எண்ணியது நிகழ்வதில் கருமையத்தின் பங்கு என்ன? 2/3
FFC-206
13-07-2016—புதன்
தூய்மையான கருமையமே எண்ணியதை முடித்து வைக்கும்
மனிதன் பொறுப்புடன் எண்ணுதல் வேண்டும்:
எண்ணியது முடிதல் வேண்டும் என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். இன்றைய விருந்தில் கருமையம் தூய்மையாக இருந்தால் எண்ணியது நிகழும் என்பது பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும், மகாகவி பாரதியாரின் தெளிந்த நல்லறிவு வேண்டும் என இறைவியை வேண்டும் பாடலின் பொருளையும் அறிவோம்.
ஒரு மனிதன் எண்ணுவது அவனால்தான் செயலுக்கு வரும் என்று சொல்ல முடியாது. பிறராலும் செயலுக்கு வரலாம். பெரும்பாலும் மனிதன் தனக்காகவே எண்ணுவதுதான் அதிகம். எண்ணியதெல்லாம் நிறைவேறிவிட்டால் மனிதனுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் நடைமுறையில் மனிதன் நினைப்பது அத்தனையும் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் நன்மையாக இருக்குமா என்றால் அவ்வாறும் சொல்ல முடியாது. இதற்கு என்ன காரணம்? பொறுப்புடன் மனிதன் எண்ணுதல் வேண்டும். மனிதன் எண்ணுவதில் உள்ள பொறுப்புகளாவன:
1) முதலில் என்ன செய்ய வேண்டும் என்றும், என்ன செய்யக்கூடாது என்பது தெரிய வேண்டும். நுண்மான் நுழைபுலன் வேண்டும்.
2) அடுத்ததாக எண்ணுவதைச் செய்ய மனதிற்கு திண்மையும் வேண்டும்.
3) செய்ய முடிந்ததை செய்யத்தக்கவாறு எண்ணவேண்டும்.
நினைப்பது நிகழக்கூடியதாக இருந்தாலும் அதனையும் நிகழக்கூடிய வகையில் எண்ணவேண்டும். அதாவது எண்ணியது நிகழவேண்டும்; நிகழக் கூடியதை எண்ண வேண்டும். மனிதனால் எண்ணமுடியும் என்பதால் எதைவேண்டுமானாலும் எண்ணி விடமுடியாது. எண்ணுவதில் பொறுப்பு அவசியமாகின்றது. மேலும் பொறுப்பாக எண்ணுகின்ற அவசியம் இயல்பாக அமைந்துவிட வேண்டும். அதற்கு என்ன வேண்டும்? கருமையத் தூய்மை வேண்டும். இதனை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார் என்று அவரது வைர மொழிகளின் வாயிலாக அறிவோம்.
எண்ணுதல் நிறைவேறுவதற்கு கருமையத் தூய்மை ஏன் அவசியம்?
“கருமையம் தூய்மையாக இருக்குமானால்,
1) என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும்,
2) எண்ணுவதைச் செய்வதும், செய்ய முடிந்ததை, செய்யத்தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கும் இயல்பாகிவிடும்.”
-வேதாத்திரி மகரிஷி அவா்கள்.
கருமையத்தூய்மை என்பது என்ன? முதலில் கருமையம் என்பது என்ன என்று அறிவோம். கருமையம் இயற்கையின்/இறையின் நீதி மன்றம். ‘அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்’ என்கிறாரே அருளாளர் திருவள்ளுவர், அந்த அகம்தான் கருமையம். ‘உள்ளம் பெரும் கோயில்’ என்கிறாரே அறிஞர் திருவள்ளுவர் அந்த உள்ளம் தான் கருமையம். கருமையத்திற்கு உருவம் இல்லை. உருவமில்லை என்பதால் கருமையம் இல்லை என்றாகிவிடாது. கருமையம் அரூபம், ரூபம் இதற்கிடையிலான அரூபா-ரூபம். உதாரணத்திற்கு காற்று. காற்றிற்கு உருவம் இல்லை. உருவமில்லாததால் காற்று இல்லை என்றாகிவிடுமா? காற்று இருப்பதனை தொடு உணர்வால் உணர்ந்து கொள்ள முடிகின்றதே, எனவே காற்று அரூபா-ரூப நிலையைச் சேர்ந்தது. அதேபோன்று கருமையம் அரூபா-ரூபமாக உள்ளது. எனவே கருமையத்தை தூய்மை செய்ய முடியும். கருமையத்தில் மனிதனின் பல்லாயிரம் பிறவிகளாக செய்த முத்தொழில்களான எண்ணம், சொல், செயல்கள் ஆகிய மூன்றும் பதிந்துள்ளன. அவற்றில் நல்லதும் இருக்கலாம். தீயதும் இருக்கலாம். ஆகவே விளக்கம் பெற்ற பிறகு
தீயவிளைவுகளைத் தரக்கூடிய பதிவுகளை செயலிழக்கச் செய்வதே கருமையத்தூய்மை என்பது.
