நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 2 / 2

வாழ்க வையகம்!                                                                                     வாழ்க வளமுடன்!!

நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 2 / 2

அ.வி. 333

03-04-2022-ஞாயிறு

       வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமெரிக்காவில்  பயிற்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு மனதைப்   பற்றிய பாடம் நடத்துகிறார்.

ஐந்தறிவு சீவன்கள் வரை உருவாகிய புலன் உணர்க்கருவிகள் புற நிகழ்ச்சிகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை  மட்டுமே உணர்வதற்காக உருவாகின. ஆனால் ஆறாம் அறிவிற்கு என்று தனியாக புலன் உணர்க்கருவி ஏதும்  உருவாகாவிட்டாலும், புலன்களின் உதவியின்றி, ஆறாம் அறிவு உணர வேண்டியது ஒன்று இருக்கின்றது.

பேரறிவு ஒரறிவிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து, ஆறு அறிவு வரை தன்மாற்றம் அடைந்துள்ளதால், ஒரறிவிலிருந்து ஐயறிவு வரை உணர்வதற்கென்று தனித்தனியாக, தொடுஉணர்வு, சுவை உணர்வு, ஒலி உணர்வு, ஒளி உணர்வு, நுகர் உணர்வு என்று ஐவகை உணர்வுகள் இருந்தது போல் ஆறாம் அறிவிற்கு உணர்வதற்கென்று ஓர் உணா்வு இருக்கின்றது. அதனை உணர்ந்தே ஆக வேண்டும் ஆறாம் அறிவு. அந்த பிரத்யேக உணர்வைப் பெற்றால்தான் மனிதன், வள்ளுவர் கூறும் பிறப்பாகிய பெருங்கடலில் நீந்தி கரை சேர முடியும். மனக் கவலையையும் மாற்ற முடியும்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவா் நீந்தார்
இறைவன் அடி சேராதார்”.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”.

இந்த இரண்டு குறளிலும் “இறைவன் அடி சோ்தல்” என்றும், “தாள்சோ்ந்தார்க்கு அல்லால்” என்றிருக்கின்றது. அதன் பொருள், அரூபமாகிய இறையினுடைய “பாதங்களைச் (அடி,தாள்) சோ்தல்” என்பதன் பொருள், பின்னப்பட்ட (Fractioned) அரூபமாகிய சிற்றறிவு, அகண்ட அரூபமாகிய பேரறிவுடன் ஒன்றிணைதலாகும். இது தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் – அறிவு முழுமை அது முக்தி” என்பதாகும்.

அந்த பிரத்யேக உணர்வு என்பது, புறத்தை உணர்வதோடு மட்டுமல்லாது அகத்தையும் உணர்வதாகும். அகத்தை உணர்வதற்கு புலன்கள் தேவையில்லை. ஏன்? புறத்தே காணப்படுபவைகள் எல்லாம், பரிமாணங்களைக் (DIMENSIONS) கொண்ட (shape and image) பருப்பொருட்களும், அதிலிருந்து வரும் நிகழ்ச்சிகளாகும். எனவே புற உணர்விற்கு புலன்கள் தேவையிருக்கின்றன. ஆனால் ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காகத் தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது.

அகமாகிய உள்ளத்தில் எந்த பருப்பொருளும் இல்லை.

மாறாக அரூபம் ஆனால், பருப்பொருள் உருவாகக் காரணமாக இருந்த மெய்ப்பொருளாகிய பேரறிவே மனதின் மறுமுனையான உள்ளமாக உள்ளது.

எனவே அரூபமாகிய ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காக வந்துள்ளதால், அதற்கெனப் பிரத்யேகப் புலன் ஏதும் உருவாகவில்லை.

