ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 6/?

வாழ்க மனித அறிவு                                                                 வளர்க மனித அறிவு
FEAST FOR CONSCIOUSNESS – FFC – 190
அறிவிற்கு விருந்து – அ.வி. –   190
                                                           18-05-2016—புதன்
 ffc-190-titlekural_137 

 பொருள்:  ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத்தகாத பெரும் பழியை அடைவர்.

         ‘மேம்பாடு’ மற்றும் ‘பெரும் பழி’ என்பது பற்றி,

         அறிஞர் திருவள்ளுவர் நாமெல்லாம் உய்ய வேண்டும் என்று விரும்பி,

         மீண்டும் பூவுலகிற்கு வந்து, நேரிடையாகவே நமக்கெல்லாம், ‘ஒழுக்கம்’ என்கின்ற பொருள் பற்றி கூற விரும்பினால்,

         எவ்வளவுத் தெளிவாகவும், எவ்வளவு அக்கறையுடனும் இப்போதுள்ள சமுதாயச் சூழலில் விளக்குவாரோ,

         அதில் எள்ளளவும்(சிறிதும்) குறையாமல்,

         இப்போது நாம் அறிந்து கொள்ள திருவள்ளுவர் சூக்குமமாக எழுந்தருளி சத்தசங்கத்தை நடத்தித்தருமாறு அவரை இறைஞ்சுகிறோம்.

        இந்தக் குறளின் பொருளை அறிந்து திருவள்ளுவரை போற்றி மகிழ்வோம். அதே நேரத்தில் திருவள்ளுவரின் கீழ்படிதலுள்ள மாணவர்களாகத் திகழ்ந்து ஒழுக்கச்சீலர்களாக வாழ்ந்து, மகரிஷி அவர்கள் விரும்புகின்றவாறு இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைவோமாக!

    மேம்பாடு என்றால் என்ன? இருக்கும் நிலையிலிருந்து அடையும் உயர்வான நிலை(upliftment; betterment). அப்படியானால் எது மேம்பாடு அடைய வேண்டும்? யாருக்கு மேம்பாடு தேவை? அறிவு மேம்பாடு அடைய வேண்டும். ஆன்மாவிற்கு மேம்பாடு தேவை.   ஆன்மா எதற்காக மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக்கொண்டிருக்கின்றது என்பதனை, அனைவருமே, வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே அறிந்ததன் மூலம் அறிவர். ஆன்மா தன்னைத் தூய்மை செய்துகொண்டு பிறவிப்பயனை அடைய வேண்டும்.

   ஆன்மா, ஆதிமனிதனிலிருந்து பல லட்சம்(3,25,000) பிறவிகளாக ஒழுக்கமின்மையால் வந்துள்ள தன்முனைப்பு, பாவப்பதிவு, மாயை ஆகிய களங்கங்களை ஏற்று பிறவித்துன்பத்தை அனுபவித்து வருகின்றது. எனவே, இப்பிறவியிலாவது, ஆன்மா பல லட்சம் பிறவிகளாக ஏற்றி வந்துள்ள பழிச்செயல் பதிவுகளை நீக்கிக் கொண்டு மனவளக்கலையின் இறுதிப்பயனான ‘அறிவு முழுமை’ அடைதலையே ‘மேம்பாடு’ என்றும் அதனை ஒழுக்கத்தால்தான் அடையலாம் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.

       மனிதன் ஒழுக்கம் தவறும்போது, எப்போதுமே விழிப்புடன் ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற  இறைக்கும், மனிதனுக்கும் இடையே, திரையை விரித்துவிடும் தன்முனைப்பு.      

        அடுத்ததாக பொய், களவு, சூது, கற்பழிப்பு, கொலை போன்ற பஞ்சமகா பாதகங்கள் செய்ய நேரிடலாம்.

    அடுத்ததாக, எதனை அறிவதற்காக ஆன்மா பிறவி எடுத்ததோ, அதனை மறந்து மாயையில் சிக்கித் தவிக்கலாம் அன்றோ!

   இதனைத்தான் திருவள்ளுவர் ‘ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் ‘பெரும் பழியை’ அடைவர்’ என்கிறார். ஏனெனில் ஒழுக்கம் என்பது என்பது என்ன? ஒழுக்கம் என்பது ‘ஒ, ழு, க், க, ம்’ என்கின்ற வெறும் ஐந்தெழுத்துக்களால் ஆனதல்லவே! மேலானதான நெறியைப்பின்பற்றி ஒழுகுவதனை, ஒழுக்கம் என்றும், அதனை உயிரைவிட மேலானதாகக் கருதப்படவேண்டும் என்றும் கூறுகிறார் அறிஞர் திருவள்ளுவர்.  எனவே அனைவருமே ஒழுக்க வாழ்வு வாழ்ந்திடல் அவசியம். வேதாத்திரிய உலக சமாதானத் திட்டங்கள் அமுல் படுத்திய நிலையில் எல்லோரையும் ஒழுக்கத்துடன் வாழ இயற்கை/இறை வழி செய்யும்.

