வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
மகானாக்கும் மகோன்னத வினாக்கள் 5/?
FFC – 26
நேற்றையத் தொடர்ச்சி
23-11-2014
இன்று உயிர் என்பது என்ன என்கின்ற இரண்டாவது வினாவினைச் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். இது வரை உயிரைப் பற்றிய விளக்கம் விஞ்ஞானத்தில் இல்லை. ஆனால் உயிர் என்பது என்ன என்கின்ற வினா எழுந்து அதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு இயற்கை விளக்கம் அளித்துள்ளது. உயிர் கண்களுக்குத் தெரியாது. ஆனால் இருக்கின்றது. இல்லை என மறுக்க முடியாது. உயிர் இருப்பதை உணரலாம். அப்படியானால் உயிர் எவ்வாறு உள்ளது?
இப்பிரபஞ்சத்தில் கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய, ஆனால் இருக்கின்ற பொருள் என்ன? பஞ்சபூத தன்மாற்றத்திற்குப் பிறகுதான் உயிர் தோன்றியுள்ளது. பஞ்சபூதங்களில் மிகச் சிறியதும் கண்களுக்குத் தெரியாததும் எது? விண் தான் பஞ்சபூதங்களில் கண்களுக்குத் தெரியாத ஒன்று. பஞ்சபூதங்கள் தோன்றிய பிறகு, பஞ்சபூதக் கலவைகளால்தான் உயிர்கள் தோன்றியுள்ளன. பஞ்ச பூதங்களிலிருந்துதான் உயிர் வந்துள்ளது என்கின்றபோது கண்களுக்குத் தெரியாத ஆனால் இருக்கின்ற விண்தான் உயிராக வந்துள்ளது.
இப்போது உயிர் என்பது என்ன, அது எவ்வாறு உடலில் இயங்குகின்றது என்கின்ற வினா எழுந்ததால் இயற்கை அருளிய விடைகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1) இயற்கை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்குப் பஞ்சபூதங்கள் உருவான வரலாற்றினைத் தெரிவித்துள்ளது. பஞ்ச பூதங்கள் உற்பத்திப் பற்றியச் சிந்தனையில் மகரிஷி அவர்கள் ஈடுபட்டிருந்த போது, மகரிஷி அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை ”பஞ்சபூதப் பூங்காவிலே உலாவினேன்” என அவரைச் சொல்ல வைத்து இயற்கையும் மகிழ முடிந்தது.
2) உயிர் ஒரு மறை பொருளாக இதுவரை இருந்ததை, இப்போது விரும்பியவர்களுக்கு உணரச்செய்கின்றது.
3) மனமும் ஒரு மறைபொருளாக இருந்ததை இப்போது விளக்கப் பொருளாக மாற்றியுள்ளது. மகரிஷி அவர்கள் ஒரு முறை ஆங்கிலத்தில் மனம் என்கின்ற தலைப்பில் அருளுரை ஆற்றும்போது கூறியதை இப்போது நினைவு கொள்வோம். மகரிஷி. அவா்கள் கூறியதாவது: ”I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind.” இவ்வாறு அவர் கூறியது எவ்வளவு சரி என்று, மனதைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளேக் கூறும்.
4) உயிர் இருக்கும் வரை தான் மனம் செயல்படுகின்றது. இதனை யாவருமே அறிவர். ஆகவே மனதிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு தான் என்ன? அந்த தொடர்பினை எளிய வாக்கியமாகிய “உயிரின் படர்க்கை நிலைதான் மனம்- The extended activity of life force is mind” என்பதன் மூலம் மிகத் தெளிவாக அறிய முடிகின்றதல்லவா? இதுவே மனதிற்கான எளிய வரையறையாக அமைந்து விட்டது. இந்த நான்கு வார்த்தைகளைக் கொண்ட மனதிற்கான வரையறை விளக்குவதற்கு, தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதப்பட்டுள்ளன மகரிஷி அவர்களால். இது மட்டுமா முடிந்தது இயற்கைக்கு? மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ளத் தொடர்பை,, சுத்த அத்வைத உண்மையை, முன்று வார்த்தைகளால் ஒரு வரையறையாகவே சொல்ல முடிந்துள்ளது. அது இதோ!
5) மனதின் மறு முனை தெய்வம்(The other end of mind is God) என்கிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்களின் மானசீக குருவான திருமூலர் அருளிய ”உள்ளம் பொருங் கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற உண்மை இதன் மூலம் விளக்கப்பட்டுவிட்டது.