பூஜை அறையை தூய்மையாக வைத்திருப்பதுபோல் கருமையத்தை தூய்மையாக வைத்திருத்தல்:
எவ்வாறு இல்லத்தில், இருக்கும் பூஜை அறையை தூய்மையாக வைத்திருப்பதில் அக்கறை கொள்கிறோமோ, அவ்வாறே இறை வீற்றிருக்கும் உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அக்கறைகொண்டு முழுமுயற்சியோடு முறையான பயிற்சிகள் செய்து, சத்சங்கத்தின் பயன்களைப் பெற்றும்,
இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தியும்,
இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் நம்மிடம் மலரச் செய்ய வேண்டும்/நிரூபிக்கச் செய்யவேண்டும்.
மனஅலையின்-மனதின் மறுமுனை-உள்முனை தெய்வமாக இருப்பதால், மனம் எங்கிருந்து புறப்படுகின்றதோ அவ்விடத்தை தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். ஏனெனில் ஒரு அலை எந்தப் பொருளிலிருந்து/இடத்திலிருந்து புறப்படுகின்றதோ அப்பொருளின்/அவ்விடத்தின் தன்மையை எடுத்துக்கொண்டு செல்லும். இது திருவேதாத்திரிய அலைஇயக்கத்தின் சிறப்பு ஆகும். ஏற்கனவே மனதின் மறுமுனை இறையாக இருந்தாலும், அது மனிதனாகி வந்த வழியில் விலங்கினப்பதிவாகிய பரிணாமக் கசடுகளை சுமந்து கொண்டு வந்துள்ளதாலும், மனிதனாக வந்தபிறகு ஆறாம் அறிவு அதற்கு ஏற்ப பொருத்தமாக செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைக்காதபோது அறிவு அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய எதிர்மறைத்தன்மைகளுக்கு(negativeness) ஆளாகி துர் எண்ணங்கள் பதிவுகளாகி ஆக்கிரமித்துக் கொண்டிருத்தலால்(பதிவு) அவ்விடம் தூய்மைக் கெட்டிருக்கின்றது.
மனம் தூய்மையாக இருந்தால், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாது. மனம் தூய்மையானால் மனித மனமும் இறைமனமும் ஒன்றாகிவிடுகின்றது. அதனால், இறை எதனையும் அறியும் ஆற்றல் பெற்றுள்ளதுபோன்றே, மனித மனதிற்கு ஆற்றல் வந்து விடுகின்றது. ஆகவே இறைமனமான மனித மனதிற்கு விளைவை முன்கூட்டியே அறியும் திறன் வந்துவிடுகின்றது. இத்திறனால் என்ன நடக்க வேண்டுமோ அதனை மனம் எண்ணுகின்றது. எண்ணுவது நடக்கின்றது.
இங்கே வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் வேதவாக்கினை அறிந்து கொள்வோம்:
திருவள்ளுவர் எண்ணத்தைப்பற்றி என்ன கூறுகிறார்?
திருவள்ளுவர் எண்ணத்தைப்பற்றிக் கூறுவதைக் கவனிப்போம். வினைத்திட்பம் என்கின்ற அதிகாரத்தில் ஆறாவது குறளாகக் கூறுவது என்ன?
அதிகாரம்—வினைத்திட்பம்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியா்
திண்ணியா் ஆகப் பெறின்.” …..குறள் எண் 666
கருத்துரை: எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக இருந்தால் எண்ணியது நடக்கும். அதாவது செயல் வலிமையுடையதாக இருந்தால் செயல்புரிபவர் எண்ணியதை எண்ணியவாறே பெறுவர்.
மேலும் இக்குறளுக்கான பொருளை ஆராய்வோம். இக்குறள் இடம் பெற்றுள்ள அதிகாரத்தையும், அவ்வதிகாரம் எந்த அதிகாரத்திற்குப் பிறகு திருவள்ளுவர் வைத்துள்ளார் என்பதனையும் கவனிக்க வேண்டும். வினைத்திட்பம் என்கின்ற அதிகாரம் வினைத்தூய்மை என்கின்ற அதிகாரத்திற்கு பிறகு வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் நோக்கத்தை அறிய வேண்டும்.
வினைத்திட்பம் அதிகாரத்தில் இக்குறள் அருளப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன? திட்பம் என்றால் என்ன என்று அறிய வேண்டும். திட்பம் என்பது உயர்வழக்குச் சொல். அதனால்தான் இச்சொல் திருவள்ளுவரால் செய்யுளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திட்பம் என்றால் வலிமை, உறுதி,(firmness) என்று பொருள். வினைத்திட்பம் என்றால் செய்கின்ற செயலில் உறுதி இருக்க வேண்டும். செயலை நல்லது என முடிவு செய்து செயலை செய்வதில் இருக்க வேண்டி உறுதியைத் தெரிவிக்கின்றது. ‘முடிவு’ என்பது எண்ணம் ஒரு முறை எண்ணிவிடுவதல்ல. பலமுறை எண்ணி இருக்க வேண்டும். பிறகு செயலில் உறுதியோடுஇறங்க வேண்டும். அப்போது மனதிற்கு திட்பம் உண்டாகும். அதுதான் மனத்திட்பம் எனப்படுகின்றது. ஒரு முறை எண்ணி ஒரு முறை முயலுவதிலேயே வெற்றி கிட்டிவிடும் எனச் சொல்ல முடியாது. தோல்வியும் நேரலாம். அதனால்தான் தோல்வி என்பது வெற்றியின் படிக்கட்டு எனப்படுகின்றது வெற்றியாளர்களால். இதுவரை அதிகாரத்தின் பெயருக்கான விளக்கத்தை அறிந்து கொண்டோம்.
