொழிகளை எடுத்துக்கொண்டோம்.

    “நல்ல குழந்தைகளாக உருவாக்கப் பெற்றோர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.
    பெற்றோர்களின் வாழ்க்கையானது குழந்தைகளின் பாடப்புத்தகமாக அமைகிறது.
    ……. ஆர்னால்ட் பென்னட்.

    “பெற்றோர்கள் குழந்தைகளின் நிரந்தரமான ஆசிரியர்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது.“
    ……எம் கோர்க்கி.
    அதில் பயிற்சிக்காக கேட்கப்பட்ட கேள்விகளாவன.
    பயிற்சி— 1) இவ்விரண்டு அறிஞர்கள் ஆதங்கப்படும் பெற்றோர்களுக்கு உதவக்கூடியக் கலை எது?
    2) எப்போது அக்கலையை பயில ஆரம்பிக்க வேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்?
    3) குழந்தைகளின் முதல் ஆசிரியர் யார்?

    ஆகவே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு முன், பத்து வருடங்களாக பண்பேற்றத்தை கொடுக்கக் கூடிய மனவளக்கலை பயிற்சியினை பயின்று செயல்படுத்திக் கொண்டிருப்பது விரும்பத்தக்கது. மற்றும் அதுவே ஞானபரம்பரை உருவாவதை ஏற்படுத்தும். இது குழந்தை பெறுவதற்கு முன் செய்ய வேண்டியது. பெற்றோர்களே முதல் ஆசிரியர் என்பதால் பெற்றோர்கள் ஆவதற்கு முன்னரே வாழ்வியல் கற்று, பின்பற்றுகின்ற மனவளக்கலைஞர்கள்–பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்துவர். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்.

    அறிவிப்பு—

     வாழ்க வளமுடன்.

    23-01-2016 அன்று தைப்பூசத்திருநாள்.   வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்தாக ‘வள்ளலார் அவர்கள் கடை விரித்தது விரித்ததுதான்’ என்கின்ற தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.

    மேலும், அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-01-2016—புதன்)  வள்ளலார் அவர்களிடம் அருள் வேண்டி வணங்கி மடல் வரைவோம்.

    வாழ்க வளமுடன்.

  • Post

    FFC – 146-வினைப்பதிவின் முன் இருப்பு

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    வினைப்பதிவின் முன் இருப்பு

    FFC – 146

    20-12-2015—ஞாயிறு

    குறிப்பு:-

                வாழ்க வளமுடன்.

            கேட்கப்பட்டுள்ள வினாவின் விடையை விரிவாக ஆராய இருப்பதால், இன்றைய சத்சங்கம் முடிவதற்கு(article has become lengthy)அதிக நேரம் ஆகலாம். அதற்காகவே விடை இரண்டு பகுதிகளாகப் பிரித்து தரப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக/ ஒருசேர படித்து முடிக்க நேரம் கிடைக்காதவர்கள் முதல் பகுதியை படித்து முடித்துவிட்டு சிறிது இடைவெளி விட்டு பிறகு நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். ஒருசேர படித்திட நேரம் இருக்குமானால் இடைவெளியில்லாமலும் படித்துப் பயன் பெறலாம்.

    வாழ்க வளமுடன்.

    பகுதி – 1

    வாழ்க வளமுடன்.

    இத்தலைப்பை சிந்திக்க எடுத்துக் கொண்டதற்குக் காரணம் ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ கேட்கப்பட்ட ஒரு வினாவிற்கான விடையாக அமைவதற்காகவே.

    முதலில் தலைப்பின் கீழ் சிந்தனையைத் தொடர்வோம். சிந்தனையின் முடிவில் நீங்களே எந்த வினாவிற்கான விடை உள்ளது என அறிவீர்கள். வாழ்க வளமுடன்.

    ‘வினைப்பதிவே தேகம் கண்டாய்’ என்கிறார் ஓர் அறிஞர். இந்த அறிஞரின் கூற்றை நினைவில் கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.

