FFC – 152-வினா விடை 4

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

வினா விடை 4

FFC – 152

06-01-2016–புதன்

சிந்திக்க வினாக்கள்-127
(23-11-2015 – திங்கள்)

ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ என்றிருக்கும்போது மகரிஷி அவர்கள் தான் அறிந்ததை அறிந்தவாறு எவ்வாறு கூற முடிகின்றது?

விடை: பொதுவாக, ‘Bhramam cannot be comprehended’ எனப்படுகின்றது. ஆனால் ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ என்றிருக்கும்போது மகரிஷி அவர்கள் தான் அறிந்ததை அறிந்தவாறு எவ்வாறு கூற முடிந்தது என்கின்ற காரணத்தை அவர் இயற்றியுள்ள கவியினிலே காணலாம்.

FFC-152-5-NEW-கண்டவர் ஏன் விண்டதில்லை

 

சிந்திக்க வினாக்கள்-128
26-11-2015 – வியாழன்

இறை எவ்வாறாக இருந்தால், ‘தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான்’ என்பது சாத்தியமாகின்றது? சற்று விளக்கவும்.

விடை :-
இங்கு, அங்கு என்றில்லாமல், இறை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்கின்றனர் இறையை அறிந்தவர்கள். எங்கும் இறைந்து கிடப்பதால் இறைக்கு இறைவன் என்கின்ற காரணப் பெயர் உள்ளது. அப்படியிருக்கும்போது இறை தூணிலும், துரும்பிலும் இருந்துதானே ஆகவேண்டும். ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றும் சொல்வதுண்டு. அணுவும் இறைதான், அதனை இயக்குகின்ற ஆற்றலும் இறையேதான். இவ்வாறிருக்கும் போது இறை எவ்வாறு இருந்தால் இது இறைக்கு சாத்தியமாகின்றது? இறை வெளியாக இருந்தால்மட்டுமே இது சாத்தியமாகும், இறையின் ஆதிநிலை வெளியாக உள்ளது. அந்த ஆதிநிலையில் தான் துகள்கள் தோன்றி விண்ணாகி, பஞ்சபூதங்களாகி, இன்று நாம் காணும் பிரபஞ்சம் மிதந்து கொண்டிருக்கின்றது. எனவே வெளிக்குள் தானே அனைத்தும் உள்ளது. ஆகவே இறைவெளியில்லாத இடம் கிடையாது.

சிந்திக்க அமுத மொழிகள்- 129
27-11-2015—வெள்ளி

“நான் யார்?” என்ற கேள்விக்கு விடை கண்டு அந்த விடையின் வெளிச்சத்திலே தூய்மை பெற்று
பிறருக்கு வழி காட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு வாழ்தலே யோக வாழ்க்கையாகும்.”

…..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) யோக வாழ்க்கை என்பது இதுதானா?
2) ‘நான் யார்?’ என்கின்ற கேள்விக்கு விடைகிடைப்பது வெளிச்சம் என்றால் அதற்கு முன்னர் அறிவு இருட்டில் இருப்பதாக அல்லவா அா்த்தமாகின்றது?!

