அயரா விழிப்புணர்வு

Constant Awareness

வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

அயரா விழிப்புணர்வு

அ.வி. (FFC) – 121

23-09-2015-புதன்

poRi Vayilஇப்போது திருவள்ளுவர், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஆறாவது குறளாக மொழிந்துள்ளதை கவனத்திற்குக் கொண்டு வருவோம். இக்குறள் அனைவருக்குமே தெரிந்ததுதான். பள்ளியில் படித்திருப்போம். ஆனால் இன்று இக்குறளின் உட்பொருளை உணர்வோம்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
         நெறிநின்றார் நீடுவாழ்வார்.”

புலன்களைப் பொறி – வாயில் என்கிறார். திருவள்ளுவர் புலன்களைக் கருவிகள் என்று கூறவில்லை. பொறிகளை, அகப்படுத்தும் (trap) கருவியாகத்தான் கூறுகிறார். பொறி என்று மட்டும் கூறவில்லை. பொறி+வாயில்= பொறிவாயில் என்கிறார். எலிப்பொறி வைத்து எலி பிடிக்கப்படுகின்றது. சிறிய மசால் வடைத் துண்டிற்கு ஆசைப்பட்டு எலி உயிரையே இழக்கின்றது. ஐம்பொறியினுடைய வாயில் சிக்காமல் ஒழுக்க நெறி நின்றவர் நீடு வாழ்வார் என்கிறார்.

இக்குறளை கடவுள் வாழ்த்து என்கின்ற அதிகாரத்தில் வைத்துள்ளதன் பொருளை அறிய வேண்டும். இறையுணர்விற்கும் புலன்வழி வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது. புலன்கள் மனிதனின் ஆசைகளை அனுபவிக்கும் கருவிகள்தான். ஆனால் மனித சமுதாயம், இன்பம் அனுப்பவிப்பது புலன்கள் வழியாக மட்டுமேதான் முடியும் எனக் கருதுகின்றது. தனது புலன் வழி ஆசையிலேயே மனிதன் மூழ்கி இருந்தால் அவனுக்கு புலன் இல்லாமல் அனுபவிக்கக் கூடிய இறைமீது எவ்வாறு ஆசை தோன்றும்? ஆகவேதான் இறைக்கும் நமக்கும் உள்ள தூரம் நாம் கொண்டிருக்கும் ஆசைகளே எனப்படுகின்றது.

எனவே அயராவிழிப்புணர்வில் அறிவு இருக்க வேண்டும் எனில் உணர்வதற்கு கருவிகளாக உள்ள புலன்களை, எலியைப்பிடிக்கும் எலிப்பொறிபோல்(trap), ஆக்கிவிடக்கூடாது. புலன்கள் ‘உணர்கின்ற கருவிகளாக’ இல்லாமல் ‘மனிதனை அகப்படுத்தும்(trap) கருவிகளாகி’ விட்டால் அங்கே விழிப்புணர்வு இல்லை என்றாகின்றது.

அயரா விழிப்புணர்வு என்றால் என்ன பொருள்? விழித்தல் என்றால் என்ன பொருள்? உறக்கம் கலைந்து எழுந்திருத்தல் விழித்தல் எனப்படுகின்றது. அப்போது உறக்கத்தில் இல்லாதிருந்த உணர்வுகள் அறிவிற்கு வந்துவிடுகின்றது. இந்த விழித்தலை அயரா விழிப்புணர்வு என்று நாம் கூறவில்லை. ‘விழிப்பில் விழிப்பு நிலையை அயரா விழிப்புணர்வு’ என்கிறோம். அதாவது உறக்கம் கலைந்து விழித்துக் கொண்டிருக்கும்போதுதான் மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் நடைபெறுகின்றன. அப்போது

  • எதனை எண்ணலாம்–எதனை எண்ணக்கூடாது,
  • எதனைப் பேசலாம்–எதனைப் பேசக்கூடாது,
  • எதனைச் செய்யலாம்–எதனைச் செய்யக்கூடாது’,

என்பதில் கவனம் தேவை.

‘தான் யார்?’, ‘வாழ்வின் நோக்கம் என்ன?’, என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவின் நுண்மாண் நுழைபுலன் திறன் வேலை செய்யும். இந்த நுண்மாண் நுழைபுலன் திறனுடன் இருக்கின்ற அறிவின் நிலையை அயராவிழிப்புணர்வு நிலை என்கிறோம்.
மனிதனுக்கு எப்போதும் இன்பம் வேண்டுமென்றால் அவன் செயல்கள் எப்போதுமே நல்லவையாக இருக்க வேண்டும். எனவே எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் போது கவனம் வேண்டும். எதில் கவனம் வேண்டும்? செய்யும் செயல்களுக்கான விளைவு அறிந்து செயல் புரிவதில் கவனம் வேண்டும். இந்த கவனமே விழிப்புடன் இருத்தலாகும். இதனையே விளைவறிந்த விழிப்பு நிலை என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

அயரா விழிப்புணர்வு தேவை என்கின்ற அறவுரையான அறிவுரை ஏன் தோன்றியது? காரணம் என்ன? இதுவரை மனிதன் அயரா விழிப்புணா்வில் வாழவில்லை எனத் தெரிகின்றது.