    தூயவெளி இறைநிலையின் தோற்றமான ஆன்மாவிற்கு எப்போது உடல் தேவையிருக்கின்றது?

    ஆன்மா தூய்மை அடையும் வரை அதற்கு உடல் தேவைப்படுகின்றது.

    அதாவது, ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை நியதியின்படி, ஆன்மா எண்ணிய எண்ணங்களின், (அவை நிறைவேறாத ஆசைகளாகவும் – பற்றுக்களாகவும் இருக்கலாம்.) விளைவுகள் வெளிவராத பட்சத்தில்,

    அந்த விளைவை அனுபவிப்பதற்கு, ஆன்மாவிற்கு தேகம் தேவைப்படுகின்றது.

    அதுதான் பிறவித்தொடர் என்பது.

    ‘பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்’ என்பதால். புவியில் வாழும் காலத்தில், ஆன்மா தூய்மை பெற்று பற்றற்று வாழ்ந்திருந்தால் உடலைவிட்டு பிரிந்த பிறகு மீண்டும் புவிக்கு வந்து அவற்றை அனுபவிப்பதற்கு, உடல் தேவையில்லை.

    ஆகவே அறிந்து கொள்ள வேண்டியது:

    1) வினைக்கு விளைவு உண்டு.
    2) விளைவில்லாத வினை இல்லை.
    3) உடலை வைத்து வினையாற்றியதால்தான், விளைவை அனுபவிப்பதற்கு உடல் தேவைப்படுகின்றது ஆன்மாவிற்கு. அதாவது செய்த வினைக்கு விளைவு வருவதற்கு முன் உடல் மரணத்தை தழுவினால், அழியாத ஆன்மாவிற்கு உடல் தேவையுள்ளது. அதற்குத்தான் மீண்டும் மீண்டும் பிறவி.
    4) விளைவு, செய்யும் செயலின் தன்மையைப் பொருத்தது.
    5) விளைவிற்கும் வினைக்குமிடை கால நீளம், மற்றும் விளைவின் தரம் ஆகிய இரண்டும் வினையின் தன்மையைப் பொருத்தது.
    விளைவு உடனே வரவேண்டியதில்லை. அதாவது வினையை ஆற்றிய உடனே அதற்கான விளைவு வரவேண்டும் என்பதில்லை.

