இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும் 5/5

வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்       5/5

FFC 85

24-05-2015 — ஞாயிறு

இரண்டு வாரங்களாக, இறை, நீதி, இறைநீதி, கூர்தல், அறம், கூர்தலறம் என்றால் என்ன, ஏன் அவ்வாறு பெயரிடப்பட்டது என்றும், பரிபாலனம், கருமையம், அதன் பாலங்கள் பற்றியும் சிந்தித்து வருகிறோம். நான்காவதாகிய தனிமனிதனுக்கும் தெய்வத்திற்கும் இடையே உள்ள பாலத்தைப் பற்றியும் சிந்தித்து வருகிறோம். கருமையப் பதிவுகளுக்கு ஏற்ப குரு கிடைப்பார் என்பதனை அறிந்து கொண்டோம். பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளது போல், ஆயிரத்தில் ஒருவர் இறையைத் தேடுகிறார்கள், அவ்வாறு தேடியவர்களில் யாரோ ஒருவா்தான் இறை உணர்வு பெறுகின்றனா் என்று கூறுவதனையும் அறிந்து கொண்டோம். அதற்கானக் காரணம், அவரவர்களின் கருமையப் பதிவுகளே என்று அறிந்தோம். இன்றைய விருந்தில், முன்வினையை வென்று, முக்தி அடையமுடியும் என்று அவ்வையார் கூறுவதையும், குருகிடைத்தாலும் சீடர்களின் ஆன்மீக முன்னேற்றம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மூன்று வகையில் உள்ளது என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

அவ்வையாரும் ஞானத்தை பெறுதல் மிக அரிது என்று கூறுகின்றார்.

“அரிதரிது! மானிடர் ஆதல் அரிது!
……………………………………………………………………………………
…………………………………………………………………………………
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது”. என்கிறார்.

மனிதராகப் பிறப்பது அரிது என்றும், அப்படியே கூன், குருடு, செவிடு நீங்கி மனிதராகப் பிறந்தாலும் ஞானத்தை விரும்புதல் அரிது என்று மனிதவாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்து இயம்புகிறார். மனித வாழ்வின் எதார்த்தம் அவ்வாறாக இருந்தாலும், அதனை எடுத்துக் கூறி ‘அப்படியே இருந்து விடுங்கள்’ என்று கூறவில்லை. ‘நல்வழியில்’ அவ்வையாரே கூறும் உறுதியினைக் கவனிப்போம்.

“வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்தாய் நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க்[கு] இல்லை விதி.”

 

பொருள்: முந்தைய பிறவிகளில் செய்த தீயசெயல்களின் விளைவை(பயனை) வெல்வதற்கு, வேதம், மற்றும் அதுபோன்ற நூல்களையும் கற்பதனால் பயனில்லை. “எனினும் கவலை கொள்ளாதே!” என்கிறாள் அவ்வைப்பாட்டி. மெய்யாகிய முக்தி நெறி நிற்பவருக்கு அவர் நினைப்பதுபோல் நடக்குமேயன்றி கவலை தரக்கூடியது ஒன்றும் இல்லை. பிறவிப் பயனை அடைய விதி என்று இல்லை என்கிறார் அவ்வையார். ஆர்வமும் முயற்சியும்தான் வேண்டும் என்கிறார் அவ்வையார்.

முக்தி வழி நிற்பவருக்கு என்று கூறவில்லை அவ்வையார். முக்தி நெறி நிற்பவருக்கு என்கிறார். அதாவது நெறியில்லாமல் முக்தி அடைய முடியாது. முக்தி நெறி அவசியம். முக்தி என்பது என்ன?

“அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்

அறிவு முழுமை அது முக்தி”              என்கின்ற திருவேதாத்திரிய மந்திரம் 2 ன்படி அவன் நாம் ஒன்றாய் அறிந்த போது அறிவுமுழுமை அடைவதே முக்தி.

