220-பிறவிப் பயனை நல்கும்! 4/?

வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

 
பிறவிப் பயனை நல்கும்! 4/?

அறிவிற்கு விருந்து—220

24-08-2016—புதன்

கடந்த மூன்று அறிவிற்கு விருந்துகளில் ‘பிறவிப் பயனை நல்கும்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். ‘உண்மைப் பொருள் உணர்தலை’ பிறவிப்பயன் என்றும், உள்ளம் தூய்மை அடைதலை பேறு என்றும் அறிந்தோம். இன்று இந்த இரண்டையும் உள்ளடக்கிய தனது அனுபவமாக பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். அவற்றை உற்று நோக்குங்கால் நமது சிந்தனையை ஆட்கொண்ட சில –சொற்றொடர்களை(PHRASES) களை ஆய்வு செய்வோம்.

உண்மைப் பொருளை உணர்தல்,
பிறவிப்பயனை அடைதல்,
இறைஉணர்வு பெறுதல்,
அறஉணர்வில் சிறந்து விளங்குதல்,
வீடு பேற்றினை அடைதல்,
‘இன்னும் வேறென்ன வேண்டும்–இப்பேறு பெற்ற பின்னர்?’ என்று இயம்புவது,
மனிதப்பிறப்பு முழுமை அடைதல்

ஆகிய பல சொற்றொடர்கள் உள்ளன. இவையெல்லாம் ஒரே பொருளைக்(அர்த்தத்தை-meaning) குறிக்கின்றனவா? அல்லது வெவ்வெறு பொருளைக் குறிக்கின்றனவா என்கின்ற ஐயம் எழலாம்.

இவற்றிற்கெல்லாம் விடை கூறும் வகையில் ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற பாடலை இயற்றியுள்ளார். இப்பாடல் இயற்றிய நாள் தெரியவில்லை. ஆனால் முதன்முதலில் இப்பாடல் 1998 ஜனவரி மாத அன்பொளி இதழில் வெளிவந்துள்ளது. மகரிஷி அவர்கள் ஐம்பதாவது வயதில்(1961) இல் மனவளக்கலையை வடிவமைத்து அன்பர்களை, வாழ்வியலையும், இறையியலையும் இணைத்து, இன்றைய சமுதாயத்தையும், இனி வரப்போகின்ற சமுதாயத்தையும் சுயமாகவேச், சிந்திக்க வைக்கும் அறிவுத் தொண்டு புரிய தன்னை அர்பணித்துக் கொண்டார். அதன்பிறகும் பல அருட்பாக்களை இயற்றியுள்ளார். அவற்றில் 37 வருடங்கள் சென்று இயற்றப்பட்ட இப்பாடல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. எப்படி?

   மனவளக்கலை என்பது இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சி. இறையை உணர்வதற்காகவே ஆன்மீகப்பயிற்சியினை மேற்கொள்பவர்கள் உண்டு. இறை மீது நம்பிக்கை கொண்டு துவைதநிலையில் பக்திவழிபாடு மேற்கொள்பவர்கள் உண்டு. ஆனால் பக்தியில் சிறந்து விளங்கிய அருளாளர்களைப் போன்று ஆழ்ந்து இறைமீது பக்தி கொள்வதில்லை. காரணம் ஆழ்ந்து பக்தியில் செல்வதற்கு பயம். என்ன பயம்? என்ன காரணம்? புலன் இன்பத்தைத் துறந்து துறவியாகிவிட வேண்டுமோ என்கின்ற அறியாமை. புலன் வழி இன்பத்திற்கும்(SENSUAL PLEASURE) புலன்கடந்த இன்பத்திற்கும்(பேரின்பம்) இடையே ஏற்படுகின்ற போராட்டம், நம்பிக்கையின்மை, புலன்கடந்த இன்பத்தைப்பற்றிய(பேரின்பத்தைப்பற்றிய) தெளிவின்மை, ஆகியவைகளே காரணமாக உள்ளன. A STUDY OF PLEASURE THROUGH SENSES VERSUS PLEASURE BEYOND SENSES MUST BE EVOLVED. இந்நிலை இல்லாத காரணத்தால் ஆன்மீகத்தில் ஆழ்ந்து செல்வதற்கு தேவையற்ற அச்சம் இருந்துவருகின்றது. உலகியல் வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும் பிரித்து வைக்கப்பட்டு, ஆன்மீக வாழ்க்கையை தனிப்பட்டவரின் விருப்பத்தைச் சார்ந்தது என்றாக்கப்பட்டுவிட்டது.(IT IS SAD AND PAINFUL TO NOTE THAT SPIRITUALISM HAS BEEN MADE OPTIONAL IN MAN’S LIFE).   ஆன்மீக வாழ்வு என்பது என்ன? எல்லோருக்கும் பொதுவான/இயற்கையின் அம்சமான எல்லோரும் இயற்கையை அறிந்து, இயற்கையை அறிவதால் எவ்வாறு வாழவேண்டுமோ, அதனை அறிந்து அப்படி  வாழ்வது என்பது எவ்வாறு அவரவர்கள் விருப்பத்தைப் பொருத்ததாக இருக்க முடியும்.?   