ஆகவே விலங்கினங்கள் வரையில் புற நிகழ்ச்சிகளை உணர்ந்த பேரறிவு மனித வடிவில், புற நிகழ்ச்சிகளுக்கான காரணம் என்ன, அவற்றின் மூலமும், முடிவும் என்ன, அவை எவ்வாறு உண்டாகின்றன என அறிந்து வாழ்வதுதான், திருவள்ளுவர் கூறும் இயற்கையின் ஆதிநிலை/இறை  ஆறாம் அறிவாக மலர்ந்ததன் நோக்கம். இயற்கையே/இறையே, அறிவாக வந்துள்ளதால் நான் என்பது அறிவே, ‘நான் பார்க்கிறேன்’ என்கின்ற செயலில் யார் பார்க்கின்றது? அறிவுதானே பார்க்கின்றது. அப்டியானால் நான்=அறிவு என்கின்ற சமன்பாடுதானே வருகின்றது. ஆகவே நான் என்பது அறிவு. அறிவு இயற்கையின்/இறையின் ஆதிநிலையைிலிருந்து வந்துள்ளது. அப்படியானால் இயற்கையேதான்/இறையே தான் நானாக உள்ளது. இயற்கை/இறை நானாக (oneself) இருப்பதோடு மட்டுமல்லாது உலக மக்களாகிய 790 கோடி நான்களும் இயற்கையே/இறையேயாகும். இயற்கையே ‘நானாக’ இருப்பதால், ‘நானின்’ (aim of Self)நோக்கமும் இயற்கையின் நோக்கமும் ஒன்றேயாகும். இவ்வாறாக நான் யார் என்கின்ற வினாவிற்கு விடை கருத்தியலாக அறியவேண்டும். அவ்வாறு நான் யார் எனக் கருத்தியலாக அறிந்ததோடு மட்டுமல்லாது, தொழிற் கல்வியில் கருத்தியல் பாடத்துடன் செய்முறையும் உள்ளது போல், இறை உணர் ஆன்மீகத்திலேயும் உள்ள செய்முறைப் பயிற்சியில் (அகத்தவம், தற்சோதனை) வெற்றி பெற வேண்டும். அதாவது கருத்தியலாக அறிந்ததை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுப்பயனை அடைய முடியும். அப்பயன்  துன்பமில்லா பேரின்பவாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவை ஆகும்.

செய்முறைப் பயிற்சியில் உறுதியுடன் அறிவதற்கு சில காலம் தேவையிருக்கின்றது. அந்தக் காலத்தின் அளவு

அவரவா்களின் ஆர்வம்,

கைமேல் பலனை எதிர்பார்க்காத தளரா விடாமுயற்சியினைப் பொருத்திருக்கும்.

புலன்வழி வினைப்பதிவுகளின் அழுத்தம் ஆகியவைகளைப் பொருத்திருக்கும்.

இருப்பினும் ‘நான் யார்’ என்பதனை கருத்தியலாகச் சந்தேகமின்றித் தெளிவுடன் அறிவதால், செய்முறை பயிற்சியில் ஆர்வமும், முயற்சியில் அயரா விடாமுயற்சியும் கைக்கூடும். அதன் விளைவாக புலன் வழி வினைப்பதிவுகளின் வேகமும், அழுத்தமும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வர, செய்முறைப் பயிற்சியில் நான் யார் என உறுதியுடன் அறிவதற்கு தேவைப்படும் காலம் சுருங்கி வரும். அதாவது அகத்தவத்தின் முடிவு விரைவில் கைகூடிவிடும்.

ஒரு மனிதன் வாழ்க்கையை நான் யார் என அறிவதற்காக பயன்படுத்தாத போது, இயற்கையின் நோக்கத்தை அறியாது, அறியாமையில் வாழும்போது இயற்கைக்கு முரணான வாழ்க்கைதான் வாழமுடியும். இயற்கைக்கு முரணாக வாழும் போது இயற்கையின் இனிமை கெடும். இயற்கையின் இனிமையைக் கெடச்செய்தால் விளைவுகளும் துன்பங்களாகத்தானே (miserable life) வரும். பிறவிப்பிணிக்கு ஆளாகி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இதே miserable life ஐத்தான் வாழ வேண்டி வரும். அல்லது வம்சாவளியின் வழியாக துன்பம் தரக்கூடிய விளைவுகள் வரநேரிடும்.

