இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?
FFC- 62 (1/?)
04-03-2015 –புதன்
வாழ்க வளமுடன்,
சிந்திப்பதற்கு, மேலே உள்ள தலைப்பை இன்று எடுத்துக் கொண்டதற்கான காரணம், நமது இணையதள சத்சங்கத்தில் கலந்து கொள்கின்ற ஒர் அன்பர் அனுப்பியுள்ள ‘கருத்துரைக்க’ பகுதியில், கேட்டிருந்த சிந்தனைக்குரிய வினாவே ஆகும். உங்கள் சார்பாக, www.prosperspiritually.com, அவருக்கு நன்றியினையும் மற்றும் அவரது ஆன்மதாகத்தைப் போற்றி, அவருடைய ஆன்ம தாகம் மேன்மேலும் வளர ஆத்மார்த்த வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
அவ்வையாரின் அறிவாற்றலை வணங்கி சிந்தனையைத் தொடங்குவோம்.
இப்போது தலைப்பிற்குள் செல்வோம். அறிவில் அறிவாய் நிலைத்து, அறம் வகுத்து, அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களுடைய மற்றும் அருளாளர்களின் வரிசையில் நமக்குத் தெரிந்து, கடைசியாக அவதரித்த அருளாளரும் நம்முடைய குருதேவருமாகிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் அறிவாற்றலும் வெகுவாக துணை நிற்குமாக. வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம். அருளாளா்களையெல்லாம், கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி, போற்றி வணங்குவோம்.
தலைப்பில் இரண்டு வினாக்கள் உள்ளன. முதல் வினாவிற்கான பதில் மகான்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எவ்வாறு? உடல்தான் மீண்டும் பஞ்சபூதங்ககளாக மாறியதே தவிர ஆன்மாவிற்கு அழிவேது? இரண்டாவது வினாவிற்கான பதில், மகான்கள், நம்முடன்(சமுதாயத்துடன்) இரவு பகல் என்று பாராமல் எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றனர்; அருளுரை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். அவற்றை மகான்கள் எவ்வாறு ஆற்றுகின்றனர் என்றும், அவற்றைச் செவிசாய்த்து பயன்பெறும் யுக்தியினை அறிந்து செயலில் கொண்டுவருவதற்கே இன்றைய சிந்தனையாகும்.
மகான்கள் நம்முடன்(சமுதாயத்துடன்) பேசிக் கொண்டிருக்கின்றனர், அருளுரை ஆற்றுகின்றனர் என்றால் என்ன பொருள்? அவர்கள் பூதவுடலோடு வாழ்ந்த காலத்தில் எண்ணிய எண்ணங்கள் இறக்கவில்லை. வான் காந்தக் களத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும் அருளாளர்கள் அருளியுள்ள அறிவுரைகளைக் கொண்ட அறநூல்கள் இப்புவி உள்ள வரை வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த அறநூல்கள் ஒழுக்க நெறியையும், அவற்றைப் பின்பற்றுவதால் அடையும் பயன்களையும் இயம்பிக் கொண்டுதான் இருக்கின்றன. இதனை ‘அறநூல்கள் வாயிலாக மகான்கள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனா்’ என்று சொல்லக் கூடாதா? இப்போது மகான்களிடம் இணைப்பு பெற்று பயன்பெறுவது பற்றி அறிவோம்.
மகரிஷி அவர்கள் தனது 35 (1911+35=1946) வயதிற்குள்(around) இறை உணர்வு பெற்றுவிட்டார். அதாவது, இறையானது, தன்னுடைய நிலையை, இவ்வுலக மக்கள் எளிமையாக விளங்கிக் கொண்டு, அனைவரும் உய்யவேண்டும் என எண்ணி, நம் குருதேவரை இறைத்தூதுவராக்கி, இவ்வுலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனக்கருதி, தன்னுடைய உண்மையான முழுவிலாசத்தையும், தன்னுடைய முழுச்சரித்திரத்தையும் உண்மை மாறாமல், மகரிஷி அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டது. மகரிஷி அவர்கள் இக்குருவணக்கப் பாடலை எழுதியது 1981 ஆம் ஆண்டு. அதாவது, அவர், தன்னிலை விளக்கம் பெற்று 35 வருடங்கள் சென்ற பிறகு இந்த குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார். நோக்கம் என்ன? 35 வருடங்கள் கழித்து எதற்காக எழுதினார்?