    உதாரணத்திற்கு சூடான பாத்திரத்தை கவனக்குறைவாக வெறும் விரல்களால் தொட்டுவிட்டால், அதற்கான விளைவு உடனே வந்துவிடும். ‘சூடான பாத்திரத்தை கவனக்குறைவால் வெறும் விரல்களால் தொட்ட பதிவை’ இருப்பாக இருந்து கொண்டு, விளைவு பிறகு வராது. விளைவு உடனே வந்துவிடும். மற்றுமொரு உதாரணம் ‘மின் கம்பியை தொட்ட வினைக்கு’ விளைவு பிறகு வராது. உடனே வந்துவிடும். எனவே வினையின் தன்மையைப் பொருத்து வினைக்கும் விளைவிற்கும் இடைப்பட்ட கால நீளம் அமையும். இப்போது தலைப்பிற்குள் செல்வோம்.
    இந்த தலைப்பு என்ன அறிவுறுத்துகின்றது? இத்தலைப்பு, குறிப்பாக வினைக்கும் விளைவிற்கும் இடைப்பட்ட கால நீளத்தைப்பற்றியதாக இருக்கும். தலைப்பு, வினை, பயன், முன் இருப்பு ஆகிய சொற்களைக் கொண்டுள்ளது.
    வினை என்றால் மனிதனுடைய செயல் என்று பொருள்.
    வினைப்பயன் என்றால் மனிதன் செய்த செயலால் வரும் விளைவே அவ்வினையின் பயன்.
    முன் இருப்பு என்றால் முன்னரே இருந்தது என்று பொருள்.
    ஏற்கனவே விளைவு வராது, ‘இருப்பாக’ இருக்கின்ற வினைப்பதிவின் பயன் என்று பொருள். விளைவு இல்லாத வினையில்லை. அதுபோல் வினை இல்லாத விளைவு இல்லை. எனவே ஏற்கனவே விளைவு வராது இருப்பாக இருக்கின்ற வினைப்பதிவின் விளைவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். தீடீரென தற்போது வந்துள்ள பெரும் விளைவிற்குரிய பெரும் வினை இப்போது செய்யப்படாமலும் இருக்கலாம். பெரும்பாலும் வருகின்ற விளைவுகள் நன்மையைத் தருவதாக இருந்தால் மனிதனுக்கு மகிழ்ச்சிதான்.
    ஒரு வேளை ஏற்கனவே இருப்பாக உள்ள வினைப்பதிவு பெருந்தீயப்பதிவாக இருந்து, வினை செய்யப்படும்போது விளைவு வராமல் இருந்து, இப்போது செய்யும் ஒரு சிறு தவறால், தூண்டப்பட்டு(trigger) பெருந்துன்பம் வரலாம். அப்போது மனிதன் வருத்தமடைகிறான். பெரும்பாலும் அதுபோன்ற சமயங்களில் ‘சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வந்துவிட்டது. எனவே செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று கூறி நொந்து கொள்வதும் உண்டு.
    காரணம் முன்பு செய்த பெருந்தீய வினை கவனத்தில் இல்லாதிருப்பது,
    அல்லது அதன் தன்மை, அதனால் பாதிக்கப்பட்டவரின் துன்பநிலை ஞாபகத்தில் இல்லாது போவது
    மற்றொன்று, செய்த அவ்வினை ஞாபகத்தில் இருந்தாலும் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என தப்புக் கணக்குப் போடுவது.
    முன்னோர்களின் கருத்தொடர்தான் நாம் என்பதால், முன்னோர்கள் செய்த வினையின் விளைவாகவும் இப்போது நமக்கு வரலாம்.
    இதற்கெல்லாம் என்ன விளக்கம்?
    இதற்கெல்லாம் ‘செயல் – விளைவுத் தத்துவம்’ என்கின்ற நூலை அருளியுள்ள வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன என்று பார்ப்பதே இன்றைய அறிவிற்கு விருந்து. மகரிஷியின் தத்துவம் செயல் விளைவுத் தத்துவத்தை மிக மிக வலியுறுத்துவதாக இருப்பினும் அதனை விரிவாக எடுத்துரைக்க ‘செயல் – விளைவு தத்துவம்’ என்கின்ற தனிநூலினை 1997 ஜனவரியில் எழுதியுள்ளார். அந்நூல் 67 பக்கங்களைக் கொண்டது. எனவே அந்நூலின் முக்கியத்தை அறிந்து கொண்டு அந்நூலை மீண்டும் மீண்டும் வாசித்து தெளிவு பெறவேண்டும்.
    மகரிஷி அவர்களின் அனைத்து மூலநூல்களும் வீட்டின் அலமாரியை அலங்கரிக்க வேண்டும். மூலநூல்கள் அலங்கரிப்பதே போதுமானதாகிவிடாது. அவற்றை தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி வாசித்து தெளிவு பெற்று, அவ்வையார் கூறுவதுபோல், ‘அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது இனிதினும் இனிது’ என்பதனை சோதித்துப் பார்க்க வேண்டும்.
    எனவே இன்றைய சிந்தனையான ‘வினைப்பதிவின் முன் இருப்பு’ என்கின்ற தலைப்பிற்குள் செல்வோம். மனிதனின் எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் அவனுடையக் கருமையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பாக உள்ளது. அவற்றிற்கான விளைவுகள் தக்க தருணத்தில் வெளிவரும். விளைவுகள் உடனேயும் வரலாம். அல்லது பிறகும் வரலாம். கால நீள அளவு செய்கின்ற வினையின் விளைவைப் பொருத்தது. இவ்வாறிருக்கும் போது சில நேரங்களில் வாழ்க்கையில் சிறு தவறு செய்யும்போது பெரும் துன்பங்கள் வரக்காண்கிறோம். அப்போது செயல்விளைவுத் தத்துவம் தவறு என நினைப்பது உண்டு. “No action will go waste. It will give appropriate result.” என்பார் மகரிஷி அவர்கள். ஆகவே செயல் விளைவுத் தத்துவம் தவறு என்பது சரியல்ல. விளைவையும் செயலையும் இணைத்துப் பார்க்க முடிவதில்லை.
    விளைவிற்கு காரணமான ஏற்கனவே செய்துள்ள வினையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளாததே காரணம். அல்லது முன்னோர்கள் செய்த வினையாக இருந்தால் அதனை அறிய முடியாததே காரணம்.