அறிவுமுழுமை அடைய, முந்தைய வினையும் நீங்க வேண்டும். இப்பிறவியின் வினைகள் யாவும் நல்ல வினைகளாகவே இருக்க வேண்டும். அதற்கு நெறி நின்று வாழ வேண்டும். ஒழுக்க நெறி, அறநெறி என்கிறோம். நெறி என்பது என்ன? மனித ஒழுக்கத்துக்காக மேற்கொள்ளவேண்டிய முறைகள். நெறி நின்று வாழாமையால் வந்துள்ள முந்தைய தலைமுறையின் வினையான முன்வினையை வெல்ல வேண்டுமென்றால் இப்பிறவியில் நெறியுடன் வாழ்ந்தே ஆக வேண்டும். கூடுதல் கவனத்துடன் நெறியுடன் வாழ்ந்தால் முன்வினை தீர்ந்து முக்திக்கு வழிவகுக்கும். அந்நிலையில்தான் ‘நினைப்பதுபோல் நடக்கும். கவலைத் தரக்கூடியது ஏதுமில்லை. முன்வினை விதி என்பதும் ஒன்றுமில்லாது போய் விடும்’ என்கிறார் அவ்வையார்.

திருவேதாத்திரியம் கூறுகின்ற information, confirmation, transformation ஆகிய மூன்று நிலைகளில் வேதங்கள் ஆகிய அறநூல்களைப் படிப்பது முதல் இரண்டு நிலைகளின் பயனைமட்டுமே தரும். மூன்றாவது நிலைக்கு வரவேண்டும். பெற்ற தகவலை உறுதிப்படுத்துவதே முடிவாகாது. தான் அதுவாக மாறுவதுதான் முடிவு. வீடுகட்ட உரிய அனுமதியை பெற்று விட்டாலே வீடு கட்டியதாகிவிடுமா? வீடு கட்ட அனுமதி பெற்றபின் வீடுகட்டி முடித்தால்தான் அதனுள் குடி புகுந்து வசிக்க முடியும். ஆகவே இப்பிறவியில், முக்திஅடைய, முந்தைய பிறவிகளில் செய்த செயல்களின் விளைவினை வெல்லவேண்டும். அதனை வேதங்களைப் படிப்பதால் மட்டுமே வெல்ல முடியாது. முக்தி அடையவேண்டும் என்கின்ற வாழ்வின் நோக்கத்தை முடிவு செய்து அதற்கான நெறியுடன் வாழ்ந்தால் மட்டுமே நினைப்பது நடக்கும். எனவே கவலை தரக்கூடியது ஒன்றுமில்லை. கவலைப்பட வேண்டாம் என்கிறார் அவ்வையார்.
புலன்களாகிய பொறியின்(trap) வாயில் அகப்பட்டுக் கொண்டு இன்பதுன்ப சம்சாரக்கடலில் மூழ்கியிருப்பதால் புலன்களிருந்து விடுதலை அடைந்து ஞானம் பெறுவது என்பது அரிதாக உள்ளது சமுதாயத்தில். கருமைய தீயப்பதிவுகளே ஞானம் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன. நெறி நின்று வாழ்தல் கருமையப்பதிவுகள் தூய்மையடைந்து முக்திக்கு வழிவகுக்கும்.

அறியாமையை நீக்கக்கூடிய குரு கிடைத்தவர்களில் மூன்று தரப்பினர்கள் இருப்பர்.

1) பலர் குரு கிடைத்தும், பிறகு குருவையே மறந்துவிடுபவர்கள். இவர்கள் தற்செயலாகக் குரு கிடைக்கப்பெற்றவர்களாவார்கள். குருவைப்பற்றி பிறர் சொல்லியதாலே குருவிடம் வந்தவர்கள் இவர்கள். அவர்கள் ‘தெரிந்தோ அல்லது மறைமுகமாகவோ தேடல் என்கின்ற விழைவுப் பதிவு’ கருமையத்தில் பெற்றில்லாதவர்கள். அதனால் தக்க குரு கிடைத்தும் குருகூறும் வழிப்படி நடக்க முடியாமல் போய் விடுகின்றனர். தெரிந்தோ அல்லது மறைமுகமாகவோ ‘தேடல்’ என்கின்ற விழைவுப் பதிவு கருமையத்தில் இருப்பவர்களுக்கு பிறர் சொல்லி குருவிடம் வந்தாலும், அவர்களிலும் பலர் சில நாட்கள் கழித்து குருகூறும் வழியில் நடக்க முடியாமல் போய் விடுகின்றனர். இதுவும் கருமையப்பதிவின் பிரதிபலிப்பேயாகும்.

2) மற்றவர்களில் சிலர் குருவை வாழ்நாள் முழுவதும் மறக்காமல், தொடர்ந்தாலும் அறியாமையை நீக்குவதில் வெற்றி பெற முடிவதில்லை. காரணம் அவா்களின் கருமையப்பதிவுகளின் அழுத்தத்தால், தளராவிடாமுயற்சி செய்ய முடிவதில்லை.