இப்போது குறளுக்கு வருவோம். எண்ணியது நடக்கும், எப்போது நடக்கும்? எண்ணியவர் திண்ணியராக இருப்பின் எண்ணியது நடக்கும். ‘திண்ணிய’ உறுதியான என்று பொருள். எனவே எண்ணுவதும் மனம்தான். அதே நேரத்தில் மனம் அதனை அடைய செயல்புரிவதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆயிரம் பேர் எண்ணலாம் ஒரு காரியத்தை செய்வதற்கு. ஆனால் யார் யார் உறுதியாக செயல்படுகின்றனரோ அவர்களே எண்ணியதை அடைகின்றனர்.
மேலும் எண்ணியது நடை பெற செயலில் இறங்க வேண்டும். அச்செயலில் வெற்றிகிடைக்க முயற்சி வேண்டும். சில நேரங்களில் முயற்சி தொடர் விடா முயற்சியாகவும் இருக்க வேண்டும். ஆள்வினை உடைமை அதிகாரத்தில் முயற்சி பற்றியும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர். முயற்சி என்பது தெய்வீகப்பண்பு. இறை நிர்குணமானது என்று சொல்லப்பட்டாலும் வேதாத்திரியம் இறைவெளியாக இருக்கும் இறைக்கு தரங்களையும், திறன்களையும் கூறுகின்றது. இறையே மனிதனாகியது என்கின்ற போது இறையிடம் இல்லாத பண்போ, குணமோ மனிதனிடம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே மனிதனுக்கு முயற்சி மிக மிக அவசியம் என்றால் முயற்சி என்கின்ற பண்பு இறையிடம் இருக்கின்றது. இறையின் தன்மாற்ற நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாற்றமும் முயற்சியினால்தான் வந்துள்ளது. அதனால்தான் முயற்சியை தெய்வத்தோடு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் …..குறள் எண். 619.
முயற்சிக்கு எதிர் சோம்பல். அதனால் தான் முயற்சியை பற்றிக் கூறும் அதிகாரத்திற்கு முன் மடிஇன்மை அதிகாரத்தை வைத்துள்ளார்.
இப்போது ‘திண்ணிய’ என்கின்ற சொல் கூறும் பொருள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். திண்ணிய என்றால் உறுதி என்று பார்த்தோம். உறுதி உள்ள மனம்தான் ஆள்வினையுடைமையானதாக இருக்கும். முயற்சி இல்லாத மனம் திண்ணியதாக இருக்க முடியாது என்கின்ற பொருளையும் அறிந்து கொள்ளட்டும்.
மனிதன் வாழ்நாளில் எத்தனையோ காரியங்களைச் செய்கிறான். இருப்பினும் செயற்தக்க அரிய காரியம் இரண்டு உள்ளது. ஒன்று வாழ்வின் நோக்கத்தை அருளார்களின் வழிகாட்டுதலுடன், ஆசியுடன் அவனாகவே அறிவது. வாழ்வின் நோக்கத்தை அறிவது. என்பதனை விட கண்டுபிடிப்பது என்றுசொல்வதே பொருத்தமாக இருக்கும். பின்னர் அதனை அடைவது இரண்டாவது செயற்தக்க அரிய காரியம். வாழ்வின் நோக்கம் கண்டுபிடித்த பிறகு, அதனை, ‘இப்பிறவியிலேயே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்’ என்கின்ற புனித எண்ணமாக மாறுகின்றது. அந்த புனித எண்ணம் நிறைவேற திண்ணிய நெஞ்சம் வேண்டும் மனிதனுக்கு.
திருவள்ளுவரைப் போன்றே மகான் மகா கவி பாரதியார் எண்ணியது முடிவதற்கும், அதே நேரத்தில் நல்லவை எண்ணவேண்டும் என்பதில் உறுதியோடு இருக்க திண்ணிய நெஞ்சம் வேண்டும் என இறைவியை இறைஞ்சுகிறார். அப்பாடலை நினைவில் அடுத்த விருந்தில் (17-07-2016 ஞாயிறு) அறிந்து கொள்வோம்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
அறிவிப்பு
வாழ்க வளமுடன்.
செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.
அன்றைய தலைப்பு – அருளாளர்கள் உலகம்
வாழ்க வளமுடன்.
www.prosperspiritually.com