    இப்போது வருகின்ற விளைவிற்கான வினை இந்தப்பிறவியிலேதான் நடந்திருக்க வேண்டுமென்பதில்லை. ‘மாதா, பிதா செய்தது மக்களுக்கு’ என்றிருக்கும்போது மனிதன் பெற்றோர்களின்/முன்னோர்களின் கருமையத் தொடர்புடையவன்(hereditary link) என்பதால், இப்போது மனிதன் அனுபவிக்கும் விளைவிற்கான காரணம் முன்னோர்களுடையதாகவும் இருக்கலாம். இது போன்று குறைந்த பட்சம் முன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளாகவும் இருக்கும். ஏற்கனவே 17-06-2015—புதனன்று ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 7/7 என்கின்ற தலைப்பில் சிந்தித்தபோது, இந்த உண்மையினை விவர ஓட்டப்படம்(flowchart) மூலம் அறிந்திருக்கிறோம். எனினும் மீண்டும் அதனை நினைவு படுத்திக் கொள்வதற்காக அந்தப் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரும்பினால் நீங்கள் இணையதளப் பெட்டகத்தில் உள்ள அன்று வெளிவந்த விருந்தினை இப்போதும் நீங்கள் browse செய்து அருந்தலாம்.
    சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் வருவது போன்று தவறாக மனிதன் நினைப்பது பற்றி நவயுக பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். இதற்கான விளக்கத்தை கவிவடிவிலும் தந்திருக்கிறார். அதனை நினைவு கூர்வோம்.

