FFc 307-வேதாத்திரியார் – ஓர் அகராதி-1/5

 

 


 

வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!

 

வேதாத்திரியார் – ஓர் அகராதி-1/?

FFC-307                                              

                                                                                                                                                                                           17-03-2022 –வியாழன்

 உலக சமய ஆண்டு 17-03-37

maharishi lighting a new year lamp

 

வாழ்க வளமுடன்!

     இன்று வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு புகழாரம் சூட்டும் முகத்தான் குழுமி உள்ளோம்.  எனவே இன்றைய அறிவிற்கு விருந்தாக எடுத்துக் கொண்ட தலைப்பு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்பதாகும்.  இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். அன்பர்களே!

மகரிஷியின் கும்பகோணம் நிகழ்ச்சி:

    பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கினில் புகுந்து அழுந்தி மனதைப் புண்ணாக்கிக் கொள்வதில் உள்ள அறிவியலை உணர்த்திய வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கா  புகழ் தேவை?!  அல்ல. அவர்  வகுத்த  உயர்புகழ் இலக்கணத்திற்கேற்ப அவரே வாழ்ந்தவராயிற்றே! அவரா புகழை எதிர்பார்ப்பார்?  அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? அவருக்கும் நமக்கும் ஏற்பட்ட புனித உறவில் நடந்த  ஒரு நிகழ்ச்சியினை நினைவு கொள்வோம்.  கும்பகோணத்தில் மூன்று நாட்கள் சிறப்புக் கூட்டம் நடத்தினார் மகரிஷி அவர்கள். அப்போது நிறைவு நாளன்று கூறியதை நினைவு கூர்வோம். ஆன்மிகத் துறையில் சீடர்கள் குருவிற்கு காணிக்கைக் கொடுப்பது வழக்கம். ஆனால் அவ்வாறாக மகரிஷி அவர்கள் குருகாணிக்கை ஏதும் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக அவர் சீடர்களை நோக்கி  “குருகாணிக்கையாக உங்களிடம் உள்ள  அறுகுணங்களை இன்றிலிருந்து என்னிடம் கொடுத்துவிடுங்கள்” என்று வெளிப்படையாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.    அது இப்போதும் பொருந்தும் அல்லவா?

இயற்கை/இறை நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? 

    மூத்தோர் சொல் வார்த்தை  அமிர்தம் என அவ்வைத்தாய் மொழிந்துள்ளதற்கேற்ப, மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கேட்டு, ஆராய்ந்த பிறகு திருத்த-மாற்றத்திற்கு(information, confirmation, transformation) முயன்று வெற்றி பெற வேண்டும் என்பதே மகரிஷி அவர்கள் எதிர்பார்ப்பது.  அவர்மட்டுமல்ல. இயற்கையே/இறையே அதைத்தான் எதிர்பார்த்து இருபதாம் நூற்றாண்டில் திருவேதாத்திரியத்தை அருளியுள்ளது.

வான் காந்தத்தில் பரவவிட குழுமியிருக்கிறோம்:

    வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு புகழாரம் சூட்டுகிறோம்  என்று சொல்வதைவிட, வேதாத்திரியத்தின்  அருமை, பெருமை, அரும்பயன்களை உணர்ந்து கொண்டு அனுபவித்து வருவதற்கு மனிதஅறிவு அவரை வணங்கி கூறுகின்ற நன்றி வார்த்தைகளே ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்பது.அப்படியானால்  நாம் செலுத்தும் புகழாரம்  திருவேதாத்திரியத்திற்கே.  திருவேதாத்திரியத்தின் அருமை, பெருமைகள் சக நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் இந்த சமுதாயத்தின் 1590 கோடி(790×2=1590) காதுகளுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற அடிப்படை நோக்கத்தில் திருவேதாத்திரியத்திற்கு புகழார எண்ண அலைகளை  வான்காந்தக் களத்தில் பரவவிட  குழுமி இருக்கிறோம். ‘Fraction demands Totality supplies’ என்ற அடிப்படையில் தன்மாற்றம்/பரிணாமம்  நடைபெற்று வருவதால் அதனை நினைவில் கொண்டு உலகம் முழுவதும் திருவேதாத்திரியம் பரவ வேண்டும் என்கின்ற எண்ண அலைகளை வான்காந்தத்தில் பரவ விடுவோம்.  

