ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 4/?

FEAST FOR CONSCIOUSNESS – FFC –  188

அறிவிற்கு விருந்து – அ.வி. – 188

 11-05-2016—புதன்

kuRal-138_naRikku_viththaagum

ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் உள்ள, எட்டாவது கோணத்தில் ஒழுக்கத்தைப் பற்றி அருளியுள்ள குறளை நினைவு கூர்ந்து திருவள்ளுவரை சூக்குமமாக எழுந்தருளி இச்சத்சங்கத்தை நடத்திடவும், ஒழுக்கத்தை உடைமையாக்கிக் கொள்ள துணை நிற்குமாறும் இறைஞ்சுவோம்.

 பொருள்: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக்/அறத்திற்குக் காரணமாகும்.  தீய ஒழுக்கம் என்றும் துன்பத்தைத் தரும். 

    ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்கிறார் திருவள்ளுவர்.  குறளுக்குப் பொருள் கூறும் அறிஞர்கள், ‘இன்பத்திற்கு வித்தாகும் நல்லொழுக்கம்’ என்கின்றனர்.  அப்படியானால் நன்றியும், இன்பமும் ஒன்றா.  நன்றிக்குப் பொருள் இன்பமா? 

   எப்போது நன்றி கூறப்படுகின்றது? நன்றி உணர்வை வெளிப்படுத்தி மகிழ்வதற்கு நன்றி கூறப்படுகின்றது.  எப்போது நன்றி உணர்வு வருகின்றது? ஒருவர் நல்லதைச்  செய்யும்போது, அந்த நல்லதால் பயன்(இன்பமுறும்போது) பெறுபவர் பண்பாடாக நன்றி உணர்வைத் தெரிவித்து மகிழ நன்றி கூறுகிறார்.  எனவே செய்த நல்லதால் வருவது நன்றி உணர்வு.  நல்லது என்பது நல்ஒழுக்கத்தின் விளைவு.  ஆகவே நன்றி உணர்விற்குக் காரணமான செய்யப்படும் நல்லதற்கு வித்து ஒழுக்கம் என்கிறார் திருவள்ளுவர். 

சென்ற மூன்று விருந்துகளில் ‘ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்?’ என்று சிந்தித்து வருகிறோம். இதுவரை சிந்தித்ததை சுருக்கமாகச் சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.

1)   ஒழுங்காற்றலாகிய  இயற்கை/இறை மனித உடலில்  ஒழுங்காற்றலாக திகழ்ந்து கொண்டு, உடலை சீராக இயக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில்,   மனித மனதிலும்,   சீராக ஒழுங்குடன் இயங்கி வாழ்வில் ஒழுக்கம் மலர்வதற்கு, மனிதன் எவ்வாறு இறைக்கு  வழிவிட வேண்டும் என்பது  பற்றியும்,

2)   வள்ளுவர் கூறும் ஒழுக்கமுடைமையாகிய ஒழுக்கச்செல்வம் பூா்த்தி செய்யும்  மனிதனின் தேவை என்பது, மனிதன் மனிதனாக வாழ்வதுதான் என்றும்,

3)   எவ்வளவு சீக்கிரம், ஒழுக்க வாழ்க்கை வாழ்வது, பழக்கத்திற்கு வந்து வழக்கமாகி விடுகிறதோ        அவ்வளவு சீக்கிரத்தில் மனதுடன் போராட்டம் நடப்பது நின்று விடும்.  விளைவு — ஒழுக்க வாழ்வு அமைதியைத் தரும்  என்றும் அறிந்தோம்.