எந்த ஒரு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றாலும் அதற்கான செயல் புரிந்தேயாக வேண்டும். நான் யார் என அறிந்து அதன் பயனை அடைவதற்கு மனவளக்கலையாகிய அகத்தவமும், தற்சோதனைப் பயிற்சியும் அவசியம். ‘நான் யார்?’ என அறிதலின் பயனை விரிவாகத் தெரிந்து கொள்வதால், பயிற்சி செய்வதற்கான ஊக்கமும், ஆக்கமும் வரும். ஏனெனில் மனித மனம் ஆதாயமில்லாமல் எதனையும் விரும்பாது (human mind is so calculative) என்பதால், நான் யார் அறிதலின் பயனை அறிந்து கொள்வது பயனளிக்கும். ஆகவே நான் யார் என அறிதலின் பயன்களையும், அறியாதலால் துன்பங்களையும் அறிய வேண்டும்.   நான்யார் என  அறிதலின் லாபமும்,  அறியாததன் நஷ்டமும்  “லாபமும், நஷ்டமும்” என்கின்ற தலைப்பில் அட்டவணைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

naan yaar-page-146-2

naan yaar-page-147-3

naan yaar-page-148-4

இறைவனை அறிவதை விட வேறு என்ன லாபம் உள்ளது? மற்ற லாபங்களெல்லாம் இதற்கு துணை இலாபங்களே.

இங்கே ஆதிசங்கரரின் கூற்றை நினைவு கூறுவோம்.

எது லாபம் என சொல்லத் தக்கது?

ஆன்மாவை அறிதல் என்கிறார் ஆதிசங்கர்.

அறிவு இருந்தும், அறிய வேண்டியதை அறியாமல் இருப்பதால் மயக்க நிலைதான் சாதாரண மனிதனிடம் காணப்படுகின்றது. இதனால் தனக்கும் இழப்பு.  அவ்விழப்பால், பிறருக்கும் (சமுதாயத்திற்கும்) நஷ்டம் தானே.

இழப்பால் துன்பம் தானே!?  தனி மனிதனுக்குத் துன்பம் இருக்கும் போது சமுதாயக் கூட்டுறவில் வாழும் அம்மனிதனால் பிறருக்கும் துன்பம் போய்ச்சேரும் .

இங்கே ‘ஒன்றே பலவானதை’ எடுத்துச் சொல்லும் அத்வைத தத்துவத்தை உலகுக்கு வெளிக்கொண்டுவந்த ஜகத்குரு ஆதிசங்கரர் என்ன அருளுகிறார் என்பதனை கவனிக்க  வேண்டும்.

“நான் பிரம்மம் அல்ல என்பது அறியாமை.  அந்த அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் ஆணிவேர்”

. . . ஆதிசங்கரர்.

இறைவனை அறியாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.

அறியவேண்டியது அறியாமலே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.

அறிய வேண்டியதை அறியாமல் வாழ்க்கை முடிந்து விடுவது என்பதா வாழ்ந்ததன்  லாபம்!?

     அறியாமையிலேயே பிறந்து,

     அறியாமையிலேயே வாழ்ந்து,

     அறியாமையிலேயே இறந்துவிடுவதுதானா மனிதப் பிறவி எடுத்ததன் பயன்?

     அடைய வேண்டியதை அடையவில்லை அல்லது அடைய முயற்சி செய்யவில்லை என்றால் அது இழப்பு தானே? நஷ்டம் தானே?

     நஷ்டம் ஏற்பட்டால் அறிவிற்கு கவலை தானே?

     கவலை என்பது துன்பத்தின் விளைவு தானே?

     ஆகவே ஜகத்குரு ஆதிசங்கரர் அறியாமை எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர் என்று     எவ்வளவு உண்மை என்பது விளங்குகின்றது.

     வருங்காலத்தில் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துவரும் இக்காலத்தில் மனிதர்கள் அனைவருமே    விஞ்ஞானத்தின் துணைகொண்டு எளிதாக தான் யார் என மிகத்தெளிவாக அறியும் நிலை உருவாகி வந்து கொண்டுதான் உள்ளது மனவளக்கலையால் என்றால் அது மிகையாகாது.

எனவே நீதிநெறி உணர்மாந்தராகி வாழும் நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.

   வாழ்க திருவேதாத்திரியம்!                வளர்க திருவேதாத்திரியம்!!