ஆனந்தத்தைத் தருகின்றது:

    எது ஆனந்தத்தைத் தருகின்றது?   ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்று சொல்லக் கேட்பதற்கே மனதிற்கு  ஆனந்தத்தைத் தருகின்றது. எவ்வாறு வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஓர் அகராதியாகத் திகழ்கின்றார் என்று ஆராய்ந்து அறியும்போது, நாம் அடைந்திருக்கும் மற்றும் இன்னும் அடைய இருக்கும் பயனை எண்ணும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் எல்லையே கிடையாது. எப்படி? பயன்கள் அடைகிறோம்; பயன்கள் அடைவதில் மகிழ்ச்சிதானே இருக்க முடியும்?

      என்ன பயன்கள்? ‘மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் எல்லையே கிடையாது’ என்று வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதாது. எவ்வாறு எல்லையில்லா மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் திருவேதாத்திரியம் காரணமாக உள்ளது என்பதனையும் அறிந்துகொள்ள வேண்டும். மகிழ்ச்சி மற்றும் பெருமை ஆகிய   சொற்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான்.  இருப்பினும் மகிழ்ச்சியும், பெருமையும் என்ன என்பதனை ஆழ்ந்து  சிந்தித்து அறிந்து கொள்வோம்.

மகிழ்ச்சி என்பது என்ன?

     அனைவரும் அறிந்ததே!  மகிழ்ச்சி என்றால் இன்பம், உவகை, சந்தோஷம் என்று பொருள்.

இன்பம் எப்போது ஏற்படும்?

     விரும்புகின்ற அல்லது மனதிற்கு நிறைவு தருகின்ற அனுபவத்தினால் மனதிற்கு ஏற்படுகின்ற இதமான உணர்வே இன்பம் என்பதாகும்.

     மேலும் மகிழ்ச்சி என்பது பணிவுடன் நன்றியைத் தெரிவிக்கும் போது கூறுகின்ற சொல் ஆகும்.  உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியினை எடுத்துக் கொள்வோம்.

நன்றி தெரிவித்தல்:

     நூல் வெளியீட்டு விழா நடக்கின்றது. ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கின்றனர் பதிப்பகத்தார்.அப்போது பதிப்பகத்தார், ‘தங்கள் நூலை வெளியிடுவதில்  நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்’ என்கிறார்கள். இதற்கு என்ன பொருள்? இங்கே ‘மகிழ்ச்சி’ என்கின்ற சொல், பணிவுடன் நன்றியினை தெரிவிக்கப் பயன்படுகின்றது.

   தான்  எழுதிய  நூலை பதிப்பதற்கு இசைவு தந்தமையால், அந்த சிறந்த நூலை வெளியிடுவதில் தங்களுக்கு ஏற்படவிட இருக்கின்ற  உயர்வு கருதி, பதிப்பகத்தார் தங்களது உளமார்ந்த நன்றியினை  பணிவோடு தெரிவிப்பதற்கு,  ‘பெரும் மகிழ்ச்சி’ அடைகிறோம்’ என்று கூறும்போது மகிழ்ச்சி என்கின்ற சொல் பயன்படுகின்றது.

நன்றி உணர்வே ஆகும்:

    ஏன் நன்றி உணர்வாகின்றது?  மாதா, பிதா செய்த புண்ணியத்தால், ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்பதற்கேற்ப குருவை காண்பித்துக் கொடுக்கும் நிகழ்வே மறைந்து விட்ட  சூழலில் பிறந்த நாம்  வேதாத்திரி மகரிஷி அவர்களை தரிசித்து அவரை ஆழ்மனதுடன்  குருவாக ஏற்றுக்கொள்ளச் செய்த  இயற்கைக்கும்/இறைக்கும் தெரிவிக்கும் நன்றி உணர்வே ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்று மகிழ்ச்சியோடு தெரிவிப்பது. அடுத்ததாக பெருமை என்று கூறுவதற்கானக் காரணம் என்ன?

பெருமை என்றால் என்ன?    

 பெருமை என்பதும்  மன உணர்வினை வெளிப்படுத்துகின்ற சொல்.

உயர்ந்த நிலையினை அல்லது தகுதியினை அடைய இருக்கும்போதோ

அல்லது அடைந்தபோதோ,

அல்லது அதுபோன்று  வெற்றியினை அடைய இருக்கும்போதா

அல்லது அடைந்தபோதோ,

மனம் அடையும் இதமான உணர்வினை அனுபவிப்பதோ அல்லது நமக்கு நாமே தெரிவித்துக்கொள்வதோ   பெருமை எனக்கொள்ளப்படுகின்றது.

அவ்வைத்தாயும் அறிஞர் திருவள்ளுவரும் மொழிவது என்ன?