    FFC-146-பினைப்பயள் முன் இருப்பு கவி

    இப்பாடலுக்கான விளக்கத்தை அறிவோம். கடையில் பொருளை எடை போடும் போது தராசின் ஒரு தட்டில் எடைக்கல்லும், மற்றொரு தட்டில் பொருளும் வைக்கப்படுகின்றன. எவ்வளவு பொருள் வைத்தாலும் தராசின் எடைக்கல் தட்டு மட்டும் கீழே உள்ளது. கடைசியாக சிறிய அளவில் பொருளை வைக்கும்போது பொருள் தட்டு தாழ்ந்து விடுகின்றது.
    கடைசியாக சேர்க்கப்பட்ட சிறு அளவு பொருள் மட்டுமேவா காரணம் எடைக்கல்லுக்கு பொருள் சமமானதற்கு?
    இதுவரை வைக்கப்பட்ட பொருளும், இப்போது வைத்த பொருளும் சேர்ந்து அழுத்தியதுதான், பொருள் வைத்திருக்கும் தட்டு கீழே இறங்கி, எடைக்கல்லுக்கு பொருள் சமமானதற்குக் காரணம்.
    அதுபோல் ஏற்கனவே இன்றுவரை இருப்பாக இருந்து, ஆனால் விளைவு வராமல் உள்ள பெரும் தீய பதிவு, தற்போதைய சிறு தவறால் ஓங்கி, பலமாக, விளைவைத் தருகின்றது. அதனால் தான் இக்கவிக்கு தலைப்பினை ‘வினைப்பயன் முன் இருப்பு’ என்று வைத்துள்ளார். எனவே செயல் விளைவுத் தத்துவம் பொய்யாகிவிடாது என்கிறார் மகரிஷி அவர்கள்.
    ‘அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்’ என்பர் பெரியோர். செயலுக்கான விளைவு உடனே வர வேண்டும் என்பதில்லை.
    விளைவு, செய்யும் செயலின் தன்மையைப் பொருத்தது.
    விளைவிற்கும் வினைக்குமிடை கால நீளம், மற்றும் விளைவின் தரம் ஆகிய இரண்டும் வினையின் தன்மையைப் பொருத்தது.
    மனிதன் தன் தவற்றினைத் திருத்திக் கொள்வதற்கு அவகாசம் கொடுக்கின்றது. எச்சரிக்கின்றது இயற்கை/இறை.
    அதற்கு மேலும், தவறுகள் செய்வது தொடருமானால் உரிய நேரத்தில் விளைவு துன்பமாக வந்து விடுகின்றது.
    மேலும் கோள்களின் சஞ்சார நிலைகளும்(planetary position) மனித வாழ்வோடு தொடர்பு கொண்டு, முன் இருப்பு செயல்களின் விளைவுகளாக இன்ப-துன்பத்தை அளிக்கக் காரணமாக உள்ளதால், அந்தந்த காலம் வர வேண்டியிருப்பதால் விளைவு வருவதற்கான கால நீளம் நீடிக்கலாம். செயல் விளைவுத் தத்துவத்தை மதித்து பயன் கொள்வதற்கு அவர் அருளியுள்ள நூலை ஓரிரு முறை வாசித்துப் பயன் அடைய இச் சத்சங்கத்தில் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

    பகுதி – 2

    மேலும், பட்டினத்தாரின் வாழ்வில் நடந்த ஒரு அருட்சம்பவத்தை அறிவோம். பட்டினத்தார் துறவு பூண்டதால் ஊர் ஊராக சென்று கொண்டிருக்கும்போது. ஒரு இரவில் ஒரு கோயிலில் தங்கினார். அப்போது தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவ்வூரின் அரண்மனையில் ராணியின் முத்துமாலை திருடு போய்விடுகிறது இதனை அறிந்த காவலாளர்கள் திருடர்களை பிடிப்பதற்கு துரத்தி ஓடி வருகின்றனர். அப்போது திருடர்கள் பட்டினத்தார் தவம் செய்து கொண்டிருந்த கோயிலில் ஒளிந்து கொள்கின்றனர். காவலர்களும் அக்கோயிலுக்குள் நுழைந்து திருடர்களைத் தேடுகின்றனர்.

    அதற்கு மேலும் தங்களிடம் அந்நகை தங்களிடம் இருந்தால் கையும் களவுமாக பிடிபடுவோம் என அஞ்சி திருடர்கள் அந்த நகையை வீசி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர். திருடர்களால் வீசி எறியப்பட்ட அந்த முத்துமாலை தவம் இயற்றிக் கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் வந்து விழுகின்றது. தவம் முடிந்த பிறகு தன் கழுத்தில் இருந்த அந்த நகையைப் பார்த்ததும், தன்னுடைய தவத்தைப் பாராட்டி அந்த முத்து மாலை இறைவனால் அணிவிக்கப்பட்டது என நினைக்கிறார். கோயிலுக்குள் புகுந்த காவலர்கள் பட்டினத்தார் கழுத்தில் ராணியின் முத்து மாலை இருப்பதைக் கண்டு பட்டினத்தாரை கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று அரசன் முன் நிறுத்துகின்றனர். அரசன் பட்டினத்தாரை திருடன் எனக்கருதி அவரை கழுமரமேற்றச்(அந்தக்காலத்தில் மரண தண்டனை அளிக்கும் ஒரு கொடூரமான முறை) சொல்கிறான்.