   வேதாத்திரிய ‘ஒழுக்கத்தின்’ வரையறையின்படி ஒழுக்கம் என்பது புண்ணியம் என்றும், ஒழுக்கமின்மை புண்ணியத்திற்கு எதிரான பாவம் என்பதனை அறிவோம்.   இருப்பினும் எண்ணிறந்த அருளாளர்களின் வாயிலாகக் இவ்வளவு விளக்கங்கள்  கிடைத்திருந்தாலும், சமுதாயம், ஒழுக்கம் என்கின்ற ரயில் தண்டவாளப் பாதையில்(rail track), வாழ்க்கை எனும் ரயிலை(Life train) ஓட்டமுடியாமல் தவிக்கின்றது.

    ஒழுக்கத்தை உடமை என்று திருவள்ளுவர் இரண்டாயிரத்து நாற்பத்தோரு வருடங்கள் முன்னரே அறிவுறுத்தியும், இன்னமும் ஒழுக்கத்தை தனது சொத்தாக, உடமையாக ஆக்கிக் கொள்ளாமல் ஏழ்மையிலேயே வாழ்ந்து வருகின்றது சமுதாயம். விளைவாக, மனிதகுலம் தனது பூர்வீக சொத்தான அமைதியினை(Peace is the hereditary wealth of entire Humanity. Everyman is the legal heir to enjoy the precious wealth of Peace) அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றது. காரணம், மகரிஷி அவர்கள் கூறுகின்ற ‘மனிதனிடம் உள்ள தீமை பழக்கம்’ என்பதே.   எந்தப் பழக்கத்தையும் மனிதன் பழகி, அது வழக்கமாகி விட்டால், அதனை ஒரு பிறவி காலத்திலே கிடைக்கின்ற விளக்கப்பதிவால் போக்கிக் கொள்வது அரிதாக இருக்கின்றது.

   இருந்தாலும், பல்லாயிரம் பிறவிகளாக ஏற்றப் பழிச்சுமைப் பதிவுகளை, ஒரு பிறவி காலத்திலே மாற்றி அமைக்கலாம், அதற்கு இயற்கை கருணையோடு கொடுத்ததுதான் அகத்தவமும், தற்சோதனையும் என்று கூறி, நமக்கெல்லாம் தைரியத்தையும், உற்சாகத்தையும், அளித்துக் கொண்டு, உற்றதுணையாக மகரிஷி அவர்கள் இருப்பதனை அனுபவப் பூர்வமாக விளங்கிக் கொள்வோமாக!

   ‘வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுதல்’ என்று எல்லா அருளாளர்களும் கூறுகின்றனர். அதனை ஒவ்வொரு இறை உணர் ஆன்மீக சாதகர்களும்  உறுதிபடுத்திக்கொண்டு, வாழ்க்கையை அம்முறையில் செவ்வனே வாழ்வது ஒன்றே இயற்கையின் எதார்த்தத்தை அறிந்த அறிவின் உயர்ந்த நிலையை காட்டுவதாகும்.

   வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே கண்டுபிடிக்க வேண்டும். அறிவின் ஏழாவது செயல்பாடு என்ன என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ‘தன்னிலை உணர்வது’ என்பது இயற்கையின் வளங்களில் சிகரமானது என்பதனை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். ‘தன்னிலை உணர்வது’ என்பது இயற்கையின் வளங்களில் சிகரமானது என்பதனை ஏற்க அறிவு மறுக்கலாம். சிந்தித்துப்பார்த்தால் தன்னிலை உணர்தல் என்பது ஆறறிவுடன் வாழ்கின்ற மனிதர்களுக்கு ஏற்ப பொருத்தமானப் பேறாகும்.   வாழ்வின் நோக்கம் என்ன என்பதனை மகரிஷி அவர்கள், ‘வாழ்வின் நோக்கம் என்ன’ என்று கண்டுபிடித்த   அனுபவத்தை, அவர் அருளியுள்ள இன்பம், இன்பம், இன்பம், இன்பம்(ஞா.க. எண். 1849 ) என்கின்ற பாடல் வழியாக விளங்கிக்கொள்வது வாழ்வின் நோக்கம் என்ன என்கின்ற ஆராய்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். ஏதாவது ஐயங்கள் இருப்பின், அவை நீங்கி, வாழ்வின் நோக்கம் இறைஉணர்வு பெறுவதன் மனவுரு-மனத்தோற்றம் (mental picture — Concept of Realisation is to be understood first) ஏற்படும். முயற்சி செய்வோம்.

