யோகமும் அறிவுத்திருக்கோயிலும் 1/2

 

வாழ்க மனிதஅறிவு                                                          வளர்க மனிதஅறிவு

யோகமும் அறிவுத்திருக்கோயிலும் 1/2

FFC–93

21-06-2015-ஞாயிறு

வாழ்க வளமுடன்.

இன்று 21.06.2015 முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. புராதனக் கலையாக இருந்து வந்த யோகாவை இப்போது எல்லோரும் அறியும் வகையில் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுவதை அறிந்து யோகிகளான நாம் மகிழ்வுறுகிறோம். யோகா தினம் மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு நம் இணைய தள சத்சங்க யோகிகள் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் யோகம்
எல்லோருடைய அன்றாட வாழ்வில் இடம் பெற்று,

அதனால் உடல் நலத்தையும், மனவளத்தையும் எல்லோரும் பெற்று

யோகவாழ்வு வாழ வேண்டும் என விரும்புகிறோம்; வாழ்த்துகிறோம்.

சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன். சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன்.
சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன். சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன்.
சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன். சர்வதேச யோகா தினம் வாழ்க வளமுடன்.

வாழ்க யோகம். வளர்க யோகம். வாழ்க யோகம். வளர்க யோகம்.
வாழ்க யோகம். வளர்க யோகம். வாழ்க யோகம். வளர்க யோகம்.
வாழ்க யோகம். வளர்க யோகம். வாழ்க யோகம். வளர்க யோகம்.

ஒவ்வொரு மனிதனுமே ஒரு நடமாடும் அறிவுத்திருக்கோயில் என்கிறார் மகரிஷி அவர்கள். எப்படி? மகரிஷி அவர்களின் மானசீக குருவான அறிஞா் திருமூலா் கூறுவதென்ன?

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார்.

மேலும் திருமூலர் அருளுவதாவது

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.” ….திருமந்திரம் 1857

படம், மாடம்(கோபுரம்) உள்ள கோயில்களில் உள்ள கடவுளுக்கு நாம் ஏதேனும் செய்தால் அதனால் நடமாடும் மனிதர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால், நடமாடும் கோயில்களாக உள்ள மனிதர்களுக்கு ஒன்று செய்தால் அது எல்லாம் வல்ல அந்த பரம்பொருளுக்கே செய்ததாக அர்த்தம். ஆகவேதான் ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்கின்றனர் பெரியோர்கள்.

அருட்பேராற்றலே ஒவ்வொரு மனிதனிடமும் அறிவாக வீற்றிருப்பதால், “ஒவ்வொரு மனிதனுமே ஒரு நடமாடும் அறிவுத்திருக்கோயில்“ என்பது எவ்வளவு பொருத்தமாகவும், அர்த்தம் உள்ளதாகவும் இருப்பதனையும் அறியமுடிகின்றது. அதே நேரத்தில், அறிவு தன்னைத் திருத்திக்கொண்டு, தூய்மையாக்கி தனது உள்ளத்தை திருக்கோயில்களாக்கிட வேண்டிய பொறுப்பும், கடமையும்தான், பிறவியின் நோக்கம் என உணரச் செய்கின்றது திருவேதாத்திரியம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

மனித இனம் உடல் நலத்திலும், மளவளத்திலும் மேம்படவேண்டும். அதாவது அறிவில் உயர்ந்து வாழ்வதற்கு என்ன தேவையோ அதனை கற்றுத்தரும் நிலையங்களை அறிவுத்திருக்கோயில்கள் என்கிறார் மகரிஷி அவர்கள். உடல் நலத்திற்கு உடற்பயிற்சியையும், மனவளத்திற்கு தவத்தினையும் பயிலும் நிலையங்கள்தான் அறிவுத்திருக்கோயில்கள்.