    அப்போது பட்டினத்தார் இறைவனிடம் சரண் அடைந்து “என்செயலாவது யாதொன்றுமில்லை” எனப்பாடுகின்றார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

    FFC-146- பட்டினத்தார் பாடல் என் கெபல் ஆவது ஒன்றில்லை

    இறைவனிடம் பூரணசரண் அடைகிறார். இறைவன் செயலன்றி தன் செயல் என்று ஒன்றும் இல்லை என்கிறார். அந்த நிகழ்வையே இறைவன் செயல் என உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார். தான் இப்பிறவியில் ஏதும் பாவங்கள் செய்ததில்லை. முன் செய்த தீவினைதான் மீண்டும் பிறப்பதற்குக் காரணம் என்கிறார். இப்போது வந்துள்ள ‘திருடன் என்கின்ற பழி(விளைவு)’ முன் பிறவியில் செய்த பாவத்தின் விளைவாக தன்னைப் பற்றிக் கொண்டது என்கிறார்,
    உடனே கழுமரம் தீப்பற்றி எரிகின்றது. இதனைக் கண்ட அரசன் பத்திரகிரியார், பட்டினத்தாரின் தெய்வீக நிலையினை அறிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு சீடனாகிவிட்டான். அரசன் பத்திரகிரியார் பின்னாளில் ஞானியானார். ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கின்ற வரிகளைச் சொன்னவர் வேறுயாருமில்லை. பட்டினத்தடிகள்தான். இந்நிகழ்வினைக் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தால் நமக்கு இறைவனின் திருவிளையாடல்களின் உண்மைகள் தெரிய வரும்.

    பத்திரகிரியாரின் கருமையப்பதிவிற்கேற்ப, பின்னாளில் பத்திரகிரியார் ஞானியாக வேண்டும் என்பது இறையின் திருவுளம்.

    அடுத்ததாக இறைவன் பட்டினத்தாரை தடுத்தாட்கொண்டது.

    பட்டினத்தார் இறைவனிடம் சரணடைந்த விதம்

    பின் வரும் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வதற்காகவும் ஏற்படுத்திய இறைவனின் நாடகம்.

    முன்வினைப்பயனை எடுத்துச் சொல்வதற்காக இறையாட்சி நடத்திய நாடகம்.

    திடீரென விளைவு துன்பமாக வரும்போது, ‘வினை ஏதும் இல்லாமல் விளைவு வந்துவிட்டது என சாதாரண மனிதன் ‘தெய்வத்திற்கு கண் இல்லை’ என தெய்வத்தையே நிந்திப்பது உண்டு.

    ஆனால், செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்றிருக்கும் போது இறையை நெருங்கிவிட்டவர், தன்னுடைய தவறான வினையால்தான் தீமை வந்துள்ளது என தன் பொறுப்பை ஒப்புக்கொள்ளாமல் தெய்வத்தின் மீதே எவ்வாறு பழியைச் சுமத்த முடியும்?

    எனவே அப்பழியை முன்வினையின் பயனாகக் கருதுவதோடு இருந்துவிடாமல்,

    பின்வரும் சமுதாயமும் ‘முன் இருப்பு வினைப்பதிவின் விளைவு தற்போதைய வினையில்லாதது போல் வரும் விளைவு’ என்கின்ற உண்மையினை அறிந்து கொள்ள ஒர் பாடலை இயற்றியுள்ளார்.

