பழக்கமும் விளக்கமும்-6/?

 

வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

 
பழக்கமும் விளக்கமும்-6/?

அறிவிற்கு விருந்து—236

19-10-2016—புதன்

வாழ்க வளமுடன்.

            சென்ற விருந்திலிருந்து விளக்கப்பதிவுகளுக்கு வலிவு/அழுத்தம் சேர்ப்பது பற்றி சிந்தித்து வருகிறோம். மேலும் அதற்கு வலிவு/அழுத்தம் சேர்ப்பது பற்றி இன்றும் சிந்திப்போம். விளக்கப்பதிவுகளே இல்லாமையாலும் அல்லது விளக்கப்பதிவுகள் இருந்தாலும் அதற்குபோதிய வலிவு/அழுத்தம் இல்லாமையாலும் பழக்கப்பதிவுகள் மனிதனை மனக்கவலையில் தள்ளிவிடுகின்றது. அதாவது மனக்கவலை எதனால் வந்தது/வருகின்றது என்று ஆராயும்போது, மனமேதான் காரணமாகத் தெரிகின்றது.  மனம் தடம் மாறி செய்த/செய்கின்ற செயல்களால் மனக்கவலை வந்தது/வருகின்றது. எனவே மனஓட்டத்தை நேர்மையான இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்..

தடம் மாறிய மன ஒட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வர. . .

வெவ்வேறு சூழல்களில் மனிதர்கள் வாழ்ந்து வந்தாலும், எல்லோருக்கும் பொதுவாக, இருபதாம் நூற்றாண்டில் வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான வழிகளை இயலாக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”

என்று திருவள்ளுவர் இருபதுநூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளவாறு, இருபதாம் நூற்றாண்டில்  மனக்கவலையை மாற்ற அருமருந்தாக, மனவளக்கலையை இயற்கை கருணையோடு அருளியுள்ளது.

மனக்கவலை அகற்ற புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆன்மீகம் அவசியம்:

     புனருத்தாரணம்(revive) செய்யப்பட்ட ஆன்மீகம் இனிமேல்தான் வரவேண்டுமா? இல்லை. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டாகிவிட்டது. மனவளக்கலைதான் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆன்மீகம். எட்டிக்காயாக இருந்து வந்த ஆன்மீகத்தை, ஆழ்ந்த-ஆன்மீகத்தில் உள்ள பயத்தையும் நீக்கி, மிகுந்த விருப்பத்தை ஏற்படுத்தி, இறைஉணர் ஆன்மீகமாக புனருத்தாரணம் செய்யப்பட்டுவிட்டது.

       இங்கே ஒன்றை கவனிக்க வேண்டியது மிக மிக அவசியமானதாக உள்ளது. ‘தாள்சேர்வது’ என்பதற்கு பொதுவான விளக்கம் ‘இறைவனது அடிகளைப்பற்றுவது’ எனப்படுகின்றது. ஆனால் மகரிஷி அவர்களின் உட்பொருள் விளக்கத்தை அவர் இயற்றியுள்ள நூலில் பக்கம் 20-21 இல் காணவும். மெய்யுணர்வு அடைந்த குருவழியாக ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று கண்களை உடைய அறத்தைப் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் தடம் மாறிய மன ஒட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும், துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்; வேறு எந்த வழியுமே இல்லை விமோசனம் பெறுவதற்கு என்பதனை ஆணித்தரமாக கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனக்கவலையை மாற்றுவதற்கான வழி எடுத்துரைக்கப்பட்டிருந்தாலும், அதனை சமுதாயம் பின்பற்றத் தவறிவிட்டது. அல்லது மெய்யுணர்வு அடைந்த குருவழியாக கல்வி கற்கும் நிலை தடைபட்டுபோய்விட்டது எனலாம். ஆனால் இருபது நூற்றாண்டுகள் கழித்து அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு குரு-குலக் கல்வி என்பது தற்போது சாத்தியமில்லாவிட்டாலும், நவீன-விஞ்ஞான காலத்திற்கேற்ப குருவும், மாணவனும் தொலைவில் இருந்தாலும் குரு-சீடர் உறவு என்கின்ற முறையில் ஆன்மீகம் மனவளக்கலை எனும் வாழ்வியல் கலையாக அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும்படியாக புனருத்தாரணம்(revive) செய்யப்பட்டுள்ளது. இதுவரை விளக்கப்பதிவிற்கு வலிவு சேர்ப்பது பற்றி சிந்தித்தோம். வாழ்க்கையில், விளக்கங்கள் எப்போதிலிருந்து பெறப்பட்டு அதனை பயிற்சி செய்து பழக்கமாக கொண்டுவருவது பற்றி இனி சிந்திப்போம். பழக்கத்தைப் பற்றிய பழமொழிகளை நினைவு கூர்வோம்.

பழக்கத்தைப் பற்றி பழமொழிகள் கூறுவதென்ன?

      தமிழ் மொழியில் ஆயிரமாயிரம் பழமொழிகள் உள்ளன? பழமொழிகள் என்பது என்ன? மக்களிடையே நீண்ட காலமாக வழங்கி வருவது பழமொழி. பேசும்போது, தான் கூறும் கருத்திற்கு ஆதாரமாகவும், உதாரணமாகவும் காட்டப்படுவதுமான கருத்துத்தொடர்தான் பழமொழி.

