குரு – சீடர் உரையாடல் பயிற்சி-5

வாழ்க மனித அறிவு!                                வளர்க மனித அறிவு!!

lotus

குரு – சீடர் உரையாடல் பயிற்சி-5

பேரின்பம்

நாள்- 27-05-2018-ஞாயிறு
உ.ச.ஆ.27-05-33.

Maharishi

guru seedan

கண்களில் தாரையாக வழிந்தோடும் கண்ணீரை துடைத்தவாறு அமைதியுடன் அமர்ந்துள்ளார் சீடன். தான் வருவதை அறிந்து எழுந்திருக்க முயல்வதை கவனிக்கிறார் குரு.

குரு: உட்கார் குழந்தாய்! உட்கார்.

சீடன்: (வார்த்தைகள் ஏதும் வராதநிலையில் இருகரங்களைக்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறார்)

குரு: வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்ன…..? நீண்ட நேரம் அழுதுள்ளாய் போலுள்ளது. உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா?! எவரொருவருக்கு இறைவனை நினைக்கும்போதே கண்களில் நீர்வருகிறதோ அவருக்கு அதுவே கடைசி பிறவி. இதை நான் கூறவில்லை. அவதார வரிஷ்டரான* இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார். அது சரி இறைநிலை தவம் அப்படியென்ன உன்னில் மாற்றத்தை கொடுத்துள்ளது?

சீடன்: எப்படி கூறியுள்ளார் கவனித்தீர்களா ஸ்வாமிஜி, நம் மகரிஷி அவர்கள் இறைநிலைத்தவத்தில்! இறைநிலையின் தன்மாற்ற சரித்திரத்தை அப்பட்டமாகவல்லவா கூறிவிட்டார்!

குரு: That is our Vethathiri Maharishi!

சீடன்: Absolutely swamiji! Maharishi is Great! ஸ்வாமிஜி. நான் பலமுறை இங்கு இறைநிலைத் தவத்தில் கலந்துகொண்டு தவம் இயற்றியுள்ளேன். ஆனால் இன்று கிடைத்த இன்ப அனுபவத்தைப்போல் என்றுமே கிடைத்ததில்லை. அப்படி ஒரு அனுபவம்! அப்படி ஒரு திருப்தி!

குரு: இன்ப அனுபவம்… திருப்தி….ஆஹா..!

சீடன்: ஆம் ஸ்வாமிஜி!  மனதிற்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இதுபோல எப்பொழுதும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறது எனது மனம்.

குரு: என்ன சொன்னாய்..!? ‘ஏங்கிக்கொண்டிருக்கிறேன் நான் என்று கூறாமல், ‘ஏங்கிக்கொண்டிருக்கிறது எனது மனம்’ என்று கூறுகிறாய். வாழ்க வளமுடன்! ஆம் இந்த மனமேதான் பந்தந்திற்கும் காரணம்; மோட்சத்திற்கும் காரணம்.

சீடன்: ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வாமிஜி!

குரு: சந்தேகமா!?

சீடன்: ஆம் ஸ்வாமிஜி. இன்றைய தினம் தவத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஏன் ஸ்வாமிஜி எப்பொழுதும் கிட்டுவவதில்லை?

குரு: உன்போன்ற ஆரம்பகால சாதகர்களுக்கு இப்படியொரு அனுபவம் கிட்டுவது பாக்கியமே! மகரிஷி அவர்கள் தான் எழுதிய ‘சமுதாய சிக்கல்களுக்கான ஆய்வுத்தீர்வுகள் எனும் புத்தகத்தில் மூன்றாம் சிக்கல் எனும் மூன்றாவது அத்தியாயத்தில் மனித உடலும் மனமும் சார்ந்த செயல்களையும் மதிப்புகளையும் அறியாமை; இன்ப துன்பத்தின் இயல்பு; அவற்றிற்கான உண்மைக் காரணங்கள்; மனதின் தன்மையும் அதன் அகநிலை மற்றும் புறநிலை செயல் வல்லமைகளும்.’ எனத்தலைப்பு வழங்கி அதில் பேரின்பத்திற்க்கான வரையறையைக் கொடுத்துள்ளார்.

சீடன்: பேரின்பத்தை வரையறுத்துள்ளாரா!!!?

குரு: ஆம். அப்பேரின்பத்தை வரையறுக்க நம் அருளாளர்கள்தான் எப்படி முட்டிமோதியுள்ளனர் தெரியுமா? ஒரு அருளாளர் தனக்கு துன்பம் வந்தபோதும் அந்த ஈசன்நிலையை, மாசில்லாத வீணையின் நாதம் (ஒலி), அந்திபகலில்லா மாலை நேர மதி(ஒளி), தென்றலின் இதமான தீண்டல் (அழுத்தம்) நறுமணம் வீசும் மலர்களை (மணம்) வட்டமிட்டு தேனைச் சுவைக்கும் வண்டுகளின் ரீங்காரம், குளிர்ச்சியான பொய்கை போன்றது என சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய பஞ்ச தன்மாத்திரைகள் மூலம் விவரிக்கிறார். வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரையறை, சற்று மாறுபட்ட கோணம்.

(இச் சம்பாஷணைக்கிடையில் மகரிஷி அவர்கள் எழுதிய ‘சமுதாய சிக்கல்களுக்கான ஆய்வுத்தீர்வுகள் புத்தகத்தை ஒரு தொண்டர் கொண்டு வருகிறார். அப்புத்தகத்தை பெற்றுக்கொண்ட குரு அதனை சீடனிடன் கொடுத்து….)

எங்கே அந்த 23ம் பக்கத்தில் உள்ள பேரின்பத்திற்க்கான வரையரையை படி பார்க்கலாம்!!


சீடன்: “இறைநிலையான மனஅலை விரிந்த சுத்தவெளியுடன் அபூர்வமாக ஒன்றிணைந்து தனது சொந்த ஆற்றலையே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளிலும் அதன் செயல் ஒழுங்காக மெய்யுருவாக்கிக்காணும்போது அது இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வாக அமைகிறது. இதுவே பேரின்பம் ஆகும்”.


குரு: இதில் கவனித்தாயா அபூர்வமாக (Rarely) என்று கொடுத்துள்ளார். மனமானது துன்பம், இன்பம், அமைதி என்ற படிகளைக் கடந்த நிலையில்…இன்னும் சுருக்கமாக கூறவேண்டுமென்றால் மனம் ஒடுங்கிய நிலையில் அமைதியாக இருக்கும் போது இந்த அபூர்வநிலை நமக்கு வாய்த்து விடுகிறது. மனம் விரிந்த நிலையிலேயே இருக்கும்போது நீ கூறியவாறு இன்பமும் திருப்தியும் கலந்த உணர்வு அதாவது பேரின்ப நிலை சித்திக்கிறது. எப்பொழுதெல்லாம் அமைதி நிலையில் மன விரிவு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் பேரின்பமயம் தான்! உறைந்து உறைந்து இந்நிலையை பழகிக் கொள்ளச்சொல்கிறார் நம் குருதேவர். இந்த பேரின்ப – பிரம்மானந்த நிலையைப் பற்றி மேலும் விரிவாக மற்றோரு சமயத்தில் discuss செய்வோமா?

சீடன்: அப்படியே ஸ்வாமிஜி! மிக்க நன்றி ஸ்வாமிஜி!

குரு: வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!

*அவதாரங்களுள் தலை சிறந்தவர்

வாழ்க அறிவுச் செல்வம்!                            வளர்க அறிவுச் செல்வம்!!