3) ஒரு சிலரே அறியாமையை நீக்குவதில் மிகுந்த உள்ளார்வம் (மனதின் மறுமுனையான உள்ளமே-இறையே ஆர்வம் கொண்டு) கொண்டு வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி அறியாமையை நீக்கி அறிவில் மாற்றம் காண்பவர்கள். அவர்களே குருவை நம்பி, மதித்து ஒழுகுபவர்கள். ஆதலால் அவர்களை, தப்பாமல் குருவின் உயர்வு தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை எய்தச்செய்கின்றது.

குருவருள் இன்றேல் திருவருள் இல்லை என்பதால் தக்க குரு கிடைப்பதை நிர்ணயம் செய்வது கருமையப்பதிவுகளே.

அதுமட்டுமல்லாமல் தன்னிலை உணர்ந்து இறையால் குருவாக்கப்பட்டவரின் குடும்பத்திலேயேகூட அவருடன் பிறந்த உடன் பிறப்புகள் அனைவருக்குமே தன்னிலை உணர்கின்ற பாக்கியமும், புண்ணியமும் கிட்டுவதில்லை. இதெல்லாம் எதனைக் குறிக்கின்றது?

ஆன்மீக நாட்டம் கொள்வது,
இறைத் தேடல்,
ஆன்மீகத்தில் தெளிவு பெற்று உச்ச நிலை அடைந்து, இறையே அவா்களை இறைத்தூதுவரான குருவாக்குவது என்பதெல்லாம்
அவரவர் கருமையப் பதிவுகளைப் பொருத்துள்ளது.

ஆக, கருமைய பதிவுகளுக்கு ஏற்ப இன்ப விளைவுகளல்லாது துன்ப விளைவுகளையும் தருவதற்கு மேல்கூறிய நான்கு வழிகள் (channels) காரணமாக அமைவதால், அந்நான்கு வழிகள் வாயிலாக இன்ப விளைவுகளையோ பேரின்ப விளைவுகளையோ தருவதற்கு அந்த வழிகளில் இனிமை காக்கப்படல் வேண்டும்.

இன்பம் வந்தால் அதனை தக்கவைத்துக் கொண்டு பேரின்பமாக வளர்த்துக் கொள்ளவும், துன்பம் வந்தால் அதனை போக்கி இன்பமாக்கி, மேலும் பேரின்பமாக்கவும் ஆறாம் அறிவுடைய ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டும்.

எனவே நான்கு கருமையப்பாலங்கள் வழியாகவும் இன்பத்தையே பெற்று யோக வாழ்வு வாழத் தகுதியினைப் பெறுவதற்கு யோகம் பயில வேண்டும். யோகம் என்பது என்ன? ‘யோகம்’ என்கின்ற சொல்லை பயன்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனெனில் ஒருமனிதர் வசதியாகவும், அனைத்துச் செல்வச் செழிப்புடனும் இருந்தால் அவரை யோகக்காரகர் என்கிறோம்.

யோகம் என்பதற்கு இரண்டுவிதமான பொருள் இருக்கின்றது. இரு பொருள் போல் தெரிந்தாலும் அது ஒருபொருளே. காரணம் என்னவென்றால், இரு பொருட்களிலும், இறுதி விளைவாக குறிப்பிடப்படுவது துன்பமற்ற நிலை ஒன்றையே. நல்லசெயல்களின் நல்விளைவுகளே யோகம் எனப்படுகின்றது. இருப்பினும் அந்த யோகம் என்பதற்கான இருபொருட்கள் என்ன?

1) அதிர்ஷ்டம், good luck. உதாரணம்:–படிப்பை முடித்து வேலைக்காகக் காத்திருப்பவர்கள் பலர் உள்ள நிலையில், படித்தவுடன் நல்ல வேலை கிடைத்தால், அதனை யோகத்துடன் இணைத்து அவனுடைய யோகம் அவனுக்கு படிப்பை முடித்தவுடனே நல்ல வேலை கிடைத்தது என்பார்கள்.