உடற்பயிற்சியினையும், தவத்தையும் பயில்வதற்கு, இயற்கை/இறை, அறிவின்-அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, உலகில் முதன் முதலாக ஆழியாரில் ஆரம்பித்து, இப்போது உலகெங்கும் அறிவுத்திருக்கோயிலை ஏற்படுத்தி வருகின்றது இயற்கை/இறை. இயற்கை/இறை அளித்த அருமருந்து மனவளக்கலை. அறிவுத்திருக்கோயில் என்றால் அறிவிற்கான கோயில் என்றாகின்றது.

ஆகவே அறிவுத்திருக்கோயிலின் அறிவியலை சுருக்கமாக அறிந்து கொள்வோம். அதற்கு ஒரு வினாவை எழுப்ப வேண்டும்.

எது அறிவாக இருக்க முடியும்? இயற்கையே/இறையேதான் அறிவாக இருக்க முடியும். எப்படி என ஐயம் எழலாம். மனிதன் இயற்கைதானே?! இதில் யாருக்கும் ஐயம் இருக்காது. மனிதன் இயற்கை என்றால் அவன் அறிவும் இயற்கைதானே. அது சரி என ஒப்புக் கொள்ளலாம்.

அறிவு எவ்வாறு இறையாக இருக்க முடியும் என அடுத்த ஐயம் எழலாம். இறை என்பது காரணப்பெயர். அதாவது இயற்கை எனும் பேராற்றல் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளது. எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளதை இறைந்து கிடக்கின்றது என்றுதானே சொல்லமுடியும்! எனவே இயற்கை என்றாலும் இறை என்றாலும் ஒன்றுதான். இயற்கைக்கு மறு பெயர் இறை. யார் யாருக்கு எது பிடித்தமாக உள்ளதோ அவ்வாறு அந்த பேராற்றலை இயற்கை என்றோ, இறை என்றோ அழைக்கலாம்.

இந்த பேராற்றலே தான் தெய்வம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஆற்றலுக்கு உருவம் ஏது? இருப்பினும் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில், மகரிஷி அவர்கள் கூறுவதுபோல்

“முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும்
மொழிவதற்கு உவமையின்றி முட்டி மோதி நின்றனர்,” ……காந்த தத்துவப்பாடல் எண் 10 இல் உள்ள 3,4 வரிகள்

எனவே இறைக்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாத நிலையில் தெய்வம் என்கின்ற பெயரால் பல உருவங்கள் கொடுக்கப்பட்டன. உருவங்கள் இறையின் உண்மை நிலை அல்ல. இறை பேராற்றலாக உள்ளதால் இறை அரூபம். ஆகவே இறைக்கு உருமில்லை.

ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில்,

“இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை
இயங்கிடும் மின்சாரம் மூலம் எல்லார்க்கும் உணர்த்தலாம்” ……காந்த தத்துவப்பாடல் எண் 10 இல் உள்ள 5,6 வரிகள்

என்பதால், மகரிஷி அவர்கள், இறையின் நிலையை விஞ்ஞான ரீதியாக எடுத்துக் கூறி இறையின் இரண்டு தன்மைகளான பேராற்றல் மற்றும் அருள் ஆகியவைகளைக் கொண்டே ‘அருட்பேராற்றல்’ (அருள்+பேராற்றல்) என அழைக்கிறார். தெய்வம் என்பதும் அருட்பேராற்றல் என்பதும் ஒன்றேதான். தெய்வத்திற்கான அறிவியல் பெயர் அருட்பேராற்றலாகும். அருட்பேராற்றல் என்கின்ற போது இறைக்கு உருவத்தை, மனம் கற்பித்துக் கொள்ளாது.