    ஆன்மா உள்ள மனித இனம் ஆன்மீக வாழ்க்கை வாழவில்லை எனில் வேறு யார் ஆன்மீக வாழ்க்கை வாழ்வது? அல்லது வாழ முடியும்?

     இயற்கையே/இறையே மனிதனின் ஆன்மாவாக உள்ளபோது, மனிதன் ஆன்மாவை அறிந்து இயற்கைநீதி/இறைநீதியினை மதித்து வாழவில்லையானால்; இருப்பினும், ஆன்மாவைக் கொண்டே வாழ்கின்ற மனிதன், ஆன்மாவை அறியாத உலகியல் வாழ்க்கையில் எவ்வாறு துன்பமிலா ஆனந்த வாழ்வு வாழ்ந்து சிறக்க முடியும்? உலகியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்று தனித்தனியாக இல்லை.

 ஒரு முறை மகரிஷி அவர்களை  பெரியவர் ருவர்  ‘பிரம்ம ஞானத்தில் என்ன கற்றுத்தருகிறீர்கள்’ எனக் கேட்டதற்கு, மகரிஷி அவர்கள், ‘மனிதன் பிறக்கிறான். ஒருநாள் இறக்கப்போகிறான், இதற்கிடையில் எவ்வாறு வாழவேண்டும் என்று கற்றுத்தரப்படுகின்றது’ என்றாராம்.

என்ன பிரம்ம ஞானிகளே! உண்மைதானே! வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

எனவே ஆன்மீகத்தின் மீதுள்ள அறியாமையால் கொண்டுள்ள அச்சம் நிலவுகின்றச் சூழலில் மகரிஷி அவர்கள், அந்த அச்சத்தை நீக்கித் தெளிவினை ஏற்படுத்தவே இறை-உணர்-ஆன்மீகத்திற்கான பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தாலும் சாதனையாளர் அறிவு தெளிவினும் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய இறை-உணர்-ஆன்ம சாதனையையே பாடலாக அருளியுள்ளார்.

Perinbappadigal_Spiritual_ladder_reduced size

பாடல் விளக்கம்:

பாடலின் தலைப்பில் ‘இன்பம்’ என்று மட்டும் ஒரு முறை கூறாமல், நான்கு முறைகள் கூறியுள்ளார். எனவே பிறவியின் நோக்கத்தை அடைவது நான்கு நிலைகளில் நடைபெறுகின்றது எனத் தெரிகின்றது. ஒவ்வொரு நிலையைக் கடக்கும்போதும் இன்பத்தை தந்ததாகக் கூறுகிறார். கடைசி நிலையில் பேரின்பத்தைத் துய்த்ததாகக் கூறுகிறார். அந்த நான்கு நிலைகளும் என்னென்ன?

1) பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்
2) மனம் செயல் தூய்மை ஆனபோதும்
3) உறவுகளில் உண்மை நிலை அறிந்தபோதும்
4) முடிவாகத் துறவு நிலை எய்தியபோதும்.

ஒவ்வொரு நிலைகளைப்பற்றியும் சிந்திப்போம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிலைகள் நம் குருதேவருக்கு ஏற்பட்டது.  எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது குருஉயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற உத்திரவாத உண்மையினை எடுத்துக் கொண்டு சிந்தித்து வருவதால் நம்குருதேவர் அவர்களுக்கு ஏற்பட்ட ஆன்ம அனுபவத்தை சிந்தித்தே ஆகவேண்டுமல்லவா?

பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்:

பிறவியின் நோக்கத்தை அறிந்த போது பேரின்பம் அனுபவித்ததாகக் கூறுகிறார். இக்கூற்றினை ஆராயும்போது தெரியவருவது:

1) ஏற்கனவே மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில், பிறவியின் நோக்கம் இறைநிலை உணர்வது என்கின்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாதலால் அதனை மீண்டும் இங்கே கூறவில்லை.