2) யோகத்திற்கான மற்றொரு பொருள் — மனத்தை ஒரு நிலைப்படுத்திச் செய்யும் ஆழ்ந்த தியானம், மற்றும் யோகப்பயிற்சிகள் (yoga).
ஜோதிடர்கள் பலன் சொல்லும்போது ஒரு சில ஜாதகங்களைப் பார்த்த உடன் முதலில் சொல்வது ‘இந்த ஜாதகம் யோக ஜாதகம், இந்த ஜாதகருக்கு எல்லா யோகங்களும் உள்ளது’ என்பர். ஜோதிடம் என்பதே கருமையப்பதிவுகளை ஓரளவிற்குக் காட்டும் அட்டவணை தானே? (Chart). அப்படியிருக்கும் போது ‘யோக ஜாதகம்’ என்றாலே நல்லதைக் கொடுக்கும் என்பதால், அந்த நல்லதைக் கொடுக்கும் பதிவுகள் அவரது கருமையத்தில் உள்ளது என்றுதானே அர்த்தம்?!
யோகம் என்பது உலகியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்லதையே கொடுக்கும். எனவே யோகம் பயில வேண்டும். யோகத்தின் வழியாக உடல்நலம், மனவளம் பெற்று பிறவிப்பயனை எய்துதல் வேண்டும். வேலை கிடைப்பது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் யோகமாக இருந்தாலும், இவைகளெல்லாம் தற்காலிகமானதே. நிரந்தர யோகம் என்பது பிறந்த நோக்கத்தை அறிதலும், முடிவாக அதனைத் தள்ளிப்போடாமல், அறிந்த பிறவியிலேயே அதனை அடைவதேயாகும். யோகத்தினால் கருமையப் பதிவுகள் தூய்மை அடையும். யோகத்தைப் பற்றி திருவேதாத்திரியம் கூறுவதென்ன? ‘யோகம்’ என்பதற்கு ‘இனிமை காத்தல்’ என்று பொருள். யோகம் நான்கு நெறிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

1) உடலுக்கும் உயிருக்கும், உயிருக்கும் மனதிற்கும் இனிமை காக்க வேண்டும்.
2) தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இனிமை காக்க வேண்டும்.
3) தனக்கும் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளை ஒன்று படுத்துவதில் இனிமைக் காக்க வேண்டும்.
4) தனக்கும் இயற்கைக்கும்/இறைக்கும் இடையே இனிமை காத்திடல் வேண்டும்.
கருமையப் பதிவுகளின் நான்கு பாலங்கள் வழியாக இன்ப துன்ப விளைவுகள் வருவதால் துன்ப விளைவுகளைத்தாங்கவும், போக்கவும், இன்ப விளைவுகளை தக்க வைத்துக்கொண்டு பேரின்பவிளைவினை அடையவும் நான்கு முறைகளில் இனிமை காக்க யோகம் பயில வேண்டும். ஒருகாலத்தில் யோகம் பலருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இப்போது சாதாரண மனிதனும் யோகம் பயிலுகின்றவகையில் யோகக்கலையானது, ‘மனவளக்கலை’ (SKY) என்கின்ற பெயரில் விரைவாக வளர்ந்து வருகின்றது.

குருவை பூதவுடலில் பார்க்க முடியவில்லையே என்கின்ற ஏக்கம் தேவையில்லை. திருவள்ளுவரை, திருமூலரை, தாயுமானவரை மானசீகமாகவல்லவா குருவாக ஏற்றுக்கொண்டார் நம் குருதேவர் வேதாத்திரி மஹரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் அருளியுள்ள அறநூல்கள் எல்லாம் நம்மிடையே பேசிக் கொண்டிருக்கின்றன. மகரிஷி அவர்கள் அருளியுள்ள அவரது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலை பலமுறை வாசித்துப் பயன் பெறவும். பிறவிக்கடலை எவ்வாறு நீந்தமுடியும் என்று மகரிஷி அவர்கள் உறுதி அளித்துள்ளதை நினைவில் கொண்டு செயலாற்றுவதற்கு, மெய்விளக்கம், பிறவிக்கடல் நீந்தலாம் என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடல்களை மீண்டும் ஒரு முறை நினைவுகூர்வோம்.

meyviLakkam

 

வாழ்வியலில் யோகமும் முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். இந்த அவசியத்தை அறிந்தே வருகின்ற ஜுன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. வாழ்க மனவளக்கலை யோகா. வளர்க மனவளக்கலை யோகா. இத்துடன் இச்சிந்தனை முடிவுற்றது. அடுத்த விருந்தில் வேறொரு தலைப்பை எடுத்துக் கொள்வோம். தொடரும் 27-05-2015