மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

FFC – 22

18-11-2014

உயிரினங்களியே மிகச் சிறந்தது மனித இனம். காரணம் ஆறாம் அறிவுடையவன் மனிதன்.

 இயற்கையேதான் ஆறாம் அறிவாக மலர்ந்துள்ளதாலும்,
ஆறாம் அறிவோடு இயற்கை தானே மாறும், தன்மாற்றத்தை நிறுத்திக் கொண்டதாலும்,
ஆறாம் அறிவைத்தவிர வேறு அறிவு ஏதும் இல்லை என்பதாலும்
ஆறாம் அறிவுடைய மனிதன் மட்டுமேதான் இயற்கையின் இரகசியங்களை அறிந்து மகிழ முடியும்

 ஆறாம் அறிவுதான் இயற்கையின் மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டுபிடித்து வாழ்க்கை வளமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. அதற்கு விஞ்ஞானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 எல்லையில்லாதது இயற்கை. முடிவற்றது இயற்கை. ஆகவே இயற்கையில் ஆயிரமாயிரம் இரகசியங்கள் உள்ளன. எல்லாவற்றையும் எல்லையுடைய ஆறாம் அறிவு கண்டுபிடிப்பது என்பது முடியாததுதான் என்றாலும் விஞ்ஞானம் இயற்கையின் இரகசியங்களை ஏராளமாகக் கண்டு பிடித்து வருகின்றது. ஆனால் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கான இரகசியங்களை இன்னமும் இரகசியமாகவே இருந்து வருகின்றன.

 மனித குலம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று இருபது கோடி. ஆதிமனிதனிலிருந்து இன்றுவரைத் தோன்றி மறைந்த மக்கள் தொகை கணக்கு இல்லை. கடலிலுள்ள நீர்த்துளிகள் எத்தனை என்று சொல்ல முடியாதோ அதுபோல் இதுவரைத் தோன்றி மறைந்துள்ள மக்கள் தொகையையும் சொல்ல முடியாது,

 விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சியினை அடைந்து மனித வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளைப் பெருக்கி வந்தாலும் அதனால் மனிதனின் பூர்வீகச் சொத்தான அமைதியைக் கொண்டுவர முடியவில்லை. விஞ்ஞானத்தை நேர் வழியில் பயனாய்க் கொள்ளும் அறிவு நிலை மலரவில்லை.

 வாழ்க்கையை இயற்கைக்கு ஒத்த முறையில் சரியாக வாழும் முறை இன்னும் இரகசியமாகவே இருந்து வருகின்றது. ஆறாம் அறிவின் திறன் அதன் சிந்தனையில்தான் வெளிப்படும். அதற்கு என்ன, ஏன், எவ்வாறு ஆகிய வினாக்களை அறிவுக் கேட்டால்தான் அறிவின் சிந்தனைத்திறன் வளர்ச்சி பெறும்.

 மனிதப் பிறவியை எடுத்தப் பயனை இந்தப் பிறவியிலேயே milஅடைவதற்கான திறன் படைத்தது ஆறாம் அறிவு. ஆகவே ஆறாம் அறிவு என்ன, ஏன், எதற்கு, எவ்வாறு எனக் கேள்விகளைக்கேட்டு, அவைகளுக்கான விடைகளையும் அறிவுபூர்வமாகப் பெற்று அவ்வாறு வாழ வேண்டும்.. வாழ்க்கையில் அறிவு எவ்வளவோ வினாக்களைக் கேட்கின்றது. ஆனால் அறிவு கேட்க வேண்டிய மகோன்னத கேள்விகள் உள்ளன. ஆனால் எல்லோரும் அவ்வினாக்களைக் கேட்பதில்லை. அந்த வினாவினைக் கேட்டு விடைகளைப் பெற்று அவ்வாறு வாழும்போது அந்த ஆன்மா மகானாகின்றது. சரித்திரம் படைக்கின்றது.

 அதற்கு அறிவு, வாழ்க்கையில், உற்ற வயதில் கேட்க வேண்டிய வினாக்கள் என்னென்ன, அந்த வினாக்கள் எவ்வாறு மகோன்னத வினாக்கள் என்றும், இதுவரை யாராவது அந்த வினாக்களைக் கேட்டு விடைகளைப் பெற்று மகானாகி இருக்கிறார்களா என்று நாளை விருந்தில் பார்ப்போம். வாழ்க வளமுடன், நாளைத் தொடரும்……

*****