தெளிவு பிறக்கட்டும்! தெளிவு பிறக்கட்டும்!! தெளிவு பிறக்கட்டும்!!!வாழ்க வளமுடன்.

எனவே இச்சூழலில்தான் ழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்” என்று அறிஞர் ரூஸோ கூறியதை அறிந்து சத்சங்கத்தில் ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்’ என்கின்ற தலைப்பில் ஆறாவது நாளாக சிந்தித்து வருகிறோம். இப்போது தலைப்பை ஒட்டிய சிந்தனைக்குள் செல்வோம்.

‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம் என்ன? முதன் அறிவின்—அறியவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராட வேண்டியிருக்கின்றது என்கின்ற எதார்த்தத்தை கூறுவதோடு நின்று விடாமல் அதற்கான அறிவியல் விளக்கமும் தருகிறார். எதார்த்தத்தை மட்டும் கூறியிருக்கலாம். ஆனால் அதனுள் மறைந்துள்ள அறிவியல் உண்மையையும் கூறுகிறார். ஏன்? எந்த ஒரு குறைபாட்டையும், அதனை சரி செய்வதில் உள்ள சிரமங்களை கூறுவதோடு மட்டும் இருந்துவிடாமல்,

   அந்தக் குறைபாடுகள் ஏன் வந்தன,

   அதனைச் சரிசெய்வதில் என்னென்ன சிரமங்கள் ஏற்படுகின்றன, ஏன் ஏற்படுகின்றன என்கின்ற விளக்கங்களையும் கூறுவதால், தனிமனிதன் நிலையில், மனிதன் தனது குறைபாட்டினை சரி செய்துகொள்ளும் பயிற்சியில் உறுதியும், வெற்றி அடைவோம் என்கின்ற நம்பிக்கையும் ஏற்பட்டு தன்னைத்திருத்திக் கொள்வதில் தளராது விடாமுயற்சி செய்து வெற்றி கொள்ள முடியும்.

    குறைபாடு என்பது ஒரு தனிமனிதனிடம் மட்டும் இல்லை. பல கோடி தனிமனிதர்களைக் கொண்டதுதான் இந்த சமுதாயம். ஆகவே ஒரு தனிமனிதன் திருந்தியதால் வரும் பயன் மட்டுமே போதாது இந்த சமுதாயத்திற்கு.   சமுதாயத்தில் திருந்திய நல்வாழ்வு வாழாத அனைவருமே திருந்தி, நல்வழியில் வாழ வேண்டும்.

   ஆகவே சமுதாய அளவில் குறைபாடுகளைத் திருத்துவதற்கு, சமுதாயப் பொறுப்பாளர்கள்

  • சரியான நடவடிக்கைகளையும் எடுக்கவும்,
  • அதற்கான சீரான திட்டங்களையும்,
  • எவ்விடத்தில்,
  • எப்போது அத்திட்டங்களை
  • எவ்வாறு கொண்டு வரவேண்டும் என்று முயலும்போது,
  • ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதில் உள்ள அறிவியல் விளக்கம்’ கவனத்தில் கொண்டால் சிறப்பாக அமைய உதவியாக இருக்கும்.

    உதாரணத்திற்கு ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ போன்ற ஆன்றோர்கள் மொழிந்துள்ளதை கவனத்தில் கொண்டால், “ஆளும் வளரனும், அறிவும் வளரனும்” என்கின்ற திரைப்படப் பாடல் ஒன்று கூறுவதுபோல் குழந்தையிலிருந்து உடல் வளர்ந்து வருவதுபோல், அறிவும் வளரவேண்டியிருப்பதால், மாணவர்களிடையே ஒழுக்கத்தை இயல்பாக மலரச் செய்வதற்கு, பள்ளிக்கல்வியிலே ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை(ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள்) வாழ்க்கையில் மிக மிக அவசியமான, ஒழுக்கத்திற்கு முதல் கவனம் கொடுக்க வேண்டியிருப்பதால், மற்ற பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியம்போல் கூடுதலாகவே  முக்கியத்துவம் கொடுத்து, ஒழுக்கத்தைக் கட்டாயப் பாடமாக்கவேண்டும்.