2) பிறவியின் நோக்கத்தை எவ்வாறு அறிந்தார் என்றும் கூறவில்லை. ஏற்கனவே பிறவியின் நோக்கத்தை அடைய பயிற்சிகள் அவரது சிந்தானப்பள்ளியில் உள்ளதால், பயிற்சிகள் அவரது மாணவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் அதனையும் கூறவில்லை.

3) மற்றொன்றை இங்கே கவனிக்க வேண்டியது ஒன்றுள்ளது. இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சிகளை வகுத்துக் கொடுக்கும்போதே, அதனுடன் இப்பாடலை சேர்த்து வழங்குவதற்கு இப்பாடல் இயற்றப்படவில்லை. 37 வருடங்கள் சென்ற பிறகுதான் இப்பாடலை இயற்றியுள்ளார். இதிலிருந்து என்ன தெரிய வருகின்றது? அன்று இப்பாடலின் தேவை அறியப்படவில்லை அல்லது வேறு சில அடிப்படை கருத்துக்களை நமக்கு தெரிவிப்பதில் அவர்தம் அறிவைச் செலுத்தியிருக்கலாம். ஆனால் மனவளக்கலையை அன்பர்களுக்கு கற்றுக் கொடுத்த பிறகு, இடைப்பட்ட காலத்தில்(37 வருடங்கள்) இப்பாடலின் தேவை உணரப்பட்டதால் இப்பாடலை அருளியுள்ளார். அதற்கு தான் எவ்வாறு முறையாகப்பயின்று இறைஉணர் வெற்றிக்கனியைப் பறித்தாரோ அந்த அனுபவத்தையே பாடலாக அருளியுள்ளார். அப்படி ஒரு பாடலை அன்று (1998-ஜனவரி) அருளியிருந்ததால்தான் நாம் இன்று அதனைப்பற்றி, எந்த நோக்கத்திற்காக அருட்கவிஞரான நம் குருதேவரால் அருளப்பட்டதோ, அவரின் கருணைமலர்ந்த அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றுவதற்காக அப்பாடலைத் துருவித் துருவி ஆராய்கிறோம்.

4) பொதுவாக ஒரு சிறந்த நோக்கத்தை அடைய அதனை ஒட்டியச் செயல்கள் அமைந்து, அச்செயல்களை செவ்வனே ஆற்றி, அதன் பயனை அடைகின்றபோதுதான் இன்பம் வரும். ஆனால் ஒன்றின் பயனை அடைவதற்கு முன்னரே பேரின்பம் கிட்டியதாகக் கூறுகிறார் இப்பாடலில்.

இது எவ்வாறு சாத்தியம்? இது எதனை அவரது மாணவர்களுக்குத் தெரிவிக்கின்றது?

(அ) அந்த காரியம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது,
(ஆ) அந்த சிறப்பின் மீதுள்ள பற்று,
(இ) அதன் முக்கியம்,
(ஈ) அதனை அடைவதில் உள்ள பிரகாசமான உறுதி.

ஆகிய நான்குமே அந்தக்காரியம் முடியும் முன்னரே அவருக்கு பேரின்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்றே கூறலாம்.
ஒரு மனிதன் பேரின்பத்தை விரும்புவானேயாகில் அவன் பேரின்ப ஏணிப்படிகளில் ஏறித்தான் அந்த உயர்நிலைக்கு வரமுடியும். பேரின்ப படிகளில் எத்தனைப்படிகளில் ஏறி வரவேண்டும் என்கின்ற மலைப்பு இருக்கக் கூடாது என்பதற்காக இயற்கையே/இறையே தெளிவுபடுத்துவதற்காக இப்பாடலை வேதாத்திரி மகரிஷி அவர்களை காகிதத்தையும், எழுதுகோலையும் கொடுத்து எழுத வைத்துள்ளது என்று நினைக்கும்போது இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில் இறை-உணர்-படலம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவாகின்றது. உயரே சென்று ஒரு அரிய காட்சியினைப்பார்த்து மகிழ ஏணி தேவைப்படுகின்றது. ஏணி கிடைத்தபிறகு உயரே சென்று அக்காட்சியினை கண்டு களிப்பது உறுதியாகிவிடுவதால் முதல் படியில் காலை வைக்கும்போதே உயரே செல்ல இருப்பவருக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதானே. எனவேதான் பிறவியின் நோக்கத்தைஅறிந்தபோதே அவருக்கு பேரின்பம் ஏற்பட்டிருக்கின்றது.