    ஏனெனில் அருட்பாடல்கள் வற்றாத சீவநதி போன்றதாகும். எக்காலத்திலும் மனித அறிவிற்கும் விளக்கம் அளித்துக் கொண்டே இருக்கும்.
    ஆகவே ஆட்சியின்றி ஆளுகின்ற இறையாட்சியில், எங்கும் நீக்கமற அறிவாக திகழ்ந்து கொண்டிருப்பதால் எந்த ஒரு செயலும் வீண் போவதில்லை. அதற்கான விளைவு வந்தே தீரும்.
    ஆகவே யாரும் எக்காலத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் செயல்-விளைவுத்தத்துவம் தவறு என்று கூறிவிட முடியாது.
    நவயுக பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் முன்வினையின் இருப்பு பற்றி கூறியுள்ள விளக்கத்தை அறிந்து கொண்டோம். அவருக்கு மூத்தவரான பட்டினத்தார் அவர்களின் வாழ்க்கைச் சம்பவத்திலிருந்தும் முன் பிறவிகளில், அல்லது இப்பிறவியிலேயும் செய்துள்ள முன்வினையின் பயன் இப்போதும் வரலாம் என அறிந்து கொண்டோம். இனிமேலும் வினப்பதிவின் இருப்பின்(முன்னர் செய்தது) விளைவின் மீது ஐயம் இருக்காது. இருப்பினும் வேறு எப்படி முன்வினைப்பதிவை உறுதி செய்வது என்று பார்ப்போம்.

    அதற்கு முன்னர் ‘பூர்வபுண்ணியம்’ என்கின்ற சொல் கேள்விப்பட்டிருப்போம். எங்கே கேள்வி பட்டிருக்கிறோம்? எப்போது கேள்விப் பட்டிருக்கிறோம்.

    ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்கின்ற முதுமொழிப்படி நிகழ்வுகள் இப்போது நடை முறையில் இல்லை சமுதாயத்தில் அந்த நிகழ்வுகள் என்னென்ன? தானே அன்னையைத் தெரிந்து கொள்கின்றது குழந்தை. அன்னை குழந்தைக்குத் தந்தையை அறிமுகப்படுத்துகிறாள். இது முதல் நிகழ்வு. அதுபோல் தந்தை குருவைக் காண்பிக்க வேண்டும். இது இரண்டாவது நிகழ்வு. மூன்றாவது நிகழ்வு குரு தெய்வத்தைக் காண்பிப்பது. முதல் நிகழ்வு நடக்கின்றதே தவிர, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிகழ்வு நடப்பதில்லை சமுதாயத்தில் நெடுங்காலமாக. இந்த நிலையில் குரு கிடைப்பதை அந்த ஆன்மா செய்த பூர்வபுண்ணியம் என்கின்றனர்.
    பூர்வபுண்ணியம் இல்லாமல் அறிவை அறிந்த குரு கிடைக்கமாட்டார். அப்படியானால் அந்த பூர்வபுண்ணியம் என்பது என்ன?

    ‘பூர்வ’ என்றால் முந்திய(former, bygone) என்று பொருள். உதாரணத்திற்கு பூர்வ ஜன்மம் என்கிறோம். புண்ணியம் என்றால் நமக்குத் தெரியும். நல்ல செயல்களைச் செய்வதால் வரும் நன்மை. நல்வினையின் பயன். நல்விளைவு. இறைவனின் அருள், ஆசி என்று பொருள். ஆகவே பூர்வபுண்ணியம் என்றால் முந்திய பிறவிகளில் இந்த ஆன்மா செய்த நல்ல செயல்களினால் இறைவனின் அருளும் ஆசியும் பெற்றதனை பூர்வ புண்ணியம் என்கிறோம்.

    பிரம்ம ரிஷியான வியாசர் காலத்தில் நாம் வாழவில்லை. இருந்தாலும் நவயுக பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம். அவரை குருவாக பெற்றது என்பது தற்செயலான நிகழ்வு அன்று. எந்த நிகழ்வும் இறையாட்சியில் தற்செயலானது இல்லை. நிகழ்வு செயலின் விளைவாக இருப்பதால் எந்த நிகழ்வும் தற்செயல் அன்று. இறைவன் திட்டமிட்டபடி அதாவது கருமையப்பதிவுகளின் படி அவ்வப்போது நிகழ்வுகள் நடக்கின்றன.