6) ஆன்மீக நூல்கள் ”நீ உடலல்ல, நீ ஆத்மாவே என்கின்றது..” ஆத்மா என்ன என்று தெரிந்தால்தானே ஆத்மாவாகிய நான் யார் என்றும் நான் எவ்வளவு சிறப்புடையவன் என்றும் விளங்கும். ஆகவே ஆத்மா என்ன என்றும், அது தெய்வீக நீதி மன்றம் என்றும் தெரிவித்துள்ளது. ”Fraction demands. Totality supplies.” என்பார்கள் மகரிஷி அவர்கள். பின்னமான வேதாத்திரிய சிறுவர் பன்னிரண்டு வயதிற்குள் எழுப்பிய வினாக்களுக்கு முழுமையாகிய இயற்கை/இறை (Totality) கொடுத்ததுதான் இவ்வளவு அறிவு பூர்வமான வேதாத்திரிய விளக்கங்களும்.
இன்றைய விருந்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறோம். உண்மையில் இறைவனே குரு என்று ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை பாயசமாக அருந்தி விருந்தினை முடித்துக் கொள்வோம்..
Guru Brahma Gurur Vishnu Guru Devo Maheshwaraha Guru Saakshat Para Brahma Tasmai Sree Gurave Namaha
இவ்வாறு குருவைப்பற்றிக் கூறினாலும், அது, அந்த ஸ்லோகத்தை உருவாக்கியவரின் அனுபவமாகவேத்தான் இருந்து வருகின்றது. அதனால் பயன்பெற்றவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். இருப்பினும் மக்கள் தொகையோடு கணக்கிடும் போது அந்த எண்ணிக்கை என்பது விரல் விட்டு எண்ணும் அளவிலேதான் இருக்கின்றது என்பது வருத்தமாக உள்ளது.. ஆனால் வேதாத்திரியத்தின் பயனைப் மேலும் மேலும் பெற்று வரும் போது அந்த ஸ்லோகம் எவ்வளவு உண்மை என உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. இயற்கையே/இறையே வேதாத்திரி சிறுவரின் வாயிலாக நான்கு வினாக்களை எழுப்பி அதற்கான விடைகளாக தன்னுடைய சரித்திரத்தை எதுவும் விடுபடாமல் அப்பட்டமாகத் தெரிவித்ததுதான் வேதாத்திரியம்.
தெய்வம் அரூபமானது என்றாலும் தெய்வம் மனிதர்கள் வடிவில் உருவமாக உலவுவதால், அந்த மனிதர்களில் யாரொருவர் ஐயமின்றி அகத்தை உணா்ந்தவா்களோ அவா்களும் தெய்வமும் ஒன்றே என்கின்றது திருவள்ளுவரின் வாக்கு. தெய்வம் அந்த மாமனிதர்கள் வழியாகத்தானே, மனிதசமுதாயத்திற்குச் சொல்ல முடியும். தெய்வத்திற்கு வடிவம் இல்லை என்பதால், சில நேரங்களில் தோன்றாத் துணைவனாகவும், சில நேரங்களில் தோன்றியத் துணைவனாகவும் செயல்படும். இதனை ஆறாம் அறிவு புரிந்து கொள்ளவில்லை எனில் சுத்த அத்வைதத்தை மறந்து விடுகிறோம் என்றுதான் பொருள்.
மாமனிதர்கள் தானே அவ்வையார் கூறும் அறிவினர்கள். அவர்களைச் சோ்தலும், அவா்களைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே இனிதிலும் இனிதான முடிவான இனிதாக இருக்க முடியும். அறிவினருடன் எதற்காகச் சேர வேண்டும்? மனிதனுக்கான பண்பு மாற்றம் பெறுவதற்காகச் சேர வேண்டும். அவா்கள் கூறும் அறவுரைகளை மதித்து நடக்க வேண்டும். அப்போதுதான் அவ்வையார் கூறும் இனிதிலும் முடிவான இனிதை அனுபவிக்க முடியும்.
அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த ஆன்ம செழிப்புறு இணைய தளம் சத்சங்கம். இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, எண்ணமே இயற்கையயின் சிகரமாக இருப்பதால் இணைய தள சத்சங்ம் மேலும் மேலும் வளர்ந்து சிறப்புற உங்கள் மேலான எண்ணங்களைத் தாருங்கள். சமுதாய அக்கறையில் அக்கறைக் கொள்வோம். வாழ்க வளமுடன்.
நாளை கடவுள் என்பவர் யார் என்றும், எதற்காக அவர் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவிற்கான விடையைச் சுருக்கமாக நாளைப் பார்ப்போம்.
நாளைத் தொடரும்.