விடை :-
1) ஆம் யோக வாழ்க்கை என்பது இதுதான். வேறு எது யோக வாழ்க்கையாக இருக்க முடியும்? எதனை யோக வாழ்க்கை எனலாம் என்பதனை முடிவுசெய்தால் இதுதான் யோக வாழ்க்கை என்கின்ற முடிவிற்கு வந்துவிடலாம். ‘யோகம்’ என்றால் இணைதல் என்று பொருள். எதனுடன் இணைதல்? ஆன்மா தன்னுடைய பூர்வீகத்தை மறந்துவிட்ட நிலையில் இறையுடன் இணைதல் என்பதே யோகம். ‘யோகம் என்பதற்கு’ எல்லோரும் அறிந்த ஒரு பொருள் உள்ளது. அது ‘அதிர்ஷ்டம்’ என்பது. ஆன்மாவிலுள்ள மும்மலங்கள் நீங்கினால் தான் இறையுடன் இணைய முடியும். மும்மலங்கள்தான் எல்லாப்பிறவிகளிலும் பாவப்பதிவுகளாகியுள்ளன. பாவப்பதிவுகள் அவ்வப்போது துன்பங்களாக வருகின்றன. துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பதனை காணமுடியாது. அதிர்ஷ்டமில்லா வாழ்க்கை வாழ்பவனை ‘யோக வாழ்க்கை வாழ்கிறான்’ என சொல்ல முடியுமா? முடியாது, ஆகவே ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு செயல்முறை விடை(practical understanding of Who is this I ?), மும்மலங்கள் நீங்கினால்தான் கிடைக்கும். மும்மலங்கள் நீங்கினால் வாழ்க்கை துன்பமிலா இறைவாழ்க்கையாக இருக்கும். அந்த வாழ்க்கையினை யோக வாழ்க்கை என்கிறார் மகரிஷி அவர்கள்.
2) இரண்டாவது வினாவிற்கு வருவோம். விடை கிடைத்தலை வெளிச்சம் என்கிறார். அந்த வெளிச்சத்திலே தூய்மை செய்து கொண்டு பிறருக்கு வழிகாட்டும் தன்னை உயர்த்திக் கொண்டு வாழ்தலே யோக வாழ்க்கை என்கிறார். ஆம். விடை கிடைத்தல் வெளிச்சம்தான். ஏனெனில் அதற்கு முன்னர் அறிவின் இருப்பிடம் அறியாமல் இருக்கிறான். அதனால் அதற்கு அறிவின் இருப்பிடம் அறிவது என்பது ஆறாம் அறிவின் கடமையாகும், தர்மமாகும். அறிவு தன் கடமையை செய்யாதிருந்தால் அது இருட்டில் இருப்பதாகத்தானே அர்த்தம்? நான் அறிதலில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று கருத்தியல் புரிதல்(theoretical knowledge). மற்றொன்று செயல்முறை புரிதல்(practical understanding) கருத்தியல் புரிதலுக்கு பிறகு செயல்முறை புரிதல்தான் மனிதகுலத்திற்கு அவசியம். அப்போது கருத்தியல் புரிதலில் ஏற்பட்டுள்ள வெளிச்சத்தை அறிவு பயன்படுத்தி தன்னை தூய்மை செய்து கொள்ள முடியும். பிறருக்கு வழிகாட்டும் அளவிற்கு தன் அறிவை உயர்த்த வேண்டும். அதாவது ஒவ்வொரு மனவளக்கலைஞரும் இறைத்தூதுவராக வேண்டும் என்பதே இயற்கையின்/இறையின் விருப்பம் என்பதால் அதனை நிறைவேற்ற வேண்டும். எனவே இப்படிப்பட்ட வாழ்க்கையை மனவளக்கலையோகப்பயிற்சியினால் அடைந்து வாழ்வதே யோகவாழ்க்கையாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். இது தற்செயல் நிகழ்ச்சியன்று. இறை ஆட்சியில் எதுவும் தற்செயல் இல்லை. எல்லாம் ஆன்மாவின் கருமையப்பதிவுகளின்படி திட்டமிட்டதுபோல் நடக்கும். ஆகவே மனவளக்கலைஞர்கள் அனைவரும் குருவை அடைந்த பயனாகிய பிறவிப்பயனை அடைவோம். வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை.

சிந்திக்க அமுத மொழிகள்- 130
28-11-2015—சனி

உழைப்பு மூவகைத் தீமைகளைப் போக்குகிறது. அவையாவன, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.
…… அனுபவமொழி
பயிற்சி—
1) ‘பொழுது போகாமை’ அவ்வளவு கொடுமையானதா? எப்படி? நன்மை இழக்கப்படுகின்றதா?
2) பொழுது போகாமைக்கும் கெட்டபழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
3) இதனாலன்றோ ‘An idle mind is devil’s paradise’ என்கின்றனர்?