     ஒழுக்கத்தை இயலாக்கிடவேண்டும். மற்ற பாடங்களில் காட்டும் ஆர்வத்தைவிட மாணவர்கள் இளம் வயதில் ஒழுக்கவியல் பாடத்தில் அதிக கவனமும், ஆர்வமும் காட்டுவர். ஏனெனில் ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் அறிவாக திகழ்வதால், அது ஒழுக்கத்திற்கு வருவதற்காகத்தான் காத்திருக்கின்றது. அதற்கு, இளம்வயது, பிராரப்த கர்மா சோ்த்துக் கொள்ளாத  பருவம் சரியானது. ஆகவே மற்ற பாடங்களில் உள்ள ஆர்வத்தைவிட ஒழுக்கவியல் பாடம் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவர் மாணவர்கள்.

   ஒழுக்கம் என்பது மரபணுவுடன் தொடர்புடையதால், தொடர்ந்த முறையான, பன்னிரண்டு வருட கருத்தியல் மற்றும் செய்முறைப் பயிற்சியாலன்றி ஒழுக்கப்பண்பை, மரபணுவில் பதிய வைக்க இயலாது. மரபணுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கு நூறு ஆண்டுகள் கூட ஆகும் எனக்கூறப்படுகின்றது. ஆகவே மரபணுத் தொடர்புடைய ஒழுக்கப்பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு மாணவப் பருவத்திலேயே ஐந்து வயதிலிருந்து பதினேழாம் வயதிற்குள் ஒழுக்கவியல் கல்வியினைக் கற்றுக் கொடுக்க  வேண்டும்.

     ஐந்து வயதிற்கு முன்னரும் தாய், தந்தையர்கள் குழந்தை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி அடிப்படை ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு முதல் ஆசிரியா்களான பெற்றோர்களும், ஒழுக்கத்தின் அவசியத்தை நன்கு உணர்ந்து, தங்களின் செராக்ஸ் நகல்களான குழந்தைகளுக்கு ஒழுக்கப்பழக்கங்களை கற்றுக் கொடுக்க, செராக்ஸ் நகலின் மூலமான(original)தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உதவுவதற்காகவே வேதாத்திரி மகரிஷி என்கின்ற கருணாமூர்த்தி மூலம் இயற்கை/இறை அருளியதுதான் மனவளக்கலை.

இத்தருணத்தில் தினமலா் 06-02-2011 அன்று வெளிவந்த தினமலர், சென்னை நாளிதழில் வந்துள்ள “நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதை மரபணுதான் தீர்மானிக்கின்றது” என்கின்ற செய்தியினை பகிர்ந்து கொள்வோம். அச் செய்தி வந்ததை ஒட்டி, அன்று, ஆன்ம செழிப்புறு இணையதள ஆசிரியா், 11-02-2011 அன்று அன்பர்களுடன் இ-மெயிலில் பகிர்ந்து கொண்ட சிந்தனை விருந்து இப்போது இணையதள சத்சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது, வாழ்க வளமுடன்.

gene_dinamar_news

dinamalar_news_06.02.2011

    அறிவின்–அறிவியாளர், மனிதகுல விடிவெள்ளியான, சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறையாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள், கல்வி என்பது

1)   எழுத்தறிவு,

2)   தொழிலறிவு,

3)   ஒழுக்கப்பழக்கறிவு,

4)   இயற்கைத்தத்துவறிவு

ஆகிய நான்கு அங்கங்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். விவேகானந்தர் கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள முழுமையை வெளிக் கொண்டுவரவேண்டும் என்கிறார். ஆகவே கல்வி என்பது ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால், முதல் வகுப்புக்குக் கல்வியிலேயே ஒழுக்கவியல் பாடத்தை மற்ற பாடங்களுடன் கட்டாயப்பாடமாக்கி கற்றுத்தரப்பட வேண்டும்.

   வாழ்க திருவேதாத்திரியம், வளர்க திருவேதாத்திரியம், வாழ்க மனிதகுலம். வளர்க மனித குலம். வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம் என்கின்ற எண்ண அலைகளை வான் காந்தத்தில் பரப்பியும், நிரப்பியும் வருவோமாக.  

அடுத்த விருந்தில் (22-05-2016—ஞாயிறு), பழக்கத்திற்கு விளக்கத்திற்கும் இடையே போராட்டமாக உள்ளதில் உள்ள அறிவியல் உண்மையை மெய்ஞான அறிவியலாளர் கூறுவதனை மேலும் அறிவோம். தொடரும்

 

     வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.