இப்பாடலில் கூறியுள்ள வழியின் வாயிலாக, பயனை, தான் அனுபவித்ததோடு அல்லாமல், மகரிஷி அவர்களின் நேரிடை காலத்து மாணவர்களுக்காகவும், வருங்காலத்தில் வருகின்ற உலக மக்கள் அனைவருக்கும் பயன் பெறும் வகையிலே முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்னர் 11-08-1981 அன்று, அறிவியல் அடிப்படையிலும், அறிவுப்பூர்வமாகவும் ஒரு யுக்தியினை அருளியுள்ளார். 1911 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடக்கின்ற அருள் நிகழ்வுகளை சில கட்டங்களாக பிரித்து ஆராய்வோம்.
மகரிஷி அவர்கள் அவதரித்த ஆண்டு 1911
மகரிஷி அவர்கள் தன்னிலை விளக்கம் பெற்றது 1946 (around)
மகரிஷி அவர்கள் குருவணக்கப் பாடல் இயற்றியது 1981
மகரிஷி அவர்கள் குருவின் சேர்க்கை பாடல் இயற்றியது 1984
மகரிஷி அவர்கள் 1953 ஆம் ஆண்டிலிருந்து கவிகளை எழுத ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகின்றது. ஆனால் கவிகள் எழுதும் பழக்கம் கொண்ட அவர், 1953 க்குப் பின் 28 ஆண்டுகள் சென்ற பிறகு, இக்குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார். இப்போது, ஒவ்வொரு கால கட்டத்தின் சிறப்பையும் கவனிப்போம்.
1911 – 1946 — சுமார் தனது 35 வயதில் (1946) மகரிஷி அவர்கள், தன்னிலை விளக்கம் பெற்றது.
1946 – 1981 — உலக சமுதாய சேவா சங்கம் ஏற்படுத்தப்பட்டு உலக மக்களுக்கு தன்னிலை பெறுவதற்கான கருத்தியல் பாடமும், செய்முறைப் பாடமும் போதிக்கப்பட்டு வந்தன; இப்போதும் போதிக்கப்பட்டு வருகின்றன.
1981 இல் ‘குருவணக்கம்’ – பாடல் இயற்றப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் பயிற்சியின் முடிவு(result) அடையும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்கு, இது ஒரு யுக்தி எனக்கொள்ளலாம்.
1984 இல் ‘குருவின் சேர்க்கை’ – பாடல் இயற்றப்பட்டு, ஏற்கனவே அறிவித்த யுக்தியைவிட அதியுக்தியை அறிவித்தது வேதாத்திரியம். அது என்ன? முதல் யுக்தியில், எல்லா அறிவினரையும் நினைவிற் கொண்டுவந்து அவர்களை வணங்கி அவர்களுடைய வாழ்த்தையும், காப்பையும் பெறுவதற்கு பிரார்த்தனை (invocation) செய்தல். இரண்டாவது யுக்தியானது “அறிவினரைச் சோ்தல் இனிது. அதனினும் இனிது அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதுதானே” என்று அவ்வையார் மொழிந்துள்ளதை பயன்படுத்திக் கொள்ளுதலாகும்.
1984 ல் அறிவிக்கப்பட்ட இந்த இரண்டாவது யுக்தியானது, ஆன்மீகப் பயிற்சியாளர் இறையின் முத்திறங்களில் ஒன்றான, இயல்பூக்கத்தையே பயன்படுத்தி. இறையை உணர்வதற்கான தர மாற்றங்களை அடைவதற்கான வழியினைச் சொல்கின்றது. இங்கே பிறவிப்யனை எய்துவதற்கு, சாதகன் செயல்படுத்த வேண்டிய பொறுப்புகள் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. அப்பாடலையும் இங்கே நினைவு கூர்வோம்.
1981 – 1984 – 2015 வரையிலான காலம் முக்கியத்துவம் பெறுகின்றது. இக்காலகட்டம் அக்குருவணக்கப் பாடல் மற்றும் ‘குருவின் சேர்க்கை’ பாடலில் தெரிவித்துள்ள வழியாகப் பயனை அடைந்த காலம் என்றே சொல்ல வேண்டும்.
2015 முதல் இனிவரும் காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இக்காலத்தில் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க, இறைத்தூதர் மகரிஷி அவா்களின் துணை—இறைத்தூதுவர்களான நம்மிடம், இறை, பொறுப்பை ஒப்படைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். வேதாத்திரியத்தை பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை கல்வியாக எடுத்துச் சென்றுள்ளதே, அந்த பொறுப்பினை நிறைவேற்றி வருவதற்கு சான்று.
தொடரும் அடுத்த அறிவிற்கு விருந்தில்.