விடை :-
‘பொழுது போகாமை’ என்பது என்ன? பொழுது எவ்வாறு அதுவே போகும். நாம் ஏதாவது பணியில் ஈடுபட்டால் இந்த ‘அலுத்துக் கொள்ளுதலுக்கே’ இடம் இல்லை. நேரம் எதற்காக உள்ளது? மனிதன் தன் அறநெறிகளில் இரண்டாவதான கடமையை ஆற்றுவதற்கே உள்ளது. ஆகவே நேரம் நமக்கு கிடைத்திருக்கின்றது. அதனை நாம் பயன்படுத்தாமல் நேரத்தை வீணாக்குகிறோம். அதாவது அறத்தை கைவிட்டுவிடுகிறோம். என்றுதானே பொருள்?! மேலும் காலம் என்பது என்ன? இறைவெளியின் தன்மைகளில் ஒன்று. அப்படியானால் பொழுது போகவில்லை என்றால் இறையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதானே பொருள்?! இறையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் எவ்வாறு இறையின் அருள் கிட்டும்? கடமை என்றால் உடலுழைப்பு மட்டுமல்ல. மன உழைப்பும் சேர்ந்ததே அறநெறி கூறும் கடமையாகும். உடலுழைப்பிற்கு ஏதும் பணிஇல்லாத போது மனஉழைப்பாகிய சிந்தனை செய்யலாமே! ‘சிவகாமி மகனை சிந்தனை செய் மனமே’ என்கின்றனர் பக்திமான்கள். ஆகவே சிவகாமி மகன் யார் என திருவேதாத்திரியத்தால் தெளிவு பெற்ற நிலையில் இறையைப்பற்றியும், அதன் இயங்கங்கள் பற்றியும் சிந்தனை செய்யலாமே. சிந்தனை செய்ய ஆரம்பித்தால் இயற்கையே/இறையே நம்முடன் பேசுமே! சிந்தனை என்பதே இயற்கையுடன்/இறையுடன் சத்சங்கம் நடத்துவதுதானே.

நேரத்தை உன்னதமாக பயன் படுத்தாமலிருந்தால் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் சீவனான மனிதன் விளக்க வழி செயல்களை செய்யாமல பழக்க வழி செயல்களில் ஈடுபட்டு விடுவான். பழக்க வழிக்கு விளக்க வழி கிடைக்கின்றது என்றாலே பழக்க வழி சரியில்லை என்றுதான் பொருள். ஆகவே பழக்க வழி நல்வழியில்லாமல் கெட்ட வழியாக இருக்கும். ஆகவே நேரம் போகவில்லை எனில் அறிவு கெட்டவழிகளில் செல்லும். மனித மனம் ஒரு நொடிக்கு ஆயிரமாயிரம் எண்ணங்களை எண்ணும் வலிமை உடையது. ஆகவே ஆயிரமாயிரம் தேவையற்ற எண்ணங்கள் வழியே மனம் ஒடிக் கொண்டிருக்கும். அது அறிவிற்கு தொந்திரவாக இருக்கும்.

வறுமை என்பது என்ன? மனிதனுக்கு மூன்று இன்றியமையாத் தேவைகள் உள்ளன. உணவு, உடை, உறைவிடம் ஆகியன. இந்த மூன்றும் கிடைக்காத நிலையே வறுமை எனப்படுகின்றது. இந்த மூன்றினையும் பொருள் கொடுத்து தான் பெறமுடியும். உழைத்துதான் பொருள் ஈட்டமுடியும். எனவே உழைப்புதான் வறுமை என்கின்ற தீமையினை போக்க முடியும். மனிதனைத் தவிர விலங்கினங்கள் அதற்கு வேண்டிய உணவை உழைத்துத்தான் தேடுகின்றன. இருந்த இடத்திலேயே அவற்றிற்கு உணவு கிடைப்பதில்லை. உழைப்பே உயர்வைத் தரும்.

வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்