FFC – 127-அறிவிற்கு விருந்து

வாழ்க மனித அறிவு                                                                                                                          வளர்க மனித அறிவு

அறிவிற்கு விருந்து

FFC – 127

14-10-2015—புதன்

sindhanai_vilakkam       அறிவிற்கு எது விருந்து, விருந்தின் அவசியம் என்ன, விருந்தின் பயன்கள் என்ன என்று சிந்திக்க இருக்கிறோம்.       முதலில் தலைப்பிற்கு வார்த்தை விளக்கம் காண்போம். தலைப்பில் ‘அறிவு’, ‘விருந்து’ என்கின்ற இரு வார்த்தைகள் உள்ளன. அறிவு என்பது எது என்று எல்லோரும் அறிவர். எது உணர்வதற்கு காரணமாக உள்ளதோஉயிரில் எது உணர்கின்றதோ அது அறிவு.

ஆனால் அறிவு அரூபமானது. உருவமற்றது. ஆனால் உள்ளது. இது விந்தை.

அடுத்த வார்த்தையான விருந்திற்கு வருவோம். விருந்து என்றால் என்ன? விருந்து என்பது சிறப்பான உணவு. ஒருவரை அல்லது பலரை அழைத்து வழங்கும் சிறப்பான உணவை விருந்து என்கிறோம். ஐம்புலன்களில் ஒன்றான ‘நா’ என்கின்ற புலனை மகிழ்விக்கக் கூடியதாக அமையும் உணவு விருந்தாகும். பொதுவாக புலன்களுக்கு பேருவகையூட்டும் ஒன்றாகவும் கொள்ளலாம் விருந்தை. உதாரணத்திற்கு நல்ல இன்னிசையை ‘செவிக்கு விருந்து’ என்றும் ரம்யமான இயற்கைக் காட்சிகளை கண்களுக்கு விருந்து’ என்றும் கூறுகிறோம். நாவிற்கு (வயிற்றுக்கு) விருந்தாக இருந்தாலும் சரி, செவிக்கு விருந்தாக இருந்தாலும் சரி, கண்களுக்கு விருந்தாக இருந்தாலும் சரி அனுபவிப்பது பொதுவான ஒன்றுதான். அதுதான் அறிவு. உணவு என்பது என்ன? உண்ணுவது உணவு? எதற்காக உண்ணுகிறோம்? உயிர் வாழ்வதற்காக உண்ணுகிறோம். உடல் வளர்ச்சிக்கு, உடல் இயக்கத்திற்கு வேண்டிய ஆற்றலை, சக்தியைப் பெறுவதற்காக உண்கிறோம். உணவும் விருந்துதான். நல்ல இன்னிசையும் விருந்துதான், ரம்மியமான இயற்கைக் காட்சிகளும் விருந்துதான் அறிவிற்கு. அவை புலன்களுக்கு விருந்து இல்லை என்பதனைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் புலன்கள் அனுபவிப்பதில்லை. அறிவுதான் அனுபவிக்கின்றது. புலன்கள் கருவிகளாக இருக்கின்றதே தவிர புலன்களுக்கு விருந்து இல்லை. இந்த நிலையில் ‘அறிவிற்கு விருந்து’ என்பது எதனைக் குறிக்கின்றது? ‘வயிற்றுப்பசி’ என்கின்ற துன்ப உணர்வை போக்குவதற்காக உணவு உண்கிறோம். அதுபோல் ‘அறிவுப்பசி’ என்கின்ற துன்ப உணர்விற்கான உணவு அறிவிற்கு விருந்தாகின்றது. மற்ற விருந்துகளில் அறிவிற்கு புலன்கள் தேவைப்படுகின்றது. ஆனால் அறிவிற்கு–விருந்தில் புலன்கள் ஏதும் அவசியமில்லை. மற்ற விருந்துகளில், அதாவது புலன் இன்பத்திற்கு, கருவிகளாக இருக்க புலன்கள் அவசியமாக இருப்பதால், புலன்கள் தாங்கும் அளவிற்கு மேல் விருந்து இருக்குமானால் புலன்கள் துன்புறும், சலிப்படையும். ஆனால் அறிவிற்கு – விருந்தில் புலன்கள் அவசியமில்லையாதலால் இங்கே அறிவிற்கு சலிப்பு என்பதே கிடையாது. அத்தகையை அறிவிற்கு–விருந்து எது? அதுதான் சிந்தனை. சிந்தனைதான் அறிவிற்கான விருந்தாக உள்ளது. இன்னிசை விருந்து என்பதுபோல, சிந்தனை விருந்து என்கிறோம். சிந்தனை விருந்தை அனுபவிப்பது அறிவுதான். அறிவுதான் சிந்தனை செய்கின்றது. அறிவிற்கு-–விருந்தில் சலிப்பு இல்லாமையால் அறிவிற்கு விருந்து பேரின்பமாக உள்ளது. இங்கே வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் பேரின்பத்தைப் பற்றி அறிவுப்பூர்வமாகக் கூறுவதனைக் கவனிப்போம். இறைநிலையான மன அலை விரிந்த சுத்தவெளியுடன் அபூர்வமாக ஒன்றினைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக் காணும்போது அது இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வாக அமைகிறது. இதுவே ‘பேரின்பம்’ ஆகும் என்கிறார் மகரிஷி அவர்கள். (சமூக சிக்கல்களுக்கான ஆய்வுத்தீர்வுகள் என்கின்ற நூலில் பக்கம் 23 இல்) ஆங்கிலத்தில், “Rarely, when the mental wave expands and merges with the Gravity to realize its own potentials and functions in everything and everywhere, it is felt as the culmination of pleasure and satisfaction –ecstasy ” (In the book ‘Logical solutions for the problems of Humanity’ — page No.30) எனவே உயிர் வாழ்வதற்காக, உடல் வளர்ச்சிக்காக, உடல் இயக்கத்திற்காக வேண்டிய ஆற்றலை, சக்தியை பெறுவதற்காக உணவை உண்பதுபோல், • மனிதனாக உயிர் வாழ்வதற்கு, • அறிவு வளர்ச்சி அடைய, • அறிவு முழுமையடைய, • அறிவு சீர்மையில் இயங்க தேவையான ஆற்றலை – சக்தியைப் பெறுவதற்காக, • பேரின்பம் அனுபவிக்க, விருந்து தேவை என்கிறோம். அவ்விருந்தை அறிவிற்கு விருந்து என்கிறோம்.