அவ்வைத்தாய்

சான்றோர் இனத்திரு,                    (ஆத்திச்சூடி-44)

சேரிடம் அறிந்து சேர்,                     (.. ” ….    49)

செய்வனத்திருந்தச் செய்           ( …  ” …   50)

நேர்பட ஒழுகு                                        ( …  ” …   72)

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்   ( …  ” …  80)

பெரியாரைத் துணைக்கொள் ( …  ” …  82)

என மக்களுக்கு அறிவுரைக் கூறுகின்றாள்.

     திருவள்ளுவரோ ‘பெரியாரைத்துணைக்கோடல்’ என்னும் அதிகாரத்தையே ஒதுக்கி பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். இவ்வதிகாரம் அரசனுக்காக அருளியதுபோல் தோன்றினாலும் இது அனைவருக்குமே பொருந்தும்.  எப்படி?  அரசன் நாட்டை ஆள்கின்றவன்.  ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கின்றது.  வருங்கால வலிமையுள்ள சமுதாயத் தூண்களை(pillars of Society) உருவாக்குகின்ற பொறுப்பில், குடும்பத்தை நல்முறையில் நிர்வாகம் செய்ய கணவன், மனைவி தலைவன், தலைவியாக இருக்கின்றனர்.  எனவே அரசனுக்கு கூறும் அறிவுரை எல்லோருக்குமே அந்தந்த நிலையில் பொருந்தும்.

ஏன் சான்றோர்களைத் துணைக் கொள்ள வேண்டும்?

       விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்துள்ள மனித இனம்  மனிதப்பண்பில் ஏற்றம் பெறுவது இன்ப வாழ்விற்கு நிச்சயமாக அவசியம். ஆகவே பண்பேற்றத்திற்கு  சான்றோர்களின் துணை அவசியம்.  எவ்வாறு சான்றோர்களின்  துணை பண்பேற்றத்திற்கு உதவுகின்றது என அறிந்துகொள்வோம்.  இயல்பூக்க நியதி அங்கும் செயல்படுகின்றது. அதாவது இயல்பூக்க நியதி கூறுவது யாதெனில்,  ‘எந்த  ஒரு பொருளை, எந்த ஒரு செயலை, எந்த ஒரு குணத்தை, எந்த ஒரு உயிரையும் அடிக்கடி ஒருவர் நினைந்து வர, வர  அப்பொருளின் தன்மையாக அவரது  ஆற்றல் அறிவினிலும், உடலினிலும் மாற்றம் காண்கின்ற பெருமையை அடையச்செய்யும் என்பதே.  அதேபோன்று அறிவினரைச் சேர்ந்திருப்பதும் இன்பம் என்றும், அவரைக் கனவிலும் நினைவிலும் காண்பது அதனைவிட இன்பம் என்றும் அவ்வைத்தாய் கூறியுள்ளதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.  ஒருவருக்கு பெருமை உணர்வு எப்போது ஏற்படும்?  சற்று முன்னர் ‘பெருமை’ என்கின்ற சொல்லுக்கான பொருள் கண்டோம்.  ஒருவர் உயர்ந்த நிலையினை, தகுதியினை அடைய இருக்கும் போது, அது இன்பமாகவும், அது பெருமைபடக்கூடிய உணர்வாகவும் அல்லவா இருக்கும்?  அதற்கேற்ப இன்பம்  ஏற்படும்.  ஆகவே .சான்றோர்களின்  உயர்ந்த நிலையை அறியும் போது, மனம் தனக்குள் பெருமை கொள்வது இயல்பு (தற்பெருமை கொள்வது தன்முனைப்பு போன்று ஆகாது இங்கு).  சார்ந்திருக்கின்ற சான்றோரின் உயர்ந்த நிலையை நினைக்க நினைக்க மனதிற்கு ஏற்படும் இதமான உணர்வும் பெருமைதான்.

இருபதாம் நூற்றாண்டிலிருந்தாவது உலக மக்கள் உய்ய மனவளக்கலை: 

கடந்தது கடந்து போகட்டும்.  இருபதாம் நூற்றாண்டிலிருந்தாவது,  

இப்பூவுலக மக்கள் உய்வதற்கான நிரந்தர தீர்விற்காக(உலக சமாதானம்), திருவேதாத்திரியத்தை அருளுவதற்கு,

இயற்கை/இறை அன்று(இருபதாம் நூற்றாண்டில்) வாழ்ந்த ஆன்மாக்களில்  ஒரு ஆன்மாவைத்  தேர்ந்தெடுத்த, பெருமைக்குரிய உத்தமர்  ஒருவரான

வேதாத்திரியாரை குருநாதராக  அடைந்திருப்பதால்,

ஏற்படுகின்ற நிறைவால் மனம் வளம் அடைந்து கொண்டு, முழுமையை நோக்கி அறிவு பயணித்துக்கொண்டிருப்பது   பெருமை கொள்ளக்கூடிய  நிகழ்வுதானே?!

