FFC – 155-வினா விடை 7

வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

வினா விடை 7

FFC – 155

17-01-2016–ஞாயிறு

 

சிந்திக்க அமுத மொழிகள்- 119
(23-10-2015—வெள்ளி)

“செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்

…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) சீர்திருத்தம் எவ்வாறு செழிப்பான வாழ்வளிக்கின்றது?

 

விடை:-

செழிப்பான வாழ்விற்கு செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தும், அவசியம் என வாழ்வியல் அறிஞர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். எல்லோருமே வாழ்வு செழிப்பானதாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவர். அதற்கு வேண்டிய செயல்களை செய்துதான் செழிப்பான வாழ்வு வாழமுடியும். அதாவது மகரிஷி அவர்கள் கூறுவதுபோல். ‘செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம் ஆகிய ஐந்தையும் வாழ்வில் கொண்டு வந்தால்தான் வாழ்வு செழிப்பானதாக அமையும். எனவே ஐந்தைப்பற்றியும் விரிவாக அறிய வேண்டியுள்ளதால் அவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும். எனவே இன்று சீர்திருத்தத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். ஐந்தில் செயலொழுக்கம், சேவை, சிந்தனை, சிக்னம் ஆகிய நான்கைப் பற்றியும் தனித்தனியாக வேறொரு நாள் அறியலாம்.
செழிப்பு என்பது வளமுடன் காணப்படும் நிலை; வளத்துடனும், வளர்ச்சியுடனும் அமைந்த நிலை. வாழ்வு என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட கால அனுபவங்கள். சீர்திருத்தம் செழிப்பான வாழ்க்கையை அளிக்கவல்லது என்றால் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நடைபெறும் அனுபவங்கள் வளத்துடனும், வளர்ச்சியுடனும் இருக்கும் என்று பொருளாகின்றது. அதாவது வாழ்க்கை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் அமையும்.
அப்படியானால் சீர்திருத்தம் என்பது என்ன? சீர்திருத்தம் என்பது வாழ்வின் இனிமைக்கு வேண்டிய தகுந்த திருத்தங்களை செய்து கொள்வது. ‘சீர்திருத்தம்’ என்கின்ற வார்த்தை இரண்டு சொற்களைக் கொண்டது. ஒன்று ‘சீர்’. மற்றொன்று ‘திருத்தம்’. சீர் என்கின்ற சொல்லுக்கு ஒழுங்கு என்று பொருள். எனவே ஒழுங்குபடுத்துவதற்காக(சீர்) செய்யும் திருத்தம் சீர்திருத்தம். சீர்படுத்துவதற்காக செய்யும் திருத்தம் சீர்திருத்தம் எனப்படுகின்றது.
நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த முறையிலா (way of living) மனித குலம் இப்போது வாழ்ந்து வருகின்றது? இல்லையே விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்ப இப்போது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லையா? அவ்வப்போது விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. விஞ்ஞனாம் என்பது .என்ன? இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றிக் கொள்ளும் கலை விஞ்ஞானம். இயற்கையில் மறைந்துள்ள வளங்களை(ஆற்றல்களை) கண்டுபிடித்து அதனை வாழ்வின் வளமாக மாற்றிக் கொடுக்கின்றது விஞ்ஞானம். அவ்வப்போது அவற்றை மனிதகுலம் அனுபவித்து வருகின்றது. புலன்களின் திறமையை விஞ்ஞானத்தால் அதிகரித்துக் கொள்கின்றது. உதாரணத்திற்கு, ஆரம்பத்தில், மனிதன் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதென்றால், அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நடந்தேதான் சென்றான். பிறகு மாட்டு வண்டியில் சென்றான். பிறகு மிதி வண்டியில் சென்றான். பிறகு வாகனங்களில் சென்றான். அதுபோல் அந்தந்த காலத்தில் ஒரு பழக்க வழக்கம் அறிஞர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அது அந்த காலத்தில் பொருந்தியிருந்திருக்கும், அதுவே எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஆகவே பழைய பழக்க வழக்கம் இக்காலத்திற்கு பொருந்தி வரவில்லை எனில் அதனை யாருக்கும் துன்பம் தராத வகையில் ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும் அதுதான் சீர்திருத்தம் எனப்படுகின்றது.

சீர்திருத்தம் பற்றி சீர்திருத்தச் செம்மல் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிவோம். ஒன்பது பாடல்களில் சீர்திருத்தம் என்பதற்கு ஒரு பகுதியே ஒதுக்கி அதில் சீர்திருத்தம் என்பது என்ன, சீர்திருத்தத்தின் அவசியம் பற்றியும் விளக்கியுள்ளார். அவைகளாவன:

1) சீர்திருத்தத்திற்கு முறை,
2) சன்மார்க்க சங்கம் (03-07-1992),
3) 15.09.1992 அன்று சீர்திருத்தம் சீர்பெருமை என்றும்,
4) வயது வந்தவர்களிடம் சீர்திருத்தம் அரிது என்பது எதார்த்தம் என்றும்,
5) ‘துயர்கலைய தூய்மைபெற நலம் காண்பீரே’ என்றும்,
6) பண்பாடு என்பது என்ன என்றும்,
7) விழிப்பு நிலை சீவன்முக்தி என்றும்,
8) பண்பில் உயர்ந்த நாடு எது என்றும்,
9) எந்த ஒர் மனவளக்கலை மூலம் பழிச்செயல் பதிவுகள் போகுமோ, அதனை அகத்தவம் என்று

இவ்வாறாக ஒன்பது தலைப்புகளில் சீர்திருத்தம் பற்றி விளக்கியுள்ளார். (ஞ.க. பாடல் எண்642—650) . அவற்றில்  இரண்டு பாடல்களை மட்டும் இப்போது அறிவோம்.

FFC-155-சீர்திருத்தத்திற்கு முறை-விவிடை

சீர்திருத்தம் வாழ்வின் செழிப்பை அளிக்க வல்லது என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிடாமல், அந்த சீர்திருத்தம் என்பது என்ன, அந்த சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கே, சீர்திருத்த முறையைக் கூறுகிறார். என்னே அவரின் ஞானநிலை! என்னே அவரின் சமுதாய அக்கறை!

ஏன் சீர்திருத்தங்களை சொல்லுகிறேன் என்று மற்றுமொரு பாடலில் 05.04.1988 அன்று கூறியுள்ளதையும் அறிவோம்.

FFC-155-எந்எந்தக் காலத்தோ

மற்ற பாடல்களை நேரம் கிடைக்கும்போது, வீட்டு அலமாரியில் அலங்கரித்துள்ள மகரிஷி அவர்களின் மூல நூல்களில் ஒன்றான ஞானக்களஞ்சியம்—1 இல் உள்ள அப்பாடல்களை கட்டாயம் ஓரிரு முறை வாசித்து இன்புறலாம். முடிந்தவரை மனனம் செய்யலாம். இதுவே அறிவினரை கனவிலும், நனவிலும் கண்டு இன்புறுவதாகும். இதன் வாயிலாக அவ்வையாரை நினைவு கூர்கிறோம்
வேறொரு சமயத்தில் சீர்திருத்தம் பற்றி இன்னும் சற்று விரிவாக அறியலாம். கட்டுரை நீண்டு கொண்டே போவதால், இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொண்டு. அடுத்த அறிவிற்கு விருந்தில் (20-01-2016) ‘முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள் பிறகு தேர்வடமாக மாறிவிடும்’ என்கின்றஸ்பானியப் பழமொழியில் உள்ள பொருளை அறிந்து கொள்வோம்.

வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்