எப்படி அழைத்தாலும் யார் ஒருவரும் அந்த பேராற்றலின் ‘மனிதனின் செயலுக்கு விளைவைக் கொடுக்கக் கூடிய கூர்தலறத்தை’ உணர்ந்து மதித்து நடக்கவேண்டியதுதான் இன்று சமுதாயம் விரும்புவதாகும். தவறாது, இந்த மதித்து நடத்தல்தான், சமுதாயம் யோகவாழ்வு வாழ வழி வகுக்கும். எனவே சமுதாயம் யோகவாழ்வு வாழ வேண்டும் என்பதனை வலியுறுத்தவே சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது, எனவே இந்த சர்வதேச யோகாதினம் மிகச் சிறப்பாக நடக்க www.prosperspiritually.com இணையதள சத்சங்க அன்பர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்!

அறிவுத் திருக்கோயிலைப் பற்றி மனவளக்கலைஞர்கள் நன்கு அறிவா். மற்றவர்களுக்கு அறிவுத்திருக்கோயில் என்பது வியப்பாகக்கூட இருக்கலாம். சிவன், விஷ்ணு, முருகன், விநாயகா், அம்மன் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில் உள்ளதை அறிவோம். முருகன் கோயில் முருகனுக்கான கோயில் என்பதுபோல் அறிவுத் திருக்கோயில் என்பது அறிவிற்கானக் கோயில். அறிவிற்கு கோயில் இருக்கின்றது என்றால் அறிவு தெய்வமா என்கின்ற ஐயம் எழலாம். மகாகவி பாரதியார் தெய்வத்தின் மீது பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் விநாயகர், முருகன், காளி ஆகிய உருவகக் கடவுளர்கள் மீதான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவ்வாறு பக்திப்பாடல்களை இயற்றிவரும்போது, மகாகவி பாரதியார் “தவமே புரியும் வகையறியேன்” என்று ஒரு கவியில் ஆதங்கப்படுகிறார். பிறகு ஞானப்பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் அறிவையே தெய்வம் என்கிறார்.
அறிவே தெய்வம்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் – பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனில் கேளீரோ?
………………………………………..
………………………………………..
சுத்த அறிவே சிவமென்னு கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? …..
………………………………………………………………………… என்று கூறுகிறார் மகாகவி பாரதியார்.

FFC-93-429_Subramanya_Bharati

அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷியும் “துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்” என்கிறார். அறிவைத் தெய்வம் என்று கூறுவதோடு மட்டுமல்லாது எவ்வாறு அறிவே தெய்வமாகின்றது என்று கருத்தியலாகவும்(theory), பயிற்சியாகவும்(practical) விளக்குகிறார். இப்பயிற்சிக்கு மனவளக்கலை என பெயரிடப்பட்டுள்ளது. மனவளக்கலை என்கின்ற அகவழிபாட்டுத் தெய்வீகப் பயிற்சியினை நடத்துவதற்கான புனித இடம் தேவைப்பட்டது.அப்போது, இயற்கை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, உலகிலேயே முதல் அறிவுத் திருக்கோயிலை ஆழியாரில் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இப்போது தழிழ் நாட்டில் ஊரெங்கும், மற்ற இடங்களிலும் அறிவுத் திருக்கோயில்கள். உருவாகி வருகின்றன. அரிதாக இருந்து வந்த “தவம் இயற்றுதலை” எல்லோருக்கும் கிடைக்குமாறு கருணை புரிந்துள்ளது இயற்கை. நாம் இப்போது எவ்வாறு அறிவு தெய்வம் எனப்படுகின்ற விளக்கத்திற்குள் செல்லவில்லை. அதற்கான விளக்கத்தை வேறொரு தலைப்பில் பிறிதொரு சமயத்தில் பார்ப்போம். தற்போதைக்கு அறிவை தெய்வம் என அறிவை அறிந்த அறிஞர்கள் சொல்வதனை ஏற்றுக் கொண்டு அறிவுத் திருக்கோயில் பற்றிய இன்றையச் சிந்தனையைத் தொடா்வோம்.