இன்றைய விருந்தில்,

        கருவில் திருஉடையவர்கள் தவிர, மற்றவர்கள் ஏன் ஒழுக்க வாழ்விற்கு  போராட வேண்டியிருக்கின்றது என்று அறிய இருக்கிறோம்.,

ஆதிமனிதனிடமிருந்து, கருத்தொடராக மனிதகுலம் வந்துள்ளதால்,  விலங்கினப்பண்பாகிய பிறர் வளம் பறித்தல்  கருமையப்பதிவுகளாக  வந்துள்ளன, ஆதிமனிதனுக்குப் பிறகு வந்த பல  தலைமுறைகளில், அவ்விலங்கினப்பண்பு செயலற்றுப் போகாமல்(மறையாமல்),  மனிதனிடம் ஒழுக்கமின்மையாக வடிவெடுத்துள்ளது  எவ்வாறு என்று பார்ப்போம்.  விலங்கினப்பண்பு என்பது பிறர் வளம் பறித்தல் ஆகும். பிறருடைய வளத்தை பறித்தலாகும். அது விலங்கினங்களுக்குரியது. விலங்கினங்களில், பிறர் வளம் பறித்தல் என்பது உணவைப் பெறுவதற்காக நடைபெறுகின்றது. விலங்கினங்களுக்கு  ஆறு அறிவைவிட குறைவாக உள்ளதால் அவற்றிடம் அன்பையும், கருணையையும் கொண்ட பண்பு என்பதனை எதிர்பார்க்க முடியாது.

ஆனால், ஆறாம் அறிவு மலர வேண்டிய மனிதனாக  வரும்போது, பிறர்வளம் பறித்தல் என்பது பிறருக்கு துன்பமளித்தலாகிவிடுகின்றது. மனிதனைப் பொருத்த வரை,

பிறருக்கு துன்பமளித்தல் என்பது,

தெளிவாக, சரியாக, அறிவுப்பூர்வமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேதாத்திரியத்திய,

ஒழுக்க வரையறையின் படி,  

ஒழுக்கமில்லாததே ஆகும். 

ozukkam-ozukkaminmai

இவ்வாறாக, விலங்கினப்பண்பாகிய பிறர்வளம் பறித்தலே ஒழுக்கமின்மையாக மாறி, பல தலைமுறைகளில் வாழ்ந்துவிட்டது ஆன்மா.  எனவே விலங்கினப் பண்பாகிய பிறர்வளம் பறித்தலே ஒழுக்கமின்மையாக–தீயொழுக்கமாகமாறி, அது ஆன்மாவிற்குப் அழுத்தமான பழக்கமாகிவிட்டது.  இந்நிலையில்—

pazhakkap padhvu

எதார்த்தம் என்பதால் அதன் போக்கிற்கு விட்டு விட முடியாது.

      எதார்த்தம் நல்லதாக இருந்தால் பரவாயில்லை.  எதார்த்தம் தீமையை அளிப்பதாக இருந்தால் அதனை கடும்முயற்சியுடன் பயிற்சி  செய்து மாற்றியே ஆகவேண்டும்.  அதற்கு தவம், தற்சோதனை அடங்கிய  மனவளக்கலை சிறந்த பயிற்சியாக உள்ளது.  இதுவரை ஆன்மீகம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது உலகியல் வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டாலும் சரி, தவத்துடன் கூடிய தன்னைத்திருத்திக் கொள்ளும் தெய்வீகப் பயிற்சியான தற்சோதனைப் பயிற்சி  இல்லை.

‘நல்லதையே எண்ணுதல் வேண்டும்’, ஆறுவது சினம்’, ‘பேரராசை பெருநஷ்டம்’ என்று அறிவுரைகள் இருந்ததே தவிர அதற்கான பயிற்சிகள் இல்லை.  இப்போது மனவளக்கலை அதனை கருத்தியலாகவும், செய்முறை பயற்சியாகவும் அளித்து வருகின்றது.  எனவேதான் மனவளக்கலை என்பது ஒரு சாதனை மார்க்கம் எனப்படுகின்றது.

aindhil_valaiyaadhadhu

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்று ஆன்றோர்கள், எதார்த்தத்தை கூறியுள்ளார்கள்.  இதன் பொருள் குழந்தைப்பருவத்தில்/இளமையில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கமே இறக்கும் வரை தொடரும் என்பதாகும்.  பழைய பழக்கத்தை மாற்றுவது கடினம் என்பதால் இளமையிலே நற்பழக்கங்களைக் பழகிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது அறிஞர்களால்.  அப்படியில்லாத காரணத்தால், ஒழுக்க வாழ்க்கை  வாழ்வதற்கு அறிஞர் ரூஸோ கூறியுள்ளது போல் மனதுடன் போராட வேண்டியிருக்கின்றது.

‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

போராட்டம் என்பது என்ன?– கயிறு இழுக்கும் போட்டி (tug of war)

ஒழுக்கமின்மை–பழக்கத்திற்கும், ஒழுக்கவாழ்வு—விளக்கத்திற்கும்(between habit and wisdom) இடையே கயிறு இழுக்கும் போட்டிபோல் (tug of war) போராட்டம் நடைபெறுகின்றது. 

    எண்ணிலடங்கா தலைமுறைகளில் ஏற்பட்டுள்ள ஆன்மாவின் பழக்கப்பதிவுகளின் அழுத்தத்தை, இப்பிறவிக்கு கொண்டு வந்துள்ள மனிதன், இப்பிறவியில்  விளக்கம் கிடைத்த பிறகு, ‘ஒழுக்க வாழ்வு வாழவேண்டும்’ என்கின்ற முடிவு எடுத்தாலும்,  விளக்கப்பதிவுகளின் அழுத்தம் மிக மிகக் குறைவாக இருப்பதால்  பழக்கப்பதிவை வெற்றி கொள்வதில் அதிக சிரமம் உள்ளதாக இருக்கின்றது.  இதனைத்தான் போராட்டம் என்கின்றனர் அறிஞர்கள்.  இதனை கயிறு இழுக்கும் போட்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கயிறு இழுக்கும் விளையாட்டுப் போட்டி என்பது, இரு குழுக்கள்(teams) எதிர் எதிராக நின்று கொண்டு  கயிற்றை, இழுக்கும்  விளையாட்டு.  அந்த விளையாட்டில் எந்தக்குழுவால் அதிக வலிமையுடன், கயிறு இழுக்கப்படுகின்றதோ, அந்த பக்கம் வலிமை குன்றிய குழுவிலுள்ளவர்கள் சாய்ந்து விடுவர்.  அவர்கள் தோற்றவர்களாகிவிடுவர்.

பழக்கப்பதிவிற்கும், விளக்கப்பதிவிற்கும் இடையே நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியில்,

  •   பழக்கப்பதிவின் அழுத்தம் அதிகமாக உள்ளதால்,
  •   விளக்கப்பதிவின் அழுத்தம் குறைவாக இருப்பதால்,
  •  பழக்கப்பதிவு விளக்கப்பதிவை, தன்பக்கம் இழுத்து  சாய்த்துக் கொள்கின்றது.

இதனைத்தான் இரண்டு அறிஞர்களும் ஒழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள போராட்டமாக எடுத்துக் கூறுகின்றனர்.  ஒழுக்கம் கடைபிடிப்பதில் உள்ள சிரமங்களை அறிஞர்கள் போராட்டம் என்பதனை  கீழே காட்டியுள்ள சுருக்கமாக விளக்கும் படங்கள் (Schematic Diagrams)மூலம் அறிந்து கொள்வோம்.

