FFC -123-அயரா விழிப்புணர்வு

வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

( Constant Awareness )

 அயரா விழிப்புணர்வு

FFC -123

30-09-2015–புதன்

FFC-123-விழிப்பு நிலை சீவன்முக்தி-பாடல்1

 

அறிவின் மூன்றாம் வளர்நிலை

3) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல்.

அயரா விழிப்புணர்வு என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்தித்து வருகிறோம். இன்று அறிவின் வளர் நிலைகளில் மூன்றாவது நிலையான ‘எண்ணம், சொல், செயல் ஆகியவைகளில் விழிப்புடன் இருத்தல்’ பற்றி சிந்திக்க இருக்கிறோம். மனிதனின் கர்மா. எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் வழியாகத்தான் நடைபெறுகிறது. மனிதனின் கர்மாவிற்கு ஏற்ப விளைவுகள் வருவதால், அதற்கேற்ப இன்ப-துன்பம் வருவதால், துன்பத்தை தவிர்க்க எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் விழிப்பு நிலை வேண்டும்.

மேலே உள்ள கவியின் வாயிலாக எண்ணம்-செயல், விளக்க வழியே இல்லாமல், பழக்க வழியே இருக்குமானால் இறைஉணர்வை எய்த முடியாது என்பதனை அறிய வேண்டும். விழிப்பு வந்தால் சீவனில் இறைத்தன்மைளைக் காணலாம் என்கிறார் மகரிஷி அவர்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் மகரிஷி அவர்கள் அறிவின் வளர்நிலைகளில் ‘எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் விழிப்பு’ இருத்தலை மூன்றாவதும் கடைசியுமாக சோ்த்துள்ளார்,

இருபத்து நான்கு மணிநேரத்தில் எட்டு மணிநேரம் உறக்கத்திற்காக செலவழிந்து விடுகின்றது. மீதமுள்ள பதினாறு மணி நேரம் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான் மனிதன். அப்போதுதான் அவனுக்கு தவறுகள் செய்யும் சிக்கல்கள் வருகின்றன. தூங்காமல் இருக்கும் போது விழித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்கு உணர்வும் உள்ளது. அப்படியிருக்கும் போது, அறிவிற்கு அது உணர்வு நிலைதான் என்றாலும் அப்போதும் அதற்குப் பிரத்தியேகமான விழிப்பு உணர்வு வேண்டும் என்கிறார்.

அதனை அயரா விழிப்பு நிலை என்கிறார். அதனை அறிவிற்கான வெளிச்சம் என்கிறார். அந்த வெளிச்சத்தில் வாழ்க்கையை நடத்தச் சொல்கிறார். பேரறிவின் தன்மாற்றத்தில், மனித அறிவு ஞானத்தைப் (அறிவையறிந்த தெளிவு) பெறுவற்கான பயணத்தில், அறிவு அறிந்த அனுபவங்களில் (knowledge) அயரா விழிப்புணர்வு என்பது உச்ச நிலை என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். “Awareness is a higher stage of knowledge in its evolutionary progress towards Wisdom” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

மனிதன் உறங்கும் போது தவறுகள் செய்ய முடியாது. விழித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவன் தவறுகள் செய்கிறான். எனவேதான் கண் விழித்துக்கொண்டு, உணர்வுகள் உள்ள நிலையில் அயரா விழிப்பு நிலை வேண்டும் என்கிறார். இந்த அயரா விழிப்பு நிலையை மேன்மையாகக் கூறுகிறார். இந்த நிலையை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். இந்த அயரா விழிப்பு நிலையைத்தான் மெய்ஞானம் என்கிறார். அறிவிற்குள்ள விழிப்புணர்வு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் (School of thoughts) இருக்கின்றன.

ஒன்று Materialistic awareness. மற்றொன்று Esoteric Awareness. Materialistic awarenss என்பது உலகியல் சம்பந்தப்பட்டது. சமையல் அறையில் சமைப்பதிலிருந்து ஆய்வுக் கூடத்தில் செய்யும் ஆராய்ச்சி வரையுள்ள விழிப்புணா்வாகும். ஆனால் “Esoteric Awareness“ என்பது இயற்கையின் இரகசியங்களை அறிவதிலும், அறிந்து அதுபோல் வாழ்க்கை வாழ்வதிலும் வேண்டிய விழிப்புணர்வாகும். மனிதனுக்கு “ஆன்ம விழிப்புணர்வு–Spiritual awakening” வேண்டும். . வேதாந்த நூல்கள் கூறுதாவது:- “ In Awakened Consciousness, Awareness is at its Zenith(உன்னத நிலை).” “Awareness Is God” என்கின்றது வேதாந்தம்.

இந்த உயர்ந்த விழிப்பு நிலை வந்து விட்டால் மனிதன் பிறர் தவறுகளைக் குறையாக எண்ணமாட்டான். அதில் விழிப்புணர்வோடு இருப்பான். அப்படிக் குறைகளாக இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டாமல், “அவர்களுடைய அறிவு நிலை அவ்வளவுதான். அதற்கேற்ப அவர்கள் செயல்களைச் செய்து வருகிறார்கள். அதற்கு நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும்” என்கின்ற உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவான். தன்னுடைய செயல்களில் குற்றம் இருக்காது. மாறாக தன்னுடைய குற்றம் கண்டு தன்னைத் திருத்தி எப்போதும் நன்மையே செய்யும் தகைமை அவனுக்கு வந்துவிடும் என்கிறார் வாழ்வியல் விஞ்ஞானியும் மற்றும் அறிவியல்(அறிவு+இயல்=அறிவியல்) விஞ்ஞானியுமான, *அறிவியலாளர் (Scientist Science of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

விஞ்ஞானத்தில் இன்றுவரை, அறிவு பற்றிய விளங்கங்கள் இல்லாமலே விடுபட்டுள்ளது. “அறிவே தெய்வம்”, இறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது, “எல்லாவற்றையும் அறியக்கூடியது இறை” என்று ஆன்மீக நூல்கள் கூறியிருந்தாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் அளித்துள்ள அறிவைப் பற்றிய விளக்கம்தான் மெய்ஞானத்தை தெளிவாக்குகிறது. மெய்ஞானத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. வேதாத்திரியத்தின் தோற்றம் மெய்ஞான உலகில் ஒரு மைல்கல். பிரபஞ்ச உருவாக்கம் பற்றி விஞ்ஞானத்தில் இல்லாத தெளிவான விளக்கம் வேதாத்திரியத்தில் உள்ள அறிவைப்பற்றிய விளக்கத்தால் கிடைத்துள்ளது.

ஆகவே அறிவைப்பற்றிய தெளிவான அறிவுபூர்வமான விளக்கங்களை அளித்து, அறிவிற்கான இயலை (அறிவு+இயல்=அறிவியல்) (Science of Consciousness) ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்களை *அறிவியலாளர், அறிவியல் விஞ்ஞானி என்கிறோம். சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகப் புகழ் விஞ்ஞானி வாயிலாக “விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைய வேண்டும்” என்று ஏற்கனவே இயற்கை விருப்பம் தெரிவித்திருந்ததை, அவா்களுக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, நடத்தி பூர்த்தி செய்து விட்டது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைக்கப்பட்டு விட்டது. அத்வைத விஞ்ஞானத்தை (Advaidic Science) உருவாக்கிவிட்டது இயற்கை.

விழிப்புணா்வின் மேன்மையைப் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கும் போது, “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்” என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அடுத்த ஞாயிறன்று(04-10-2015) நினைவு கூர்வோம். வாழ்க வளமுடன்.