      நாம் இப்போது விளக்கப்பதிவு பழக்கப்பதிவிடம் ஏன் தோற்றுப்போகின்றது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அச்சிந்தனையில் உண்மையை அறிகிறோம். உண்மையை அறிந்தாலும், உண்மை செயலுக்கு வரும்வரை ஆதாரம் தேடும் அறிவு. அந்த ஆதாரத்தைத் தரும் பழமொழி ஏதேனும் உள்ளதா என்றால் உடனே நமக்குத் தெரியவருவது இரண்டு பழமொழிகள். அவை:

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்.”

எனவே இவ்விரண்டும் என்ன கூறுகின்றன என்பதனை எல்லோருமே அறிவோம்.

மனிதனுக்கு அறஉணர்வு அவசியம். ‘வித்தை என்றால் பிரம்ம வித்தை, வேதாந்தம் பேசுவதால் மட்டும் கிட்டிடாது’ என்று மகரிஷி அவர்கள் அறிவுறுத்துகிறார். அப்பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

பிரம்ம வித்தை

வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்
வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது
அத்து விதமாகி அவன் எங்கு மாகி
அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்
சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை
சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்
தத்துவத்தின் முடிவான, தானேயான
தனையறிந்த வித்தை அது. தர்க்கம் வேண்டாம்.”

                                 . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

      எனவே பேசுவதால் மட்டுமே, அற உணர்வு கிட்டிடாது. அற உணர்விற்கு பிரம்ம வித்தையான இறை உணர்வு அவசியம். இதனை ஆன்மீகம் என்று கருதாமல் வாழ்வியல் கல்வியாகக் கருதுகிறார் மகரிஷி அவர்கள்.

      எனவே அரிச்சுவடி பள்ளியில் ஆரம்பத்திலேயே ஆரம்பிப்பதுபோல், ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றினைக் கொண்ட அறம் மனிதர்களிடையே மலர்ந்திட ஒழுக்கவியல் பாடம் கல்வியில் இணைக்கப்பட வேண்டும் என்கிறார். ‘இளமையில் கல்’ என்று அவ்வைத்தாய் இயம்பியுள்ளதுபோல் கல்வி ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால் ஒழுக்கவியல் என்னும் புதிய பாடத்தை ஏற்படுத்தி அதனை மாற்ற பாடங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை போன்று, கட்டயாயப்பாடமாக்கி பள்ளிக் கல்வியில் முதல் வகுப்பிலிருந்தே ஆரம்பித்து பன்னிரண்டாம் வகுப்புவரை நடத்தப்பட வேண்டும்.

நீதி வெண்பா கூறுவது என்ன?

‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்கின்ற பழமொழியை விளக்கும் வகையில் நீதி வெண்பாவில் உள்ள ஒரு பாடலை நினைவு கூர்வோம்.

கல்விக்கு இளமையே காலம்

வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்”

                                                                              . . .  நீதி வெண்பா – 7

பாடலின் பொருள்:

     கோவிலிலிருந்து சுவாமியை தூக்கிவரும் வளைந்த பல்லக்குத் தண்டு எங்கே விளைகிறது? எங்கேயும் பல்லக்குத் தண்டு வளைந்திருப்பதுபோல் மூங்கில் வளர்வதில்லை. மூங்கில் வளர்கின்ற காலத்திலேயே அதைப் பல்லக்குக்குத் தேவைப்படும் மாதிரியில் வளைத்து வளரவிடப்படும். அது முற்றிய பின்னர் அதைப் பல்லக்குக்குப் பயன்படுத்துவர். இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுகிறோம். இக்கருத்தை வலியுறுத்துகின்றது நீதிவெண்பாவில் உள்ள பாடல்.

ffc-236-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81

                                           நன்றி: http://sathyasenthil77.blogspot.in/2014_01_01_archive.html

       மூங்கில் வளரும்போதே, அதாவது இளமையாக இருக்கும்போதே, பல்லக்குத் தண்டு போல் வளைத்துவிடப்பட்ட மூங்கில் பின்னர் கோவிலில் சுவாமியைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயர்கின்றது. அவ்வாறு வளைத்து விடாத மூங்கிலின் கதியை பரிதாபமானது என்கின்றது பாடல்.  ஏன்? அவ்வாறு இளமையில் வளைத்துவிடப்படாத மூங்கில் கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத்திரியும் என்கின்றது. இதுபோல், அவ்வையார் இயம்பியுள்ளதுபோல் இளமையில் கற்கின்றவர்கள் மேல்நிலையையும்(இன்பத்தையும்), அவ்வாறு கல்லாதவர்கள் கீழ் நிலையையும்(துன்பத்தையும்) அடைகின்றனர் என்று எச்சரிக்கின்றது பாடல்.  எனவே இளமையில் கல் என்பதற்கேற்ப இனிவரும் சமுதாயத்திற்கு, இளமையிலேயே கல்வியோடு வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல்-ஆன்மீகக் கல்வியினை அமுல் படுத்துவோம்.

      அவ்வாறு இளமையில் கல்வியோடு ஆன்மீகக் கல்வி இல்லாத காலத்தில் பிறந்து இளமைப்பருவத்தை தாண்டியவர்களுக்கும் இறைஉணர் ஆன்மீகக்கல்வி பயின்று இப்பிறவியிலேயே வெற்றிபெற வழி இருக்கின்றது என்பதனை உறுதியோடு கூறுகிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள், தான் எய்திய நிலையை, நாமும் அடையமுடியும் என்பதற்கு “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று உத்திரவாதத்தை அளிக்கிறார். பிறவிக் கடல் நீந்தலாம் என்கிறார். அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிவோம்.

வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்.