FFC-124-படம் 1-1-பழக்கத்திற்கும் வினக்கத்திற்கும்

FFC-124-படம் 1-2 பழக்கப்பதிவு விளக்கப்பதிவு

FFC-124-படம்-2 பழக்கதிற்கும் விளக்கத்திற்கும்

 படம்-1.1&1.2  கருவில் திருவில்லாதவர்கள் ஒழுக்கவாழ்வு வாழ்வதில் சந்திக்கும் போராட்டத்தினை எடுத்துக் காட்டும்  படம்.  ஒழுக்க வாழ்வு வாழ்வதில் உள்ள போராட்டத்தினை கயிறு இழுக்கும் போட்டியுடன் ஒப்பிடலாம். கயிறு இழுக்கும் போட்டி என்பதால், ஒரு குழுதான் வெற்றி பெறமுடியும்.  போட்டியில் இருகுழுக்களிலும்  சமமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருந்தாலும், மிகுந்த வலிமையுடன் கயிற்றை இழுக்கும் குழுதான் வெற்றி பெறமுடியும். இரண்டு குழுவிலும் சமமான எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருந்தாலும் ஒரு குழுவிற்குத்தான், அதிக வலிமையுடன் இழுக்கும் திறமை உள்ளது என்றிருக்கும் போது,  பழக்கப்பதிவிற்கும், விளக்கப்பதிவிற்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தில், பழக்கப்பதிவின் குழுவில் எண்ணிலடங்கா பிறவிகளின் பதிவுகள் இருப்பதால், விளக்கப்பதிவின் குழுவில், இந்த ஒரு பிறவியின் விளக்கப்பதிவு மட்டுமே உள்ளதால் பழக்கப்பதிவு வெற்றி பெறுவது எளிதாக உள்ளது.  எனவேதான் ஒழக்க வாழ்விற்கான கயிறு இழுக்கும் போட்டியில் பழக்கப்பதிவே வெற்றி பெற முடிகின்றது. காரணம் பழக்கப் பதிவு இன்று நேற்று ஏற்பட்டதன்று.  தொன்றுதொட்டு, காலங்காலமாக பழக்கப்பதிவின் ஒவ்வொரு பிறவியிலும் மீ்ண்டும் மீண்டும்,  மீண்டும் (மீண்டும்infinite — to the power infinite)அழுத்தம் பெற்றுள்ளதால் பழக்கப்பதிவு விளக்கப்பதிவை வெற்றி கொள்கின்றது. 

   அப்படியானால், விளக்கப்பதிவின் அழுத்தம் அதிகரிக்க எத்தனை தலைமுறை காத்திருக்க வேண்டுமோ என ஐயமும், அச்சமும் எழலாம்.   இப்பிறவியிலே மட்டும், பெற்ற  விளக்கப்பதிவுகளைக் கொண்டே, பழக்கப்பதிவை இப்பிறவியிலேயே வெற்றிக் கொள்வதற்காக இயற்கை கருணையோடு கொடுத்ததுதான் கருத்தியல், செய்முறைப் பாடங்கள் அடங்கிய திருவேதாத்திரியமாகும். எனவே கருவில் திருஉடையவர்களல்லாதவர்கள்கூட இப்பிறவியிலே திரு எய்த முடியும் என்கின்ற  உறுதியினை அருளுகிறார்  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

படம்-2-  கருவில் திரு உடையவர்களுக்கு  ஒழுக்க வாழ்விற்கான போராட்டம் என்பது எழ வாய்ப்பில்லை.  அப்படி ஏதேனும் போராட்டம் எழுந்தாலும் அவர்கள் எளிதில் பழக்கப்பதிவை வெற்றி கொள்வர்.  அவர்கள் முந்தைய பிறவிகளில் தீய வினைகளை சமன்படுத்தியவர்கள்.  மேலும் முற்பிறவியிலேயே, வாழ்வின் நோக்கம் என்பது என்ன என்று அவர்களின் ஆழ்மனது சிந்திருக்கலாம்.  அவர்கள் பண்பாளர்களாக, அல்லது பண்பாளராக ஆவதற்காகக் கருமையப் பதிவுகளை பிறக்கும் போது சொத்தாக கொண்டு வந்தவர்களாக இருப்பர்.

 அடுத்த விருந்தில் பழக்கப்பதிவிடம், விளக்கப்பதிவு தோற்பதற்குப் பின்னால் உள்ள அறிவியலை(hidden Science behind  the defeat of wisdom imprints (understanding) by imprints of  habits) வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளவாறு அறிவோம்.  தொடரும் 15-05-2016 ஞாயிறு.