ஒரு நடைமுறை உதாரணத்தை வைத்து இந்த பேரின்ப நிலையினை உணர்ந்து கொள்வோம். சில உயர் கல்வி படிப்பிற்கு(உம்- மருத்துவம்), அதற்குரிய அடிப்படைக்கல்வித்தகுதியில்(ESSENTIAL QUALIFICATION) தேர்ச்சியும் பிறகு நுழைவுத்தேர்வு (QUALIFYING EXAMINATION) எழுதுவது (தமிழகத்தில் தற்போது இளநிலை உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு கிடையாது). உயர் கல்வி படிப்பிற்கு மனுசெய்யும் மாணவன் அடிப்படைக் கல்வியிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், அதற்குரிய நுழைவுத்தேர்வு எழுதி அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அம்மாணவனின் மனம் எவ்வளவு மகிழ்ச்சியினை அடையுமோ, அந்த மனநிலைதான் இறை-உணர்வு-ஆன்மீகப்பயிற்சியில் முதல்படியான வாழ்வின் நோக்கம் அறிதலில் ஏற்படும். இறை உணர் ஆன்மீகத்தில், சாதகர் பேரருளார்களின் வழிகாட்டுதலைக்கொண்டு, சுயமாகச் சிந்தித்து பிறவியின் நோக்கத்தை கண்டுபிடித்தலில் வெற்றி அடைவது முதல் அம்சமாகும். இதனையே வேறுவிதமாக சொல்வதென்றால் அறிவிற்கு தெளிவை ஏற்படுத்துதல் அவசியமாகின்றது என்பதனை மகரிஷி அவர்களின் அனுபவத்தால் அறியலாகின்றது.

எதனை வைத்து அம்மாணவனுக்கு அந்த உயர் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு முன்பே மகிழ்ச்சியினைத் தருகின்றது? காரணம் அம்மாணவர் அவ்வுயர் படிப்பின் சிறப்பைப் பற்றியும், அதனை முடித்துவிட்டு சமுதாயத்திற்கு அவர் புரிய விருகின்ற சேவையைப்பற்றியும் அவர் முன்னரே மனவுருவாகத் தெரிந்திருக்கிறார். எனவே அவ்வுயர் படிப்பிற்கான காலம் நான்கு/ஐந்து வருடங்கள் முடியும் முன்னரே அம்மாணவர் மகிழ்ச்சியினை ஆரம்ப கட்டத்திலேயே அடைந்திருக்கிறார். அந்த உயர் படிப்போ உலகியல் வாழ்க்கையையோடு தொடர்புடையதாக இருக்கும். ஆனால் மகரிஷி அவர்களின் விஷயத்தில் இந்த படிப்பு மனிதனாகப்பிறந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உள்ளதால் பேரின்பம் அடைந்ததாக இருந்திருக்கின்றது. எப்போதுமே பேரின்பம் என்பது உலகியல் சார்ந்த விஷயங்களில் ஏற்படாது. பேரின்பம் என்பது ஆன்மா உய்வதற்கான காரியங்களுடன் தொடர்புடைய விஷயங்களில்தான் ஏற்படும்.
இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்து(28-08-2016-ஞாயிறு) வரை இச்சிந்தனையையே அசை போட்டுக் கொண்டிருப்போம். அடுத்த விருந்தில் இறை-உணர்-பேரின்பம்-ஏணியின் இரண்டாவது படியினைப்பற்றி சிந்திக்க இருக்கிறோம். இரண்டாவது படியில் ‘இறைஉணர்வு என்பது’ என்ன என்பதனைப்(WHAT ACTUALLY IS GOD- REALISATION AND WHAT DOES IT MEAN ACTUALLY) பற்றிய தெளிவினை அடைய இருக்கிறோம். எனவே அதற்கான சிந்தனையையும் அசைபோடுவோம்(LET US ASSIMILATE). வாழ்க வளமுடன்.

இன்றைய சிந்தனையின் சாராம்சம் யாதெனில், பிறவியின் நோக்கத்தை ஆய்ந்து சரியாகக் கண்டுபிடித்தால், அதுவே பிறவியின் நோக்கத்தை அடைவதற்கு மேலும் ஒரு சில படிகள் இருந்தாலும், அதாவது முதல் படியிலேயே, ஆரம்பத்திலேயே, பிறவியின் நோக்கத்தை முடிவாக அடையும்போது என்ன பேரானந்தம் கிட்டுமோ அதனை இப்போதே அடையலாம் எனத் தெளிவாக இயம்புவதை மகரிஷி அவர்களின் தன் ஆன்மீகவெற்றி அனுபவப் பாடலிருந்து அறிய முடிகின்றது. இறை உணர் பாதையில் பயணிக்கும் ஆன்மசாதகர்களுக்கு வெற்றி அடையும் உறுதிப்பாடும் கிட்டிவிடுகின்றது.

வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்


 

என்ன பிரம்ம ஞானிகளே! உண்மைதானே! வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.