எனவேதான், நாம் அடைந்து கொண்டிருக்கும், இன்னும் முழுமையாக அடைய இருக்கின்ற பயன்களை எண்ணி, அவர் எவ்வாறு பயனடைய உதவியாக இருக்கின்றார் என்பதனை நன்றியோடு தெரிவிக்கும் முகத்தான்  ‘வேதாத்திரி மகரிஷி அவர்களை அகராதியாகத் திகழ்கின்றார் என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை:

     எதனால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை?  எல்லையில்லா பெருவெளியை நோக்கிய பயணத்தில் அடையும் மகிழ்ச்சியும் எல்லையில்லாமல் இருக்கும் என்பது உண்மைதானே? பேரறிவே ஆறாம் அறிவாகியும், பல லட்சம் ஆண்டுகளாகத் திக்குத் தெரியாத இருண்ட காட்டில் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்த நிலையில்  அறிவொளியைத் தந்து வழிகாட்டுகின்றது  திருவேதாத்திரியம்.

       எனவே பேரறிவு இதுவரை தனது பயணத்தில்/தன்மாற்றத்தில் ஆறாம் அறிவாகி, பல்லாயிரம் ஆண்டுகளாகியும், தெரிந்து கொள்ளாதிருந்த,  ஆனால் ‘அறிவின் இலக்கணத்திற்கேற்ப’ அறிந்து கொள்ளவேண்டிய உண்மைகளை அறிந்து  கொள்வதால் ஏற்படும்  பேரின்ப வார்த்தைகளே  ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்கின்ற புகழாரமாக அமைகின்றன.

மகரிஷி அவர்களை எதற்காக  அகராதி என்று கூறி மகிழ்கிறோம்?  

    அகராதி என்றால் என்ன என்றும், அகராதியின் பயன் என்ன என்றும் தெரியும். எனவே அதே ஒப்புவமையில் (analogy) அகராதியால் பெறும் பயன்களைப்போன்றே,  ஆறாம் அறிவின் பயன்களை திருவேதாத்திரியத்தால் நாம் பெறுவதால்  திருவேதாத்திரியத்தை இயற்றிய மகரிஷி அவர்களை அகராதி என்று கூறி மகிழ்கிறோம்.  அகராதியின் பயன்களை நினைவு கூர்ந்தால் மகரிஷி அவர்களை அகராதி என்று கூறுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பது விளங்கிவிடும்.

அகராதி என்பது என்ன?

    அகராதி என்பது ஒரு நூல். சொற்களை அகர வரிசையில் அமைத்துப் பொருள் முதலியவற்றைத்  தருகின்ற நூல்.  ஒவ்வொரு மொழிக்கும் அகராதி உண்டு. உதாரணத்திற்கு, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு அகராதிகள் இருக்கின்றன.  தமிழ்-தமிழ், தமிழ்-தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-ஆங்கிலம், ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் என்று பலவகை அகராதிகள் இருக்கின்றன.  அகராதி எதற்கு, எப்போது பயன்படுகின்றது? ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியவில்லையெனில் அகராதியை நாடுகின்றோம். மேலும் பொருள் தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் அச்சொல்லைப்பற்றி இலக்கணமும் அறியப்படுகின்றது. அச்சொல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கின்ற புரிதலும் ஏற்படுகின்றது. ஆகவே  மொழிவளத்தைப் பெருக்கிக் கொள்ள புதிய புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதற்கு (vocabulary) அகராதியை நாடுகிறோம்.

மொழி வளம் என்றால் என்ன?

   மொழிவளம் என்பது பற்றி அறிந்து கொள்ள மொழி, மற்றும் வளம் என்பது என்ன என்று  தனித்தனியே அறிந்து கொள்ள வேண்டும். மொழி என்பது கருத்தையும், உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக்குறியீட்டுத் தொகுதி.  வளம் என்பது நிறைவு மற்றும் மேம்பட்ட நிலை ஆகும்.  மொழி வளம் என்பது மொழியின் மேம்பட்ட நிலை ஆகும். மொழி என்பது எப்போது மேம்பட்ட நிலையில் இருக்க முடியம்? மொழிவளம் என்பது ஒரு மொழியில் சொற்கள் அதிகமாகவும் இருந்து கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் எளிதாக வெளிப்படுத்துவதற்கு பயன்படுபவையாகவும், பிறருக்கும் எளிதாகப் புரியவைப்பதாகவும் இருப்பதாகும். மொழி,  ‘வளமாக’ இருந்தால் ஒருவரின் மொழி ஆளுமையும் அதிகமாக இருக்க முடியும்.  மொழி ஆளுமை அதிகமாக இருந்தால் தான் எண்ணியதை பிறருக்கு தெரிவிக்க விரும்பும்போது தங்கு தடையின்றியும் சரளமாக பேசவும், எழுதவும் முடியும்.