FFC-93-Swamiji stamp

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. காரணம் அரூபமான அறிவுதான் தெய்வம் என்பதால், அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. பின்னர் எதனை வணங்குவர் அறிவுத்திருக்கோயிலில்? அறிவை வணங்குவர். இறை வழிபாடு இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படலாம். ஒன்று புற வழிபாடு. மற்றொன்று அகவழிபாடு. புறம் என்றால் வெளியே என்று பொருள். அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறவழிபாட்டில் சிலையை வெளியே வைத்து வணக்கம் செய்யப்படுகின்றது. எனவே இதர கோயில்களில் சிலைகள் உள்ளன. மேலும் புறவழிபாட்டில் இறைவழிபாடு புலன்கள் வழியாக நடத்தப்படுகின்றது.

அகவழிபாட்டில் சிலைகள் கிடையாது. உள்ளம் தான் அகம் எனப்படுகின்றது. உள்ளத்திற்குள் எவ்வாறு சிலைகளை வைக்க முடியும்? “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலா் வாக்குப்படி, மேலும் உள்ளத்திலேயே இறைவன் இருப்பதை அறிந்துள்ள மனவளக்கலைஞர்கள், உள்ளத்திலுள்ள இறை மீதே மனம் வைத்து அகத்தவ இறைவழிபாடு (meditation)செய்கின்றனர். புலன்களைக் கடந்து உள்ளே சென்றால் கடவுளைக் (கட+உள்=கடவுள்) காணலாம்.

இறைவனே உயிராக மனமாக அறிவாக இருக்கின்ற தெளிவினை உடையவர்கள் அகவழிப்பாட்டினை மேற்கொள்கின்றனர், அதாவது உயிரிலிருந்து மனம் பிறப்பதால் புறத்தே புலன்கள் வழியாகச் செல்கின்ற மனதை திருப்பி உள்ளே செலுத்தி உயிர் மீது மனம் வைத்து தவம் செய்வதுதான் அகவழிபாடு. எனவே அறிவுத் திருக்கோயில்களில் சிலைகள் அவசியமில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் உள்முகமாக மனதைத் திருப்பி (Inner Travel) தெய்வமாகிய உயிர் மீது மனதை வைத்து தவம் செய்கின்றனா். ஆகவே அறிவுத் திருக் கோயில்களில் சிலை வழிபாடு இல்லை.
கோயில் என்பது இறைவனைத் தொழுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதக் கட்டிடம். கோயிலுக்கு ஆலயம் என்றும் பெயா். காரணம், கோயிலுக்குச் செல்லும் பக்தன் கடவுளை வணங்கும் முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டுதான் கோயிலுக்கு ஆலயம் என்கின்ற பெயரையும் வைத்துள்ளனா். “ஆலயம்” என்கின்ற சொல்லில் ஆன்மா என்கின்ற சொல்லின் முதல் எழுத்தான “ஆ” வையும் “லயம்” என்கின்ற சொல்லையும் இணைத்து ஆலயம் என்கின்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஆன்மா லயமாவதற்கான புனித இடம்தான் ஆலயம், கோயில்.
அடுத்ததாக ஆன்மா, லயம் என்கின்ற சொற்களின் பொருளைத் தெரிந்து கொண்டால் ஆலயம் ஏற்படுத்தப்பட்டுள்ள நோக்கம் தெரிய வரும். ஆன்மா என்பது உடலிலிருந்தும், மனத்திலிருந்தும் வேறானதாகக் கருதப்படும் பொருள்(soul). ஆன்மாவை உயிர் என்றும் கொள்ளலாம் தற்போதைக்கு. “லயம்” என்றால் ஒன்றுபடுதல் என்பதாகும். ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஆன்மா எதனுடன் ஒன்று பட வேண்டும் என்பதனையும் தெரிந்து கொண்டு அதுபோல் வழிபாடு செய்தால் ஆலயம் உருவாக்கப்பட்ட நோக்கம் முழுமையாக நிறைவேறும்.
வாழ்க வளமுடன். இதன் தொடர்ச்சியாக மீண்டும் 24-06-2015–புதன் அன்று சந்திப்போம்.
…… தொடரும் 24-06-2015–புதன்