    அறிவை அறிந்த குருவை பெறுவது என்பது பூர்வபுண்ணியத்தாலன்றி வேறு ஏதும் காரணம் இருக்க முடியாது. பெற்றோர் குருவை அடையாத நிலையிலும் தானாகவே குரு கிடைப்பது என்பது பெற்றோர்கள் உள்பட நம்முன்னோர்கள் செய்துள்ள நற்காரியங்களின் விளைவாக இறைவனின் அருளாசி பெற்றமையாகும். ஆகவே பூர்வபுண்ணியம் என்பது வினைப்பயனின் முன் இருப்புதானே!

    ஜோதிடக்கலையின் வழியாகவும் முன்வினைப்பதிவு இருப்பதனை உறுதி செய்யலாம். ஜோதிடக் கலையில் ராசிக் கட்டத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படுகின்றது. பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றால் என்ன? ஐந்தாம் இடம் முற் பிறவியில்(அதாவது பெற்றோர்கள் உள்பட முன்னோர்கள்) செய்துள்ள பாவ புண்ணயங்களுக்கு ஏற்ப அந்த இடம் ஒவ்வொருவருக்கும் அமையும். ஜோதிடக்கலையும் வினைப்பதிவின் முன் இருப்பை ஏற்றுக் கொள்கின்றது எனத்தெரிகின்றது.

    அந்த ஜாதகர் இன்னாருக்கு இன்ன நேரத்தில் பிறக்க வேண்டும் என விரும்பியா பிறந்தார்? அல்லவே! பெற்றோர்கள் செய்துள்ள வினைகளின் தொகுப்பாக பிறந்தார் அந்த ஜாதகர். அந்த ஜாதகர் பிறந்த நேரம், ஊர் இவைகளை வைத்து அந்த ராசிக்கட்டத்தை ஜோதிடக் கலை கணித்தது. அந்தக் கட்டத்தில் அமைந்த ஐந்தாம் இடத்தின் பலனான பூா்வபுண்ணியத்தைப் பற்றிக் கூறுகின்றது. ஆகவே அந்த ராசிக்கட்டம் கூறும் பூர்வபுண்ணியம் எங்கிருந்து வந்தது. முன்னோர்களின் செயல்களால் வந்தது அந்த பூர்வ புண்ணியம். ஆகவே பூர்வ புண்ணியம் என்பது பெற்றோர் உள்பட ஜாதகரின் முன்னோர்களின் வழியாக வந்துள்ளது. ஆகவே வினைப்பதிவின் முன் இருப்பு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

    ‘நெருப்பு இல்லாது புகையாது’, ‘அள்ளாது குறையாது’ என்பன போல் வினையில்லாமல் விளைவு இல்லை. இச்சிந்தனையை மகரிஷியின் அவர்களின் வினை விளைவு பற்றிய கவியோடு நிறைவு செய்வோம்.

    FFC-146- விளைவு இலா வினை இலலை

    இப்போது தெரிந்திருக்கும் எந்த வினாவிற்கான விடை இச்சிந்தனையில் உள்ளது என்று.

    16-11-2015 அன்று சிந்திக்க வினாக்கள் -125 இல் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கான விடை இச்சிந்தனையில் உள்ளது. உங்கள் நினைவிற்காக அவ்வினாவினை மீண்டும் நினைவு படுத்தப்படுகின்றது.

    சிந்திக்க வினாக்கள்-125

    16-11-2015 – திங்கள்

    வினா: சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வரும்போது ‘செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று நினைப்பவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                           வளா்க அறிவுச் செல்வம்

    முக்கிய அறிவிப்பு

    வாழ்க வளமுடன்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(23-12-2015 புதன்) ‘சிந்திக்கப் பயிற்சியில்’ கேட்கப்பட்டுள்ள மேலும் சில வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட இருக்கின்றது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. படித்துப் பயன்பெற வாழ்த்துக்கள். தாங்கள் பயன் பெற்றதை உங்கள் கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                           வளர்க அறிவுச் செல்வம்