 ‘DICTIONARY’ என்றால் என்ன?

    அகராதி  ஆங்கிலத்தில் ‘DICTIONARY’ எனப்படுகின்றது.  ஆங்கிலத்தில் அறிவாளியை  (knowledgeable person)  ‘He is walking or living Dictionary’ என்கிறோம்.அப்படி என்றால் ‘well informed person’ என்று பொருள். அருளாளரான வேதாத்திரி மகரிஷி அவர்களை அகராதி- ‘well informed person’ என்றால் என்ன பொருள்?  அவர் யாரால் அறிவிக்கப்பட்டவர்(informed by whom?) யார் அந்த அறிவித்தவர்  (Who  had informed him?)இயற்கையே/இறையேதான்   (Nature/God).  ஆகவே அருளாளரான  வேதாத்திரி மகரிஷியை அகராதி  என்கின்றபோது அவர் இயற்கையால்/இறையால் தெரிவிக்கப்பட்டவர்.  அறிவுறுத்தப்பட்டவர்  மட்டுமல்ல. சமுதாயத்திற்கு  இருபதாம் நூற்றாண்டின் உலகிற்கு அறிவிப்பாளராகவும்(informer) இயற்கையால்/இறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனவளக்கலையின் முதல் இறைத்தூதுவர் அவர்.  அவரை மனவளக்கலைக்கு முதல் வித்தாக்கி அவர் வழியாக  பல்லாயிரக் கணக்கில் இறைத் தூதுவர்களை உருவாக்கி வருகின்றது இயற்கை/இறை என்றால் அது மிகையாகாது.  எனவே மனவளக்கலைஞர்கள் தங்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பினை பாக்கியமாகக் கருதி நன்முறையில் பயன்படுத்துவதே நாம் மேற்கொள்ளும் சாலச்சிறந்த இறைவழிபாடாகும்.

Scientist of Consciousness

வாழ்வாங்கு வாழ . . .    

    ஒரு மொழியில்  தெரியாத, புரியாத புதிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள உதவுவது அகராதி.

அகராதி பயன்படுவதுபோல் திருவேதாத்திரியம் ஒருவர் ஆறாமறிவின் திறனையும், திறமையும் வளர்த்துக்கொண்டு வாழ்வாங்கு(வாழ்வு ஆங்கு-இல்லறத்தோடு கூட) வாழ்வதற்குப் பயன்படுவதால் திருவேதாத்திரியத்தின் பயனாளிகளான நாம் அவரை ஓர் அகராதி என்று கூறி மகிழ்கிறோம். வாழ்வாங்கு வாழ்வது என்பது எப்படிவேண்டுமானாலும் மனம்போன போக்கில் வாழ்வதைத் தவிர்த்து ‘வாழும் இயல்பை’க் கொண்டு வாழ வேண்டும்.  அப்படிப்பட்டவன்தான் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்கிறார் அறத்துப்பாலில் இல்லறத்திற்கென்று தனியாக ஓர் இயலை(science of living) ஏற்படுத்திக் கொடுத்த தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

            இல்லறவியல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்.                                      . . . குறள் எண் 50

பொருள்:

   இவ்வுலகத்திலே வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் விண்ணிலுள்ள தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான் என்கிறார்.

    மேலும், ஒன்றே பலவாகியது என்கின்ற வோதாத்திரிய சுத்த அத்வைத தத்துவத்தின்படி(Vethathric Pure Advaidic Science) இறையே மனிதனாக தன்மாற்றம் அடைந்திருந்தாலும் அவன் எப்போது தெய்வத்திற்கு ஒப்பாகிறான்  என்பதனை மற்றொரு குறட்பாவில் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதனை இங்கு நினைவுகூர்வதும் நலம் பயக்கும்.

 நீத்தார் பெருமை

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

                                                      குறள் எண். 27

 

இன்று இத்துடன் நிறைவு செய்துகொள்வோம்.  இதன் தொடர்ச்சியை நாளை சிந்திப்போம்.   வாழ்க வளமுடன்!

 

வாழ்க அறிவுச் செல்வம்!             வளர்க அறிவுச் செல்வம்!!