குருவை அடைவதற்கு முன்னர் “அயரா விழிப்புணர்வு” என்கின்றச் சொற்றொடர் கேள்விப்படவில்லை. இப்போது இச்சொற்றொடர் அறியப்படுகின்றது. இச்சொற்றொடரில் உள்ள அறமான அறிவுரையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பேரறிவே பின்னப்பட்டு (fractionated consciousness) ஒரறிவு உயரினங்களிலிருந்து ஐயறிவு வரை பயணித்துவிட்டு, கடைசியாக மனித அறிவாக வந்துள்ளது. பேரறிவிற்கு ஆதிநிலையில் உணர்வு இல்லை. ஆதிநிலையில், அதாவது இயங்காநிலையில் பேரறிவிற்கு உணர்வதற்கு அங்கு ஏதும் நிகழ்ச்சி இல்லை. ஆனால் பின்னப்பட்டு பஞ்சபூதங்களாகி, உயிரினங்களாகியபோது அதற்கு உணர்வு வந்து விட்டது. ஐயறிவு வரை பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவைகளை படிப்படியாக உணர்ந்து வந்தது. அதாவது இருந்ததை உணர்ந்தது. அதுதான் ஐந்தறிவு வரையுள்ள திறன்.

தன்மாற்றத்தில், பின்னப்பட்ட பேரறிவு, ஆறாம் அறிவாக வந்தபோது அது ஏற்கனவே உணர்ந்த ஐந்து உணர்வுகளைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் உணர்வதற்கென்று இல்லை. ஆகவேதான் பேரறிவு ஆறாம் அறிவாக மலரும்போது ஆறாம் அறிவிற்கெனத் தனியாக புலனை ஏதும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஆறாம் அறிவாக வந்த போது புலன்கள் ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவின் பணி சிந்திக்க வேண்டும். சிந்தித்திருக்க வேண்டும். அதில் தவறிவிட்டது. இயற்கையில் தவறு ஏற்பட்டது என்று நாம் யார் சொல்வதற்கு? தவறில்லை. தாய் தன்குழந்தையை ஒரு வயதில் விளையாட்டுப் பள்ளிக்கு(play school) அனுப்ப முடியுமா? ஒன்றாம் வகுப்பில் சோ்வதற்கு ஐந்து வயது ஆகியிருக்க வேண்டுமல்லவா? அதுபோல்தான் இயற்கையும் நினைத்த மாத்திரத்தில் ஏதும் செய்துவிட முடியாது. மனிதன் யார்? இயற்கை யார்? இருவருமே வேறு வேறுகிடையாது. இயற்கையின் குழந்தைதான் மனிதன்.

அதனால்தான் ஆதங்கப்பட்டு இப்போது அந்த பின்னப்பட்ட பேரறிவு சொல்கின்றது” சிந்திக்க வேண்டும். சிந்தித்திருக்க வேண்டும்” என்று. இவ்வாறாக ஆதங்கப்பட்டு மனிதன் எண்ணினால்தான் “எண்ணமே பரிணாமத்தின் வாகனம்” ஆக உள்ளதால் பரிணாமம் முழுமை அடைய முடியும். அவ்வாறு இருக்கும் போது அறிவு, “நிகழ்ச்சிகளை உணரும் நான் யார்?” என விழா எழுந்துத் தன்னை அறிவதைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்று முடிவுக்கு வரும். நிகழ்ச்சிகளையெல்லாம் உணரும் “நான் யார்?’” என உணர்வதற்கு விரும்பும் நிலைக்கு இந்நேரம் வந்திருக்க வேண்டும். இயற்கை பரிணாமத்தில் அந்நிலையை மனவளக்கலை வாயிலாக உருவாக்கி வருகின்றது.

இங்கே ஓர் உண்மையினை அறிந்து கொள்ள வேண்டும். தன்னை உணர்வதற்குப் புலன்கள் தேவையில்லை. தன்னை உணர்ந்தால் கடவுளை உணரலாம். ஆகவே கடவுளை உணர்வதற்குப் புலன்கள் அவசியமில்லை. ஆகவே கடந்து உள்ளே சென்றால் கடவுளை உணரமுடியும் என்பதால்தான் உணரப்படுகின்ற அந்த ஒன்றிற்கு கட+உள்= கடவுள் எனப்பெயரிட்டான் மனிதன். மேலும் சிந்தனையை ஞாயிறன்று (27-09-2015) தொடா்வோம்.

வாழ்க வளமுடன். வாழ்க மனித அறிவு. வளா்க மனித அறிவு.
வாழ்க அறிவுச் செல்வம். வளா்க அறிவுச் செல்வம்.