இந்த அறிவிற்கு விருந்தை அருந்தவே, தனது ஆதிநிலையில் இயலாததை, பேரறிவு, தனது தன்மாற்ற நிகழ்ச்சியில் ஆறாம் அறிவாக மலர்ச்சி அடைந்துள்ளது. மனிதனிடம் இயற்கை/இறை தனது முழு சிறப்பையும் வெளிப்படுத்துகின்றது. ஆகவே அறிவு சிந்திக்க வேண்டும். சிந்திக்க பயிற்சியும் அவசியம். இந்த நோக்கத்தில்தான் இந்த இணையதள சத்சங்கம், இறையருளாலும், அருட்குரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் திருவருளாலும், அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்கள் துணையுடன் நடைபெற்று வருகின்றது. தலைப்பிற்குள் செல்வோம். அறிவைப்பற்றிக் கூறவந்த திருவள்ளுவர், பொருட்பாலில் அறிவுடைமை என்கின்ற ஒர் அதிகாரத்தையே ஒதுக்கி, பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். அதிகாரத்திற்கு “அறிவு” என்று பெயர் வைத்திருக்கலாம் திருவள்ளுவர். ஆனால்  “அறிவுடைமை” எனப் பெயர் வைத்துள்ளார். காரணத்தோடுதான் அறிவுடைமை எனப் பெயா் வைத்துள்ளார். அதனை அடுத்த விருந்தில் 18-10-2015 ஞாயிறன்று சிந்திப்போம்.

அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன் உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here)பதிவு செய்யவும்.   நன்றி, வாழ்க வளமுடன்